எங்கள் தங்கம்’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருடன் கருணாநிதி.
எம்ஜிஆர் 100 | 3 - அண்ணாவின் தம்பிகள்
M.G.R. முதல் முறையாக 1977-ல் ஆட்சியைப் பிடித்து முதல்வராக இருந்த நேரம். எதிர்க்கட்சித் தலைவராக திமுக தலைவர் கருணாநிதி. சட்டப் பேரவையில் சூடும் சுவையுமான ஒரு விவாதம். ஒரு கட்டத்தில் கருணாநிதி பேசும்போது, ‘‘ஆட்சி அதிகாரம் எங்களுக்கு புதிதல்ல. நாங்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைதான் அது’’ என்றார். எம்.ஜி.ஆர். எழுந்தார். தனக்கே உரிய டிரேட் மார்க் புன்னகையுடன் சொன்னார், ‘‘நீங்கள் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்று கணக்கு பார்க்கத்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்.’’
இப்படி, அரசியல் களத்திலே எதிரெதிரே நின்று விவாதங்களில் ஈடுபட்டாலும் அறிஞர் அண்ணாவின் தம்பிகளான இரண்டு பேருக்கும் இடையே அரசியலைத் தாண்டிய ஆழமான நட்பு நிலவி வந்தது. தனது நாற்பதாண்டு கால நண்பர் என்று எம்.ஜி.ஆரை கருணாநிதி குறிப்பிடுவார். எம்.ஜி.ஆரும் மேடைகளில் ‘நண்பர் கலைஞர் கருணாநிதி’ என்றே விளித்து பேசுவார்.
அரசியல் உக்கிரம் தகித்த போதும் அதையும் தாண்டிய நட்பு குளிர்ச்சி இருவருக்கும் இடையே நிலவியதற்கு சான்றுகள் ஏராளம். அதில் ஒரு சம்பவம்.
எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசைக் கண்டித்து 1982-ம் ஆண்டு ‘நீதிகேட்டு நெடும் பயணம்’ என்ற பெயரில் மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுடன் பாத யாத்திரையாக சென்றார். தொடர்ந்து நடந்ததில் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. காலில் கொப்புளங்கள் ஏற்பட்டன. அப்படியும் பயணத்தை தொடர்ந்தார்.
விஷயம் முதல்வர் எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. உடனடியாக தொலைபேசி மூலம் கருணாநிதியை தொடர்பு கொண்டார். உடல் நலன் குறித்து அக்கறையோடு விசாரித்தார். அதோடு, கருணாநிதியின் உடல் நிலையை கவனிக்க ஒரு மருத்துவர் குழுவையும் அனுப்பி வைத்தார். இது இருவருக்குமான நட்பின் அடையாளம் மட்டுமல்ல, தனது அரசை எதிர்த்து பாத யாத்திரை போகிறாரே? தனது அரசியல் எதிரியாயிற்றே? என்றெல்லாம் கருதாமல் கருணாநிதியின் உடல் நலனில் எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையையும் அவரின் அன்பு உள்ளத்தையும் காட்டும் நிகழ்ச்சி இது.
இருவருக்கும் இடையிலான நட்பின் ஆழத்துக்கு இன்னொரு சம்பவம்.
‘எங்கள் தங்கம்’... எம்.ஜி.ஆரை ரசிகர்கள் இப்படி அழைப்பதற்கு காரணமான அவர் நடித்து மேகலா பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படம். மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் கடனை ‘எங்கள் தங்கம்’ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தால் அடைத்ததாக அதன் வெற்றி விழாவில் முரசொலி மாறன் குறிப்பிட்டார்.
‘எங்கள் தங்கம்’ 100-வது நாள் விழாவில் எம்.ஜி.ஆருக்கு விருது வழங்குகிறார் நெடுஞ்செழியன்.
படத்தின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். என்றாலும் இரண்டு பாடல்கள் ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தும். ஒன்று.. எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடலான ‘நான் செத்துப் பிழைச்சவன்டா.... ’
மற்றொன்று ஜெயலலிதாவுடன் எம்.ஜி.ஆர். பாடும் டூயட் ‘நான் அளவோடு ரசிப்பவன்...’ இந்த இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் அதில் உள்ள சிறப்பான வரிகள். இரண்டு பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி.
‘நான் அளவோடு ரசிப்பவன்...’ பாடலுக்கான முதல் வரியை எழுதி விட்டார் வாலி. என்ன காரணமோ தெரியவில்லை, அன்று அவருக்கு அடுத்த வரி உடனடியாக வரவில்லை. அப்போது மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு கருணாநிதி வந்தார். வாலியைப் பார்த்து ‘பல்லவி எழுதி விட்டீர்களா?’ என்று கேட்டார்.
‘நான் அளவோடு ரசிப்பவன்....’ முதல் வரியை சொன்னார் வாலி.
‘எதையும் அளவின்றி கொடுப்பவன்....’ இரண்டாவது வரி வந்தது கருணாநிதியிடம் இருந்து.
எம்.ஜி.ஆரின் வள்ளல்தன்மையை மனதில் கொண்டு கருணாநிதி கூறிய இந்த வரிக்குப் பிறகு பாடல் கிடுகிடுவென எழுதி முடிக்கப்பட்டு அன்று மாலையே ஒலிப்பதிவும் ஆகிவிட்டது.
பாடல் எம்.ஜி.ஆருக்குப் போனது. ஆனால், இரண்டாவது வரியை வாலிக்கு கருணாநிதி எடுத்துக் கொடுத்த விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. சில நாட்கள் கழித்து வாஹினி ஸ்டூடியோவில் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரை சந்தித்தார் வாலி.
முரசொலி மாறன் திருமண வரவேற்பில் கருணாநிதி, எம்.ஜி.ஆர்.
அவரை வரவேற்று ‘‘வாங்க ஆண்டவனே. (தனக்கு நெருக்கமான வர்களை எம்.ஜி.ஆர் இப்படி அழைப்பது வழக்கம்) ‘அளவோடு ரசிப்பவன்’ பாட்டு பிரமாதம். அதிலும் அந்த இரண்டாவது வரி அருமை’’ என்று கூறிய எம்.ஜி.ஆர். அன்பின் மிகுதியால் வாலியை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.
‘‘அண்ணே, நீங்க இந்த முத்தத்தை கருணாநிதிக்குத்தான் கொடுக்கணும்’’ - வாலியின் ரியாக் ஷன்.
‘‘ஏன்?’’ எம்.ஜி.ஆர். புரியாமல் கேட்டார்.
விஷயத்தை வாலி சொன்னதும் சிந்தனையில் ஆழ்ந்தார் எம்.ஜி.ஆர். அதன் எதிரொலி சில நாட்களுக்குப் பின் அவரிடம் இருந்து வெளிப்பட்டது.
‘நான் செத்துப் பிழைச்சவன்டா.. எமனைப் பார்த்து சிரிச்சவன்டா...’ பாடலின் பல்லவியை எழுதி எம்.ஜி.ஆரி டம் காட்டினார் வாலி. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எம்.ஜி.ஆர். உயிர்பிழைத்த பிறகு வெளியான இந்தப் பாடல் அவருக்கு கச்சிதமாக பொருந்தியது.
திருப்தியடைந்த எம்.ஜி.ஆர். வாலியிடம் சொன்னார்: ‘‘ஆண்டவனே, இரண்டாவது சரணத்திலே இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது கருணாநிதி தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தது பற்றி நாலு வரியிலே நறுக்குன்னு எழுதிடுங்க.’’
இதையடுத்துப் பிறந்த வரிகள்தான்...
‘ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலைவைத்து
உயிரையும் துரும்பாய்தான் மதித்து
தமிழ் பெயரைக் காத்த கூட்டமிது’
தனது கொடை உள்ளத்தை ‘அளவின்றி கொடுப்பவன்...’ என்று புகழ்ந்து அடியெடுத்துக் கொடுத்த கருணாநிதியின் போர்க் குணத்துக்கு எம்.ஜி.ஆரின் பதில் மரியாதை.
‘எங்கள் தங்கம்' படத்தின் ஆரம்பத்தில் அப்போது சிறுசேமிப்புத் துறை தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். தனது வழக்கமான தொப்பி, கண்ணாடியுடன் சிறுசேமிப்புத் துறை தலைவராகவே வருவார். அவரிடம் தங்கம் பாத்திரத்தில் நடிக்கும் எம்.ஜி.ஆர். நிதி கொடுப்பார்.
எம்.ஜி.ஆருக்கு தமிழக அரசின் லாட்டரி சீட்டில் பரிசு விழும் (அப்போது லாட்டரி சீட்டு இருந்தது). அந்தப் பரிசை எம்.ஜி.ஆருக்கு அண்ணா வழங்குவது போல ஒரு காட்சி. மொட்டை அடித்துக் கொண்டு பாகவதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்.கதாகாலட்சேபம் செய்யும் காட்சி என்று படத்தில் ‘ஹைலைட்’கள் ஏராளம்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஒரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆருடன் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி (கழுத்தில் துண்டு அணிந்திருப்பவர்), ஈ.வி.கே.சம்பத். - ‘பாகவதர் கிராப்’பில் எம்.ஜி.ஆரின் எழில் தோற்றம்.
எம்ஜிஆர் 100 | 4 - எம்.ஜி.ஆரின் எம்.கே.டி அன்பு
எம்.ஜி.ஆர் பிரபலமாவதற்கு முன் தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவர் நடித்த ‘ஹரிதாஸ்’ திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 தீபாவளிகளைக் கண்டது. எம்.ஜி.ஆர். மீது பேரன்பு கொண்டவர். எம்.ஜி.ஆருக்கும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் அன்பும் உண்டு. தியாகராஜ பாகவதரின் தலை அலங்காரத்துக்கு ‘பாகவதர் கிராப்’ என்றே பெயர். அவரைப் போலவே எம்.ஜி.ஆரும் ஆரம்ப காலங்களில் ‘பாகவதர் கிராப்’ வைத்துக் கொண்டிருந்தார்.
‘அசோக் குமார்’ படத்தின் கதாநாயகன் தியாகராஜ பாகவதர். அந்தப் படத்தில் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார். அந்த வாய்ப்பை எம்.ஜி.ஆருக்கு வாங்கிக் கொடுத்தது பாகவதர்தான். படத்தின் ஒரு காட்சியில் அரசனின் உத்தரவுப்படி தியாகராஜ பாகவதரின் கண்களைத் தளபதியாக நடிக்கும் எம்.ஜி.ஆர். பழுக்கக் காய்ச்சிய கம்பியால் குத்தி குருடாக்க வேண்டும். இயக்குநர் ராஜா சந்திரசேகர் படமாக்கிக் கொண்டிருந்தார். கேமரா ஓடுகிறது.
கம்பியைக் கையில் பிடித்தபடி பாகவதரை நெருங்கிய எம்.ஜி.ஆர். அப்படியே தயங்கி நின்றுவிட்டார். ‘கட்’ சொன்ன இயக்குநர், காரணம் கேட்டார். நடிப்புதான் என்றாலும் கூட, தான் அன்பும் மதிப்பும் வைத்திருக்கும் பாகவதரின் கண்களைக் குருடாக்குவது போல நடிக்க எம்.ஜி.ஆரின் மனம் இடம் தரவில்லை. கலங்கிய கண்களுடன் அப்படியே நின்று விட்டார்.
விஷயம் அறிந்து இயக்குநர் மட்டுமின்றி தியாகராஜ பாகவதரே எவ்வளவோ சமாதானம் சொல்லியும் எம்.ஜி.ஆர். அப்படி நடிக்க மறுத்துவிட்டார். பிறகு, கையில் கம்பியுடன் பாகவதரை எம்.ஜி.ஆர். நெருங்கும்போது, நிரபராதியான தனக்கு தண்டனை வழங்கப்படுவதால் ஆவேசமடைந்த பாகவதர், அந்த கம்பியை எம்.ஜி.ஆரின் கைகளில் இருந்து பிடுங்கி தானே தனது கண்களை குத்தி குருடாக்கிக் கொள்வது போல காட்சி மாற்றப்பட்டது.
அதற்கேற்ப, பாகவதர் தன் கண்களை தானே குத்திக் கொள்வது போல காட்சி படமாக்கப்பட்டது. அப்படியும் அந்தக் காட்சிக்கான படப்பிடிப்பு முடிந்த பின்பும் எம்.ஜி.ஆரால் அழுகையை அடக்க முடியவில்லை. அவரைக் கட்டியணைத்து சமாதானப்படுத்தினாராம் பாகவதர். அந்த அளவுக்கு பாகவதர் மீது அன்பு செலுத்தியவர் எம்.ஜி.ஆர்.
திரையுலகில் புகழ்கொடி நாட்டிய தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். வழக்கில் இருந்து மீண்டாலும் கூட சிறை வாழ்க்கை அவரை பற்றற்ற ஞானி போல மாற்றியிருந்தது. பின்னர், அவர் நடித்த சில படங்களும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவரும் படங்களில் நடிப்பதில் ஆர்வமின்றி இருந்தார். கடன்கள் காரணமாக திருச்சியில் அவர் கட்டிய பிரம்மாண்டமான மாளிகை ஏலத்துக்கு வந்தது. அதை மீட்டு பாகவதரிடமே கொடுத்தார் எம்.ஜி.ஆர். வெளியே தெரியாமல் பாகவதருக்கு எம்.ஜி.ஆர். செய்த உதவி இது.
காலங்கள் மாறின. பாகவதர் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். முதல்வராகவும் ஆகிவிட்டார். பாகவதரின் குடும்பம் வறுமையில் வாடுவது குறித்தும் சென்னையில் அவர்கள் வசிப்பது பற்றியும் ஒருநாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்தது.
அந்த நேரத்தில் தியாகராஜ பாகவதர் வாழ்ந்த அதே திருச்சியில் அரசு சார்பில் கலையரங்கம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழாவுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். செல்கிறார். விழாவுக்கு தியாகராஜ பாகவதர் குடும்பத்தை அழைத்து வருமாறு எம்.ஜி.ஆர். கூறினார்.
விழாவன்று மேடையில் பாகவதரின் குடும்பத்தாருக்கு அதிமுக கட்சியின் சார்பில் எம்.ஜி.ஆர். பண முடிப்பு வழங்கினார். அதோடு, அவர்களே எதிர்பாராத வகையில் காலம்தோறும் பாகவதர் பெயர் நிலைக்கும் வகையில், அரசு சார்பில் கட்டப்பட்ட கலையரங்கத்துக்கு தியாகராஜ பாகவதர் மன்றம் என்றும் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டினார். பாகவதரின் குடும்பத்தாருக்கு ஆனந்தக் கண்ணீர். பாகவதரின் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் எம்.ஜி.ஆர். வைத்திருந்த அன்புக்கும் அவரது பரந்த மனத்துக்கும் இது உதாரணம்.
விழாவில் ஒரு சுவையான சம்பவம். காலையில் விழா நடந்தது. முதல்வர் எம்.ஜி.ஆர். வருகையை எதிர்பார்த்து திருச்சி நகரமே அந்தப் பகுதியில் கூடியிருந்தது. 11.30 மணிக்கு விழா மேடைக்கு எம்.ஜி.ஆர். வருகிறார். மலர்ந்த முகத்துடன் மக்களைப் பார்த்து கும்பிட்டார். அப்போது, பொருத்தமாக ‘சிவகவி’ படத்தில் இடம் பெற்ற ‘வதனமே சந்திர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ?’ பாடல் பாகவதரின் கம்பீரக் குரலில் ஒலிப் பெருக்கியில் ஒலிக்கிறது. புரிந்து கொண்ட மக்களின் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டது.
மக்கள் கடலின் வரவேற்பை கையசைத்து ஏற்றுக் கொண்டே தனக்கு பிடித்த பாகவதரின் பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆரின் முகம் சந்திர பிம்பமாய், மலர்ந்த ரோஜாவாய் மேலும் மகிழ்ச்சியில் ஜொலித்தது. மக்களின் உற்சாக ஆரவாரத்துக்குக் கேட்க வேண்டுமா என்ன?
திரையுலகில் புகழ் பெற்றிருந்த தியாகராஜ பாகவதர், அவரது போட்டியாளர் பி.யூ.சின்னப்பா ஆகியோருக்கு பிறகு வந்த கதாநாயகர்களில் இருவரோடும் இணைந்து நடித்தவர் என்ற பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. பாகவதருடன் ‘அசோக்குமார்’, ‘ராஜமுக்தி’ ஆகிய படங்களிலும் பி.யூ.சின்னப்பாவுடன் ‘ரத்னகுமார்’ படத்திலும் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார்.
1980-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆர். அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை. செய்தி அவருக்கு கிடைத்த நேரத்தில் சென்னைத் தொலைக்காட்சியில் தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிவகவி’ படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அரசு டிஸ்மிஸ் ஆன தகவல் தெரிந்தும் கவலைப்படாமல் படத்தை எம்.ஜி.ஆர் ரசித்து பார்த்தார். அவருக்கு மக்கள் மீது அவ்வளவு நம்பிக்கை. அந்த நம்பிக்கையின்படியே மக்கள் அவரை மீண்டும் முதல்வராக்கினர்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
தனக்கு ‘பொன்மனச் செம்மல்’ பட்டம் வழங்கிய திருமுருக கிருபானந்த வாரியாருடன் எம்.ஜி.ஆர்.
எம்ஜிஆர் 100 | 5 - மனிதமும் மதநல்லிணக்கமும்
M.G.R. தனது படங்களில் தான் ஏற்கும் கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பாத்திரங்களாக இருப்பதை அனுமதிக்க மாட்டார். அதுபோன்று அவர் நடித்தது இல்லை. எந்த மதத்தினரின் நம்பிக்கைகளையும் புண்படுத்த மாட்டார். அதனால்தான், அவர் சர்வ சமுதாய காவலராக போற்றப்பட்டார்.
தனது திரைப்படங்களில் திராவிட இயக்கங்களின் கொள்கைகளையும் முற்போக்கு சிந்தனைகளையும் ஜாதிக் கொடுமைகள் குறித்தும் காட்சிகள் வாயிலாக மக்கள் மனங்களில் பதிய வைப்பது எம்.ஜி.ஆரின் உத்தி... ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சி அதற்கு ஒரு சாட்சி..
வில்லனின் ஆட்கள் ஒரு பெண்ணை தூக்கிச் செல்வார்கள். அவர்களை அடித்து விரட்டி அந்தப் பெண்ணை எம்.ஜி.ஆர். மீட்பார். பிறகு, அந்தப் பெண்ணைப் பார்த்து தனது குதிரை வண்டியில் ஏறும்படியும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு விடுவதாகவும் கூறுவார். அப்போது அந்தப் பெண், ‘‘ஐயா, நான் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவள். உங்கள் வண்டியில் ஏறக் கூடாது’’ என்பார்.
அதற்கு எம்.ஜி.ஆர். பதிலளிக்கும்போது, ‘‘உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி இதெல்லாம் இந்த சமுதாயம் செஞ்சு வெச்ச கொடுமை. என்னைப் பொறுத்தவரை எல்லாரும் ஒரே ஜாதிதான். அது மனித ஜாதி’’ என்பார். இப்படி, படங்களில் பொருத்தமான இடங்களில் ஜாதிக் கொடுமைகளை சாட எம்.ஜி.ஆர். தவறியதில்லை.
தன்னலம் கருதாது பணியாற்றும் மக்கள் தொண்டர்களை வாய்ப்பு கிடைக்கும்போது உரிய கவுரமும் பெருமையும் அளித்து கவுரவிப்பதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்.தான்!
1940-களில் கன்னியாஸ்திரி ஒருவர் கொல்கத்தாவில் ஏழைகளுக்கு தொண்டாற்றி வந்தார். தனவந்தர்கள், பெரிய மனம் கொண்டோரிடம் இருந்து நிதி பெற்று அந்தப் பணத்தைக் கொண்டு ஏழை, எளிய, மக்களுக்கும் நோயாளிகளுக்கும் சேவை செய்து வந்தார். ஒரு நாள் ஒரு பணக்காரரிடம் கையேந்தி நிற்கிறார் அந்த கன்னியாஸ்திரி. பணம் இல்லை என்று விரட்டுகிறார் பெரிய மனிதர். விடாமல் அவரை பணிவோடு கேட்கிறார் அந்த அம்மையார். ஆத்திர மடைந்த பெரிய மனிதர் கையேந்தி நின்ற அந்த அன்னையின் கைகளில் காறித் துப்புகிறார்.
சென்னை வந்த போப்பாண்டவரை முதல்வர் எம்.ஜி.ஆர். வரவேற்கிறார்.
அப்போதும் அந்த அம்மையார் பொறுமையாக, ‘‘ஐயா, எனக்கான காணிக்கையை கொடுத்துவிட்டீர்கள். ஏழைகளுக்கான காணிக்கையை தயவு செய்து கொடுங்கள்’’ என்று கேட்டதைப் பார்த்து அந்த பணக்காரரே மனமிறங்கி நன்கொடை அளித்தார். அந்த பொறுமை யின் சிகரம்தான் தன் வாழ்க்கையை நலிந்தோருக்காகவும் நோயாளிகளுக் காகவும் அர்ப்பணித்த அன்னை தெரசா.
அப்படிப்பட்ட தொண்டு உள்ளம் படைத்த அன்னை தெரசா, ஏழை மாணவர்களுக்கு சத்தான உணவு அளிக்க எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டத்தை பாராட்டாமல் இருப்பாரா?
1982-ம் ஆண்டு பள்ளி மாணவர் களுக்கு இலவச சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். சத் துணவுத் திட்டத்தை தெரசா மிகவும் பாராட்டினார். இது தொடர்பாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த விழாவில் தெரசா கலந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு பாராட்டு தெரிவித்தார்.
பெண்களுக்காக தனி பல்கலைக் கழகத்தை அமைக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். அதன்படி, 1984-ம் ஆண்டு கொடைக்கானலில் பெண்களுக்கான தனிப் பல்கலைக்கழகம் உருவானது. அந்த விழாவில் தெரசா கலந்து கொண்டார். அப்போது காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தனது தொண்டால் பெண் இனத் துக்கு பெருமை தேடித் தந்த அன்னை தெரசாவின் பெயர், பெண்கள் பல் கலைக்கழகத்துக்கு சூட்டப்படுவதாக விழா மேடையில் பலத்த கரகோஷத்துக் கிடையே எம்.ஜி.ஆர். அறிவித்தார். அன்னை தெரசா நெகிழ்ந்து போனார். மேடையில் இருந்த பரூக் அப்துல்லா எழுந்து மகிழ்ச்சியில் எம்.ஜி.ஆரை தழுவிக் கொண்டார்.
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக தொடக்க விழாவில் தெரசாவுக்கு எம்.ஜி.ஆர். விருது வழங்குகிறார். அருகே பரூக் அப்துல்லா.
இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக்கழகத் துக்கு சூட்டுகிறார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்து கிறார். மத வேறுபாடுகள் மறைந்து மனித நேயம் உயர்ந்து நிற்கிறது.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது நாகப்பட்டிணம் சட்டப் பேரவைத் தொகுதியில் மருத்துவ விடுதி ஒன்றின் திறப்பு விழா. அது தொடர்பான விழா நாகூர் தர்கா அருகே நடந்தது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். ‘நான் கைலி கட் டாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ் துவன், திருநீறு அணியாத இந்து...’
மக்களின் கரவொலி இடியொலியாய் முழங்கியது. மேடையில் பேசியது போன்றே வாழ்ந்தும் காட்டியவர் எம்.ஜி.ஆர்.
வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போராடி சுதந்திரம் பெற்றதன் நோக்கமே ஏற்றத் தாழ்வுகள் நீங்கி எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் சுதந்திரமாக இருப்பதற்குத்தான்.
அந்த சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-ம் தேதி வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடும் வகையில் தமிழக திருக்கோயில்களில் சமபந்தி போஜனத்தை அறிவித்து செயல்படுத்தியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.
தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
தொடரும்..










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக