சனி, 9 ஏப்ரல், 2016

எம்ஜிஆர் 100 | 6 - 8

காமராஜர் பேசுவதை உன்னிப்பாக கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆர் 100 | 6 - நேரு எழுதிய கடிதம்

M.G.R. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டுப் பற்றிலும் தேச பக்தியிலும் தேசியவாதிகள் யாருக்கும் சளைத்தவர் இல்லை. ஆரம்பத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். காங்கிரஸ்காரராக இருந்தவர்தான். 1946-ல் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக காமராஜர் ஆனபோது அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்தான். பின்னர், அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

காமராஜரை ஆரம்பத்தில் தலைவராக ஏற்றுக் கொண்டதால்தான் 1965-ம் ஆண்டு ஜூலையில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ என்று பேசினார். இது அப்போது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. என்றாலும், அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரின் உள்ளம் தெளிவாகப் புரிந்தது.

1954 -ம் ஆண்டில் மூதறிஞர் ராஜாஜி சென்னை மாகாண முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின், முதல்வராக காமராஜர் பதவியேற்றார். அப்போது அவர் சட்டப் பேரவை உறுப்பினராக இல்லை. குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ‘குணாளா, குலக்கொழுந்தே..’ என்று போற்றி காமராஜருக்கு ஆதரவு அளித்த அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரின் உள்ளம் புரியாதா என்ன?

‘இந்தி சீனி பாய் - பாய்’ என்று உறவு கொண்டாடிய சீனா 1962-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திடீரென இந்தியா மீது தாக்குதலை தொடங்கியது. நண்பரைப் போல நடித்து நயவஞ்சமாக தாக்குதலில் ஈடுபட்ட சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாரானது. ஆசிய ஜோதி பண்டித நேரு அறைகூவல் விடுத்தார்.

‘‘ராணுவத்துக்கு உதவுவதற்காக பொது மக்கள் தாரளமாக யுத்த நிதி வழங்க வேண்டும்’’ என்று வானொலி மூலம் நாட்டு மக்களை பிரதமர் நேரு கேட்டுக் கொண்டார். அவரது உரையைக் கேட்டவுடன் 75 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்குவதாக அறிவித்த முதல் நடிகர் மட்டுமல்ல; நாட்டிலேயே முதல் குடிமகன் எம்.ஜி.ஆர்.தான். அது மட்டுமல்ல; அனைத்து இந்தியாவிலும் அவ்வளவு பெரிய தொகையை எந்த தனிநபரும் கொடுக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் 75,000 ரூபாய் இன்று பல கோடிகளுக்கு சமம்!

அறிவித்ததோடு நிற்காமல் உடனடியாக அப்போது முதல்வராக இருந்த காமராஜரிடம் முதல் தவணையாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை கொடுப்பதற்காக காமராஜர் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். காமராஜர் வீட்டில் இல்லை. ரயில் மூலம் வெளியூர் பயணம் செல்வதற்காக அவர் எழும்பூர் ரயில் நிலையம் சென்றுவிட்டது தெரியவந்தது. காமராஜர் திரும்பி வரட்டும், கொடுக்கலாம் என்று எம்.ஜி.ஆர். காத்திருக்கவில்லை. எழும்பூர் ரயில் நிலையம் விரைந்து காமராஜர் பயணம் செய்த பெட்டிக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.

காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார் முதல்வர் எம்.ஜி.ஆர்.

ரயில் நிலையத்தில் ஒரே பரபரப்பு. திடீரென அங்கு எம்.ஜி.ஆரைக் கண்டதும் காமராஜருக்கே வியப்பு. நேருவின் உரையை வானொலியில் கேட்டதாகவும் யுத்த நிதிக்கு ரூ.75,000 நன்கொடை அளிக்க இருப்பதை தெரிவித்து, முதல் தவணையாக ரூ.25,000க்கான காசோலையை காமராஜரிடம் வழங்கினார் எம்.ஜி.ஆர். ‘ரொம்ப சந்தோஷம்’ என்று மகிழ்ச்சி தெரிவித்த காமராஜர் இதுபற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளிவர ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர். நிதி அளித்த விஷயம் மக்களுக்குத் தெரிய வந்தால், மக்கள் மேலும் ஆர்வமுடன் நிதி அளிக்க முன்வருவார்கள் என்பது காமராஜரின் எண்ணம்.

வெளியூர் பயணம் முடிந்து சென்னை திரும்பிய காமராஜர், பத்திரிகையாளர்களை சந்தித்தார். எம்.ஜி.ஆர். யுத்த நிதி வழங்கியது பற்றியும் பேச்சு வந்தது. அப்போது ஒருவர், ‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். நிதி வழங்கியிருக்கிறாரா?’ என்று கேட்டதும் வந்ததே கோபம் காமராஜருக்கு.

‘‘சும்மா இருங்கிறேன். நீ எவ்வளவு கொடுத்தே? எப்ப கொடுத்தே? கொடுப்பியோ, மாட்டியோ? கொடுக்கிறவங்களையும் சும்மா ஏன் கிண்டல் செய்யணும்? நேரு ரேடியோவிலே பேசப் போறாரு. காமராஜரு ரெயில்லே போவாரு. முதல்லே கொடுக்கணும்னு பிளான் போட்டாரா? எப்படி முடியும்கிறேன்? ரயில்வே ஸ்டேஷன்லே எம்.ஜி.ஆர். கொடுத்த செக்கை வாங்கி யதும் நானே பிரமிச்சு போயிட்டேன். உடனே பேப்பருக்கும் செய்தி கொடுக்கச் சொன்னேன்’’ என்று பொரிந்து தள்ளிவிட்டார் உண்மையான நாட்டுப் பற்றைப் போற்றும் பெருந்தலைவர் காமராஜர்.

இதனிடையே, தான் யுத்த நிதி அளிக்கும் செய்தியை பிரதமர் நேருவுக்கும் கடிதம் மூலம் எம்.ஜி.ஆர். தெரிவித்தார். யுத்த வேளையில், நெருக்கடியான நேரத்தில் பிரதமர் நேரு நினைத்திருந்தால் தனது உதவி யாளரையோ, பிரதமர் அலுவலக ஊழியர் களையோ எம்.ஜி.ஆருக்கு பதில் கடிதம் எழுதச் சொல்லியிருக்கலாம். ஆனால், யுத்த நிதிக்கு பெரும் தொகையை அள்ளி வழங்கிய நாட்டின் முதல் குடிமகன் எம்.ஜி.ஆருக்கு நேருவே கடிதம் எழுதினார். ‘‘ராணுவத்தினரின் பயன்பாட்டுக்கு தாராளமாக நிதி வழங்கியமைக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்று கடிதத்தில் நேரு குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆருக்கு பிரதமர் நேரு எழுதிய கடிதம்

எம்.ஜி.ஆரின் நாட்டுப் பற்றையும் நேரு பாராட்டிய பெருந்தன்மையான அவரது மனதையும் பறைசாற்றும் வகையில், சென்னை யில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் சாட்சியாக உள்ளது நேருஜியின் அந்தக் கடிதம்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தேசத் தலைவர்கள், நாட்டுக்கு உழைத்தவர்கள், தியாகிகள் பெயர்களை மாவட்டங்களுக்கு சூட்டினார். 1984-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாளன்று அவர் பிறந்த விருது நகரை தலைமையிடமாகக் கொண்டு காமராஜர் மாவட்டத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பேரறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர்.


 எம்ஜிஆர் 100 | 7 - இந்தி எதிர்ப்பு போராட்டமும் விமர்சனமும்

M.G.R. சிறை சென்றிருக்கிறார் என்பது பலர் அறிந்திராத செய்தி. இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக இருந்தபோது அதில் எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளவில்லை என்று அவரைப் பற்றி விமர்சனங்கள் எழுந்தது உண்டு. அந்த சமயத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்புக்காக கோவா சென்றிருந்தார், அண்ணா மற்றும் திமுகவின் சம்மதத்தோடுதான்.

இந்தி மொழி திணிப்புக்கு எதிராக நீண்ட போராட்டத்தைத் தொடங்கி நடத்துவதற்கான ஆயத்தங்களில் 1960-ம் ஆண்டு முதலே திமுக ஈடுபட்டது. திமுக பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் இந்தி எதிர்ப்பு அறப்போராட்டக் குழு அமைக்கப்பட்டது. 1960 ஜூலை 15-ல் அறப்போராட்டக் குழு கூட்டம் ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் போராட்டங்களில் கலந்து கொள்வதில் இருந்து மாணவர்கள், நடிகர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

‘படிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. திமுகவினர் மீது வழக்குகள் போடப் பட்டால் அவர்களுக்கு உதவ வழக்கறிஞர் கள் தேவை. உயிர் காக்க வேண்டிய பொறுப்பு மருத்துவர்களுக்கு உண்டு. போராட்டத்தில் ஈடுபட்டு நம்முடைய கலைஞர்கள் சிறை செல்ல நேர்ந்தால் அதன் பிறகு 15 ஆண்டுகளுக்கு கலைத்துறை நம் கையை விட்டுப் போய்விடும். எனவேதான் இவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. கலைஞர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதில் எம்.ஜி.ஆருக்கு கூட என் மீது கோபம்’ என்று சென்னை கோடம்பாக்கத்தில் 1960 ஜூலை 31-ம் தேதி நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணா விளக்கம் அளித்தார்.

கலைஞர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதால் தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்துகொள்ளவில்லை. போராட்டம் தீவிர மாக இருந்ததால் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து ஓடியும், விழா கொண்டாடப்படவில்லை. நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக விழா கொண்டாடப்படவில்லை என்று நாளிதழில் விளம்பரம் கொடுக்கப்பட்டது.

என்றாலும், இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு முன்பாகவே எம்.ஜி.ஆர். சிறை சென்றிருக்கிறார். இதுபற்றி எம்.ஜி.ஆர். வெளியில் அதிகம் சொல்லிக் கொண்டதில்லை. 1958-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி அப்போது பிரதமராக இருந்த நேரு சென்னை வந்தபோது அவருக்கு திமுக சார்பில் கருப்புக் கொடி காட்ட தீர்மானிக்கப் பட்டது. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தில் நடிகர்களுக்கு உடைகள் தைப்பதற்காக இருந்த தையல் மெஷின்கள் மூலம் இரவு பகலாக கருப்பு கொடி தயாரிக்கும் பணி நடந்தது. போராட்டத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது படலம் தொடங்கியது.

அப்போது, நள்ளிரவில் எம்.ஜி.ஆர். கைது செய்யப்பட்டார். மேலும், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, நடிகமணி டி.வி.நாராயணசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், வளையா பதி முத்துக்கிருஷ்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். முதலில் எம்.ஜி.ஆரை சைதாப்பேட்டை காவல் நிலையம் கொண்டு சென்று காலையில் சென்னை மத்திய சிறையில் அடைத்தனர். எம்.ஜி.ஆர். 4 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேரு சென்னை வந்து சென்ற பின் எம்.ஜி.ஆர். விடுவிக்கப்பட்டார்.

‘கணவன்’ படத்தில் சிறைக் கைதியாக எம்.ஜி.ஆர்.

சிறையில் இருந்தபோது சிறைச்சாலை விதிகளை எம்.ஜி.ஆர். முழுமையாக கடை பிடித்தார். சிறையில் சிவப்பு அரிசிச் சோறுதான். மற்றவர்கள் சாப்பிட முடியாமல் சங்கடப் படுகையில் எம்.ஜி.ஆர். எந்த சலனமும் இன்றி சாப்பிட்டார். இரவில் சிறை அறைக்குள் அடைத்து விட்டு காலையில்தான் திறந்துவிடுவார்கள். தாகம் தீர்த்துக்கொள்ள மண் பானையில் தண்ணீர். அருகே தகர டப்பா. அதில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்க வேண்டும். அறையின் மூலையில் இரண்டு சட்டிகள். அதுதான் கழிப்பிட வசதி.

அப்போதே எம்.ஜி.ஆர். திரையுலகின் உச்ச நட்சத்திரம். வாய்ப்புகளும் வசதிகளும் வந்துவிட் டன. என்றாலும் சிறையில் இந்த அசவுகரியங்களை எம்.ஜி.ஆர். பொருட்படுத்தவில்லை. இதை எல்லாம் முகமலர்ச்சியுடன் எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார். அவருக்கு பஞ்சணையும் ஒன்றுதான், கட்டாந்தரையும் ஒன்றுதான்.

சிறைக்கு உள்ளேயும் எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை வெளிப்பட்டது. எம்.ஜி.ஆர். சிறையில் இருக்கிறார் என்றதும் சட்டத்துக்கு உட்பட்டு அவருக்காக பழங்கள், உணவுப் பொருட்களை வெளியில் இருந்து கட்சியினரும், ரசிகர்களும், பொதுமக்களும் அனுப்பி வைத்தனர். அவற்றை சிறைக் கைதிகளுக்கு பகிர்ந்து அளித்துவிட்டு எல்லோருக்கும் கிடைத்ததை உறுதி செய்த பிறகே எம்.ஜி.ஆர் சாப்பிடுவார்.

கைதானவர்களில் பலரை சாதாரணமான ‘சி’ வகுப்பில் அடைத்தனர். எம்.ஜி.ஆருக்கு மட்டும் ‘பி’ வகுப்பு அளிக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால், எல்லோருக்கும் ஒரே வகுப்பு கிடைத்தால்தான் தானும் ‘பி’ வகுப்பில் இருக்க முடியும் என்று எம்.ஜி.ஆர். போர்க்கொடி தூக்கினார். அதன் பிறகே, அவருடன் கைதான பலர் ‘பி’ பிரிவுக்கு அனுப்பப்பட்டனர்.

சிறைவாசம் அனுபவித்தவர் மட்டுமல்ல; சிறையிலும் தன்னைச் சேர்ந்தவர்களுக்காக உரிமைக் குரல் எழுப்பியவர் எம்.ஜி.ஆர்.

திரையுலகில் வி.சாந்தாராமை தனது ஆசான்களுள் ஒருவராக எம்.ஜி.ஆர் கருதினார். இந்தியில் ‘தோ ஆங்க்கே பாரா(ஹ்) ஹாத்’ என்ற பெயரில் வி. சாந்தாராம் தயாரித்து இயக்கிய படம்தான் தமிழில் உதயம் புரொடக் ஷன்ஸ் சார்பில் எம்.ஜி.ஆர். நடித்த வெற்றிப் படமான ‘பல்லாண்டு வாழ்க’ ஆனது.

சந்தர்ப்பவசத்தால் குற்றம் செய்துவிட்டு தண்டனை அடைந்த கைதிகளும் மனிதர்கள்தான் என்பதை விளக்கும் வகையில், கொடும் குற்றங்கள் செய்த கைதிகள் 6 பேரை மனம் திருந்தியவர்களாக மாற்றும் ‘ஜெயிலர் ராஜன்’ பாத்திரத்தில் அப்படத்தில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார்.

‘அன்னமிட்ட கை’ படத்தில் தொழிலாளர் தோழனாக எம்.ஜி.ஆர்.
  
எம்ஜிஆர் 100 | 8 - எம்.ஜி.ஆரின் பொதுவுடமை

M.G.R. பொது உடமைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். திராவிட இயக்கங்களும் பொதுவுடமை கொள்கையை ஏற்றுக் கொண்டவைதான். எம்.ஜி.ஆர். தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருந்த பெரியாரும், அறிஞர் அண்ணாவும் ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவ சமூகம் அமைவதற்குத்தான் போராடினர்.

தனது படங்களில் பொதுவுடமைக் கொள்கைகள் தொடர்பான கருத்துகளையும் பாடல்களையும் எம்.ஜி.ஆர். இடம் பெறச்செய்வார். ஆரம்ப காலங்களில் எம்.ஜி.ஆரின் பொதுவுடமைக் கொள்கைகளுக்கு ஏற்ற பாடல்களுக்கு வரிவடிவம் தந்தவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த பாட்டுக் கோட்டையாக விளங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையான ‘ஜனசக்தி’ யில் அவர் எழுதிய பாடலான ‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி..’ பாடலை தனது ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திக் கொண்டார். அந்தப் பாடல் வரிகளில் திரைக்கு ஏற்றவாறு பின்னர் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. 19 ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கப் போவதை தீர்க்க தரிசனத்துடன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது போல அமைந்துவிட்ட அந்த வரிகள்தான்... ‘நானே போடப் போறேன் சட்டம், பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்... நாடு நலம் பெறும் திட்டம்...’

அதற்கேற்ப, நாடு நலம் பெறும் திட்டங்களை இயற்றக் கூடிய இடத்தில், 1977-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதல்வராக ஆகிவிட்டார். எதேச்சையாக இருந்தாலும் அதை முதலில் சொன்ன பெருமை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு உண்டு.

எம்ஜிஆருக்கு உள்ள வசீகர சக்தி எல்லோரும் அறிந்ததுதான். அதற்கான பல நிகழ்ச்சிகளில் உதாரணத்துக்கு ஒன்று.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பால தண்டாயுதம். திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தவர். குறிப்பாக, அப்போது திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மிகக் கடுமையாக தாக்கி பேசியவர். பாலதண்டாயுதம் என்றில்லை; திமுகவில் இருந்து பின்னர் காங்கிரஸில் இணைந்த கவியரசு கண்ண தாசன் உட்பட பலரும் குறிவைத்து எம்ஜிஆரை கடுமையாக விமர்சனம் செய்தே பேசுவார்கள்.

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அவர்களைப் பொறுத்தவரை சரிதான். ‘அறிஞர் அண்ணாவால் முகத்தை காட்டினாலே 30 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும் என்று பாராட்டப்பட்ட எம்ஜிஆர்தான் திமுகவின் வாக்குகளை ஈர்க்கும் சக்தியாக விளங்குகிறார். எனவே, எம்ஜிஆரை தாக்கி அவரை விமர்சனம் செய்வதன் மூலம் திமுகவை பலவீனப்படுத்தி விடலாம்’ என்பது அவர்கள் கணக்கு. அப்படித்தான் பால தண்டாயுதமும் எம்ஜிஆரை விமர்சித்து வந்தார்.

 
திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசார மேடையில் எம்.ஜி.ஆருடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் கே.டி.கே.தங்கமணி. ஏ.பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ்.டி.சோமசுந்தரம்.

 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவ ரான ஜீவா அவர்களின் மீது பேரன்பு கொண்டவர் பாலதண்டாயுதம். ஜீவாவின் மரணத்துக்குப் பின் அவருக்கு சிலை எழுப்ப பாலதண்டாயுதம் முடிவு செய்தார். நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாகத் திகழ்ந்த, எல்லா தரப்பினரின் மதிப்பையும் பெற்றிருந்த ஜீவாவின் சிலையை நிறுவுவதற்காக கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்கள், பிரமுகர்களிடம் நிதி திரட்டினார் பாலதண்டாயுதம். ஓரளவு நிதி சேர்ந்திருந்தது.

‘எம்.ஜி.ஆரிடமும் நிதி கேட்கலாமா?’ என்று பாலதண்டாயுதத்துக்கு ஒரு யோசனை. ஆனால், எம்.ஜி.ஆரைப் பற்றிய தனது கடுமையான விமர் சனங்கள் அவரது மனதில் நிழலாடி தயக்கத்தை ஏற்படுத்தின. இருந்தாலும் எம்.ஜி.ஆரை சந்தித்து ஜீவாவின் சிலைக்கு நிதி கேட்பது என்று முடிவு செய்து அவரை சந்தித்தார். ‘தனக்கு வரவேற்பு எப்படி இருக்குமோ’ என்று தயங்கிபடி சென்ற பாலதண்டாயுதத்தை அகமும் முகமும் மலர மகிழ்ச்சியுடன் வரவேற்றார் எம்.ஜி.ஆர்.

வந்த விவரம் கேட்டதும் எம்.ஜி.ஆருக்கு மேலும் மகிழ்ச்சி. மனபூர்வமாக நன்கொடை வழங்கு கிறேன் என்றார். பாலதண்டாயுதத்துக்கும் மகிழ்ச்சி ஒருபுறம். அதோடு, தான் பல சந்தர்ப் பங்களில் தாக்கி பேசியும் அதுபற்றிய விவரமே தெரியாதவர் போல தன்னுடன் எம்.ஜி.ஆர். இன்முகத்துடன் பழகியதால் வியப்பு மறுபுறம்.

‘‘சிலை வைக்க உங்கள் கணக்குப்படி எவ்வளவு செலவாகிறது?’’ எம்.ஜி.ஆர். கேட்டார்.

குறிப்பிட்ட தொகையை சொல்கிறார் பால தண்டாயுதம்.

‘‘அந்த தொகைதான் என் நன்கொடை’’ - இது எம்.ஜி.ஆர்.

 
எம்.ஜி.ஆருடன் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் எம்.கல்யாணசுந்தரம். 

பாலதண்டாயுதத்துக்கு இன்ப அதிர்ச்சி. பின்னர், அவரிடம் ‘‘நான் கம்யூனிச கொள்கையில் ஈடுபாடு கொண்டவன். என் படங்களில் பாடல்கள், வசனங்கள் மூலம் கம்யூனிச கொள்கைகளையும் சொல்லி வருகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பொதுவுடமை கொள்கை உடன் பாடே. சிறந்த பேச்சாளரான நீங்கள் உங்கள் பேச்சால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உங்கள் ஆற்றலை என்னை தாக்கு வதில் வீணடிக்கிறீர்களே? பொதுவுடமை கொள் கையை பரப்புவதில் நீங்கள் மேலும் சிறப்பாக தொண்டாற்ற வாழ்த்துகள்’’ என்றார் எம்.ஜி.ஆர்.

அவரது உயர்ந்த குணத்தையும் பண்பையும் அறிந்து நெகிழ்ந்த பாலதண்டாயுதம், அன்று முதல் எம்.ஜி.ஆரை தாக்குவதை நிறுத்தியதோடு மட்டுமல்ல; அவரது குணநலன்களை நண்பர் களிடம் புகழ்ந்தார்.

அதோடு மட்டுமல்ல; திமுகவில் இருந்து நீக்கப்பட்டு எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய பின் கம்யூனிஸ்ட்கள் அவருக்கு ஆதரவு அளித்தனர். ‘‘ஊழலை எதிர்க்கிறார்; லஞ்சத்தை எதிர்க்கிறார் என்பதற்காக எம்.ஜி.ஆர். மீது ஒரு துரும்பு பட்டாலும், ஒரு கீறல் பட்டாலும் தமிழ்நாட்டில் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எச்சரிக்கையாக பிரகடனப்படுத்துகிறேன்’’ என்று சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் பாலதண்டாயுதம் பேசும் அளவுக்கு எம்.ஜி.ஆர். மீது அவர் அன்பு கொண்டார்.

மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் தன்பால் ஈர்த்துக் கொள்ளும் வசீகரத்தின் பெயர் எம்.ஜி.ஆர்.

அதிமுக தொடங்கிய 7 மாதங்களிலேயே திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல் 1973 மே 20-ம் தேதி நடந்தது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தன. அதிமுக வேட்பாளரான மாயத் தேவர் 2 லட்சத்து 60 ஆயிரத்து 930 ஓட்டுக்கள் பெற்று பதிவான வாக்குகளில் பாதிக்கும் மேல் பெற்று வெற்றி பெற்றார். ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும் திமுக 3-வது இடத்தையும் பெற்றன. இந்திரா காங்கிரஸ் டெபாசிட் இழந்தது. இந்த பிரம்மாண்டமான வெற்றி அகில இந்தியாவையும் எம்.ஜி.ஆரை திரும்பிப் பார்க்க வைத்தது!



தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

தொடரும்..

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல