திங்கள், 9 டிசம்பர், 2013

நெல்சன் மண்டேலா : வெளிச்சமும் இருளும் (3)

மண்டேலாவும் அவர் இயக்கமும் இடையில் சில காலம் வன்முறை மீது நம்பிக்கை வைத்திருந்தபோதும், பெரும்பாலும் அவர் அகிம்சை கொள்கையையே உயர்த்திப் பிடித்துள்ளார். உலகம் தழுவிய அளவில் மண்டேலா இன்று கொண்டாடப்படுவதற்குக் காரணம் அவருடைய பொருளாதாரக் கொள்கைகளோ ஆட்சிமுறையோ அல்ல, அவரது அகிம்சை வழிமுறையே. எதை அவர் முன்னிறுத்தினாரோ அதன் குறியீடாகவே அவர் இன்று மாறியிருக்கிறார். மாற்றப்பட்டிருக்கிறார். காந்தி, மார்ட்டின் லூதர் கிங் வரிசையில் நெல்சன் மண்டேலாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது இதுவே காரணம்.

ஆப்பிரிக்காவின் முதன்மையான மகன் என்று மண்டேலாவை வருணிக்கிறார் காஸ்ட்ரோ. மண்டேலாவுடன் ரோபன் தீவுக்குச் சென்று பார்வையிட்டார். நீங்களும் மண்டேலாவைப் போல் தனிமைச் சிறையில் இருந்தவர்தானே என்று கேட்கப்பட்டபோது, அவசரமாக மறுத்தார் காஸ்ட்ரோ. நான் இருந்தது இரு ஆண்டுகள் மட்டும்தான். தயவு செய்து என்னை அவரோடு ஒப்பிடாதீர்கள். அவ்வாறு ஒப்பிட்டால் எனக்கு அவமானமாக இருக்கிறது.

மண்டேலா ஆப்பிரிக்காவுக்கோ ஐரோப்பாவுக்கோ சொந்தமானவர் அல்லர், அவர் உலகுக்கு சொந்தமானவர் என்கிறார் மண்டேலாவால் ஈர்க்கப்பட்ட நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், நதின் கார்டிமர்.

1991ம் ஆண்டு காஸ்ட்ரோ கூறியது. ‘நேர்மையான மனிதர் என்பதற்கு உங்களுக்கு ஒரு உதாரணம் தேவைப்பட்டால், நெல்சன் மண்டேலாவை எடுத்துக்கொள்ளலாம். எதற்கும் விட்டுக்கொடுக்காத, துணிச்சலான, அமைதியான, புத்திசாலியான, செயல்வேகம் கொண்ட ஒரு நாயகன் உங்களுக்குத் தேவைப்படுகிறாரா? இதோ மண்டேலா இருக்கிறார். அவரை நேரில் சந்தித்த பிறகு இந்த முடிவுக்கு நான் வந்து சேரவில்லை. பல ஆண்டுகளாக நான் இதுகுறித்து சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். இந்த சகாப்தத்தின் அசாத்தியமான ஒரு அடையாளமாக நான் அவரைக் காண்கிறேன்.’

பதவியைவிட்டு அகன்ற பிறகு துணிச்சலும் துடிதுடிப்பும் மண்டேலாவிடம் ஒட்டிக்கொண்டது. அதிகாரத்தில் இருந்தபோது சாதிக்கமுடியாத விஷயங்களை இப்போது செயல்படுத்தி பார்க்க அவர் விரும்பினார். நெல்சன் மண்டேலா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. ‘46664: எய்ட்ஸுக்காக உங்கள் வாழ்வில் இருந்து ஒரு நிமிடத்தை ஒதுக்குங்கள்’ என்னும் வாசகத்துடன் தொடங்கப்பட்ட பிரசாரம், பரவலான கவனத்தைப் பெற்றது. (466 என்பது ரோபன் தீவுச் சிறையில் மண்டேலாவின் கைதி எண். 64 சிறையிலிருந்த வருடத்தைக் குறிக்கிறது). நான் ஒரு எய்ட்ஸ் நோய் சிகிச்சை ஆதரவாளர் என்னும் வாசகத்தை தனது டி ஷர்ட்டில் அணிந்து பெருமிதத்துடன் வலம் வந்தார். 2005ல் ஒரு கூட்டத்தில், வெடித்துக் கிளம்பிய அழுகைக்கிடையே ஓர் உண்மையை ஒப்புக்கொண்டார். ஆம், என் சொந்த மகன் மக்காதோ, எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டு, இறந்துபோனான். தென் ஆப்பிரிக்கா மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவும் ஒன்று சேர்ந்து எய்ட்ஸை விரட்டியடிக்கவேண்டும்.

தொண்டு செய்வதை தனது முதன்மையான பணியாக மாற்றிக்கொண்டார். புஷ், இராக் மீது தொடுத்த யுத்தத்தை எதிர்த்தார். புஷ்ஷிடம் பேசி தன் வருத்தங்களைத் தெரிவிக்க அவர் விரும்பியபோது, அவர் தொலைபேசிக்குப் பதிலில்லை. உடனே மண்டேலா சீனியர் புஷ்ஷைத் தொடர்பு கொண்டார். உங்கள் மகனிடம் பேச முயன்றேன். அவர் பதிலளிக்கவில்லை. நீங்கள் உங்கள் மகனைக் கொஞ்சம் கண்டித்து வையுங்கள். மகனை ஒரு தந்தையால் கண்டித்து வழிக்குக் கொண்டவரமுடியும் என்று நம்பும் ஓர் அப்பாவி ஆப்பிரிக்கத் தந்தையாக மண்டேலா வெளிப்பட்ட தருணம் இது.

nelson mandela book தனது 89வது பிறந்தநாளின்போது, தி எல்டர்ஸ் என்னும் பெயரில் இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார். ஜிம்மி கார்ட்டர், டெஸ்மான் டுட்டு, கோஃபி அனான் போன்ற மூத்தவர்களோடு அணி சேர்ந்து அரசியல் வழிகாட்டலை நடத்தலாம் என்று திட்டமிட்டார். யுத்த பூமியாக மாறியிருந்த டாஃபருக்கு அமைதி குழு அனுப்புவது, உலக அமைதி குறித்து விவாதிப்பது என்று சில முயற்சிகளை மேற்கொண்டார்.

2009ல் பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, மண்டேலா தனது வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்தார். உலகை மாற்றும் கனவை யாரும் மேற்கொள்ளலாம் என்பதை ஒபாமாவின் வெற்றி உணர்த்துகிறது என்றார். காந்தியும் மண்டேலாவும் தன்னை ஈர்த்த முக்கியத் தலைவர்கள் என்று ஒபாமா முன்னர் கூறியிருந்தார்.

மண்டேலாவின் நோக்கங்களை, கனவுகளை கேள்விக்கு உட்படுத்தமுடியாது. தென் ஆப்பிரிக்கர்கள் சுதந்தர, ஜனநாயக தேசமாக உயிர்த்திருக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். நிறவெறி ஆட்சியை உடைத்து ஜனநாயகத்தை மீட்டுக்கொண்டுவந்ததில் அவர் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனால் அவர் மேற்கொண்ட நடவடிக்கைககளும், அமல்படுத்திய பொருளாதாரத் திட்டங்களும் மண்டேலாவின் நோக்கங்களைச் சிதறடித்தன.

நூற்றாண்டுகால அடிமை வாழ்க்கையை, நூற்றாண்டு கால காலனியாதிக்க விளைவுகளை ஐந்தாண்டு காலத்தில் மாற்றிவிடமுடியாது என்பது நிஜம். மாற்றங்கள் உடனே நிகழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கவேண்டாம் என்று தேர்தல் வாக்குறுதியிலேயே மண்டேலா இதை அழுத்தமாக குறிப்பிட்டிருந்தது நிஜம். தென் ஆப்பிரிக்கா செல்லவேண்டிய பாதை நீண்டது என்பதிலும் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால், மண்டேலா நிர்வாகம் ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் தெளிவாக அரசியல் பாதையை வகுத்துக்கொள்ளவில்லை. கனவுக்கும் செயல்திட்டத்துக்கும் இடையே, கொள்கைக்கும் நடைமுறைக்கும் இடையே, லட்சியத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையே விழுந்துவிட்ட இடைவெளியை இந்த ஐந்தாண்டுகளில் மண்டேலாவால் குறைக்கமுடியவில்லை.

அரசியலில் இருந்து விலகிக்கொள்வதாக 2006ம் ஆண்டு தனது 88வது வயதில் மண்டேலா அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிடுமாறு தென் ஆப்பிரிக்கா அரசாங்கம் அவரை நிர்ப்பந்திப்பதாகவும், அரசாங்கத்தை விமரிசனம் செய்து அவர் சில சமயம் பேசுவதை தடுக்கவே இந்த ஏற்பாடு என்றும் யூகங்கள் எழுந்தன.

தன் வாழ்க்கையின் மூலம், தன் போராட்டங்கள் மூலம், தன் சாதனைகள் மூலம், தன் அரசியல் பங்களிப்புகள் மூலம், ஏன், தன் தவறுகள் மூலமும் தென் ஆப்பிரிக்காவுக்கு, ஆப்பிரிக்காவுக்கு, உலகுக்கு மண்டேலா தெரிவிக்க விரும்பும் செய்தி ஒன்றுதான். ஒரு உயிரி எப்போது முழு முற்றாக விடுதலை பெறுகிறதோ அப்போதுதான் அது மனிதனாகிறது. விடுதலையை யாராலும் கொடுக்கமுடியாது. பேச்சுவார்த்தைகள் மூலம் பெறமுடியாது. போராடித்தான் பெற்றாகவேண்டும். வாழ்க்கை என்பது போராட்டமே!

நெல்சன் மண்டேலா (1918-2013)  இன்று காலை மரணமடைந்தார். 2009ம் ஆண்டு நான் எழுதிய நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாற்றில் இருந்து அவர் நினைவாக ஓர் அத்தியாயம் இங்கே

- மருதன்


தமிழ்பேப்பர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல