இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. பதவியில் இருந்தபோது, ராணுவ தளவாடங்கள் வாங்கிய குற்றத்துக்காக, ராணுவ கோர்ட் அவருக்கு 30 மாத சிறைத் தண்டனை விதித்தது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே இதற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து, கடந்த வியாழக்கிழமை இரவு, கடற்படை முகாமில் இருந்து, வெலிக்கடா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அடைக்கப்பட்டார்.
சிறையில் அவரது முதல் நாள் அனுபவம் குறித்து இலங்கை பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி:
சிறைக்கு உள்ளே நுழைந்ததும் பொன்சேகாவுக்கு கைதிகளுக்கான உடை தரப்பட்டது. இந்த உடை அவருக்கு பொருந்தவில்லை. இருந்தாலும், அதை அணிந்து கொண்டார். பின்னர், அவருக்கு சிறைக் கைதி எண் (0/22032)கொடுக்கப்பட்டது. இதன்பின், சிறையில் "எஸ்' பிரிவு வார்டில் உள்ள தனிமைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அங்கு சிமென்ட் தரையில், அவருக்கு தரப்பட்ட பாயை விரித்து, அதன் மீது படுத்தார். அடுத்த நாள் அதிகாலையில், மற்ற கைதிகளைப் போலவே 5 மணிக்கு எழுந்தார்.அவரது அறையில் கழிப்பறை வசதி இருந்தது. கழிப்பறையில் சரியாக தண்ணீர் வராததால், சிறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். பின்னர், அவரது அறையில் இருந்து சில அடி தூரத்தில் உள்ள பொது தண்ணீர் தொட்டிக்கு நடந்து சென்றார். தண்ணீரை அள்ளி குளிப்பதற்காக அவருக்கு பக்கெட் தரப்பட்டது. குளித்து முடித்தபின், சிறிய அலுமினிய டம்ளர் ஒன்றை ஒரு கையிலும், மறு கையில் அலுமினிய தட்டையும் ஏந்திக் கொண்டு, மற்ற கைதிகளுடன் சேர்ந்து காலை உணவுக்காக வரிசையில் நின்றார். உணவும், சாம்பாரும் வழங்கப்பட்டது.
அதைச் சாப்பிட்டு முடித்தவுடன், சிறையில் அடைக்கப்பட்டார்.இதன்பின், மதிய உணவு நேரத்திலும் மற்ற கைதிகளுடன் சேர்ந்து வரிசையில் நின்று, உணவு வாங்கினார். அரிசி சாதம், வெள்ளரிக்காய் பொறியல், சிறிய மீன் துண்டு, குழம்பு ஆகியவை வழங்கப்பட்டன. இதன்பின், மதியம் 2 மணிக்கு திரும்பவும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறிது நேரம் சிறை வளாகத்துக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு திரும்பவும் சிறையில் அடைக்கப்பட்டார். விளக்குகள் அணைக்கப்பட்டன. அடுத்த நாள் அதிகாலை வரை, தனிமைச் சிறையில் கும்மிருட்டில் படுத்து தூங்கினார்.இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசுக்கும், ராணுவத்துக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டிய ராணுவ தளபதி சரத் பொன்சேகா, தற்போது கைதி என் 0/22032 என்ற அடையாளத்துடன், வெலிக்கடா சிறையில் அலுமினிய தட்டும் கையுமாக "கம்பி எண்ணி' வருகிறார்.இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -
Dinamalar



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக