சனி, 4 செப்டம்பர், 2010

ஆரியவதிக்கு அடித்த ஆணிகளும் சவூதி அரேபியாவின் சந்தேகமும்

அடிமை வியாபாரத்தையும் அது ஒழிக்கப் பட்டமையையும் நினைவுகூருகின்ற சர்வ தேசதினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் மனிதாபிமானம் உள்ளவர்களின் நெஞ்சங்களில் பெரும் நெருப்பைத் தூவிவிட்டதும் தற்போது பேசும் விடயமாக விளங்குவதுமான ஆரியவதிக்கு நேர்ந்த கொடுமையும் அன்றுதான் முதலில் தெரியவந்தமையும் எத்தகைய பொருத்தம் என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது. அன்றையதினம் தான் ஆரியவதி கம்புறுப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னரே இலங்கையர்கள் ஒன்றன்பின் ஒன்றாக அதிர்ச்சிகரமான தகவல்களை அறியத்தொடங்கினர்.

அடிமை முறை என்பது மனிதர்களை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து அல்லது அவர்ளை விலைக்கு வாங்கி அவர்களிடமிருந்து பலவந்தமாக வேலையை வாங்கும் முறையாகும். இம்முறை வரலாற்றுக் காலம் முதல் பல நாடுகளில் வழக்கில் இருந்து வந்துள்ளது. இங்கு அடிமைகள் என்பவர்கள் மனிதநேயத்திற்கு அப்பாட்பட்டவர்களாகவே எஜமானர்களால் மிதிக்கப்பட்டனர்.

வேறு வகையில் கூறுமிடத்து உணர்வுகளை இழந்த சடப்பொருள்கள் என்ற வகையிலேயே அடிமைகள் நோக்கப்பட்டனர்.

இந்த அடிமை வியாபார முறைமை 1870 ஆம் ஆண்டில் ஒழிக்கப்பட்டதாக கூறினாலும் அதற்கு வீட்டுப்பணிப் பெண்களும் விதிவிலக்கல்ல. மத்திய கால மனிதனின் மனிதநேயமற்ற நடவடிக்கைகளுக்கு சான்று பகர்ந்த அடிமை முறைமையானது இன்றைய நவீன நாகரிக காலத்திலும், மனிதகுலத்தின் மனிதநேயத்தன்மையை கேள்விக்குட்படுத்தி நிற்கின்றது. ஆரியவதிக்கு நேர்ந்த அவலங்களை நோக்கும் போது மனித குலம் மனிதத் தன்மை கொண்ட நாகரிக சமுகமாக இன்னம் மாறவில்லை என்ற உண்மையையே உணர்த்தி நிற்கின்றன.

ஆரியவதியின் அவலங்களை சவுதி அரேபிய தூதரகம் சந்தேகங்கொண்டு பார்க்கின்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சவுதியின் ரியாத் விமான நிலையத்திலும், கொழும்பு கட்டுநாயக்கவிலுள்ள விமானநிலையத்திலும் காணப்படும் உயர் தொழில்நுட்ப ஸ்கானர் இயந்திரங்களுக்கு ஆரியவதிக்குள் இருந்த இரும்பாணிகள் அகப்படாமல் போனதெப்படி என்பதே அவர்களது சந்தேகமாக இருக்கின்றது என இலங்கைக்கான சவுதி அரேபிய தூதரகம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. அத்துடன் ஆரியவதி இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தை கடந்ததன் பின்னர் தான் உடலுக்குள் ஆணிகள் செலுத்தப்பட்டனவா? என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

தூதரகத்தின் இந்த சிறுபிள்ளைத்தனமான கருத்தானது இலங்கை மக்களை மட்டுமல்லாது சர்வதேச சமூகத்தினரையும் வெறுப்படையவே செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. ஏனெனில் கல்வி அறிவே இல்லாதவன்கூட தானே தனது உடலுக்குள் ஆணிகளை செலுத்திக் கொள்வதற்கு துணிவாரா?
என்பதே இங்கிருக்கின்ற பாரிய கேள்வியாகும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் பணிப் பெண்களாக கடல் கடந்து செல்கின்றவர்கள் அங்கு அடிமைகளிலும் கேவலமாக நடத்தப்படுவது தொடர்பில் அவ்வப்போது வெளிவந்த, வெளிவருகின்ற தகவல்களில் இருந்து அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

இந்நிலையில் குடும்ப சூழலைக் கருத்திற் கொண்டு வேலை தேடிச் செல்லும் பணிப் பெண்கள் வயது வித்தியாசம் பாராது பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவது மறைக்கப்பட்ட உண்மையாகவே இருந்து வருவது ஒருபுறமிருக்க உடல் ரிதியான துன்புறுத்தல்களை மேற்கொள்கின்ற சம்பவங்கள் கொடிய உள்ளம் படைத்த வக்கி ரப்புத்தியுடைய தொழில் வழங்குனர்களால் அரங்கேற்றப்பட்டு வருவதும் தற்போது வெளிப்பட்டு வருகின்றது.

ஊடகங்களில் மாயாஜால வார்த்தைகளால் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துகின்ற முகவர் நிலையங்கள் தமது கஜனாக்களை நிறைத்துக் கொள்ளும் நோக்கிலேயே செயற்படுகின்றன என்று கூறினால் அதில் தவறு இருக்க முடியாது.

விளம்பரங்களினூடாக வறுமைக் கோட்டினுள் வாழ்கின்ற அப்பாவிப் பெண்களை மயக்குகின்ற மேற்படி முகவர் நிலைய அதிகாரிகள் தம்மை நம்பி வருகின்ற பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி தமது வலையில் சிக்க வைக்கின்றனர்.

இதன் பின்னர் தடால் புடலாக செயற்படுகின்ற இந்த கவரகங்கள் தம்மிடம் சிக்குகின்ற பெண்களை குறுகிய காலத்துக்குள்ளேயே விமானத்திலும் ஏற்றி விடுகின்றன.
விமானத்தில் ஏற்றியதும் தமது கடமையை முடித்துக் கொள்கின்ற அதேவேளை, அடுத்தவரை விமானத்தில் ஏற்றுவதற்கான தேடலிலும் இறங்கி விடுகின்றனர்.

இந்த ஆயிரமாயிரம் கனவுகளுடனும் எண்ணற்ற அபிலாஷைகளுடனும் விமானத்தில் பறந்து குறித்த நாடுகளில் கால் பதிக்கின்ற இவ்வாறான அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகின்ற வெளிநாட்டுத் தொழில் வழங்குனர்களை வஞ்சக நெஞ்சம் கொண்ட மன நோயாளிகள் என்று வர்ணிப்பது தகுமானதே.

இந்த அர்த்தத்துக்கு அனைத்து தொழில் வழங்குனர்களும் சொந்தக்காரர்கள் என்று கூறி விடவும் முடியாது. இருப்பினும் அவ்வாறு அர்த்தம் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

ஏனெனில் பணிப் பெண்கள் மீதான சித்திர வதைகள், கொடுமைகள், வக்கிரத்தன்மை, ஆணிகளையும் இரும்புக் கம்பிகளையும் உடலில் ஏற்றி இன்பம் காணும் அளவிலான இரக்கமில்லா இரும்பு குணம் படைத்தவர்களின் செயற்பாடுகள் இன்று உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது. 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் கிண்ணியாவைச் சேர்ந்த 19 வயதேயான ரிஸானா நபீக் சவூதி அரேபியாவின் உயர் நீதி மன்றத்தினால் சாகும் வரையிலான மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டார்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த யுவதி தனது பெற்றோர், சகோதரர்களின் நிலையறிந்து பல கனவுகளுடன் சென்ற போதிலும் விதி என்ற அரக்கன் ரிஸானாவை விட்டு வைக்கவில்லை.

நான்கு மாதங்களே ஆன குழந்தையை கொலை செய்தார் என்பதுவே ரிஸானா மீதான குற்றச்சாட்டாகும்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்த சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றம் ஒரு சாரான் நியாயத்தை மட்டுமே கவனத்திற் கொண்டு செயற்பட்டுள்ளது.

மொழிப் புலமையில்லாத ரிஸானாவின் நிலைமை அதோ கதி என்ற வகையில் அவர் சுமார் மூன்று வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

இது இவ்வாறிருக்க கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி பல்வேறு கனவுகளை சுமந்த வண்ணம் சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் காலடி வைத்த மாத்தறை திஹகொடவைச் சேர்ந்த 49 வயதான எல்..ஆரியவதி என்ற ஏழைப் பெண் தனது கனவெல்லாம் நனவாகப் போவதாகவே நினைத்தார். அந்த கனவு கானல் நீராகிப் போன நிலையில் உடலில் கட்டுகளுடன் மாத்தறை கம்புறுபிட்டிய வைத்தியசாலையின் 10 ஆம் நம்பர் வார்ட்டில் ஒரு கட்டிலில் சோகங்களை மட்டும் சுமந்தபடி படுத்துக்கிடந்ததை அனைவரும் பார்த்துச் செல்வதைத் தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை என்றும் முணு முணுத்துக்குகொண்டனர்.

உள்ளங்கால் முதல் உச்சந்தலையில் வரை ஆணிகளையும் இரும்புக் கம்பிகளையும் அறைவது என்பது எத்தகைய மிருகத்தனம் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆரியவதி என்ற அந்த பெண்மணியின் உடலில் முக்கியமாக நெற்றியில் இரண்டரை அங்குல ஆணியை அறையும்போது அவர் எவ்வாறான நிலையில் இருந்திருப்பார். புளுவாக துடித்திருக்க மாட்டாரா? இதனை சர்வதேச மனித உமை அமைப்பு இன்னும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றதா?

24 இரும்புத் துண்டுகளை 49 வயதான பெண்ணின் உடலில் இறக்குவது என்பது நாகரிகமே அறியாத காட்டுவாசிகளின் செயற் பாடாகக் கூட அøமந்திருக்க முடியாது ஆனாலும் அது நடந்துள்ளது.

சத்திர சிகிச்சைகளை மேற்கொண்ட டாக்டர்கள் ன்று மணி நேர பிரயத்தனத்துக்கு மத்தியில் 18 இரும்புத் துண்டுகளை அகற்றியுள்ளமை ஆரியவதியின் உயிர் வாழும் நாட்களை சற்று அதிகத்திருக்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது.

மாத்தறையைச் சேர்ந்த ஆரியவதிக்கு சவூதி அரேபியாவில் எமன் பிறந்திருக்கிறான் என்பது 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதியே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அன்று தான் ஆரியவதியும் ஆணியும் என்ற நம்பத்தகாத உண்மை வெளிப்பட்டது.

ரிஸானாவை கொ லைக் குற்றவாளியாக சித்தித்து அவருக்கு மரண தண்டனையைப் பெற்றுக் கொடுத்திருக்கின்ற சவூதி அரேபிய நீதித்துறை, ஆரியவதி சம்பந்தப்பட்ட விடயத்தில் என்ன நிலைப் பாட்டைக் கொண்டிருக்கின்றது என்பது இது வரையில் வெளிப்படுத்தப்படாத ஒன்றாக இருக்கின்றது.

அதாவது சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் அயல் நாட்டுக்காரரை ஆணியில் அறைந்து தாமத மரணத்தை அல்லது தாமதக் கொலையைப் புரிவாரென்றால் அதற்கு அந்நாட்டு நீதித்துறை இடமளிக்கின்றதா என்பது நியாயமான கேள்வியாகும்.

இது இவ்வாறிருக்க கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இரத்தினபுரி மாவட்ட ஐ.தே.க. எம்.பி. ரஞ்சன் ராமனாயக்கவினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது சவூதி அரேபியாவுக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்கள் யுவதிகள் சிலர் அங்கு தமக்கேற் பட்ட இழைக்கப்பட்ட அநீதிகளை பகிரங் கப்படுத்தியிருந்தனர்.

பணிப்பெண்களாக செல்வோர் வயது வித்தியாசம் பாராது பாலியல் சேஷ்டைகளுக்கு ஆளாக்கப்படுவதாகவும் அடி, உதை, தாங்க முடியாத தண்டனைகள், உணவு வழங்கப்படாமை ஆகிய சித்திரவதைகளுக்கு உள்ளாகுவோரை தூதரகங்களும் கைவிட்டு விடுவதாக கூறியிருந்தனர்.

மேலும் எஜமானிகளின் பிடிக்குள் இருந்து தப்பி வருகின்றவர்களை ஓலய்யா என்ற முகாமுக்கு அனுப்பி வைப்பதாகவும் அங்கு நரக வேதனை அனுபவிக்க வேண்டியிருப்பதாகவும் அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.

தற்போது இலங்கையைச் சேர்ந்த சுமார் 18 இலட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் தொழில் புரிந்து வருகின்றனர். இதில் 70 வீதமானோர் பெண்களாவர்.

கடந்த வருடத்தில் மாத்திரம் சவூதி அரேபி யாவுக்கு 77 ஆயிரத்து 827 பேர் பணிப் பெண்களாக இலங்கையிலிருந்து சென்றுள்ளனர்.

இவர்களில் எத்தனை ஆயிரம் பேர் ரிஸானாவைப் போலும் ஆரியவதியைப் போலும் சிக்கித் தவிக்கின்றனர் என்பது மறைந்து கிடக்கும் உண்மையாக இருக்கின்றது.

பணிப் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொள்கின்ற எஜமானர்கள் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக பாதிக்கப்படுகின்ற அபலைகள் மாடிகளில் இருந்து தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்படுகின்ற செய்திகளை ஊடகங்கள் வாயிலாக மாத்திரமே அறியக் கிடைக்கின்றது.

குடும்ப வறுமைக்காக வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் பணிப் பெண்களால் எமது நாட்டுக்கு அந்நியச் செலாவணியினூடாக வருமானம் தேடித் தரப்படு கின்றது.
இவ்வாறு நாட்டின் வருமானத்துக்குப் பங்காற்றும் இந்த அபலைப் பெண்களைப் பற்றி அரசாங்கத்தின் அக்கறையானது எந்தளவு ஆழமானது என்பது கேள்விக் குறியானதாகவே இருக்கின்றது. 24 ஆணிகளை உடலில் வாங்கிக் கொண்டு உயிருடன் வந்து சேர்ந்த ஆரியவதி எதையெல்லாம் இழந்து நிற்கின்றாரோ, எவ்வாறெல்லாம் அவஸ்தைப்பட்டாரோ அதற்கெல்லாம் பரிகாரம் பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தினதும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தினதும் கடமையும் பொறுப்புமாகும்.

இந்த அவசியம் ஊடகங்களின் மூலம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையிலேயே வேறு வழியில்லாது தற்போது அக்கறை செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஆரியவதிக்கு ஏற்பட்ட கொடுமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் நட்ட ஈட்டினைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசு முன்வந்தது.

அத்துடன் கொடுமைக்காரர்கள் தொடர்பில் சவூதி அரேபிய அரசு நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற இலங்கை அரசின் வேண்டுகோளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி குறித்த கொடுமைக்காரர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக சவூதி தகவல்கள் தெரிவித்துள்ளன.

அது மட்டுமல்லாது இலங்கையிலிருந்து சென்றுள்ள பணிப் பெண்களின் நிலைமைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை ஆராய்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் குழு வொன்று சவூதி சென்றுள்ளது.

இது காலம் கடந்த ஞானம் என்கின்ற போதிலும் இதுவும் நீண்ட காலத்துக்கு பொருத்தமானதா என்பது கேள்விக்குறியானது என்றே கூற வேண்டும்.

அரசாங்கத்தின் இத்தகைய சூடான நடவடிக்கையும் ஆரியவதியின் சோகங்களும் வெளிநாடுகளில் பணிபுயும் பணிப் பெண்களுக்கு விடியலாக அமைய வேண்டும்.

இத்துடன் நின்றுவிடாது ஆரியவதியின் எதிர்காலம் அவரது தொழிலில்லா கணவர், பிள்ளைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கத்தின் கட்டாயக் கடமையாகும்.

மேலும் ஒரு சத்திர சிகிச்சையின் பிரகாரம் இன்னுமொரு ஆணி பின்னர் அகற்றப்பட் டது. இத்துடன் 19 ஆணிகளே அகற்றப்பட்ட ஆயவதியின் உடலில் மேலும் 5 ஆணிகள் அல்லது இரும்புத் துண்டுகள் இன்னும் இருக்கின்றன.

இவை அவரது உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தாத வகையில் நிம்மதிதான் என்றாலும் பொருத்தமற்ற பொருளொன்று உடலுக்குள் இருப்பது இயற்கைக்கு மாறானது என்பதால் பக்கவிளைவுகளை தடுக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்நிலையி லேயே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அவர் வைத்தியசாலையிலிருந்து தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

இது இவ்வாறிருக்க உள்நாட்டிலும் கூட இவ்வாறான கொடுமைகள் அரங்கேறியிருப்பதை நினைத்துப் பார்க்கத் தோன்றுகின்றது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தலைநகர் கொழும்பில் மலையகத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வாவியொன்றில் வீசப்பட்டி ருந்தமை உலகறிந்த உண்மையாகும்.

ஆடம்பர வாழ்க்கை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் வெளிநாடு செல்பவர்களுக்கு மத்தியில் குடும்ப சுமையை இறக்கி வைக்க நினைக்கும் அபலைப் பெண்களின் அல்லது யுவதிகளின் சிறுமிகளின் வாழ்க்கை இவ்வாறு முடிவானது வேதனையானது. வர்ணிக்க டியாத கொடுமையும் ஆகும்.

இறைவனிடத்தில் அச்சம் கொள்கின்ற எவராலும் இத்தகைய கொடுமைகளை செய்ய முடியாது. அவ்வாறு செய்பவர்கள் காட்டுவாசிகளுக்கு ஒப்பானவர்கள்.

இவர்கள் சட்டத்தில் இருந்து தப்பித்தாலும் இறைவனிடத்தில் தப்பிப்பது அது.

எனினும் அரசியலமைப்பைத் திருத்திய மைக்கின்ற இன்றைய சந்தர்ப்பத்தில் மேற் போன்ற விடயங்களில் புதிய சட்ட விதிகளை உள்வாங்கி அதனை நடைறைப்டுத்துவது எதிர்காலத்துக்கு பொருத்தமானதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

அதில் வெளிநாடு செல்வோர், தொழில் வழங்குனர், தொழிலுக்காக அனுப்புகின்ற தரப்பு மற்றும் உறவினர்களுடனான தொடர் பாடல்கள் போன்ற விடயங்களில் சட்ட ரிதியிலான மாற்றங்கள் உள்வாங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

வயதை மாற்றி முகத்தை மாற்றி ஏன் ஆள் அடையாளத்தையே முற்றாக மாற்றி பல பொய்களை கூறி விமானநிலையம் உட்பட பல இடங்களில் தேவையானால் அரச அதிகாரிகளையே கைக்குள் போட்டுக் கொண்டு வெளிநாடுகளுக்கு வீட்டுப்பணிப்பெண்களை அனுப்புகின்ற மோசடிக் கும்பல்க ளுக்கு அங்கிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணை இங்கு அனுப்புவதொன்றும் பெரிய விடயமல்ல என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

அந்த வகையில் சவுதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது போன்ற இந்த சந்தேகங்கள் ஒருபுறமிருக்க எமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள பணிப்பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் தளர்வு கண்டு விடக்கூடாது என்பதே இங்கு சுட்டிக் காட்டப்படுகின்ற முக்கிய விடயமாகும்.

ஜே.ஜி. ஸ்டீபன்

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல