ஞாயிறு, 3 நவம்பர், 2013

கர்ப்ப கால ரத்த அழுத்தம்

‘‘கர்ப்ப காலத்தில் திடீரென வந்து ஒட்டி உறவாடுகிற நோய்களை பெரிய பட்டியலே போடலாம். அவற்றில் முக்கியமானது கர்ப்ப கால ரத்த அழுத்தம். கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற உயர் ரத்த அழுத்தமானது, அம்மா, குழந்தை என இருவரின் உயிருக்குமே ஆபத்தைக் கொடுக்கும் அளவுக்குப் பயங்கரமானது. அலட்சியம் வேண்டாம்...’’ எச்சரிக்கையுடன் ஆரம்பிக்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

கர்ப்ப கால ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள், காரணங்கள், தீர்வுகள் பற்றியெல்லாம் விளக்கமாகப் பேசுகிறார் அவர்.‘‘18 முதல் 20 வயதில் திருமணம் செய்கிறவர்களுக்கும், 30-க்கு மேல் திருமணம் செய்கிறவர்களுக்கும் முதல் கர்ப்பத்தில் உயர் ரத்த அழுத்தம் வரலாம். அதைத் தொடர்ந்து அடுத்த கர்ப்பத்திலும் வரலாம். இதை ஆங்கிலத்தில் ‘ப்ரெக்னன்சி இன்ட்யூஸ்டு ஹைப்பர் டென்ஷன்’ (பி.ஐ.ஹெச்) என்கிறோம்.

ஏற்கனவே குடும்பப் பின்னணியில் இது போன்ற ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள், ஒன்றுக்கு மேலான குழந்தைகளைச் சுமப்பவர்கள் போன்றவர்களுக்கு பி.ஐ.ஹெச் தாக்கும் வாய்ப்புகள் அதிகம். கர்ப்பத்தின் 7-வது மாதத்தில் இந்த ரத்த அழுத்தம் அதிகரித்து, கருவைச் சுமக்கும் பெண்ணுக்கும், கருவிலுள்ள குழந்தைக்கும் பாதிப்பை உண்டாக்கலாம்.

அடுத்து ‘எக்லாம்சியா’ எனப்படுகிற வலிப்பு நோயை ஏற்படுத்தி, அதன் விளைவாக குழந்தையும், தாயும் இறந்து போகலாம். ரத்த அழுத்தம் அதிகரித்து, சிறுநீரகங்களும், இதயமும் பாதிக்கப்படுவதுடன், மூளையிலுள்ள ரத்தக் குழாய்கள் வெடித்து, மரணத்தைக் கொடுக்கும் அபாயமும் உண்டு. ஏற்கனவே சொன்ன மாதிரி மிக இளம் வயதிலோ, வயது கடந்தோ திருமணம் செய்கிற பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் தாக்குவதால், இந்த வயதுப் பெண்கள் கர்ப்பம் தரித்ததும் மிகவும் எச்சரிக்கையுடன் கண்காணிக்கப்பட வேண்டும்.

உணவு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். யூரினரி இன்ஃபெக்ஷன் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையான கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும். ரத்தக் குழாய்களில் பிளேட்லெட் செல்கள் ஒட்டாமலிருக்க, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரை எடுக்க வேண்டும். உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள், அதைக் குறைக்க வேண்டும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகளை முறையாக எடுக்க வேண்டும். சிறுநீரக செயல்பாட்டைக் கண்காணிக்க வேண்டும்.

குழந்தை திடீரென வயிற்றிலேயே இறந்து போவது, எடை குறைவாகப் பிறப்பது, நஞ்சு பிரிந்து தாய்க்கும், குழந்தைக்கும் ஆபத்து ஏற்படுவது போன்றவை சகஜம் என்பதால், பி.ஐ.ஹெச் பிரச்னை உள்ள பெண்களை பிரசவம் வரை, சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்துப் பார்க்க வேண்டும். கிட்னி ஃபங்ஷன் டெஸ்ட், ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கிற டெஸ்ட் போன்றவை முக்கியம்.

புகைப்பழக்கம் அறவே தவிர்க்கப்பட வேண்டும். கணவருடைய புகைப்பழக்கம்கூட இந்தப் பிரச்னைக்குக் காரணமாகலாம் என்பதால், அதிலிருந்தும் விலகி இருக்க வேண்டியது முக்கியம்...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

- ஆர்.வைதேகி
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல