திங்கள், 3 செப்டம்பர், 2012

1970 களில் யாழ். நவீன சந்தையில் வந்து விழுந்த எறிகுண்டின் இரகசியம்

1970 களின் நடுப்பகுதி அது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அந்நாட்களில் மாறுவேடம் பூண்டு குடா நாட்டை வலம் வருகின்றமை வழக்கம். சைக்கிளில்தான் பெரும்பாலும் வருவார்.

இவர் சைக்கிளில் இராஜ கம்பீரத்தோடு முன்னால் அமர்ந்து இருக்க இவருக்கு நெருக்கமான சகா ஒருவர் சைக்கிளை மிதித்து ஓட்டுவார். பிரபாகரன் சைக்கிள் ஓட்டியமையை இது வரை யாரும் பார்த்தமை கிடையாது.

குரும்பசிட்டி வன்னியசிங்கத்தின் வீட்டில் கொள்ளை அடிக்க போன போதும் சரி, புதிய தமிழ் புலிகளின் தலைவர் செட்டி தனபாலசிங்கத்தை  சுட்டுக் கொல்ல கல்வியங்காட்டுக்கு சென்ற போதிலும் சரி பிரபாகரன் சைக்கிளில் முன்னால்தான் இருந்தார். மேற்சொன்ன இரு சந்தர்ப்பங்களிலும் இவரை சைக்கிளில் சுமந்தவர் குட்டி மணி.

இப்படித்தான் ஒரு நாள் காலை பிரபாகரன் யாழ். நவீன சந்தைப் பக்கம் சென்று இருந்தார். ஆனால் இவரை சுமந்து சென்றவர் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான நாகராஜா.

சந்தைக்கு நுழைந்தபோது பிரபாகரனுக்கு சற்றும் எதிர்பார்த்து இராத பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது. பொதுமக்களும், பொலிஸாரும் மிகவும் நெருக்கமாக சிரித்துப் பேசி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். இது அதிர்ச்சியை மாத்திரம் அல்ல அதிருப்தியையும் பிரபாவுக்கு ஏற்படுத்தி இருந்தது.

இது நல்லதற்கு அல்ல என்றார் பிரபா.

எது? என்று வினவினார் நாகராஜா.

பொலிஸாரும், பொதுமக்களும் நல்லுறவாக இருப்பது என்றார்  சுருக்கமாக பிரபா.

ஏன்? என்றார் நாகராஜா.

அப்படித்தான் என்று மிடுக்காகச் சொல்லி கதைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் பிரபா.

சைக்கிளை எடு என்று பிரபா உத்தரவிட ஓங்கி மிதித்தார் நாகராஜா.

மறுநாள் வழமை போல மகிழ்ச்சியான காலைச் சந்தை.

பொலிஸாரும், பொதுமக்களும் கூடி மிகவும் கலகலப்பாக உரையாடிக் கொண்டு இருந்தனர்.

சட்டென்று ஒரு எறிகுண்டு ஒன்று எங்கிருந்தோ வந்து விழுந்தது.
பொலிஸார் உட்பட பொதுமக்கள் பலருக்கும் காயம், சேதாரம்.

அன்று தொடக்கம் இச்சந்தையில் பொதுமக்களுடனான உறவை விலக்கிக் கொண்டனர் பொலிஸார்.

முன்பு இருந்த கலகலப்பும், சந்தோசமும் சந்தையில் ஒட்டுமொத்தமாக இல்லாமல் போய் பதற்றமும் பயமுமே பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் குடிகொண்டு நின்றது.

ஆனால் இக்குண்டுவீச்சின் இரகசியத்தை அறிந்து வைத்திருந்த நாகராஜா பின்னாளில் போட்டு உடைத்து விட்டார்.
 குண்டெறிவோம் என்று பிரபா சொல்லவில்லை, எறிவோமா? என்று ஒரு வார்த்தைதானும் கேட்கவில்லை, பொலிஸாரும், பொதுமக்களும் சந்தோசமாக இருக்கின்றமை பிடிக்கவில்லை என்று மட்டுமே சொன்னார், மறுநாள் நவீன சந்தையில் எறிகுண்டுத் தாக்குதல் என்கிற செய்தி மாத்திரமே வெளிவந்தது என்று மிகுந்த வியப்புடனேயே சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல