யாழ் மாவட்டத்தில் மின்னஞ்சல் (ஈமெயில்) மூலமாகவும், குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) மூலமாகவும் பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாகவும், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கியின் வட பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் பா. சிவதீபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு யாழ் மாவட்டத்தில் ஏமாற்றப்பட்டவர்கள் இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய கிளையில் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
“உங்களுக்கு லொத்தரில் கோடிக்கணக்கான பணம் விழுந்துள்ளது என்று முதலில் ஒரு மின்னஞ்சல் அல்லது எஸ்.எம்.எஸ். இனம் தெரியாதவர்களிடம் இருந்து சிலருக்கு அனுப்பப்படுவதுடன், சிறிது நேரத்தில் அந்த பணத்தை உங்களுக்கு அனுப்புவதற்கு வங்கிக்கணக்கு இலக்கத்தை தருமாறு கோரி மீண்டும் எஸ்.எம்.எஸ். அல்லது ஈமெயில் அனுப்பப்படுகின்றது. அதன் பின்பு குறித்த பணத்தை உங்கள் வங்கிக்கணக்குக்கு மத்திய வங்கியூடாக அனுப்புவதற்கு ஒரு தொகைப் பணம் செலவாகின்றது. அதனை நாம் குறிப்பிடும் வங்கிக் கணக்கு இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள் என்ற தகவல் வழங்கப்படுகின்றது” என்றும் அவர் விளக்கினார்.
பணம் குறித்த வங்கிக் கணக்கு இலக்கத்தில் வைப்பிலிட்ட பின்னர் எவ்வித தொடர்புகளும் இருக்காதெனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே மேற்படி பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் தொடர்பில் மககள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் இலங்கை மத்திய வங்கியின் வட பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் பா. சிவதீபன் கேட்டுக்கொண்டார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக