வெள்ளி, 12 அக்டோபர், 2012

டிவி சீரியல்களில் 'ஒப்பாரி' வைப்பதில் 'ஒஸ்தி' யார்...?

தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் என்றாலே குடியைக் கெடுப்பதும், அழுகையும், அழவைப்பதும் என்றாகிவிட்டது. இதில் எந்த நடிகை நன்றாக அழுகிறார் என்று சீரியல்களை ஆய்வு செய்து பார்த்தபோது கிடைத்த 'பயங்கர' அனுபவம் இதோ...

 
ஒரே நடிகை பல குரல் அழுகை...

சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் ஒரு சீரியலில் மட்டுமே நடிப்பதில்லை அவர்களின் அழுவாச்சி மற்றும் ஒப்பாரி வைக்கும் திறனைப் பொறுத்து அவர்களுக்கு பல தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் அழும் வாய்ப்பு கிடைக்கிறது. ஒரே சேனலில் காலை, மதியம், மாலை என மூன்று நேரமும் கலந்து கட்டி கல்லா கட்டி கலக்கலாக ஒப்பாரி வைக்கும் நடிகைகள்தான் சின்னத்திரையில் அதிகம்.



நளினியிடம் திட்டு வாங்கப் பிறந்த தேவயானி

சின்னத்திரையில் அழுகையை குத்தகைக்கு எடுத்துகொண்டது அம்மா கதாபாத்திர நடிகைகள் மட்டுமல்ல கதாநாயகிகள்தான் கிளிசரின் போடாமலேயே அதிகம் அழுகின்றனர். தேவயானி சின்னத்திரையில் நடிக்க வந்தபோது அழகான நடிகை சின்னத்திரைக்கு நடிக்க வந்திருக்கிறார் என்று ஆனந்தப்பட்டார்கள். ஆனால் அப்புறம்தான் தெரிந்தது மாமியார் நளினியிடம் அவர் தினம் தினம் திட்டுவாங்கி அழுவதற்காகவே வந்திருக்கிறார் என்று. கோலங்கள் தொடங்கி முத்தாரம் வரை தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறார் தேவயானி.


 அழுதழுது கண்ணீர் வற்றிய துளசி

பேருதான் தென்றல் ஆனால் அதில் புயல்வீசும் படியான காட்சிகள் தான் அதிகம். ஓடிப்போன அம்மா, கண்டுகொள்ளாத அப்பா என தொடர் தொடங்கியது முதலே கதாநாயகி ஸ்ருதிக்கு அழுகைதான். அழுகையாய் அழுது தீர்த்து பின்னர் திருமணம் முடிந்த பின்னரும் மாமியாரிடம் மல்லுக்கட்டி நிற்கிறார். ஆரம்பம் முதலே வில்லன், வில்லியை சமாளிப்பதுதான் இவருடைய வேலை. அழுது அழுது கண்ணீர் வற்றிய துளசியின் நடிப்பிற்காகவே டிஆர்பி எகிறியிருக்கிறதாம்.


கொஞ்சம் அழுகை கொஞ்சம் கோபம்

சின்னத்திரையில் நீலிமா ராணியின் நடிப்பில் எந்த குறையும் சொல்ல முடியாது இதற்காகவே ஒரே சேனலில் நான்கைந்து தொடர்களில் கூட அவர் நடித்த காலங்கள் உண்டு. அதுவும் இரவு நேரத்தில் மாமியாரிடம் அவர் சிக்கி அழுததை இல்லத்தரசிகள் இன்றைக்கும் கண்ணீரோடு பேசுவார்கள். அப்புறம் வில்லனிடமும், மிரட்டல் விடுத்த போலீஸ்காரனிடமும் சிக்கி அவர் அழுத அழுகையை குடம் குடமாக பிடித்திருக்கலாம்.


ஒவர் ஒப்பாரி காவேரி

பெரியதிரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த காவேரி ஆரம்பத்திலேயே திருமணத்திற்காக அப்பா படும் கஷ்டத்தை பார்த்து அழுது புலம்பியிருப்பார். திருமணம் முடிந்த பின்னர் மாமியார் கொடுமை தாங்காமல் அழுது அழுது முகம் வீங்கிபோனார். கணவரை விட்டு பிரிந்திருந்தாலும் தினசரி கண்ணீர்தான் காவேரி. இவரது கண்ணீரைப் பார்ப்பதற்காகவே மதிய நேரத்தில் சமையலைகூட விட்டுவிட்டு டிஆர்பியை ஏற்றுகின்றனராம் இல்லத்தரசிகள்.காவிரியில்வந்த தண்ணீரை விட காவேரியின் கண்களில் கொட்டிய கண்ணீர்தான் ரொம்ப ஜாஸ்தி.


அழுமூஞ்சி துர்கா

எந்த சீரியல் என்றாலும் இவர் சிரித்து பார்த்தே இருக்கமாட்டார்கள். பிரபல தொலைக்காட்சியில் மூன்று சீரியலில் நடித்தாலும் மூன்றிலுமே சோகத்தை பிழியும் கதாபாத்திரங்கள்தான்.



தேவதர்ஷினி அழுகை நிற்குமா?

மத்தியான நேரத்தில் தூக்கத்தை தொலைத்துவிட்டு இல்லத்தரசிகள் பார்ப்பது தேவதர்ஷினியின் அத்திப்பூக்கள் தொடர்தான். ஆயிரம் எபிசோடுகளை தாண்டியும் அசராமல் அழுகையும், வன்மமுமாக போய்க்கொண்டிருக்கிறது. குழந்தைக்காகவே, கணவருக்காகவோ, வேறு எதற்காகவேணும் நாயகி தேவதர்ஷினி அழுதுகொண்டேதான் இருக்கிறார்.



அர்சனா அழுகைக்கு முடிவு வருமா?

எல்லோரையும் சொல்லிவிட்டு நம்ம திருமதி செல்வம் அபிதாவை சொல்லாமல் விட்டால் சாமி கோபித்துக்கொள்ளாதா என்ன? படிப்பு குறைவாக இருந்தாலும் மெக்கானிக் செல்வத்தைக் கல்யாணம் செய்துகொண்டு ஆரம்பத்தில் இருந்தே கஷ்டம்தான் அர்ச்சனாவிற்கு. பின்னர் 500 எபிசோடு வரை மாமியாரிடம் அழுது நிறைமாத கர்ப்பிணியாய் வீட்டை விட்டு வெளியேறி எல்லோரின் அனுதாபத்தையும் சம்பாதித்தார். அப்புறம் ஒரே பாட்டில் ஓகோ என்று ஆனபின்னரும் பெற்றோருடன் பேச முடியாமல் தினம் தினம் அழுகைதான்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல