சனி, 11 டிசம்பர், 2010

இளவரசர் சாள்ஸ் கமீலா பயணித்த கார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல்

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோர் பயணித்த கார் மீது ஆர்ப்பாட்டக்காரர்களால் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டில் பல்கலைக்கழக கற்கைநெறிக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு ஆதரவளித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததையடுத்தே சினமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இத்தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இளவரசர் சார்ள்ஸ் மற்றும் கமீலா பயணித்த காரின் கண்ணாடியொன்று உடைக்கப்பட்ட அதே சமயம் காரின் மீது வர்ணப் பூச்சும் வீசப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் இளவரசருக்கும் கமீலாவுக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில் லையென்றும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

இந்த மோதலில் 12 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 43 ஆர்ப்பாட்டக்காரர்களும் காயமடைந்துள்ளதுடன் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரித்தானிய இளவரசரின் கார் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டமையானது அதிர்ச்சியும் வேதனையும் தருவதாக உள்ளதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக மெட்றோபொலிட்டன் பொலிஸ் ஆணையாளர் பெருந்தகை போல் ஸ்டீபன்ஸன் கூறினார்.

மேற்படி வாக்கெடுப்பானது பல்கலைக்கழக கற்கைநெறி கட்டணங்களை சுமார் வருடத்துக்கு 3 மடங்காக அதிகரிப்பதை நோக்காக கொண்டது. இதன் பிரகாரம் மேற்படி கட்டணங்கள் வருடத்துக்கு 9000 ஸ்ரேலிங் பவுணாக உயரும். இந்த வன்முறை ஆர்ப் பாட்டத்தின் போது திரபால்கர் சதுக்கத்தில் ஸ்தாபிக்கப் பட்டிருந்த நத்தார் மரம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

ஒக்ஸ்போர்ட் வீதியிலுள்ள கடைகளின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. பாராளுமன்ற சதுக்கத்திலிருந்த வின்ஸ்டன் சேர்ச்சிலின் உருவச் சிலை உள்ளடங்கலான அரசியல் முக்கியஸ்தர்களின் உருவச்சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.

பல்கலைக்கழக கற்கைநெறி கட்டணங்களை அதிகரிக்கும் சட்டமூலத்திற்கு ஆதரவாக 28 லிபரல் டெமோகிரட் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 21 லிபரல் டெமோகிரட் பாராளுமன்ற உறுப்பினர்களும் 6 பழைமைவாத கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்த அதே சமயம், 8 லிபரல் டெமோகிரட் பாராளுமன்ற உறுப்பினர்களும் 2 பழைமைவாத கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

பிரித்தானிய உள்துறை செயலாளர் தெரேஸா மேரி இந்த வன்றைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“நாம் இன்று இரவு லண்டனில் பார்ப்பது அமைதியான ஒரு எதிர்ப்பையல்ல. பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதும் சொத்துக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை லண்டனுக்கோ அதன் பிரஜைகளுக்கோ ஆர்ப்பாட்டக்காரர்கள் கௌரவமளிக்காததையே எடுத்துக் காட்டுகிறது'' என்று அவர் தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல