ஜெர்மனியின் ஓபர்ஹவுசனில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் அருங்காட்சியகத்தில் வசித்த வந்த ஒக்டோபுஸ் பவுல், உலக கோப்பை முடிவுகளை மிகத்துல்லியமாக கணித்து உலகையே அசத்தியது. கடந்த 2008 ஜனவரியில் இங்கிலாந்தில் பிறந்த இந்த ஒக்லோபுஸை வைத்து கால்பந்து போட்டிகளின் முடிவுகளை முன்னதாகவே கணித்து வந்தனர்.
அதாவது போட்டியில் பங்கேற்கும் இரு நாடுகளின் தேசிய கோடியுடன், இதற்கான உணவும் அடங்கிய இரண்டு பெட்டிகள், பெரிய பிளாஸ்டிக் பெட்டிக்குள் வைக்கப்படும். ஒக்டோபுஸ் எந்த பெட்டியின் மீது அமருகின்றதோ, அந்த அணி போட்டியில் வெல்லும் என நம்பினர்.
இவ்வாறு ஜெர்மனி மோதிய 7 ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி ஆகியவற்றின் முடிவுகளை துளியும் பிசிறாமல் கச்சிதமாக ஒக்டோபஸ் பவுல் கணித்து சொன்னது. இதனால் உலக கோப்பை போட்டியை விட ஒக்டோபுஸ் பவுல் பற்றி அப்போது அதிகமாக பேசப்பட்டது.
அரைஇறுதியில் ஜெர்மனி அணி, ஸ்பெயினிடம் தோற்கும் என்று ஒக்டோபுஸ் பவுல் கணித்து மாதிரியே நடந்த போது, அந்த நாட்டு ரசிகர்கள் கொதித்து போனார்கள். அந்த ஒக்டோபுஸை உடனே துண்டு துண்டாக்கி, வறுத்தெடுக்க வேண்டும் என்று அதற்கு மிரட்டல் விடுத்து அருங்காட்சியகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்தனர்.
உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி நெதர்லாந்தை தோற்கடிக்கும் என்று கணித்த மாதிரியே நடந்ததால், ஸ்பெயின் நாட்டு அரசு ஒக்டோபுஸுக்கு தங்கள் நாட்டின் கவுரவ நண்பன் குடியுரிமையை வழங்கி சிறப்பித்தது. அத்துடன் அந்த ஒக்டோபுஸை வாங்க பல்வேறு தரப்பினரும் போட்டி போட்டனர். ஆனால் அருங்காட்சியக நிர்வாகம் அதனை கொடுக்க மறுத்து விட்டது.
இப்படி உலக கோப்பை ஆரூடம் மூலம் குறுகிய காலத்தில் பிரபலமடைந்த ஒக்டோபுஸ் பவுலின் ஆயுசு நேற்றுடன் முடிந்தது. 2 3/4 வயதான ஒக்டோபுஸ் இயற்கையாக மரணம் அடைந்ததாக அருங்காட்சியக மேலாளர் ஸ்டீபன் போர்வோல் தெரிவித்தார்.
`எங்களது இடத்திலேயே பவுலை புதைத்து அதற்கு சிறிய சமாதியை நிரந்தரமாக இருக்கும் வகையில் கட்டுவோம். பவுல் இறந்துவிட்டாலும் அது செல்போன்கள், டீசர்ட் போன்ற ஆடைகள் மூலம் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அது பற்றிய தொகுப்பையும் வெளியிட இருக்கிறோம்' என்றும் ஸ்டீபன் போர்வோல் குறிப்பிட்டார்.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக