வியாழன், 19 செப்டம்பர், 2013

உலகில் மாரியும் கோடையும் மாறி மாறி தோன்றும் விந்தை

கோடைக் காலம் வந்து விட்டால் பத்திரிகைகளில் எந்த ஊரில் எவ்வளவு வெயில் என்ற விவரத்தைக் குறிப்பிடுவது வழக்கம்.

வெயிலை எப்படி அளக்கிறார்கள்? வெப்பமானி மூலம் தான் என்பது எல்லோரும் உடனே சொல்லக்கூடிய விடை. ஆனால் வெப்பமானியை நல்ல வெயில் அடிக்கும் இடமாகப் பார்த்து மாட்டியிருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

வெப்பமானியானது காற்று புகும் வசதி உள்ள ஒரு பெட்டியில் தான் வைக்கப்படுகிறது. தவிர அது வெயிலை அளப்பதே கிடையாது. தரையிலிருந்து சுமார் நான்கு அல்லது ஆறு அடி உயரத்தில் இருக்கின்ற காற்றின் வெப்பத்தைத் தான் அளக்கிறது. ஆகவே உள்ளே காற்று எளிதில் புகும் வகையில் வெப்பமானிப் பெட்டியின் நான்கு புறங்களிலும் சாய்வான திறப்புகள் இருக்கும்.

வெயிலானது காற்றை நேரடியாக சூடாக்குவது கிடையாது. அப்படிப் பார்த்தால் தரையிலிருந்து சுமார் 100 மீற்றர் உயரத்தில் காற்று பயங்கர சூடாக இருக்க வேண்டும். சூரிய ஒளி காற்று மண்டலம் வழியே வந்தாலும் சூரிய ஒளியானது காற்றை சூடாக்குவது கிடையாது.

சூரிய ஒளி தரையில் வந்து விழும் போது தரையை சூடாக்குகிறது. தரை சூடாகும் போது தரைக்கு சற்று மேலே உள்ள காற்று சூடாகிறது. இந்தக் காற்றின் வெப்பத்தைத் தான் வெப்பமானி அளக்கிறது. இதைத் தான் நாம் நேற்றைய வெயில் அளவு என்று கூறுகிறோம்.

வெப்பமானி எவ்விதமாக இருக்க வேண்டும். அதை எங்கு நிறுவ வேண்டும் என்பன பற்றி சர்வதேச அளவில் விதி முறைகள் உள்ளன. இவை உலக வானிலை அமைப்பு நிர்ணயித்தவை.

இதன்படி வெப்பமானி ஒரு மரப்பெட்டிக்குள்ளாக இருக்கும். அந்த மரப்பெட்டி திறந்த வெளியில் இருக்க வேண்டும். அருகே கட்டடங்கள் இருத்தல் கூடாது. மரங்கள் இருத்தல் கூடாது. அப்படி மரம் இருந்தால் மரத்தின் உயரத்தைப் பொறுத்து வெப்பமானிக்கும் மரத்துக்கும் இடையே எவ்வளவு தூரம் இருக்க வேண்டும் என்று கணக்கு உள்ளது.

வெப்பமானியானது காற்றின் வெப்பத்தை அளப்பதாகக் கூறினோம். தரை வெப்பத்துக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது. காற்றின் வெப்பமே இடத்துக்கு இடம் சற்று மாறுபடும். தரை வெப்பமோ இடத்துக்கு இடம் மிக நிறையவே மாறுபடும்.

ஒரு நகரில் கட்டடங்கள் நிறைய உள்ள இடத்தில் தார் வீதியில் தார் உருகும் அளவுக்கு வெப்பம் இருக்கின்ற அதேநேரத்தில் அருகே ஓரிடத்தில் புல் தரையில் வெறும் காலால் நிற்க இயலும். தோட்டங்களில் மர நிழலில் தரை சுடாது. ஆகவே தான் காற்றின் வெப்பத்தை அளக்கிறார்கள். ஆனாலும் ஆற்றின் கரையோரமாக குளிர்ந்த காற்று அடிக்கலாம் அந்த அளவில் வெப்பமானி அளவிடுகின்ற காற்றின் வெப்பம் கூட ஓரளவு இடத்துக்கு இடம் சற்றே மாறலாம்.

சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கின்ற போது தான் வெயில் மிக அதிகபட்சமாக இருக்கும் என்று பலரும் கருதுவர். ஆனால் அது அப்படி அல்ல. பெரும்பாலும் பிற்பகல் சுமார் இரண்டு அல்லது இரண்டரை மணிக்குத் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஓரிடத்தில் அதிக பட்ச வெப்பமும் அந்த நேரத்தில் தான் வெப்பமானியில் பதிவாகிறது.

இதற்குக் காரணம் உண்டு. வெயில் ஏற ஏறத் தரை மேலும் மேலும் சூடாகத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் சூடேறிய தரையானது அதிக அளவில் வெப்பத்தை வெளியிட ஆரம்பிக்கிறது. பிற்பகல் இரண்டு மணி அளவில் இது ஏற்படுகிறது.

உண்மையில் சூரியன் ஆண்டு தோறும் ஜனவரி 4 ஆம் திகதியளவில் தான் பூமிக்கு சற்றே அருகில் உள்ளது. ஆனால் அப்போதோ பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள இடங்களில் குளிர் காலமாக உள்ளது.

பூமியானது 23.5 பாகை சாய்வான நிலையில் சூரியனைச் சுற்றி வருகிறது. இதுவே உலகில் கோடைக்காலம் குளிர் காலம் ஏற்படுவதற்கான காரணமாகும்.

சூரியனின் கதிர்கள் எந்த இடங்களில் எல்லாம் செங்குத்தாக விழுகிறதோ அந்த இடங்களில் எல்லாம் கோடைக்காலம் ஏற்படும். பூமியின் இந்த சாய்மானம் காரணமாக சூரியன் தெற்கே போவது போலவும் வடக்கே போவது போலவும் தோன்றுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல