வியாழன், 19 டிசம்பர், 2013

பெண் தூதர் கைது விவகாரம்: இந்தியாவின் அதிரடிகளைத் தொடர்ந்து அடிபணிந்தது அமெரிக்கா

விசா மோசடி குற்றத்திற்காக இந்தியப் பெண் துணைத் தூதர் கைது செய்யப் பட்ட விவகாரத்தில் இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கைது விவகாரத்தை மறு ஆய்வு செய்ய இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இருப்பவர் தேவயானி. இவர் விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காகப் போயிருந்தபோது சாலையில்வைத்து இவரைக் கைது செய்த அதிகாரிகள், கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப் பட்ட தேவயானியை ஆடைகளை அவிழ்த்து அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டதாகவும், மேலும் அவரை போதை அடிமைகளுடன் அடைத்து வைத்ததாகவும் தகவல் வெளியானது.

அதனைத் தொடர்ந்து, இரண்டரை லட்சம் டாலர் பிணைப் பத்திரத்தில் ஜாமீனில் வெளி வந்தார் தேவயானி.

இந்தியத் துணைத் தூதரை இவ்வாறு நடத்தியது இந்தியாவையே அவமானம் செய்யும் செயல் என கொந்தளித்த இந்தியா, இது தொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது. ஆனால் தேவயானியின் கைது நடவடிக்கையை நியாயப் படுத்தியது அமெரிக்கா. இதனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் நாட்டில் உள்ள அனைத்து அமெரிக்க துணைத்தூதரகங்களிலும் உள்ள அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் அனைவரும் தங்களது அடையாள அட்டைகளை உடனடியாக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது மத்திய அரசு. மேலும், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு மதுபானங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் இறக்குமதி ஒப்புதல்கள் நிறுத்தப்பட்டன.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டதுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு சலுகை பறிப்பு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.

இந்நிலையில், இந்தியாவின் அதிரடியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து தற்போது இந்திய தூதரக அதிகாரியின் கைது நடவடிக்கையை மறு ஆய்வு செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேரி கார்ப் கூறுகையில், "இந்த விவகாரம் இந்தியாவில் சிக்கலான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். இந்த கைது விவகாரத்தில் பின்பற்றப்பட்டுள்ள நடைமுறைகளை நாங்கள் மறு ஆய்வு செய்து வருகிறோம்.

இது ஒரு சட்டரீதியான நடவடிக்கை என்பதால் இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் தூதரக ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவின் அடிப்படையில் இந்தியாவுடன் தொடர்ந்து ஒத்துழைக்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பாதுகாப்பு அளிக்குமாறு இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளோம். அதன்படி தூதரக விஷயத்தில் வியன்னா உடன்படிக்கையின்படி இந்தியா நடந்து கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்' என்றார்.


Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல