ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

சயனைடு தீர்த்தம் கொடுத்து 6 பேரை கொன்ற பெண்ணுக்கு தூக்கு!

பெண்ணை கோவிலுக்கு அழைத்து சென்று தீர்த்தத்தில் `சயனைடு' கலந்து கொடுத்து கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் ``சயனைடு'' மல்லிகா என்ற பெண்ணுக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

சயனைடு மல்லிகா



பெங்களூர் கிராமப்புற மாவட்டம், மண்டியா, தும்கூர் மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு வந்த 6 பெண்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். இறந்த பெண்கள் யார்? எந்த இடத்தை சேர்ந்தவர்கள் என்பது பற்றி முதலில் எதுவும் தெரியவில்லை. போலீசார் நடத்திய விசாரணையில் கொலையான பெண்கள் அனைவரும் தனியாக வசித்து வந்தவர்கள் என்பதும் `சயனைடு' விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில், பெங்களூர் கலாசிபாளையம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவருடைய பெயர் மல்லிகா (43) என்பதும், கணவர் பெயர் ஹனுமப்பா என்பதும், பெங்களூர் கனகபுரா சாலையில் உள்ள கக்கலிபுரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் மல்லிகாவிடம் இருந்து தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன. மல்லிகா முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரித்தனர்.

6 பேர் கொலை

விசாரணையில் பெங்களூர் கிராமப்புற கோவில்களில் நடைபெற்ற தொடர்கொலைகளை செய்ததை போலீசாரிடம் மல்லிகா ஒப்புக்கொண்டார். மல்லிகாவினால் `சயனைடு` கொடுத்து கொல்லப்பட்ட பெண்கள் மம்தா, எலிசபெத், யசோதம்மா, முனியம்மா, பிள்ளம்மா மற்றும் நாகவேணி என்பது தெரியவந்தது. இந்த 6 பெண்களும், மல்லிகாவின் சதி வலையில் விழுந்து உயிரையும், உடமைகளையும் பறிகொடுத்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. பெங்களூர் மேதார்பேட்டையில் உள்ள தங்க நகை பாலிஷ் போடும் கடையில் ரூ.200 கொடுத்து `சயனைடு' வாங்கியதாகவும் மல்லிகா தெரிவித்தார்.

தனியாக இருக்கும் பெண்களிடம் நைசாக பேசி கோவிலுக்கு போகலாம் என்று அழைத்து சென்று அவர்களுக்கு தீர்த்தம் என்று கூறி தண்ணீரில் `சயனைடு' கலந்து கொடுத்து மல்லிகா கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்ததும் தெரிய வந்தது. இதையொட்டி ``சயனைடு'' மல்லிகாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

தூக்கு தண்டனை

பெங்களூர் முதலாவது கூடுதல் கிராமப்புற மாவட்ட கோர்ட்டில் ``சயனைடு'' மல்லிகா மீது ஹெப்பாலை சேர்ந்த நாகவேணியை சுப்பிரமணியா கோவிலுக்கு அழைத்து சென்று `சயனைடு' கொடுத்து கொன்றது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் `சயனைடு' மல்லிகாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஏற்கனவே மற்றொரு பெண் கொலை வழக்கில் கடந்த 2009-ம் ஆண்டு தும்கூர் விரைவு நீதிமன்றத்தில் மல்லிகாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது நாகவேணி என்ற பெண் கொலை வழக்கிலும் `சயனைடு' மல்லிகாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

`சயனைடு' மல்லிகாவுக்கு லட்சுமி, சாவித்திரியம்மா, கெம்பம்மா, ஜெயம்மா, கலா, சிவமோக்கம்மா என்ற பெயர்களும் உள்ளன. ஒவ்வொரு பெண்களிடமும் தன் பெயர்களை மாற்றி மாற்றி கூறி கொலைகளில் ஈடுபட்டு இருக்கிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பே `சயனைடு' மல்லிகா தன் குடும்பத்தை விட்டு பிரிந்து இதுபோன்ற திருட்டு, கொள்ளை, கொலைகளில் ஈடுபட்டு இருக்கிறார்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட `சயனைடு' மல்லிகாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைத்தனர்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல