செவ்வாய், 26 அக்டோபர், 2010

விக்கிலீக்ஸ் நிறுவனர் தலைமறைவு

இராக் போர் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் பால் அசான்ஜ் (39), தான் கைது செய்யப்படவோ, அதன்பிறகு, கொலை செய்யப்படவோ வாய்ப்புள்ளதாக கருதி தலைமறைவாகி விட்டார். அவர் ரகசிய ஆவணங்கள் வெளியானபோது சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் தங்கி இருந்தார். பிறகு, அங்கிருந்து ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு பறந்தார். அப்படி செல்லும்போது, அவரது பையும், 3 லேப்-டாப்புகளும் காணாமல் போய் விட்டன. பிறகு, பெர்லினில் இருந்தும் தப்பிய ஜூலியன் அசேஞ்ச், தற்போது லண்டனில் தங்கி இருக்கிறார்.

அவர் மாறுவேடத்தில், போலி பெயர்களில் ஓட்டல்களில் தங்கி வருவதாகவும், அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே, ஆள்மாறாட்டத்தில் ஊர் ஊராகச் சுற்றி வருகிறார்.

4 லட்சம் ஆவணங்கள்

ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சியை வீழ்த்தியவுடன், அங்குள்ள தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் படைகள் முகாமிட்டன. 7 ஆண்டுகளாக அவை அங்குஉள்ளன. இந்த காலகட்டத்தில், அந்த நாடுகளின் ராணுவத்தினர் செய்த அத்துமீறல்கள் அடங்கிய 4 லட்சம் ரகசிய ஆவணங்களை `விக்கிலீக்ஸ்' என்ற இணையதளம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

அமெரிக்க ராணுவத்திடம் இருந்த அந்த ஆவணங்கள் எப்படியோ கசிந்து வெளியாகியுள்ளன. அவற்றில், ராணுவத்தினர் செய்த மனித உரிமை மீறல்கள், சித்ரவதைகள் ஆகியவை காட்சிகளாக உள்ளன. ஈராக் போரில் 66 ஆயிரம் அப்பாவிகள் கொல்லப்பட்டதும் அம்பலம் ஆகியுள்ளது.

இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளன. ராணுவ அத்துமீறல் குறித்து விசாரணை நடத்துமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஐ.நா. உத்தரவிட்டுள்ளது.

பெர்லின், லண்டன் என அடிக்கடி நாடு மாறும் இவர், வெவ்வேறு பெயர்களில் ஹோட்டல்களில் தங்குகிறார். ஜுலியன் அசேஞ்ச், தனது தோற்றத்தை மறைப்பதற்காக, தனது தலைமுடிக்கு `டை' அடித்துள்ளார். போலி பெயரில், ஓட்டல்களில் தங்கி வருகிறார். அங்கும் சோபாவிலோ, தரையிலோ தான் படுத்து தூங்குகிறார். தனது இருப்பிடம் தெரிந்துவிடும் என்பதற்காக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாமல் நண்பர்களிடம் கடனுதவிப் பெற்று பணமாக மட்டுமே செலவழிக்கிறார்.

இந்நிலையில் அவரிடம் `நியூயோர்க் டைம்ஸ்' பேட்டி எடுத்துள்ளது. அப்பேட்டியில் ஜூலியன் அசேஞ்ச் கூறியதாவது:-

என்னை ஊடக உலகின் `ஜேம்ஸ்பாண்டு' என்று வர்ணிக்கிறார்கள். அதனால் எனக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். அவர்களில் சிலர் என்னை சிக்க வைத்து விட்டனர். எனது நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பதால், நான் அசாதாரண சூழ்நிலையில் சிக்கியுள்ளேன்.

என் மீது வழக்கு தொடர அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. அப்படி வழக்கு தொடர்ந்தால், இங்கிலாந்தும் என் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

இதனிடையே, சுவீடன் நாட்டில் தங்கியிருந்தபோது அந்நாட்டை சேர்ந்த 2 பெண்களை கற்பழித்ததாகவும் ஜூலியன் அசேஞ்ச் மீது வழக்கு உள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள அசான்ஜ், பரஸ்பர சம்மதத்துடன்தான் சம்பவம் நடைபெற்றதாகவும், அமெரிக்க அரசுதான் இத்தகைய பொய் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் ஜூலியன் அசேஞ்ச் கூறினார். நியூயோர்க் டைம்ஸ் நாளிதழ் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல