வெள்ளி, 29 மார்ச், 2013

மாணவர்கள் போராட்டத்தின் குறிக்கோள் எது?

எத்தனையோ பேர் இலங்கை தமிழ் மக்களுக்காகப் போராடினாலும், சட்டென்று தீப் பிடித்து எரிந்தது 8 பேர் கொண்ட லயோலா கல்லூரி மாணவர்கள் கொளுத்திப் போட்ட போதுதான். இது யாராலும் மறுக்கப் பட முடியாத உண்மை.

ஆரம்ப கட்டத்தில், மாணவர்கள் செய்வது பலருக்கு வெறுப்பைத் தந்ததென்னவோ உண்மைதான். இவர்களால் என்ன செய்து விட முடியும்? என்று கூட பேசினார்கள். மாணவர்கள் போராட்டங்களில் குதிப்பது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்றும், அவர்களது பெற்றோரின் பணம் விரயமாகிறது என்றும் சொல்லி வந்தார்கள்.

ஆனால் தீப்பொறி, பஞ்சுப் பொதியில் பற்றியது போல, தமிழ் நாட்டிலும், வெளி மாநிலங்கள்ளிலும் மற்றும் சில வெளி நாடுகளிலும் இதே போராட்டம் பற்றிக் கொழுந்து விட்டு எரிந்தபோது , மாணவர்களின் போராட்டம் மிகப் பெரும் வலு பெற்றது.

கூடவே அரசியல் கட்சிகள் தங்களுக்குள் பயம் கொண்டது. ஆளும் கட்சி உண்ணா விரதங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க நினைத்தது, எதிர்க் கட்சிகள் மாணவர்களை அரவணைப்பது போல சென்று நாடி பிடித்து நோக்கியது.

இருவரையும் ஒதுக்கிய மாணவர் சமுதாயம், யாருக்கும் மசியாமல், எந்த அரசியல் கட்சிகளினுடனும் சேராமல், அவர்கள் தனித் தீவாக இயங்கி, மாபெரும் அரசியல் இயந்திரங்களை தங்கள் திசையில் சுற்றச் செய்து மிகப் பெரும் காரியத்தை சாதித்து இருக்கிறார்கள்.

மாணவர்களின் இந்த ஒட்டு மொத்தப் போராட்டம், மக்களின் மனதில் பல தாக்கங்களை ஏற்படுத்தியதென்னவோ உண்மை. நடுநிலையாளர்களும், மற்றும் அணி சேராதவர்களும், குறைந்த பட்சம் மாணவர்களின் ஆரோக்கியம் கருதி அவர்களுக்காக பரிதாபப் பட்டார்கள்.

மாணவர்களின் பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளின் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள் என்று தெரிந்தவுடன், அரசியல் கட்சிகள் சட்டென்று விழித்துக் கொண்டன. காரணம் மாணவர்களின் ஏகோபித்த ஒட்டு வங்கி. அவர்கள் காட்டும் திசையில் செல்வோரின் ஓட்டு வங்கி.

அரசியல் கட்சிகள், மாணவர்களை சாராமல் இருப்பது, தங்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று நினைத்து அவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பல காரியங்களை செய்து வருகின்றன.

ஆளும் கட்சி தன மாநில அந்தஸ்தை உபயோகித்து பல தீர்மானங்கள் போடுகிறது.

IPL இலங்கை வீரர்களுக்குத் தடை, இலங்கைக்கு இந்தியா பொருளாதாரத் தடை விதிக்கத் தீர்மானம் என்று நிறைய காரியங்களை செய்கிறார்கள்.

அது போலவே திமுக மத்திய கூட்டணி அரசிலிருந்து தங்களின் ஆதரவை வாபஸ் வாங்கியது மட்டும் அல்லாது, தங்களின் மந்திரிகளையும் திரும்ப அழைத்துக் கொண்டது, அரசியல் நோக்கர்களுக்கு இது குறித்து இன்னும் ஆச்சரியமே. காங்கிரஸ் கட்சியும் இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் விடுபடவில்லை.

நேற்றைய தினம் திருச்சியில் காங்கிரஸ் தொண்டர்களால் மாணவர்கள் தாக்கப் பட்டனர். இது ஒரு மோசமான முன் உதாரணம். இனி காங்கிரஸ் எங்கு சென்றாலும் மாணவர்கள் அவர்களை துரத்திச் சென்று எதிரிப்பார்கள். மாணவர்களை அனாவசியமாக காங்கிரஸ் பகைத்துக் கொள்ள நேர்ந்திருக்கிறது. திரு தங்கபாலு போன்றவர்கள் ‘இத் தவறு, மன்னிப்பு கேட்கிறேன்’ என்று கூறினாலும் கூட, ஏற்கனவே எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றியது போல காங்கிரஸ் தொண்டர்கள் இந்த காரியத்தை செய்திருக்கிறார்கள்.

இது இப்படி இருக்க, மாணவர்களின் இந்தப் போராட்டம் சரியான திசையில் தான் போய்க் கொண்டு இருக்கிறதா என்றால், சரி என்றும் சொல்லலாம் சரியில்லை என்றும் சொல்லலாம்.

எல்லா மாணவர்களும் சாலை மறியலிலும், உண்ணா விரதத்திலும், ஊர்வலத்திலும், ரோடு தடை செய்வதிலும் ஈடு படுகிறார்களே தவிர இது குறித்து அவர்கள் எதுவும் முன்னோக்கி சிந்திப்பதாகத் தெரியவில்லை. மாணவர்கள் சற்றே குறிக்கோளுடன் முன்னேற வேண்டும் என்றும் தோன்றுகிறது .

அவர்கள் யாரை எதிர்க்கிறார்கள், யார் என்ன செய்ய வேண்டும் என எதிர் பார்க்கிறார்கள், போராட்டம் மூலம் யாரை நிர்ப்பந்திக்கிறார்கள் என்பதைத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.

உள்ளூரில் ரோடு தடை மற்றும் உண்ணா விரதங்கள் நிச்சயம் இலங்கையின் காதுகளில் எட்டும். அனால் நஷ்டம் யாருக்கு? அவர்களுக்கா? மாணவர்கள் செய்யும் போராட்டத்திற்கு ஒரு இலக்கு இல்லாமல் இருப்பதாகவே தெரிகிறது.

மாணவர்கள் மாநில மத்திய அரசை செயலாற்ற நிர்ப்பந்திக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் ஆளும் அதிமுகவும், எதிர் கட்சியான திமுகவும் அவர்களால் இயன்றதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதை விட அதிகம் எதிர்பார்க்க முடியாது.

ஆனால் மத்திய அரசை நோக்கி மாணவர்கள் கை நீட்ட வேண்டும். மாணவர்கள் இனி மத்திய அரசை நிர்ப்பந்திக்கச் செய்ய வேண்டியது இந்த நிமிடத்தின் தேவை அல்லது காலத்தின் கட்டாயம்.

- உடனடியாக மத்திய அரசு களத்தில் இறங்கி இலங்கைத் தமிழர்களுக்காக ஆவன செய்ய தொடர் முயற்சி செய்ய வேண்டும்.

- மத்திய அரசு இலங்கையுடனான ராஜீய உறவுகளுக்கு, பாகிஸ்தானுக்கு தடை விதித்தது போல, இதற்கும் செய்ய வேண்டும்.

- இலங்கைக்கு இந்தியாவின் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல், இலங்கைத் தமிழர் நலம் விரும்பும் நாடுகளாகிய இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளையும் இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்க ஆவன செய்ய வேண்டும்.

- அமெரிக்காவின் தீர்மானத்தில் இருந்த ஒவ்வொரு ஷரத்தையும் இந்தியா தீர்மானித்தது போல (நேற்றைய செய்தியில் அமெரிக்க வெளி உறவுத்துறை மத்திய அரசின் முகமூடியை கிழித்து எறிந்தது அனைவரும் அறிந்ததே), இனி வருங்காலத்தில் செய்யாமல், வெளிப்படையாக, உளப்பூர்வமாக இந்த விஷயத்தில் தமிழர்களுக்காக இயங்க வேண்டும்.

- ஐ நா சபையில் இலங்கையின் பொருளாதாரத் தடைக்கு தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

- ஐநா சபையில் இலங்கையில் தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு தமிழர்களிடையே நடத்த தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

மேற்கண்ட காரியங்களையே, இன்றைய நிலையில் அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக, பாமக, ஆகிய பிரதான கட்சிகளும், பலவீனமான குரலில் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசைக் கேட்டு வருகின்றன.

இதே குறிக்கோளுடன் மற்றும் இதே திசையில் , மாணவர்களின் மொத்த சக்தியும் தேர்தலுக்கு முன் செல்லுமேயானால், நிச்சயம் இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு விடி வெள்ளியை எதிர் பார்க்கலாம்.

- டிமிடித் பெட்கோவ்ஸ்கி
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல