சனி, 5 பிப்ரவரி, 2011

தனி அறையில் அடைத்து மனைவி சித்ரவதை: கணவன், மாமியார், நாத்தனார் கைது

தனி அறையில் மனைவியை அடைத்து, பற்களை உடைத்தும், சிகரெட்டால் சூடு வைத்தும் கொடுமைப்படுத்திய கணவன் மற்றும் அவரது மாமியார், நாத்தனாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்டது சிறுகடல் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் அமுல்ராஜ்(38). இவரது மனைவி ஷகிலா(28). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. திலீப்(12) என்ற மகனும், கிருத்திகா(5) என்ற மகளும் உள்ளனர். கட்டடத் தொழிலாளியான அமுல்ராஜ் கடந்த ஆண்டு வேலை செய்துகொண்டிருந்தபோது, கீழே விழுந்ததில் கால் உடைந்தது. இதனால், அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து, அவரது மனைவி ஷகிலாவை சித்தாள் வேலைக்கு அனுப்பி வைத்தார். அவரும் தினசரி வேலைக்கு சென்று, அதற்கான கூலியை வாங்கி வந்து கொடுத்தார்.

அமுல்ராஜுக்கு மனைவி மீது சந்தேகம் வந்தது. இதனால், தினமும் மனைவியை கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 30ம் தேதி முதல் 2ம் தேதி வரை தனி அறையில் ஷகிலாவை அடைத்து வைத்து, அவரது கணவன் அமுல்ராஜ், மாமியார் மல்லிகா(56), நாத்தனார் மாலினி(40) ஆகிய மூவரும் அடித்துக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ஷகிலாவை அடித்து அவரது பற்களை உடைத்தும், உடலில் ஆங்காங்கே சிகரெட் சூடு வைத்தும், பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடுவைத்தும் சித்ரவதை செய்தனர். வலியால் மிகவும் அவதிப்பட்ட அவர், தனது தந்தைக்கு மற்றவர்கள் மூலம் தகவல் கொடுத்தார்.

தகவலறிந்த சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த ஷகிலாவின் தந்தை எபினேசர் தனது மகளை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். தொடர்ந்து, செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார், அவரது கணவர் அமுல்ராஜ், மாமியார் மல்லிகா மற்றும் நாத்தனார் மாலினி ஆகிய மூவரையும் கைது செய்து, திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல