சனி, 15 டிசம்பர், 2012

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் – பகுதி 11

தனது முதலாவது முயற்சி வெற்றி பெறாத தாக்கத்துடன் கிளிநொச்சியிலுள்ள தனது அரசியல்துறை நடுவகப்பணியகத்திற்கு திரும்பிய தமிழ்ச்செல்வன் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு தகுதியான ஒருவரை தேடிக்கொண்டிருந்தார். மிகவும் இரகசியம் பேணப்படவேண்டிய இந்த விடயம் தொடர்பில் ஒரு பொருத்தமான ஆளை கண்டுபிடிப்பது தமிழ்ச்செல்வனுக்கு கஸ்டமாகவே இருந்தது. ஏனெனில் இவ்விடயத்தில் இரண்டு விடயங்கள் முக்கியமானவையாக காணப்பட்டன. ஒன்று இவ்விடயம் புலனாய்வுத் துறைக்கு தெரியாமல் இருக்கவேண்டும். காரணம் புலனாய்வுத் துறைக்குரிய முழுமையான பொறுப்பும் யாழ்மாவட்டம் உட்பட அனைத்துப் பிரதேசங்களையும் கையாளும் பணி பொட்டம்மானுக்குரிய பணியாகும். பொட்டம்மான் பார்க்கவேண்டிய வேலையை வேறொரு பிரிவினர் பார்ப்பது இயக்க நடவடிக்கைகளுக்கு உகந்த செயற்பாடு அல்ல.

ஏனெனில் ஒவ்வொரு பிரிவிற்கும் பிரபாகரனால் வழங்கப்படும் பணிகளை அந்தந்த பிரிவினரே மேற்கொள்வது வழமையாகும். குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நிதித்துறையின் செயற்பாட்டில் வேறு பிரிவினர் ஒருபோதுமே தலையிட மாட்டார்கள். ஆரம்ப நாட்களில் ஜெயசிக்குறு படை நடவடிக்கை இடம்பெற்ற சமயத்தில் ஜெயந்தன் படை அணியினர் படையினரது சிறிய பகுதி ஒன்றை தாக்கி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் அந்தப் படைமுகாமில் இருந்த ஒரு தொகுதிப் பொருட்களையும் கைப்பற்றிக்கொண்டு மல்லாவிப் பகுதியிலுள்ள தமது விடுதலைப் புலிகளின் பாசறை ஒன்றிற்கு கொண்டுவந்து சேர்த்தனர். இந்த தாக்குதல் நடவடிக்கையில் மென்பானமாகிய கொக்கொக்கோலா சோடாவில் ஒரு தொகுதியை புலிகள் கைப்பற்றியிருந்தனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட சோடாவில் ஒன்றை இத்தாக்குதலில் கையில் சிறு காயங்களுக்குள்ளான மதுரன் என்ற போராளி எடுத்துக் குடிக்க முற்பட்டபொழுது அங்கு வந்த நிதித்துறையினர் இது தங்களுக்குரிய பொருட்கள் எனவும் இவற்றை நீங்கள் குடிக்க முடியாதெனவும் தெரிவித்தனர்.

தமிழேந்தி அப்பாவின் உத்தரவு இல்லாமல் நிதித்துறை சார்ந்த பொருட்களில் எவருமே கைவைக்க முடியாது என நிதித்துறையைச் சேர்ந்த கபிலன் என்பவரே குறித்த ஜெயந்தன் படையணிப் போராளியுடன் முரண்பட்டுக் கொண்டிருந்தார். இதனை அடுத்து சண்டையில் களமாடி விழுப்புண் அடைந்து கஸ்ரப்பட்ட நாங்கள் சோடாவை அருந்தாமல் ஏசி வாகனத்தில் காசு சேகரித்துக் கொண்டு திரியும் நீங்களா சோடாவை அருந்துவது என இருவரும் முரண்பட்டு, இந்த முரண்பாடு உச்சமடையவே ஜெயந்தன் படையணியைச் சேர்ந்த போராளி வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து குறித்த நிதித்துறைப் போராளியை விரட்டியடித்தார். அத்துடன் அங்கு தம்மால் கைப்பற்றப்பட்ட மென்பானங்கள் அனைத்தையும் ஜெயந்தன் படையணிப் போராளிகள் தாமே பருகிக் கொண்டனர்.

இந்த விவகாரம் இயக்கத்தின் மேல்மட்டம் வரையும் பெரும் சர்ச்சையைக் கிளப்பும் விவகாரமாக அந்த நாட்களில் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்துகொண்ட தமிழ்ச்செல்வன் உடனடியாகவே தமிழேந்தி அப்பாவிடம் சென்று நிலமையை எடுத்துக்கூறி ஜெயந்தன் படையணியை கையாண்டுவந்த கருணா அம்மானுடனும் தொடர்பினை ஏற்படுத்தி இருதரப்புக்குமிடையில் சமாதானத்தை ஏற்படுத்த முற்பட்ட பொழுதிலும் இந்த விவகாரம் உடனடியாக முடிவுக்கு வராமல் பெரும் சர்ச்சையாகவே தொடர்ந்து நீடித்தது.

பின்னர் பிரபாகரன் நேரடியாக இவ்விவகாரத்தை கையாண்டு இரு தரப்பையும் ஒன்றாக அழைத்து சண்டையிலே படையணியினர் கைப்பற்றுகின்ற உணவுப் பொருட்களை படை அணியினர் தமது களமுனையில் மட்டுமே உணவாகப் பயன்படுத்த முடியுமெனவும் அந்தப் பொருட்களை களமுனையை விட்டு வெளிப்பகுதிக்கு கொண்டுவந்தால் அப்பொருட்கள் அனைத்தும் நிதித்துறைக்கு சொந்தமாகும் எனவும் இததகைய நடைமுறை இயக்கத்தின் கட்டமைப்பிற்கு அவசியமெனவும் கூறி இரு தரப்பையும் சுமுக நிலைக்கு கொண்டுவந்த போதிலும் ஜெயந்தன் படையணி போராளிகள் மத்தியில் நிதித்துறையினர் மீது கடுமையான கோபமே நிலவி வந்தது.

ஏனெனில் களமுனைக்கு செல்வதற்கு பின்னடித்து வருகின்ற நிதித்துறையினர் நாங்கள் களமாடி இரத்தம் சிந்தி வருகின்றபொழுது சும்மா இருந்தவாறு நிதித்துறையினர் அனுபவிப்பதற்கு நாங்கள் எடுபிடிகளா? என நேரடியாகவே கருணா அம்மானிடம் ஜெயந்தன் படையணிப் போராளிகள் அந்த நாட்களில் முறுகிவந்தார்கள். இந்த விவகாரமும் கருணா அம்மானின் பிரிவிற்கு ஒரு காரணமென வன்னியில் பின்னைய நாட்களில் புலிகளின் மூத்த தளபதிகள் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.

இவ்வாறு இயக்கத்தின் ஒவ்வொரு கட்டமைப்பும் தனித்தனி பிரிவுகளாகவே கையாளப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் பொட்டம்மானினுடைய ஒரு வேலைத்திட்டத்தை தமது பிரிவினர் செய்வது எவ்வளவு ஆபத்தானது என்று தமிழ்ச்செல்வனிற்குத் தெரியும். இருந்த போதிலும் தலைவர் தன்னிடம் நம்பி இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கின்ற படியால் ஒருதடவை விட்ட பிழையை மீண்டும் விடக்கூடாது என்ற உறுதியுடன் தமிழ்ச்செல்வன் இதற்குரிய ஆளைத் தேடிக்கொண்டிருந்தார். இறுதியாக குமரன் என்ற அரசியல்துறை போராளி ஒருவரை நியமிப்பது என்ற முடிவு ஏற்பட்டிருக்கையில், அன்று மாலை தமிழ்ச்செல்வனை வழமையாக சந்தித்து வருகின்ற பரணி என்ற போராளி சந்திக்கச் செல்கின்றார். பரணி என்ற போராளியை கண்டதும் தமிழ்ச்செல்வன் தனது முடிவை மாற்றி இந்த விவகாரத்தை கையாளக்கூடியவர் பரணி மட்டுமே ஆகும் என முடிவு எடுக்கிறார்.

பரணி என்பவர் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர் மட்டுமல்லாமல் தமிழ்ச்செல்வனுடன் ஆரம்பகாலத்திலிருந்து நட்புப் பேணிவந்த ஒரு போராளியுமாவார். தமிழ்ச்செல்வன் பிரபாகரனுக்கு மறைக்காமல் முழுத் தகவல்களையும் தெரிவிப்பது போன்று தமிழ்ச்செல்வனிற்கு சகல தகவல்களையும் மறைக்காமல் கூறிவருகின்ற ஒருவராக இந்தப் பரணி என்பவர் இருந்து வந்தார். யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்பில் அக்குவேறு ஆணிவேறாக பரணி அறிந்திருந்த போதிலும் யாழ்ப்பாணத்திலுள்ள முக்கியமான பத்திரிகையின் வித்தியாசமான பிரதம ஆசிரியர் தொடர்பில் பரணி அரைகுறையாகவே தெரிந்து வைத்திருந்தார். இருந்தாலும் பரணிக்கு இருக்கின்ற மக்கள் தொடர்புகள் மற்றும் அவருடைய தனிப்படட திறமைகள் காரணமாக குறித்த பத்திரிகையாளர் தொடர்பில் ஆராய்வதில் பரணிக்கு பெரியளவில் இடைஞ்சல்கள் இருக்காது என தமிழ்ச்செல்வன் எண்ணிக்கொண்டார்.

இதனைவிட பரணியிடம் இன்னொரு குணாம்சமும் காணப்பட்டது. அதாவது எதிரியாக இருந்தாலும் அவரை சிரித்தவாறு அணைத்துக்கொண்டு காரியத்தை சாதிக்கும் திறமை பரணியிடம் கூடுதலாகக் காணப்பட்டது. இந்த விடயம் தமிழ்ச்செல்வனிற்கும் நன்கு பரிச்சயமான ஒரு விடயமாகும். ஏனெனில் தமிழ்ச்செல்வன் கோபமான கேள்விகளை யார் கேட்டாலும் சிரித்தவாறு பதில் அளித்துவிட்டு செல்கின்ற ஒரு சுபாவமுடையவர். இவ்விடயத்தை வன்னியில் இடம்பெற்ற பல ஊடகவியலாளர்கள் சந்திப்புக்களில் தமிழ்ச்செல்வன் வெளிப்படுத்தத் தவறியதில்லை. இதனைவிட தமிழ்ச்செல்வனைச் சந்திக்கின்ற ஜப்பான், நோர்வே உள்ளிட்ட இராஜதந்திரிகள் கடுமையான தொனிகளில் தமிழ்ச்செல்வனிடம் கேள்விகளை கேட்டாலும் தமிழ்ச்செல்வன் சிரித்தவாறு பதில் அளித்து வந்தார். தமிழ்ச்செல்வன் அளிக்கின்ற பதில்கள் திருப்தியில்லாத பதில்களாக இராஜதந்திரிகளுக்கு தெரிகின்ற போதிலும் தமிழ்ச்செல்வன் சிரித்தவாறு பதில்களை அளித்துவந்தமையால் இராஜதந்திரிகளால் ஒரு கட்டத்திற்கு மேல் அழுத்தம் கொடுக்க முடியாத நிலைமைகளும் ஏற்படுவதுண்டு. இவ்வாறு தென்பகுதி ஊடகவியலாளர்கள் விடுதலைப் புலிகளை சின்னத்தனமாக அல்லது நீங்கள் பயங்கரவாதிகள் என்ற தொனியில் கேள்விகளை கேட்டாலும் அதற்கும் சிரித்தவாறே தமிழ்ச்செல்வன் பதில் அளிப்பதுண்டு.

இவ்வாறு தன்னைப்போன்று சிரித்துக்கொண்டே காரியத்தைச் சாதிக்கக்கூடிய பரணி என்ற தனது நண்பனையே தமிழ்ச்செல்வன் ஊடகங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமித்திருந்தார். குறித்த பரணி என்பவர் தனது பணியை சரியாகச் செய்தாரா? அல்லது இப்பணியை இவரால் செய்யமுடியாமல் போனதா? தமிழ்ஊடகங்கள் தொடர்ந்தும் புலிகளை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனவா என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

(வே. அர்ச்சுணன்)
(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல