ஞாயிறு, 10 அக்டோபர், 2010

இளந்திரையன் மனைவி சாட்சியம்

இளந்திரையன்
இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு சனிக்கிழமை கிழக்கு மாகாணத்தில் தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


இதில் விடுதலைப் புலிகளின் முன்னாள் படைத் துறை பேச்சாளரான இளந்திரையன் அல்லது மார்ஷல் எனப்படும் இராசையா சிவரூபனின் மனைவி உட்பட விடுதலைப் புலி முக்கியஸ்தர்களின் மனைவிமார்களும் சாட்சியமளித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த இராசையா சிவரூபனின் மனைவி வனிதா சிவரூபன், 2009 ம் ஆண்டு மே மாதம் 17 ம் தேதி தனது கணவர் இராணுவத்தினரால் காயத்திற்கு சிகிச்சையளிக்க வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் தனது கணவனைப் பற்றிய தகவல்கள் இல்லை." என தெரிவித்தார்.

இளந்திரையன் மனைவி

கணவன் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு சில நாட்களின் பின்பு முகாமில் தங்கியிருந்தபோது, அங்கு சி.ஐ.டி. என தம்மை அறிமுகப்படுத்தி வந்த இருவர் கணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறி தங்களை அழைத்துச் செல்ல வந்த போதிலும் தாம் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார் வனிதா சிவரூபன்.

தனது கணவன் எங்கோ ஓரிடத்தில் உயிருடன் இருப்பதாக தனது நம்பிக்கையை வெளியிட்டு தனது பிள்ளைகளுக்காக கணவனை கண்டு பிடித்து தருமாறு ஆணைக்குழுவிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மற்றுமொரு முன்னாள் விடுதலைப் புலி முக்கியஸ்தரான கிருஷ்ணபிள்ளை பிரபாகரனின் மனைவி பொபித்தா பிரபாகரன் சாட்சியமளிக்கையில், தமது குடும்பத்தினர் இடம்பெயர்ந்து வட்டுவான் என்னுமிடத்தில் ஏனைய பொது மக்களுடன் வந்த போது இராணுவத்தினர் விசாரணைக்கு எனக் கூறி பொது மக்கள் முன்னிலையில் கணவரை அழைத்துச் சென்றதாகவும் அதன் பின்னர் அவரைப் பற்றிய தகவல்களை தன்னால் அறிய முடியாமல் இருப்பதாகக் கூறினார்.

கிருஷ்ணபிள்ளை பிரபாகரன் மனைவி

ஆணைக்குழு விசாரணையின் போது சாட்சியமளிக்க சமூகமளித்திருந்த பொது மக்களில் அநேகமானோர் காணாமல் போன தமது கணவர் அல்லது பிள்ளைகள் பற்றிய தகவல்களைப் பெற்று தருவது தொடர்பாகவே வாய் மூலமும் எழுத்து மூலமும் தமது சாட்சியங்களை ஆணைக்குழு முன் வைத்தனர்.

கடந்த மாதம் இந்த ஆணைக்குழு வன்னியில் அமர்வு மேற்கொண்ட போது, ஆணைக்குழுவின் முன் வந்து சாட்சியமளித்த விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன், தனது கணவர் மே 18 ஆம் தேதி இராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அதன் பிறகு அவரைக் காணவில்லை என்றும் கூறியிருந்தார்.

போரின் இறுதி கட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப் படையினரிடம் சரணடைந்ததாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகளின் பெயர் விபரங்களை வெளியிட இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதன் காரணமாக சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் நடக்க சாத்தியமிருப்பதாக மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டு வருகின்றன.


BBC தமிழோசை

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல