சனி, 21 ஏப்ரல், 2012

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - 28

ராஜிவ் காந்தி மே 21-ம் தேதி கொல்லப்பட்டார். அவர் கொல்லப்படவதற்கு 19 நாட்களின் முன்னர்தான், அவரைக் கொல்ல மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறிய தனு சென்னையில் காலடி எடுத்து வைத்தார். சென்னைக்கு புதிதாக வந்திறங்கிய சுபாவையும் தனுவையும், நேரே கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள ஜெயக்குமார் வீட்டுக்கு அழைத்து வந்தார் சிவராசன்.


ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட மே மாதம் வரை வேறு யாரையும் அந்த வீட்டுக்கு சிவராசன் அழைத்து வந்ததில்லை. புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த தமது சகாக்களைக்கூட அழைத்து வந்ததில்லை. மே மாதத் துவக்கத்தில் முதல் தடவையாக, தனு, சுபா ஆகிய இருவரையும் அந்த வீட்டுக்கு அழைத்து வந்தார்.

அதன் பின்னரே தனக்கு மிக நெருக்கமான சிலரை அந்த வீட்டுக்கு அழைத்து வரத் துவங்கினார். மே 16-ம் தேதி, சிவராசனின்  உதவியாளரான சுதந்திர ராஜாவும், ஜெயக்குமார் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவர் சும்மா விசிட் வரவில்லை, அங்கேயே தங்க வைக்கப்பட்டார்.

அதன்பின் புலிகளின் இந்திய ஆதரவாளர் ரவி, புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த வேறு ஒருவர் (இவரது பெயர், ஜெயக்குமாருக்கே தெரியாது) ஆகியோரும் சிவராசனை சந்திப்பதற்காக இந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றனர்.

கொடுங்கையூர் இல்லத்தில் இரண்டு தினங்கள்தான் தனுவும், சுபாவும், தங்க வைக்கப்பட்டனர். 4-ம் தேதி மதியம் அவர்கள் அங்கிருந்து நளினி வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டனர். அதன் பின்னரும், சிவராசன் தனது உதவியாளர் சுதந்திர ராஜாவுடன் தொடர்ந்து இந்த வீட்டில்தான் தங்கியிருந்தார். ராஜிவ் காந்தி நடந்த மே 21 -ம் தேதிவரை ஜெயக்குமார் வீட்டில்தான் சிவராசன் தங்கியிருந்தார்.

இதனால், ராஜிவ் காந்தி கொலைத் திட்டம், அந்த வீட்டில்தான் உருவானது, அல்லது, மெருகூட்டப்பட்டது என்று எடுத்துக் கொள்ளலாம்.

ராஜிவ் கொலை முடிந்து, சிவராசனும் தலைமறைவான பின்னரே படிப்படியாக விசாரித்துக் கொண்டு கொடுங்கையூர் வீட்டுக்கு வந்து சேர்ந்தது, வி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக்குழு. வந்தவர்கள் ஜெயக்குமாரை கைது செய்தார்கள். வீட்டை தலைகீழாகப் புரட்டி தேடினார்கள். ராஜிவ் கொலை தொடர்பாக எந்த தடயமும் அங்கு கிடைக்கவில்லை.

மொத்தத்தில், சிவராசனையும் சுபாவையும் கைது செய்தால்தான் கேஸ் மேற்கொண்டு நகரும் என்ற சூழ்நிலை.

சிவராசன் தொடர்பாக தகவல் ஏதாவது தெரிந்தால் தெரிவிக்கும்படி சிறப்பு புலனாய்வுக் குழு கொடுத்த விளம்பரம், வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால், பயனுள்ள துப்பு ஏதும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தில் வசித்துவந்த ஈழத் தமிழர்கள் சிலருக்காவது சிவராசன், மற்றும் சுபாவின் மறைவிடம் எது என்பது நிச்சயம் தெரிந்திருக்கும் என்று நம்பியது புலனாய்வுக் குழு. ஆனால், யாரைக் கேட்பது? சிவராசனை தெரிந்தவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது?

தமிழகத்தில் அப்போது சுமார் இரண்டு இலட்சம் இலங்கைத் தமிழர்கள் வசித்து வந்தனர். அவர்களில் மிகச் சிலரே தம்மை அகதிகளாகப் பதிவு செய்து கொண்டவர்கள். ஏராளமானோர் அகதிகளாகப் பதிவு செய்துகொள்ளவில்லை. இதையடுத்து புலனாய்வுக்குழு புதிய அறிவித்தல் ஒன்றை செய்தது. தமிழக அரசு ஊடாக செய்யப்பட்ட அந்த அறிவிப்பில், தமிழகத்தில் தங்கியிருந்த அனைத்து இலங்கைத் தமிழர்களும் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள பொலீஸ் நிலையங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

திடீரென ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தம்மை பதிவு செய்துகொண்டனர்.

அந்தப் பட்டியல்கள் கத்தை கத்தையாக மல்லிகை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தபோது, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தது சி.பி.ஐ.! ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களை விசாரிக்கும் அளவுக்கு அவர்களிடம் போதிய ஆட்கள் கிடையாது. யோசிக்காமல் செய்யப்பட்ட அறிவிப்பு அது.

சிறப்பு புலனாய்வுக் குழு மீடியாவில் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்த விளம்பரத்துக்கு வந்த ரெஸ்பான்ஸ்கள் மேலும் தலைசுற்ற வைத்தன.

சிவராசனையும், சுபாவையும் நேரில் பார்த்ததாக, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், இந்தியாவின் வேறு பல இடங்களில் இருந்தும் மல்லிகை அலுவலக தொலைபேசி இலக்கத்தில் தகவல்கள் அருவியாகக் கொட்டத் துவங்கின. புது டில்லியில் சிவராசனை பார்த்ததாகவும், விசாகப்பட்டினத்திலும், தமிழகத்தின் சில பகுதிகளிலும் அதே நாளில் சிவராசனை பார்த்ததாகவும் தகவல்கள் வந்தன.

சிவராசன் ஒரே நாளில் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் தலைகாட்டக் கூடிய மாயாவியா?

இந்த போன் அழைப்புகள் போதாதென்று, பத்திரிகைகளில் சிவராசன் தொடர்பான கற்பனைக்கும் அப்பால்பட்ட கதைகள் வெளியாகின. தற்போதும் தமிழகத்தில் மிகப் பிரபலமாக உள்ள பத்திரிகை ஒன்று, “வேதாரண்யம் கடற்கரையில் இலங்கை செல்ல தயாராக நின்றிருந்த சிவராசனை புலனாய்வுக்குழு சுற்றி வளைத்து சுட்டது. காலில் குண்டு பாய்ந்த நிலையிலும் சிவராசன் கடலில் பாய்ந்து இலங்கையை நோக்கி நீந்திச் சென்றுவிட்டார்” என்று பரபரப்பாக கவர் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டு, சென்சேஷனை எகிற வைத்தது.

புலனாய்வுக் குழு, சுவரில் தமது தலையை மோதிக் கொள்ளாத குறை!

சுருக்கமாக சொன்னால், ராஜிவ் கொலை புலன்விசாரணை இந்தக் கட்டத்தில் பாய் போட்டு படுத்தே விட்டது.

இப்படியான நேரத்தில் ஜூன் மாத இறுதியில், புலனாய்வுக் குழுவுக்கு ஒரு பிரேக் கிடைத்தது. மத்திய உளவுத்துறை ஒன்றிடமிருந்து முக்கியமான தகவல் கிடைத்தது. சென்னையில் உள்ள ரகசிய ஒயர்லெஸ் நிலையத்திலிருந்து இலங்கையில் உள்ள ஒயர்லெஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்ட ஒயர்லெஸ் தகவலைக் குறுக்கிட்டு அறிந்து அனுப்பப்பட்ட தகவல் அது.

ராஜிவ் கொலைக்குப்பின், புலிகளின் ஒயர்லெஸ் உரையாடல்களை இந்திய உளவுத்துறை றோ மானிட்டர் பண்ணிய விவகாரம் சுவாரசியமானது. அதை இந்த தொடருக்குள் கொண்டுவந்து குழப்பாமல், பாக்ஸ் நியூஸாக தருகிறாம். இங்கே கிளிக் செய்து படிக்கவும்.

ஜூன் முதல் 3 வாரங்களில் சென்னைக்கு அருகே இயங்கிய ரகசிய நிலையத்துக்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள நிலையத்துக்கும் இடையிலான ஒயர்லெஸ் தகவல்களை, இந்திய உளவுத்துறை றோ குறுக்கிட்டு அறிந்து கொண்டது. அதில் ஒரு முக்கிய தகவல் இருந்ததை பார்த்த றோ, சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அதை அனுப்பி வைத்தது.

றோ அனுப்பி வைத்த (டி-கோட் செய்யப்பட்ட) ஒயர்லெஸ் தகவல்களில் இருந்து தெரியவந்தவை:

1) புலிகளுக்கு இடையிலான ஒயர்லெஸ் உரையாடல்களில் தனு, ‘அன்பு’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார். அதேபோல சுபா, ‘நித்யா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.

2) ‘பெண் ஆபிஸர்’ என்பவரைப் பற்றிய தகவல்களும் அனுப்பப்பட்டிருந்தன. அடையார் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்ததால் நளினி ‘பெண் ஆபிஸர்’ எனக் குறிப்பிடப்பட்டார்.

3) ஜூன் முதல் 3 வாரங்களில், சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ஒயர்லெஸ் தகவல் பரிமாற்றங்களில் இடம்பெற்ற மற்றைய பெயர்கள் ராபர்ட் பயஸ், பிரகாசம் (இந்திய ஆதரவாளர் ரவியின் சங்கேதப் பெயர்), இந்து மாஸ்டர் (முருகன்), ராதா ஐயா (சபாபதி பிள்ளை), நீலன், ரமணன், இந்திரன் குட்டி, சொக்கன், குண்டப்பா.

4) சிவராசன் தனது பெயரில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிய ஒயர்லெஸ் தகவலில் ராஜிவ்காந்தி கொலை குறித்து விசாரணை செய்யும் சிறப்புப் புலனாய்வின் முக்கிய அதிகாரிகளான விஜய் கரண், கார்த்திகேயன் ஆகியோரது பெயர்களையும் அனுப்பியிருந்தார்

5) சிவராசனும், சுபாவும் தப்பிச் செல்ல முயற்சிக்கின்றனர், அவர்களுக்காக இலங்கையில் இருந்து  பாக் நீரிணையைக் கடந்து, தமிழகத்தின் கரையோர நகரம் ஒன்றுக்கு படகுகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

இந்த இறுதித் தகவல், சிறப்பு புலனாய்வுக் குழுவை நிமிர்ந்து உட்கார வைத்தது. அந்தத் தகவலின்படி, சிவராசனும், சுபாவும், விரைவில் தமிழகத்தின் தென் கடற்கரைக்கு செல்லக்கூடிய தொலைவில்தான் எங்கோ மறைந்திருக்கிறார்கள் என்ற ஊகமே அதற்கு காரணம்.

“சிவராசனையும் சுபாவையும் தமிழகம் முழுவதும் விளம்பரப்படுத்தி தேடும் நிலையில், அவர்கள் தமிழக கடற்கரை நகரம் ஒன்றில் தேவையில்லாமல் காத்திருக்க விரும்ப மாட்டார்கள். இலங்கையில் இருந்து படகு புறப்பட்டு விட்டது என்ற தகவல் கிடைத்த பின்னரே கடற்கரையை நோக்கிச் செல்வார்கள் என்று ஊகித்த புலனாய்வுக் குழு, இதை வைத்துக்கொண்டு செய்த முடிவு-

வேதாரண்யம், ராமேஸ்வரம் அல்லது கோடியக்கரையை 3 மணி நேரத்தில் சென்றடையும் தொலைவில் தான், சிவராசனும், சுபாவும் மறைந்திருக்கிறார்கள்! …… (தொடரும்)

விறுவிறுப்பு -பல்வேறு தரப்புகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், மற்றும் ரிப்போர்ட்களுடன், ரிஷி

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல