ஞாயிறு, 8 மே, 2016

வடக்கில் தாண்டவமாடும் வாள்வெட்டுக் கலாசாரம்

தலை­வலி குண­ம­டைய திரு­கு­வலி ஆரம்­பித்­தது போன்று வட­ப­குதி நிலை­மைகள் அமைந்­துள்­ளன. இதனால் மக்கள் சதா அச்­சத்தில் உறைந்து போயுள்­ளதை காண­மு­டி­கின்­றது. இரவு வேளை­களில் திரு­டர்­களின் அட்­ட­கா­சமும், இளைஞர் குழுக்­க­ளி­டை­யே­யான வாள்­வெட்டு சம்­ப­வங்­களும் வடக்கில் தோன்­றி­யி­ருக்கும் பாது­காப்­பற்ற சூழ்­நி­லைக்கும் பதற்­றத்­துக்­கு­மான முக்­கிய கார­ண­மாகும். வட­ப­கு­தியை பொறுத்­த­மட்டில் பாது­காப்பு படை­யினர் மற்றும் பொலி­ஸாரின் சோதனை நட­வ­டிக்­கைகள் குறைந்­துள்­ளதே தவிர அவர்­களின் செயற்­பா­டுகள் எந்­த­வ­கை­யிலும் குறை­வ­டை­ய­வில்லை. இருந்­த­போ­திலும் இவை அனைத்­தையும் மீறி கொள்­ளை­களும், வாள்­வெட்­டுக்­களும் அரங்­கேறி வரு­கின்­றன.


குறிப்­பாக இந்த வாள்­வெட்டுச் சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் இளைஞர் குழுக்கள் மற்றும் பாட­சாலை உயர் வகுப்பு மாண­வர்கள் ஆகியோர் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது. இளை­ஞர்கள் மத்­தியில் சிறி­தாக உரு­வெ­டுக்கும் மோதல்கள், சச்­ச­ர­வுகள் இறு­தியில் வாள்­வெட்டில் முடி­கின்­றன. இதனால் பெற்­றோர்கள் சதா மடியில் நெருப்பை கட்­டிக்­கொண்டு வாழ வேண்­டிய சூழ்­நி­லைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். அதே­வேளை, பாது­காப்­பற்ற சூழலும் அச்­சமும் மேலோங்­கி­யி­ருப்­பதை சர்­வ­சா­தா­ர­ண­மாகக் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இளைஞர் குழுக்கள் பகல்­வே­ளை­களில் மாத்­தி­ர­மன்றி இரவு வேளை­க­ளிலும் வீடு­களை அடித்து நொறுக்கி உடை­மை­க­ளுக்கு சேதம் விளை­வித்து பழி தீர்க்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றன.

வட­ப­குதி கலா­சாரம், காலத்­துக்கு காலம் எவ்­வாறு மோச­ம­டைந்து சிதைந்து சின்­னா­பின்­ன­மாகி வரு­கின்­றது என்­ப­தற்கு அங்கு உரு­வா­கி­யி­ருக்கும் இத்­த­கைய சமூக விரோத செயல்­களே சாட்­சி­யங்­க­ளாக உள்­ளன. கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் யாழ்ப்­பாணம் நல்லூர் சட்­ட­நாதர் வீதியில் வைத்து இனந்­தெ­ரி­யாத இருவர், இரண்டு இளை­ஞர்­களை வாளால் வெட்டி கடும் காயங்­க­ளுக்கு உள்­ளாக்­கி­யுள்­ளனர். குறித்த பகு­தி­யி­லுள்ள வீடொன்­றுக்குள் நுழை­வ­தற்கு இந்த இனந்­தெ­ரி­யாத நபர்கள் முயற்­சித்த போதிலும் அது முடி­யாது போன­தை­ய­டுத்து அந்த வீதியால் முச்­சக்­கர வண்­டியில் பய­ணித்த சாரதி மீதும் மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த இளைஞர் மீதும் வாள்­வெட்டை மேற்­கொண்­டுள்­ளனர். இதனால் அப்­பி­ர­தே­சத்தில் மிகுந்த பதற்ற நிலைமை தோன்­றி­யது.

யாழ்ப்­பா­ணத்தின் மையப்­ப­கு­தியில் அமைந்­துள்ள குறித்த பிர­தே­சத்தில் இவ்­வாறு வாள்­வெட்டுச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளமை பாது­காப்­புக்கு பாரிய சவால் என்­பதை பொலிஸார் மற்றும் பாது­காப்­புக்குப் பொறுப்­பா­ன­வர்கள் உணர்ந்­து­கொள்­வது அவ­சி­ய­மாகும். இவ்­வாறு அண்­மையில் யாழ். நாயன் மார்க்­கட்டு பகு­தியில் வீடொன்றில் கொள்­ளை­யிட முயன்­ற­வர்­களைத் தடுக்க முயன்ற இருவர் மீது வாள்­வெட்டுத் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. குறித்த முயற்சி முறி­ய­டிக்கப்பட்­ட­தை­ய­டுத்து ஆத்­தி­ர­ம­டைந்த கொள்­ளை­யர்கள், வீதியில் பய­ணித்­த­வர்­களைத் தாக்­கியும் அவர்­களின் உடை­மை­களை பறித்தும் சென்­றுள்­ளனர்.

மேலும், வவு­னியா புளி­யங்­குளம் பிள்­ளையார் குடி­யி­ருப்பு பகு­தியில் குடும்­பஸ்தர் ஒருவர் மீது வாள்­வெட்டுத் தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது. வீட்­டுக்குள் புகுந்த சிலர் குறித்த நபரை சர­மா­ரி­யாக வாளால் வெட்­டி­ விட்டுத் தப்பிச் சென்­றுள்­ளனர். இதை­ய­டுத்து அவர் வவு­னி­யா வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்டு அவ­சர சிகிச்­சையின் பொருட்டு கொழும்­புக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ளார்.

இவ்­வாறு அண்­மையில் மல்­லாகம் நீதி­மன்­றுக்கு வழக்கு விட­ய­மாக வந்த இளை­ஞர்கள் இருவர் அதை முடித்­துக்­கொண்டு வீடு திரும்பும் வழியில, வீதியில் காத்­தி­ருந்த இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால் வாள்­வெட்­டுக்கு இலக்­காகி படு­கா­ய­ம­டைய நேரிட்­டுள்­ளது.

சுது­மலை மானிப்­பாயைச் சேர்ந்த மேற்­படி இரு இளை­ஞர்­களும் தெல்­லிப்­பழை ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட நிலையில் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர். இதே­போன்று உடுவில் பகு­தியில் வீட்­டி­லி­ருந்த குடும்­பஸ்தர் ஒரு­வரை மோட்டார் சைக்கிள் மற்றும் வானில் வந்த 7 பேர் வெட்டிக் காயப்­ப­டுத்­தி­யுள்­ளனர். கதறல் சத்தம் கேட்டு உதவ ஓடி­வந்த அயல்­வீட்­டு­க்காரர் வாள்­வெட்­டுக்கு இலக்­கா­கி­யுள்ளார். இச்­சம்­பவம் உடுவில் கிழக்கு நாகம்மாள் கோவி­ல­டி பகுதியில் இடம்­பெற்­றுள்­ளது.

யாழ். தட்­டாரத்­தெ­ருவில் இடம்­பெற்ற சம்­ப­வ­மொன்றில் அப்­ப­கு­தியில் அமைந்­துள்ள மரக்­கா­லை­யொன்றில் நின்ற இளை­ஞனை மூன்று மோட்டார் சைக்­கிள்­களில் வாள்கள் சகிதம் வந்த இளைஞர் குழு­வினால் நடு­ வீதியில் வைத்து கலைத்து கலைத்து வெட்­டப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இச்­சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலிஸார், வாள்­வெட்டில் சம்­பந்­தப்­பட்ட யாழ். கலட்டி மற்றும் உயர்­குலம் ஒழுங்­கையைச் சேர்ந்த இரு இளை­ஞர்­களை கைது செய்­துள்­ளனர்.

இவ்­வாறு மிகக்­கு­று­கிய காலத்தில் வட­ப­கு­தியில் வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள் மற்றும் கொள்­ளைகள் அதி­க­ரித்து செல்­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அத்­துடன் அண்­மையில் தென்­ப­கு­தி­யி­லி­ருந்து யாழ். வந்த பஸ்­வண்­டி­யொன்றும் இனந்­தெ­ரி­யா­த­வர்­க­ளினால் தாக்கி சேதப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

வட­ப­கு­தியில் யுத்தம் நில­விய கால­கட்­டத்தில் குண்டுத் தாக்­கு­தல்கள், ஷெல் வீச்­சுக்கள், விமானத் தாக்­கு­தல்கள் தொடர்பில் மக்­க­ளுக்கு அச்சம் மேலோங்­கி­யி­ருந்­ததே தவிர எந்­த­வி­த­மான சட்­ட­வி­ரோத செயல்­களும் வாள்­வெட்­டுக்­களும் கொள்ளைச் சம்­ப­வங்­களும் நடை­பெ­ற­வில்லை என்­பதும் இர­வுப்­பொ­ழுதில் பெண்­ணொ­ருவர் தனித்துச் செல்­லக்­கூ­டிய அள­வுக்கு நிலைமை பாது­காப்­புடன் கட்­டுக்­க­டங்கி இருந்­த­மையும் மறுக்­க­மு­டி­யாத உண்­மை­யாகும். இரவு வேளை­களில் மக்கள் வீட்டை பூட்­டா­ம­லேயே உறங்­கக்­கூ­டிய சூழ்­நிலை காணப்­பட்­டது. எனினும் யுத்தம் முடி­வுக்கு வந்து அதி­லி­ருந்தும் மக்கள் நிம்­மதிப் பெரு­மூச்­சு­விட எத்­த­னிக்­கையில் தற்­பொ­ழுது தோன்­றி­யி­ருக்கும் நிலை வட­ப­குதி மக்­களை சொல்­லொணா துன்­பத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

இரவுப்பொழுதில் எந்த சந்­தர்ப்­பத்­திலும் எதுவும் நடக்­கலாம் என்ற ஓர் பீதி நிறைந்த சூழலே எங்கும் வியா­பித்­துள்­ளது. இவ்­வா­றான சட்­ட­வி­ரோத செயல்­களை கட்­டுப்­ப­டுத்தும் வகையில் யாழ்.மேல்­நீ­தி­மன்ற நீதவான் எம்.இளஞ்­செ­ழியன் கடு­மை­யான உத்­த­ர­வு­களை பிறப்­பித்­துள்­ள­துடன் பல்­வேறு அறி­வு­ரை­க­ளையும் வழங்­கி­யுள்ளார். அத்­துடன் பாட­சாலை மாண­வர்கள் இவ்­வா­றான சமூக விரோத செயல்­களில் ஈடு­பட்டால் அவர்கள் சட்­டத்தின் முன் கடு­மை­யாகத் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள் எனவும் எச்­ச­ரித்துள்ளார். எவ்­வாறு இருந்­த­போ­திலும் வடக்கில் தோன்­றி­யி­ருக்கும் சமூ­க­ விரோத செயல்­களும் கலா­சார சீர­ழி­வு­களும் வட­ப­குதி மக்­க­ளையும், புத்­தி­ஜீ­வி­க­ளையும் வெகு­வாகப் பாதித்­துள்­ளன. இதனை எவ்­வாறு தடுத்தி நிறுத்தி இளம் சமு­தா­யத்தை நல்­வ­ழிப்­ப­டுத்­தலாம் என்­பதே அவர்­களின் ஏக்­க­மா­கவும் காணப்­ப­டு­கின்­றது.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து உறவினர்களினால் அனுப்பிவைக்கப் படும் பணமும் திரைப்படங்களின் தாக்கமும் மூலைக்கு மூலை வடக்கில் தோன்றியிருக்கும் மதுபானசாலைகளும் போதைவஸ்துப் பாவனையும் வடபகுதி இளைஞர்களின் மனோநிலையை மோசமாக மாற்றியமைத்து, அவர்களை நவீன உலகின் காட்டுமிராண்டிகளாக மாற்றிவருவதாகப் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய நிலை மாறவேண்டுமானால் பெற்றோர்கள், பாடசாலை ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், நலன்விரும்பிகள் மற்றும் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள் அனைவரும் ஒருமித்த நிலையில் சமூகவிரோத செயல்களை ஒடுக்க திடசங்கற்பம் பூணவேண்டும்.

அன்றேல் அரசாங்கம் கூறும் பயங்கரவாதத்தை விடவும் மிகவும் மோசமான நிலைமை வடக்கில் உருவாவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாத நிலைமைகளே மிஞ்சும் என்பதை மீண்டும் அழுத்தி உரைக்க விரும்புகின்றோம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல