திங்கள், 7 பிப்ரவரி, 2011

ராணுவ ஆட்சி தீர்வல்ல!

மத்திய ஆசியாவில் ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சி தெற்கு ஆசியாவிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் இன்னும் பரவவில்லை என்பதற்கு மியான்மர் ஓர் எடுத்துக்காட்டு. 1962-ல் ஜெனரல் நீவின் தலைமையில் மியான்மரில் நடந்தேறிய ராணுவப் புரட்சி, மக்களின் உணர்வுகளையும் பிரச்னைகளையும் பற்றிக் கவலைப்படாமல் இருந்த மக்களாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. நல்லாட்சியாக இல்லாத மக்களாட்சி முறைக்கு மாற்று ராணுவ ஆட்சி அல்ல என்பதற்குக் கண்கூடான உதாரணமாகத் திகழ்கிறது ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக அந்த நாட்டில் நடைபெற்றுவரும் ராணுவ ஆட்சி.

1988-ல் அதிகாரத்தைக் கைப்பற்றிய இப்போதைய ராணுவத் தளபதிகள், 1990-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நோபல் விருது பெற்ற விடுதலைப் போராளி ஆங் சாங் சூச்சியின் தலைமையிலான மக்களாட்சிக்கான தேசிய இயக்கக் கட்சியின் மாபெரும் வெற்றியை எதிர்பார்க்கவில்லை. அடுத்த சில நாள்களிலேயே தேர்தல் முடிவு ஒத்திவைக்கப்பட்டது. சில மாதங்களில் ஆங் சாங் சூச்சி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

தனது வாழ்க்கையில் பெரும் பகுதியைத் தனது வீட்டில் தனிமைச் சிறையில் கழித்த ஆங் சாங் சூச்சி, கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலை, மீண்டும் மியான்மரில் மக்களாட்சி மலரக்கூடும் என்கிற எதிர்பார்ப்பை உலகெங்கும் ஏற்படுத்தியது. ஆனால், தேர்தல் என்கிற பெயரில் ராணுவ சர்வாதிகாரிகள் ஒரு கண் துடைப்பு நாடகம் நடத்த முற்படுகிறார்கள் என்பதை உணர்த்த ஆங் சாங் சூச்சி தேர்தலைப் புறக்கணிப்பது என்று துணிந்து முடிவெடுத்தபோது, அந்தப் பெண்மணியின் நெஞ்சுரத்தையும், விடுதலை வேட்கையையும் பார்த்து உலகமே தலைவணங்கியது.

இதைப் பற்றியெல்லாம் ராணுவத் தலைமை கவலைப்படவில்லை. ஆங் சாங் சூச்சியின் மக்களாட்சிக்கான தேசிய இயக்கத்திலேயே பிளவு ஏற்படுத்த முற்பட்டது ராணுவத் தலைமை. தங்களது கைப்பாவையாக ஒரு ஜனநாயக ஆட்சியை நிறுவுவதன் மூலம், அமெரிக்கா முதலான பல மேலைநாடுகள் மியான்மர் மீது விதித்திருக்கும் பொருளாதாரத் தடையை விலக்குவதுதான் ராணுவத் தலைமையின் எண்ணமாக இருக்கிறதே தவிர, நல்லாட்சி ஏற்படுத்துவதோ, மக்களாட்சிக்கு வழிகோலுவதோ அவர்களது குறிக்கோளாக இருக்கப் போவதில்லை என்கிற ஆங் சாங் சூச்சியின் வாக்கு உண்மையிலேயே பலித்து விட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தேறிய தேர்தல் வெறும் கண்துடைப்பு நாடகமாக மட்டுமே அமைந்தது. இப்போது நாடாளுமன்றத்தைக் கூட்டி அதிபரைத் தேர்ந்தெடுத்திருப்பது இன்னொரு கண்துடைப்பு நாடகம் என்றுதான் கருத வேண்டும். 20 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நாடாளுமன்றம் கூடியிருக்கிறது என்று வேண்டுமானால் மகிழ்ச்சி அடையலாமே தவிர, மக்களாட்சி மலர்ந்திருக்கிறது என்று மார்தட்டிக் கொள்ள மியான்மர் மக்களுக்கு முடியாத சூழ்நிலைதான் தொடர்கிறது.

இரண்டடுக்கு நாடாளுமன்றத்தில் மொத்தம் 664 உறுப்பினர்கள். அதில் ஏறத்தாழ 500 உறுப்பினர்கள் தேசிய ஒருமைப்பாடு மற்றும் வளர்ச்சிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அதாவது, தேசிய சமாதானம் மற்றும் வளர்ச்சிக் குழு என்று தங்களை அழைத்துக் கொண்டு சர்வாதிகார ஆட்சி நடத்தும் ராணுவத் தளபதிகளின் "பினாமி' கட்சிதான் அது. இத்துடன் நின்றுவிடவில்லை கேலிக்கூத்து. இரண்டு அவைகளிலுமே, 25 விழுக்காடு இடங்களில் பதவியில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் நியமன உறுப்பினர்களாக இருப்பார்கள். ஏறத்தாழ 82% இடங்களை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, மியான்மரில் மக்களாட்சி நடத்தப் போகிறது.

அசுர பலத்துடன் நாடாளுமன்றத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் தங்களது மேலாதிக்கம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது ராணுவத் தலைமை. மேலும், எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் சீர்திருத்தங்களோ, மாற்றங்களோ உடனுக்குடன் தோற்கடிக்கப்பட்டு நாடாளுமன்றத்துடன் முடிவுகட்டப்படும்.

நாடாளுமன்றம் கூட்டப்படுவதாக அறிவிப்பு வந்தவுடன் தற்போது தேசிய சமாதானம் மற்றும் வளர்ச்சிக் குழு என்கிற பெயரில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ராணுவத் தளபதி ஜெனரல் தான் ஷ்யூ அதிபராகத் தன்னை அறிவித்துக் கொள்வார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது நம்பிக்கைக்குரியவரும், முன்னாள் பிரதமருமான தேன் செய்னை அதிபராக்கி மகிழ்ந்திருக்கிறார். கடந்த 18 ஆண்டுகளாகத் தனது கட்டுப்பாட்டில் மியான்மரை வைத்துக் கொண்டிருக்கும் ஜெனரல் தான் ஷ்யூ.

பெயருக்கு தேன் செய்ன் அதிபராக அறிவிக்கப்பட்டாலும், எல்லாமே ஜெனரல் தான் ஷ்யூவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கப் போகிறது என்பது மூத்த ராணுவத் தளபதிகளும், தான் ஷ்யூவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களுமான துரா ஷ்யூ மாய் கீழவைத் தலைவராகவும், கீன் ஆங் மிய்ன்ட் மேலவைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதிலிருந்து வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

வேடிக்கை தெரியுமா? மியான்மரின் புதிய தலைநகரமான நய் பிட்யிதாவில் கூடிய நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்குப் பத்திரிகை நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் அனுமதி கிடையாது. உறுப்பினர் அல்லாத யாராவது நுழைந்தால் அவர்களுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் உண்டு.

இன்னொரு சுவாராஸ்யமான செய்தி. டுனீசியாவிலும், எகிப்திலும் நடக்கும் மக்கள் புரட்சி பற்றிய செய்திகள் எதுவுமே மியான்மரில் ஒலிபரப்ப, ஒளிபரப்பப்படவில்லை. வின்ட்சே லோகன் என்கிற நடிகை கலிபோர்னியாவில் உள்ள நகைக்கடையில் நெக்லஸ் திருடிய சம்பவம்தான் மியான்மர் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி. மக்கள் சக்தியால் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முடியும் என்பது மியான்மர் மக்களுக்குத் தெரியக்கூடாதாம்.

மக்களின் பிரச்னைகளுக்கு ராணுவ ஆட்சி அல்ல பதில் என்பதற்கு மியான்மர் உதாரணம் படைக்கிறது.

ஆங் சாங் சூச்சியின் போராட்டம் தொடர்கிறது...

Dinamani
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல