ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

இப்படியும் ஒரு சர்வதேச பாடசாலை!

நன்றாகப் படித்தால் நன்றாக உழைக்கலாம்! அதாவது அதிகமாகச் சம்பாதிக்கலாம். மருத்துவர், சட்டத்தரணி, எந்திரி படிப்பு படித்துவிட்டால் சுளை சுளையாய் பணம்தான். இன்னும் சிலர் ‘கோழி மேய்ச்சாலும் கோறணமேந்தில் மேய்க்கோணும்’ என்றும் சொல்வார். அது பழங்கதை! இப்போதெல்லாம் தொழில் ரீதியான கல்விக்கே முக்கியத் துவம்! தகவல் தொழில்நுட்பம், முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் என விரித்துக்கொண்டே போகலாம்.

ஆசிரியரானாலும் நேரம் ஒதுக்கி ‘ரியூஷன்’ நடத்தலாம். இஃதெல்லாம் இப்படியிருக்க கல்வியே வியாபாரமாகிப்போனால் என்னவென்று சொல்வது? தனியார் கல்விக் கழகங்களின் கல்வித் தரம் தொடர்பாக எந்த உத்தரவாதத்தையோ பொறுப்பையோ அரசாங்கத்தால் ஏற்க முடியாது என்று அப்போதைய கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக ஞாபகம்.

சில பெற்றோர் தம் பிள்ளையைப் பெருந்தொகைப் பணத்தைச் செலுத்தி இன்ன பாடசாலையில் (விசேடமாகத் தனியார் பள்ளியில்) சேர்ந்திருக்கிறோம் என்று பீற்றிக்கொள் வதைக் கேட்டிருக்கிறேன். அவர்களிடம் போய் அங்குக் கல்வி சரியில்லையாம்! எல்லாம் பொய்யாம் என்றால் நம்பவா போகிறார்கள். இங்கே நண்பர் ஒருவர் கூறும் கதையைக் கேட்டால் தனியார் பாடசாலை பக்கமே தலை வைக்க மாட்டீர்கள்! எழுவான்கரையும் படுவான்கரையும் இணைந்த பெயரில் கொழும்பில் இயங்கும் ஒரு பாடசாலை சர்வதேசம் என்று சொல்லிக்கொண்டு சர்வசேதங்களையும் செய்து வருகிறது. அன்றொருநாள் திங்கட்கிழமை கொழும்பு ஒன்பதில் ‘ஆராயாமல்’ பார்த்தபோது ஒரேகளேபரம்! அந்த சர்வசேதத்திற்கு முன்னால் கூச்சல், குழப்பம். என்னவென்று பார்த்தால் பாதுகாப்பு உத்தியோகத்தர் திடீரெனப் பணி நீக்கமாம்! சம்பளமும் கிடையாதாம்! பின்னர், பொலிஸ், தொழில் திணைக்களம் என அலைக்கழிவு. முடிவு பாடசாலையைப் போலவே பூஜ்ஜியம்தானாம்!

இதில் விசேடம் என்னவென்றால் இந்தப் பாடசாலையை நடத்துபவர்க ளுக்குச் சொந்த மொழியைத் தவிர பாடசாலைக்குரிய மொழியே தெரியாது. அப்பாவி பெற்றோரை மயக்கும் மொழியைத் தவிர. அதன் கட்டட உரிமையாளர் கதியோ பரம கதி! பல கோடிகளுக்குப் பேரம்பேசி இன்று தெருக்கோடிக்கு வரும் நிலை அவருக்கு.

இதற்கிடையில் போலியான விளம்பரங்கள், குலுக்கல் சீட்டுகள் எனவும் பணச் சுரண்டல். பிள்ளைகளைச் சேர்த்தவர்கள் இப்போதுதான் பதறுகிறார்கள். பயிற்றப்பட்ட ஆசிரியர்களின்றிப் பிள்ளைகளை வீணே நேரத்தைப் பேள்விகுகிறார்கள் என்பது இப்போதுதான் புரிகிறது. எந்தவேளை உயிர்போகுமோ என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாடசாலையை நம்பிய பிள்ளைகளின் எதிர்காலம் கேற்குறியாகிவிட்டதாகப் பெற்றோர்கள் அங்கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

மிகக் குறைந்த சம்பளத்தில் கற்பிக்க வந்த ஆசிரியப் பெண்டுகளை ‘ஓவர் ரைம்’ செய்யச்சொன்னதால், மூவர் பறந்தோடியிருக்கிறார்கள். இப்படி ஆதாரபூர்வமான பல்வேறு தகவல்களை ஆற அமர சேகரித்திருக்கிறோம். சர்வதேச பாடசாலைகள் மிகத் தரமானதாக இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தனியார் கல்வித்துறையில் ‘கரும்புள்ளி’யாகச் சில பாடசாலைகளும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.

எனவே, தங்கள் பிள்ளைகளை சர்வதேச அல்லது தனியாள் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் ‘ஆற அமர’ சிந்தித்துச் செயற்படுவார்கள் என நம்புகிறோம். அதே நேரம், குறித்த இந்தப் பாடசாலையில் பயிலும் மாணவர்கள் நலன்கருதி, உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வித்துறைக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள் களைந்தெறியப்பட வேண்டும்!

இங்கே பாதுகாப்பு உத்தியோகத்தரை நீக்கியதும் ஆசிரியைகளை கடமை முடிந்தும் இருந்துவிட்டுப்போகுமாறு கூறியதும் அல்ல பிரச்சினை. மொத்தத்தில் இஃது ஒரு பாடசாலையே அல்ல என்கிறார்கள். பெற்றோர்கள் அதிபரைச் சந்திக்க முடியாது. தொலைபேசியும் துண்டிப்பு. இதனை நடத்துபவர்களின் ஒரே குறிக்கோள் பணம். அப்பாவி பெற்றோரிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி மோசடியாகப் பணம் பெறுவதே நோக்கம். தொட்டதற்கெல்லாம் குலுக்கல் சீட்டு! கற்பித்தலுக்கு மட்டும் வேட்டு! ஆகவே, இந்த இக்கட்டான நிலையிலிருந்து பெற்றோரையும் பிள்ளைகளையும் மீட்கவேண்டியது சம்பந்தப்பட்டோரின் பொறுப்பு! சரி, கல்வித்துறை சார்ந்த சிலர் சம்பந்தப்பட்ட தலவாக்கலை ரயில் சம்பவமொன்று இருக்கிறது. ஆற அமர அடுத்த வாரம் பார்ப்போம்!
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல