சனி, 30 அக்டோபர், 2010

அமெரிக்காவுக்கான விமானத்தில் வெடிப்பொருட்கள்

துபாயில் பிடிப்பட்ட பார்சல்

அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றை துபாயில் வழிமறித்து சோதித்ததில் அதில் வெடிப்பொருட்கள் இருந்ததாகவும், இதில் அல் கையிதா ஈடுப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் தெரிவதாக துபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று பிரிட்டனின் ஈஸ்ட் மிட்லேண்ட்ஸ் விமான நிலையத்திலும் பார்சல் ஒன்று வெடிப்பொருட்களுடன் பிடிக்கப்பட்டுள்ளது.

துபாயில் பிடிக்கப்பட்டுள்ள பார்சலில் பி.ஈ.டீ.என் என்ற வெடிமருந்து இருந்துள்ளது. இதே வெடிமருந்து தான் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெட்ராய்ட்க்கு சென்ற விமானம் ஒன்றில் வெடிக்க வைக்க முயற்சிக்கப்பட்டது.

வெள்ளிகிழமையன்று துபாய் மற்றும் பிரிட்டனில் பிடிக்கப்பட்ட இரு பார்சல்களுமே யெமனில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற சரக்கு விமானத்தில் இருந்தன. இந்த பொருட்களுக்கும் அரேபிய பகுதியில் இயங்கி வரும் அல் கையிதாவுக்கும் தொடர்பு இருக்கும் என புலனாய்வு அதிகாரிகள் எண்ணுகின்றனர்.

இந்த இரு பார்சல்களுமே சிகாகோ பகுதியில் இருக்கும் யூதர்களின் வழிப்பாட்டு மையங்களுக்கு முகவரியிட்டு அனுப்பப்பட்டுள்ளன.

யூ.பி.எஸ். பெடெக்ஸ் சரக்கு விமானங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பார்சல்களை தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமான நிலையங்களில் யெமனில் இருந்து வரும் பொருட்களை சோதித்து வருகின்றனர்.

இதற்கிடையே பிரிட்டனில் பிடிப்பட்ட பொருள் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரிட்டனின் உள்துறை செயலரான தெரஸா மே, இது வெடிக்க வைக்க கூடிய உபகரணம் தானா என்று நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தாங்கள் பல்வேறு தகவல்களை ஆராய்ந்து வருவதாகவும், யெமனில் இருந்து தான் பார்சல்கள் வந்துள்ளது என்பது தங்களுக்கு தெரியும் என்றார். அதே போன்று அரபிய தீபகற்ப பகுதியில் இயங்கி வரும் அல் கையிதா, எம்முடைய நாட்டில், எம்முடைய குடிமக்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடுவது தங்களுக்கு தெரியும் என்றும் கூறினார்.

இந்த பார்சல்கள் பிடிப்பட்டதற்கு சவுதி அரேபியா கொடுத்த தகவலே காரணம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. பிரிட்டனின் ‘டெய்லி டெலிகிராப்’ செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில் யெமனுக்கு பொறுப்பான எம்.ஐ.6 அதிகாரிக்கு இந்த பார்சல்கள் குறித்த தகவல்கள் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, யெமன் அதிகாரிகள் இருபதுக்கும் அதிகமான சந்தேகத்துக்கு இடமான பார்சல்களை பறிமுதல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

யெமனில் இருந்து அனுப்பப்படும் ஆட்கள் கூட வராத பார்சல்களை தனது வான்வெளியில் அனுமதிக்க போவதில்லை என பிரிட்டன் அறிவித்துள்ளது.

BBC Tamiloosai
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல