வெள்ளி, 3 செப்டம்பர், 2010

உயிர் கொல்லியாக ஊடகம் மாறலாமா?

அண்மையில் சென்னைத் தலைநகரின் அருகில் உள்ள செங்குன்றத்தில் டி. மகேந்திரன் என்ற 10 வயது பாலகன் (மாணவன்) அடிக்கடி தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கும் பழக்கமுடையவன். கோயம்பேடு, பேரூந்து நிலையத்தில் தேநீர்க் கடை வைத்திருக்கும் அவன் தந்தை, "ஏம்பா, இப்படி அடிக்கடி டி.வி. பார்த்துக் கொண்டே இருக்கிறாய். படிக்க வேண்டாமா?" என்று சற்று கடிந்து கூறியிருக்கிறார்.

அவன் தந்தை வேலைக்குப் போன பிறகு உடனே ஓர் அறைக்குள் சென்று கதவைத் தாழ்ப்பாள் இட்டுக் கொண்டு மண்ணெண்ணெயை மேலே ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளான். அவனது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தவரும் அக்கம் பக்கத்தவரும் ஓடோடி வந்து கதவை உடைத்து அவனைக் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.

அதிகமான அளவு உடற்காயங்கள் ஏற்பட்டதால் அவன் இறந்து போனான் எவ்வளவு வேதனையான, துயரம் நிறைந்த சம்பவம் பார்த்தீர்களா?

அளவுக்கதிகமாக தொலைக்காட்சி பார்க்காதே என்று சொல்லிக் கண்டித்ததால் இப்படி ஒரு இளங் குருத்து எரிந்து நாசமாயிற்றே என்று நினைக்கையில் நமக்கு இந்த் தொலைக்காட்சிகளாகிய இவை உயிர் கொல்லிகளாவும் மாறி வருவது கொடுமையிலும் கொடுமை அல்லவா!

இளம் பாலகர்களைக் கூட இந்தத் தொலைக்காட்சிப் போதை விட்டு வைக்கவில்லையே! தந்தையின் கடமை தடுத்து திறுத்துவதல்லாமல் வேறு என்ன? மெல்லிய உள்ளத்திற்கேற்ப செய்திருக்கலாமே என்று சிலர் வாதிடக் கூடும்.

ஐந்தில் வளைக்காவிட்டால் ஐம்பதில் முடியுமா?

தொலைக்காட்சி மயக்கத் தொற்றுநோய் உலகளாவிய ஒரு நோய்- மற்ற நோய்களைப் போல.

இதோ ஒரு செய்தி.

டி.வி. பார்க்காதீர்கள்; அதற்குப் பதிலாக புத்தகம் படியுங்கள். நன்றாகத் தூங்குங்கள். இப்படி ஒரு விழிப்பு உணர்வுப் பிரசாரம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நெல்சன் மண்டேலா மருத்துவ ஆராய்ச்சி மைய வல்லுனர்கள் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டு கண்டறிந்த உண்மைகள் வருமாறு:

வாரத்துக்கு 32 மணி நேரம்; ஆண்டுக்கு 1,700 மணி நேரம்- சராசரி அமெரிக்கர் டி.வி. பார்க்கும் நேரம்.

இத் தொலைக்காட்சி பார்க்கும் போதை ஏறுவதால்,

1. நம்முடைய சாப்பிடும் பழக்கம் மாறுகிறது.
2. தூக்கம் கெடுகிறது.
3. உடல் எடை கூடுகிறது.
4. உடல் சோர்வு முதல் எல்லாக் கோளாறுகள் ஏற்படுவதற்கும் காரணமாகிறது.

ஆண்களை விட, பெண்கள்தான் அதிகம் டி.வி. பார்க்கின்றனர். பெண்கள் குண்டாக இதுவும் ஒரு காரணமாகும்.

இதனை எதிர்த்து டி.வி. யை அணைக்கும் வாரம் என்று விசேஷமாக ஒரு வாரத்தைக் கடைப்பிடிக்கின்றனர் அங்குள்ள பல அமைப்பினர்.

டி.வி. பார்ப்பது அதிகரித்து வருவதால் சமுதாயப் பொது ஒழுக்கம் பாழாகின்றது. நமது தொலைக்காட்சிகளின் சீரியல்களில் மெகா தொடர்களில் வரும் பெண்களை அவ்வினமே தலைகுனியும் வண்ணம் வில்லிகளாக சூழ்ச்சிக் காரிகளாக, அகம்பாவிகளாகக் காட்டுவது கண்டும், நவீன முறைகளிலும் கொலை, கொள்ளை நடத்திடக் கற்றுக் கொடுக்கும் வகுப்பறை போன்றும் அமைவதால் சமுதாயச் சீரழிவுக்குப் பெரிதும் அது வழி வகுப்பதாக உள்ளது.

காட்சிப்படுத்துவது கண்ணை, கருத்தை, உடலை, உலகையே கெடுக்கும் ஆபத்தினை உள்ளடக்கிய கொடுமையல்லவா!

இங்கும் ஒரு விழிப்புணர்வு மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே தேவை. சில விதிவிலக்காக டிஸ்கவரி அலைவரிசை, பூகோள அலைவரிசை இருக்கலாம். ஆனால், அவற்றைப் பார்ப்பவர்கள் எத்தனை பேர்?

உயிர் கொல்லியாக ஊடகம் மாறலாமா?

-சமரசம்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல