செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

நோய்க் கிருமிகளின் தொற்று

கிருமிகள் என்பவை நுண்ணுயிரிகள்.( microorganisms ).இவை உலகில் நிறைந்துள்ளன.இவற்றில் பெரும்பாலானவை மனிதனுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.இவற்றில் சில உயிர் வாழ்க்கைக்குத் தேவையானவையுங்கூட.

நம் உடலிலும் பல நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருகின்றன. இவற்றால் தீமை இல்லாவிடினும் சில நன்மைகளும் உள்ளன.

ஆனால் ஒரு சில நுண்ணுயிரிகள் நோய்கள்; உண்டாகி உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணி விடுகின்றன.

இவற்றை வைரஸ் , பாக்டீரியா , புராட்டஜோவா, புழுக்கள் என வகைப் படுத்தலாம்.

இன்னும் முன்னேறாத நாடுகளில் நோய்த் தோற்று மிகவும் அதிகமாகக் காணப் படுகின்றது. வறுமையும், ஜனத்தொகைப் பெருக்கமும் முக்கிய காரணங்கள்.

முனேறிய நாடுகளில் வளமும், நோய்த் தடுப்பு ஊசிகளும், அன்டிபையாட்டிக் பயன் படுத்துவதும் நோய்த் தொற்றை பெரிதும் குறைத்து வருகிறது.

அதே வேளையில், இன்றைய உலகில் மக்கள் புலம் பெயர்ந்து வாழ்வது பெருகி வருவதால் நோய்த் தொற்றும் எளிதில் உலகெங்கும் பரவி வருகிறது.

இன்று கிருமிகள் அன்டிபையாட்டிக் எதிர்ப்பு ( antibiotic resistance ) தன்மை பெற்றுள்ளதால் புதுப்புது வியாதிகள் தோன் றுகின்றன.

இன்று உலகில் நிகழும் மரணங்களில் 25 சதவிகிகிதம் நோய்த் தோற்றால் உண்டானது.

இரண்டு பில்லியன் பேர்களுக்கு காச நோய் உள்ளது.300 மில்லியன் பேர்களுக்கு ஆண்டுதோறும் மலேரியா காய்ச்சல் உண்டாகிறது.தோற்று நோயால் உண்டாகும் மரணங்களின் பட்டியல் இது:

இறந்தவர் எண்ணிக்கை ( 1998 )

நுரையீரல் தொற்று 3.5 மில்லியன்

எச்.ஐ.வி -எய்ட்ஸ் 2.25 மில்லியன்

வயிற்றுப்போக்கு 2.25 மில்லியன்

காசநோய் 1.5 மில்லியன்

மலேரியா 1.1 மில்லியன்

தட்டம்மை 888 000

விஷஜன்னி 410 000

கக்குவான் 350 000

மூளை அழற்சி 42000


நோய்க் கிருமிகளை 4 விதமாக பிரித்து கூறலாம்; அவை வருமாறு:

1. பிரையான் ( prions ) – இதுதான் கடைசியாகக் கண்டுபிடிக்கப் பட்டது. இதில் ஒரு ப்ரோட்டீன் மாலிக்கியுள் மட்டுமே உள்ளது.

2. வைரஸ் ( virus ) – இதில் ஒரு புரோட்டீன் மாலிக்கியுள் ஒரு நியூகிளிக் அமிலம் ( RNA or DNA ) உள்ளது.

3.பாக்டீரியா ( Bacteria ) டீ .என்.ஏ,. ஆர்.என் ஏ ஆகிய இரண்டு அமிலங்களும் உள்ளவை..இவை உடலில் தானாக .இனப்பெருக்கம் செய்ய வல்லவை.

4.யூக்காரியோட்ஸ் ( Eukaryotes ) – இவற்றில் ஒரு செல் புரோட்டோஜோவா ( protozoa ) காளான் ( fungus ), குடல் புழுக்கள் அடங்கும்.


கிருமிகள் பரவும் விதங்கள்

1. உடல் உறுப்புகள் மூலமாக : குடலில் உள்ள கிருமிகள் சிறுநீரகப் பைக்குள் நேரடியாகப் பரவுதல் ஓர் உதாரணம். தோலில் சிறு காயமுண்டானாலும் உடன் வெளியிலுள்ள கிருமிகள் உட்புகுதல் இந்த ரகம் .

2. காற்று வழி பரவுதல் – இருமல், தும்பல் மூலமாக கிருமிகள் ஒருவரிடமிருந்து அடுத்தவருக்கு காற்று மூலம் எளிதில் பரவுகிறது. காசநோய் நல்ல எடுத்துக்காட்டு. மிகவும் நெருக்கமான இடங்களில் இந்த முறையில் நோய்கள் பரவுகின்றன.

3. மலம் மூலமாக வாய் வழி – பொதுச் சுகாதாரம் இல்லாவிடில் மலத்தில் உள்ள கிருமிகளும் புழுக்களும் வாய்வழியாக பரவலாம். குடிக்கும் நீர் வழியாகவும் பரவலாம். மலம் எருவாக பயன்படுத்த்கப்பட்ட காய்கறிகளை நன்றாக கழுவாமலும், வேக வைக்காமலும் உட்கொள்வதின் மூலம் கிருமிகள் உணவின்மூலம் பரவலாம்.

4. பூச்சிகள் மூலமாக – கொசுக்கள் மூலமாக மலேரியா ,டெங்கி காய்ச்சல் பரவுவது நல்ல உதாரணம்.

5. நேரடி தொடர்பு மூலமாக – பாலியல் நோய்க் கிருமிகள் உடல் உறவின் மூலம் பரவுகிறது. எச்,ஐ.வி .ஹெப்பட்டைட் டிஸ் பி , கோனோரீயா போன்ற பாலியல் வியாதிகள் இந்த முறையில் பரவுகின்றன. இரத்த தானம் மூலமும் நேரடியாகப் பரவலாம். சில தோல் வியாதிகக்கூட நெருக்கமான தொடர்பால் பரவும்.


நோய்களைப் பரப்பும் கிருமிகள் நமது உடலுக்குள்ளும் வெளியிலும் பரவலாக உள்ளது என்பதும், அவை மனிதனைத் தாக்கும் விதத்தையும் பார்த்தோம்.

சில கிருமி வகைகள் உடலுக்குள் இருந்தாலும் நோய் உண்டாகாமல் உடலின் எதிர்ப்புச் சக்தி ( immunity system ) பாதுகாக்கின்றது. எப்போது எதிர்ப்புச் சக்தி குறைவு படுகின்றதோ அப்போது கிருமிகள் தாக்கி நோயை உண்டு பண்ணிவிடுகிறது.

கிருமி தடுப்பு முறைகள்

1. கிருமி தேக்கத்தை ஒழிப்பது – பெரியம்மை நோயை முற்றிலும் ஒழிக்க இந்த முறை பயன்படுத்தப்பட்டது. எலிகளால் பிளேக் நோய் பரவியபோது எலிகள் ஒழிக்கப்பட்டன.

2.கொசுக்கடி ஏற்படாமல் தடுப்பு முறைகள் – கொசு மருந்து, கொசு வலை.பொது சுகாதாரம்

3. உணவு வகைகள் பாதுகாப்பு- உணவுகளை சுத்தமான முறையில் தயாரித்தும் பரிமாறுவதும்.

4. பாதுகாக்கப்பட்ட குடிநீர்- குடிநீர் மூலம் காலரா , வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் பரவலாம். உலக ஜனத்தொகையில் இன்னும் 30 சதவிகித மக்கள் பாதுகாப்பு இல்லாத குடிநீரைத்தான் குடித்து வருகின்றனர் என்பது பரிதாபமானது.

5. இரத்த தானத்தில் கவனம்- ஒருவருக்கு இரத்த தானம் செய்யப்பட்ட இரத்தம் ஏற்றப்பட்டால் அந்த இரத்தம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே பயன் படுத்தப் படவேண்டும்.

6. தனிமைப் படுத்துதல் – காற்று மூலம் பரவும் வியாதிகளை தடை செய்வதில் சிரமம் உண்டாகலாம். காற்றை நாம் சுத்தப்படுத்த முடியாது. ஆனால் வியாதி உள்ளவரைத் தனிமைப் படுத்தலாம். அல்லது வெளியில் செல்லும்போது முகவுறை ( mask ) அணிந்து செல்லலாம் .

நோய்களை உண்டுபண்ணும் கிருமிகள் நம் உள்ளும் வெளியிலும் இருந்தாலும்.,சுகாதார முறைகளைப் பின்பற்றி, சத்தான உணவு உட்கொண்டு உடற்பயிற்சியும் மேற்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் உடலின் எதிர்ப்புச் சக்தி பலம் பெற்று கிருமிகளை போதுமான முறையில் எதிர்த்து பாதுகாப்பு தரும்.( முடிந்தது )

டாக்டர் ஜி.ஜான்சன்

திண்ணை இணையம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல