சனி, 9 ஏப்ரல், 2016

எம்ஜிஆர் 100 | 9 - 11

மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தியாகி கக்கனை முதல்வர் எம்.ஜி.ஆர். அன்புடன் நலம் விசாரிக்கிறார்.உடன் காளிமுத்து. பாலகுருவா ரெட்டியார்.

எம்ஜிஆர் 100 | 9 - தியாகி கக்கனுக்கு செய்த உதவி

M.G.R. முதல்வராக இருந்த சமயம். 1978-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள். முதல்வரை சந்தித்து மனுக்கள் அளிக்க எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டில் மக்கள் குழுமியிருக்கின்றனர். அவர்களிடையே ஒரு பெண்மணி தயங்கித் தயங்கி நிற்கிறார். எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண்மணியிடம் விசாரிக்கின்றனர். தனது கணவர் பற்றிய விவரங்களைச் சொல்லி தானும் தனது குடும்பமும் படும் கஷ்டங்களை கூறி முதல்வரை சந்தித்தால் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறார் அந்தப் பெண்மணி.


வீட்டில் இருந்து வெளியே வந்து மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு கோட்டைக்கு காரில் ஏறிப் புறப்பட தயாரான எம்.ஜி.ஆரிடம் அந்த பெண்மணி பற்றிய விஷயம் தெரிவிக்கப்பட்டது. காரில் இருந்து இறங்கி பெண்மணி நின்றிருந்த இடத்துக்கே சென்று வணக்கம் தெரிவித்து வரவேற்று முதலில் அவரது கணவரின் நலன் பற்றி விசாரிக்கிறார். அவரை சாப்பிடச் சொல்லிவிட்டு, பின்னர், அவரது குடும்ப நிலைமை அறிந்து கொண்ட பின், தனது டிரைவரை அழைத்து அந்த பெண்மணியை வேறு காரில் அவரது வீட்டில் கொண்டு விட்டு வருமாறு கூறுகிறார். கவலை தீரும் என்ற நம்பிக்கையில் அந்தப் பெண்ணும் நிம்மதியாக எம்.ஜி.ஆரின் காரில் சென்றார்.

அ ந்தப் பெண்மணி... பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த தியாகி கக்கனின் மனைவிதான். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர் தியாகி கக்கன். சுதந்திரப் போராட்ட வீரரான அவர் 10 ஆண்டுகள் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியவர்.

அமைச்சர் பதவிக் காலத்துக்குப் பின் மக்களோடு மக்களாக பஸ்ஸில் சென்றவர் என்பதிலிருந்தே பொதுவாழ்வில் அவர் எவ்வளவு புடம் போட்ட தங்கமாக வாழ்ந்திருக் கிறார் என்பது விளங்கும். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த கக்கனுக்கு வாடகைப் பணம் 170 ரூபாயை கூட கொடுக்க முடியாத துரதிர்ஷ்டவசமான நிலைமை.
விழா ஒன்றில் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவிக்கும் சிறுவன்.
பல மாதங்களாக வாடகை பாக்கி இருந்ததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர் அதிகாரிகள். இருந்தாலும் தன் கஷ்டம் தன்னோடே இருக்கட்டும் என்று காலம் கடத்தி வந்தார் கக்கன். ஒருநாள் வீட்டுக்கு சீல் வைப்பதற்காக அதிகாரிகள் வந்துவிட்டார்கள். ‘‘வாடகையை கட்டுங்கள் இல்லை, வீட்டிலிருந்து வெளியேறுங்கள்” என்று கூறுகின்றனர். அவர்களிடம் ஒரு நாள் அவகாசம் கேட்கிறார் கக்கனின் மனைவி.

கிடைத்த ஒருநாள் அவகாசத்தில் தங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்பிய கக்கனின் மனைவிதான் ஆரம்பத்தில் உள்ளபடி, ராமாவரம் தோட்டத்துக்கு சென்று முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தங்கள் நிலைமையை விளக்கிவிட்டு நம்பிக்கையுடன் சென்ற அந்தப் பெண்மணி.

அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. யாருமே கஷ்டப்படுவதை பொறுத்துக் கொள்ளாதவரான எம்.ஜி.ஆர்., நாட்டுக்கு தொண்டாற்றிய தியாகி கக்கனின் குடும்பம் சிரமப்படுவதை பொறுத்துக் கொள்வாரா? வீட்டு வசதி வாரியத் துக்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கி மொத் தத்தையும் எம்.ஜி.ஆர். அன்றே கட்டிவிட்டார். இங்கே, ஒன்றை கவனிக்க வேண்டும். முதல்வர் எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் வாடகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்து உத்தரவிடச் செய்திருக்க முடியும். ஆனால், தனது சொந்தப் பணத்தில் இருந்து வீட்டு வாட கையை கட்டியிருக்கிறார் என்றால் அதுதான் தியாகத்துக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த மரியாதை.

தான் மட்டும் மரியாதை காட்டினால் போதாது, அரசு சார்பிலும் கக்கனின் தியாகத்துக்கு மரி யாதை செய்யப்பட வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர். மறுநாளே உத்தரவு போட்டார்.

‘‘முன்னாள் அமைச்சரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி கக்கனின் மகத்தான தேச சேவையை கருத்தில் கொண்டு அவர் வாழ்நாள் முழுவதும் வசிக்க இலவசமாக வீட்டு வசதி செய்யப்படும். அவரது குடும்பத்துக்கு மாதம் 500 ரூபாய் அரசு உதவித் தொகை வழங்கப்படும்’’ என்பதுதான் எம்.ஜி.ஆர். போட்ட உத்தரவு.

அதோடு நில்லாமல் அந்த உத்தரவுக்கான அரசாணை சான்றிதழையும் வெள்ளிப் பேழையில் வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 1979-ம் ஆண்டு நடந்த திருவள்ளுவர் தின விழாவில் கக்கனிடம் முதல்வர் எம்.ஜி.ஆர். வழங்கினார்.
அரசு விழா ஒன்றில் மூதாட்டிக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். உதவி வழங்குகிறார்.
எம்.ஜி.ஆர். ஒருமுறை மதுரை சென்றார். உடல் நலம் சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது கட்சிக்காரர் ஒருவரை பார்ப்பதற்காக அங்கு செல்கிறார். கட்சிக்காரரைப் பார்த்துவிட்டு புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு தியாகி கக்கனும் இங்கே சிகிச்சை பெற்றுவருகிறார் என்று அவருடன் இருந்தவர்கள் தெரிவித்தனர். உடனே, எம்.ஜி.ஆரின் முகம் மாறியது. ‘‘இதை ஏன் முதலிலேயே தெரிவிக்கவில்லை?’' என்று கேட்டு, கக்கன் எந்த வார்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று அறிந்து அவரை காணச் சென்றார்.

அங்கு சாதாரண அறையில் சிகிச்சை பெற்று வந்த கக்கனைக் கண்டதும் எம்.ஜி.ஆருக்கு கண்கள் கலங்கின. மருத்துவமனையில் தனக்கு தெரி விக்காமல் சேர்ந்தது பற்றி கக்கனிடம் அன்புடன் தனது கவலையை வெளிப்படுத்தியதோடு, மருத்துவர்களை அழைத்து கக்கனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

கக்கனின் மறைவுக்குப் பிறகும் அவரது குடும் பத்தினருக்கு இலவச வீடு, அரசு உதவித் தொகை, வைத்திய வசதிகள் கிடைக்கும்படி செய்தார்.

தியாகி கக்கனுக்கு செய்த உதவிக்காக முதல்வர் எம்.ஜி.ஆரை கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா தரப்பினரும் பாராட்டினர். .

கவியரசு கண்ணதாசன் தெரிவித்த பாராட்டு சற்று வித்தியாசமானது, உண்மையும் கூட. அவர் சொன்னார்... ‘‘கக்கனைப் போன்ற உண்மை யான தியாகிகளுக்கு உதவி செய்யும் எம்.ஜி.ஆரை எந்தக் கட்சிக்காரனும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.’’

எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’ படத்தில், ‘தூங்காதே தம்பி தூங்காதே....’, ‘ அரசிளங் குமரி' படத்தில் ‘சின்னப் பயலே... சின்னப் பயலே சேதி கேளடா...’ போன்ற கருத்தாழம் மிக்க பாடல்களை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 1959-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி இளம் வயதிலேயே அவர் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு பண உதவி செய்து ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர்., ‘நாடோடி மன்னன்’ படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் அந்தப் படத்தின் பாடல்கள் ரெக்கார்டு உரிமையை அவர்களுக்கே கொடுத்துவிட்டார்!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
சென்னையில் இருந்து எம்.ஜி.ஆர். சென்ற ரயில் 10 மணி நேரம் தாமதமாக மதுரைக்கு சென்றபோது, ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட படம். ரயில் கூரை மீது மக்கள் இருப்பதையும் ஆர்வத்துடன் ஒரு தொண்டர் எம்.ஜி.ஆரை தொட்டுவிட துடிப்பதையும் படத்தில் காணலாம்.

எம்ஜிஆர் 100 | 10 - எம்ஜிஆரும் இந்திரா காந்தியும்

M.G.R. சென்ற ரயில் வழி நெடுக மக்களின் உற்சாகமான வரவேற்பு காரணமாக, 10 மணி நேரம் தாமதமாக மதுரை சென்றது என்றால் இப்போது நம்ப முடிகிறதா? ஆனால், 43 ஆண்டுகளுக்கு முன் உண்மையில் அப்படிப்பட்ட அதிசயம் நடந்தது. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1973-ம் ஆண்டில் அப்போது மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுக்க முடிவு செய்தார்.

அதற்காக, சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரைக்கு கிளம்பினார். இரவு நேரம் என்றாலும் வழியெங்கும் மக்கள் காத்திருந்தனர். திருச்சியில் இருந்து ஆங்காங்கே மக்கள் வெள்ளம் ரயிலை வழியில் நிறுத்தியது. எம்.ஜி.ஆரும் தான் இருந்த ரயில் பெட்டியின் கதவைத் திறந்து மக்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் ரயிலுடன் மக்கள் ஓட்டமும் நடையுமாக பக்கவாட்டிலும் ரயிலுக்கு முன்னாலும் செல்ல ஆரம்பித்து விட்டனர். மக்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்று இன்ஜின் டிரைவரும் ரயிலை மெதுவாக இயக்க ஆரம்பித்தார். ரயில் மரவட்டையாக ஊர்ந்து சென்றது.

துரை வந்த இந்திரா காந்தியோ ஏற்கெனவே, திட்டமிட்டபடி எம்.ஜி.ஆரை சந்தித்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட வேண்டும். ரயில் ஊர்ந்து சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் இந்திரா காந்தியை சந்திக்க முடியாது என்பதால் எம்.ஜி.ஆர். ஒரு முடிவுக்கு வந்தார். கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் மதுரை சென்று இந்திரா காந்தியை சரியான நேரத்தில் சந்திக்க திட்டமிட்டார்.
கடலாக திரண்டிருக்கும் மக்களை பார்த்து உற்சாகமாக கையசைக்கிறார் எம்.ஜி.ஆர்.
கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கி காரில் செல்ல ஏற்பாடுகள் நடக்கும்போது, விஷயம் அறிந்து ரயில் இன்ஜின் டிரைவர் பதறிப் போய்விட் டார். டிரைவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் நேரே எம்.ஜி.ஆர். இருக்கும் ரயில் பெட்டிக்கு வந்தனர். ‘‘கொடைரோடில் இருந்து மதுரை வரை வழி நெடுக மக்கள் உங்களுக்காக காத்திருக்கின்ற னர். நீங்கள் ரயிலில் இல்லையென்றால் நிலைமை விபரீதமாகிவிடும். நீங்கள் ரயிலிலேயே வருவது தான் ரயிலுக்கு பாதுகாப்பு. எனவே, தயவு செய்து ரயிலிலேயே பயணத்தை தொடருங்கள்’ என்று கேட்டுக் கொண்டனர்.

நிலைமையை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். ரயிலிலேயே பயணத்தை தொடர முடிவு செய் தார். ஆனாலும், அதிமுக கட்சியின் முக்கியஸ்தர் களை இந்திரா காந்தியிடம் அனுப்பி வரமுடியாத நிலைமையையும் அவரிடம் விளக்கச் சொன் னார். வழியெங்கும் மக்களின் ஆரவார வரவேற்பால் காலை 7 மணிக்கு மதுரைக்கு வரவேண்டிய ரயில், மாலை 5 மணிக்கு வந்தது.

எம்.ஜி.ஆருக்கு நேரு குடும்பத்தின் மீதும் இந்திரா காந்தியின் மீதும் மிகுந்த அபிமானம் உண்டு. இந்திராவும் எம்.ஜி.ஆருக்கு மதிப்பு அளித்து வந்தார். 1977- ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக - இந்திரா காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டது. மதுரையில் நடந்த பிரம்மாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் எம்.ஜி.ஆரும். இந்திரா காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர்.

அரசியல் காற்று அவ்வப்போது திசை மாறுவதால் எதிரணியில் இருக்க வேண்டி இருந்தாலும் இருவரும் பரஸ்பரம் கொண்ட அன்பும் மரியாதையும் என்றும் மாறியது இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டு எம்.ஜி.ஆர். சென்னை தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டபோது, அவரை பார்ப் பதற்காகவே டெல்லியில் இருந்து பிரதமர் இந்திரா காந்தி பறந்து வந்தார். அவர் அமெரிக்கா செல்வதற்காக மத்திய அரசு சார்பில் எல்லா உதவிகளையும் செய்தார்.

எம்.ஜி.ஆருக்கும் இந்திரா காந்திக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. எம்.ஜி.ஆர் பிறந்த அதே 1917-ம் ஆண்டில்தான் இந்திரா காந்தியும் பிறந்தார். பிறப்பு முதல் கடைசி வரை எம்.ஜி.ஆருக்கும் 7-ம் எண்ணுக்கும் தொடர்பு உண்டு. அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் ஆண்டுகள், தேதிகள் மற்றும் அவற்றின் கூட்டுத் தொகைக்கும் 7-க்கும் தொடர்பு இருக்கும்.

எம்.ஜி.ஆர் பிறந்த தேதி 17, பிறந்த ஆண்டு 1917, முதன்முதலில் எம்.எல்.ஏ. ஆன ஆண்டு 1967, அப்போது அவர் சார்ந்திருந்த திமுக ஆட்சியைப் பிடித்த ஆண்டு 1967, அவர் அதிமுகவை தொடங்கிய தேதி 17, எம்.ஜி.ஆர். முதல்முறையாக முதல்வரானது 1977, அவர் பயன்படுத்திய அம்பாசிடர் கார் எண் 4777, இதன் கூட்டுத் தொகை 7. எம்.ஜி.ஆர். மறைந்தது 24-12-1987, இதன் கூட்டுத் தொகையும் 7-தான்.

மதுரையில் 1977-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் எம்.ஜி.ஆருடன் பிரதமர் இந்திரா காந்தி, சி.சுப்பிரமணியம், (இடது ஓரம்) ஆர்.வி. சுவாமிநாதன். கடலாக திரண்டிருக்கும் மக்களை பார்த்து உற்சாகமாக கையசைக்கிறார் எம்.ஜி.ஆர்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆரை சந்திப்பதற்காக வந்ததுதான் இந்திரா காந்தி கடைசியாக தமிழகம் வந்தது. அடுத்த சில நாட்களில் அவர் கொல்லப்பட்ட துயரம் நடந்தது. அதேபோல, எம்.ஜி.ஆர். கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி, பிரதமர் ராஜிவ் தலைமையில் சென்னையில் நடந்த நேரு சிலை திறப்பு விழா.

சென்னை மருத்துவமனையில் எம்.ஜி.ஆரை சந்தித்து நலம் விசாரித்த இந்திரா காந்தி அவரிடம் கூறினார்... ‘‘நீங்கள் எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்தவர். இந்த சோதனையில் இருந்தும் மீண்டு வருவீர்கள்’’ என்றார். அவர் சொன்னது பலித்தது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக முதல்வராக சென்ற எம்.ஜி.ஆர்., உடல் நலம் தேறி அங்கிருந்தபடியே, தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகவே வந்தது வரலாறு.

1967-ம் ஆண்டு முதல் 5 முறை சட்டப் பேரவைத் தேர்தல்களில் எம்.எல்.ஏ-வாக தொடர்ந்து எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார். 1977-முதல் நடந்த தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று 3 முறை ஆட்சியைக் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார். துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக முதல்முறை பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டபோதும், உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குச் சென்றதால் 1984-ல் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டபோதும் பிரசாரத்துக்கு செல்லவில்லை. இரண்டு தேர்தல்களில் படுத்துக்கொண்டே ஜெயித்தார் எம்.ஜி.ஆர்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

எம்ஜிஆர் 100 | 11 - என்.எஸ்.கிருஷ்ணன் எனும் ஆசான்

M.G.R. அறிமுகமான ‘சதி லீலாவதி’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்துள்ளார். தொழில் முறையிலும் வயதாலும் எம்.ஜி.ஆருக்கு மூத்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆருக்கு பல வகைகளில் உதவியதோடு, படங்களில் வாய்ப்பு கிடைக்க சிபாரிசும் செய்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு வழிகாட்டியாகவும் விளங்கியவர்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உதவும் குணமும், இளகிய நெஞ்சமும், நகைச்சுவை உணர்வும் அனைவரும் அறிந்ததுதான். ஒருமுறை, என்.எஸ்.கிருஷ்ணனை அவரது வீட்டில் ஒரு நிறைமாத கர்ப்பிணி சந்தித்து தனது வறுமையைச் சொல்லி உதவி கேட்டார். அந்தப் பெண் மீது இரக்கப்பட்டு என்.எஸ்.கிருஷ்ணன் 100 ரூபாய் வழங்கினார். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. நன்றி தெரிவித்துவிட்டு சிறிது தூரம் சென்ற அந்தப் பெண்ணை என்.எஸ்.கிருஷ்ணன் திரும்ப அழைத்தார். வந்த பெண்ணிடம் மீண்டும் ஒரு 100 ரூபாய் கொடுத்தார். ஏன் மறுபடியும் பணம் கொடுக்கிறார் என்று அந்தப் பெண் புரியாமல் பார்த்தார்.

என்.எஸ்.கிருஷ்ணன் சிரித்தபடியே நிதானமாகச் சொன்னார். ‘‘முதலில் கொடுத்த 100 ரூபாய் உன்னைப் பார்த்து நான் இரக்கப்பட்டதற்கு, இப்போது கொடுத்த பணம் உன்னுடைய நடிப்புத் திறமைக்காக. தயவு செய்து உன் வயிற்றில் கட்டியிருக்கும் துணியை எடுத்து விடம்மா..’’ என்றாராம். தன்னை ஏமாற்றி பணம் வாங்கிய பெண்ணிடம் கூட கோபம் கொள்ளாமல் அந்த பெண்ணின் தவறை தனக்கே உரிய நகைச்சுவையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார் கலைவாணர்.

என்.எஸ்.கிருஷ்ணனை தனது ஆசான்களுள் ஒருவராக கருதிய எம்.ஜி.ஆருக்கும் ஒருமுறை இதே போன்ற அனுபவம். அவர் முதல்வராக இருந்தபோது ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பதாக கூறி உதவி கேட்டு வந்தார். எம்.ஜி.ஆரும் அவர் கேட்ட உதவியை செய்துள்ளார். வாங்கிக் கொண்டு அந்தப் பெண் வெளியேறும்போது எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண் நடிப்பதை கண்டுபிடித்துவிட்டனர். அந்தப் பெண் மன்னித்து அனுப்பப்பட்டார். அவர் சென்ற பிறகு கலைவாணர் வாழ்வில் நடந்த மேலே கூறப்பட்ட சம்பவத்தை உதவியாளர்களிடம் சொல்லி சிரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
‘மதுரை வீரன்’ படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., டி.ஏ.மதுரம்.

ஆரம்ப காலத்தில் ‘மாயா மச்சீந்திரா’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக என்.எஸ்.கிருஷ்ணனும் எம்.ஜி.ஆரும் கொல்கத்தா சென்றனர். படப்பிடிப்புக்கு இடையே கொல்கத்தாவை சுற்றிப் பார்க்க படக்குழுவினர் புறப்பட்டனர். அப்போது ஓரிடத்தில் ஓடை ஒன்று குறுக்கிட்டது. படப்பிடிப்பு குழுவினர் ஓடையில் இறங்கி கடக்கும்போது, எம்.ஜி.ஆர். தனக்கே உரிய துடிப்போடு அந்த ஆறடி அகலமுள்ள ஓடையை ஒரே தாண்டாக தாண்டி குதித்து விட்டார். அப்படி தாண்டிக் குதித்ததில் அவரது செருப்பு ஒன்று அறுந்துவிட்டது.

உடனே, என்.எஸ்.கிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆர். ‘‘வாங்கண்ணே, புது செருப்பு வாங்கி வரலாம்’’ என்று கூறியிருக்கிறார். அதற்கு ‘‘இன்று நேரமாகிவிட்டது. நாளை செல்லலாம்’’ என்று பதிலளித்தார் கிருஷ்ணன். மறுநாள் காலை எம்.ஜி.ஆர். மீண்டும் வந்து நினைவுபடுத்திய போது, அவரது கையில் ஒரு பார்சலை திணித்தார் கிருஷ்ணன். அதை எம்.ஜி.ஆர். ஆவலோடு பிரித்து பார்த்தார். உள்ளே, அவரது பழைய செருப்பு. ‘‘என்னண்ணே, புது செருப்பு வாங்கலாம்னு கூப்பிட்டா, பழைய செருப்பையே கொடுக்கறீங்க?’’ என்ற எம்.ஜி.ஆரை தீர்க்கமாக பார்த்தபடி பதிலளித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.

‘‘உன்னையும் உங்க அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியையும் நாடகத்தில் நடிக்க உங்க அம்மா அனுப்பிவெச்சது பணம் சம்பாதிக்கத்தான். பழைய செருப்பு நல்லாத்தான் இருக்கு. அதை நான் தைச்சு வெச்சுட்டேன்’’ என்று சொன்ன கிருஷ்ணனின் அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்துபோய்விட்டார். அன்று முதல் எல்லா பொருட்களையும் முழுமையாக பயன்படுத்தவும் எளிமையாக இருக்கவும் முடிவு செய்தார். அப்படி எளிமையாகவும் ஆடம்பரம் இல்லாமலும் இருக்க அவர் கற்றுக் கொண்டதற்கு ஒரு உதாரணம். பத்து ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் வீட்டில் கடைசி வரை குடிநீர் குழாய் இணைப்பு கிடையாது. தோட்டத்தில் உள்ள கிணற்று நீர்தான் பயன்படுத்தப்பட்டது. வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத ஒரே முதல்வர் எம்.ஜி.ஆராகத்தான் இருப்பார்.

சென்னையில் நடந்த என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் விழாவில் முதல்வர் எம்.ஜி.ஆர். பேசுகிறார்.
தனக்கு ஆசான் போல இருந்த என்.எஸ்.கிருஷ்ணன், கடைசி காலத்தில் வறுமையால் வாடி நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நிறைய உதவிகளை எம்.ஜி.ஆர். செய்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார் கிருஷ்ணன். அதற்காக எம்.ஜி.ஆர். சும்மா இருந்து விடுவாரா? அவரால் கொடுக்காமல் இருக்க முடியாதே? என்.எஸ்.கிருஷ்ணன் படுத்துக் கொண்டிருந்த கட்டிலில் தலையணைக்கு அடியில் பணக்கட்டுகளை வைத்துவிட்டு வருவார் எம்.ஜி.ஆர்.

என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்த பின் நாகர்கோயிலில் அவரது வீடு ஏலத்துக்கு வந்தபோது அதை மீட்டு மீண்டும் அவர்கள் குடும்பத்தினருக்கே எம்.ஜி.ஆர். கொடுத்தார். அவரது குடும்பத்தையே எம்.ஜி.ஆர். தத்தெடுத்துக் கொண்டார் என்று சொல்லலாம். என்.எஸ்.கிருஷ்ணனின் பிள்ளைகள் எல்லாரையும் படிக்க வைத்தார். அவரது மகள் திருமணத்தை தனது சொந்த செலவில் நடத்தி வைத்தார்.

‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்தார். ஆரம்பத்தில் இருவருக்கும் போட்டி பாட்டு ஒன்று இருக்கும். அதிலே பல அரிய கருத்துக்கள் கேள்வி பதில் பாணியில் அமைந்திருக்கும்.

என்.எஸ்.கிருஷ்ணனை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்கும் ஒரு கேள்வி..

‘‘புகையும் நெருப்பில்லாமல் எரிவது எது?’’

பதில் சொல்லத் தெரியாமல் என்.எஸ்.கிருஷ்ணன் தவிப்பதை தொடர்ந்து எம்.ஜி.ஆரே பதிலளிப்பார்...

‘‘பசித்து வாடும் மக்கள் வயிறு அது...”

உடனே, ‘‘சரிதான் சரிதான்....’’ என்று ஆமோதிப்பார் என்.எஸ்.கிருஷ்ணன்.

புகையும் நெருப்பும் இல்லாமல் பசியால் எரிந்த ஆயிரக்கணக்கான வயிறுகளை உணவு என்னும் தண்ணீர் ஊற்றி குளிர்வித்தவர் எம்.ஜி.ஆர்.

நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சமூகம் கேலியாக பேசி வந்த காலத்தில், எம்.ஜி.ஆரால் நடிகர்களுக்கு அந்தஸ்தும் கவுரவமும் கிடைத்தது. 1965-ம் ஆண்டு அந்தமானில் அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியால் ‘பணத்தோட்டம்’ எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் திறந்து வைக்கப்பட்டது. ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை நாட்டின் பிரதமர் திறந்து வைத்த பெருமை எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு.

படங்கள் உதவி: ஞானம், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்
தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
- தொடரும்...
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல