ஞாயிறு, 18 மே, 2014

நாம் உண்ணும் உணவுகள் குறித்த சில கட்டுக்கதைகள்!!!

நம்முடைய உணவு மற்றும் நீராகாரம் குறித்த பல விஷயங்கள் பற்றி பெரியவர்களும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் எவ்வளவோ கூறுவது வழக்கம். இப்படித்தான் சாப்பிட வேண்டும், இந்த இந்த உணவுகளைத் தான் உண்ண வேண்டும், இப்படித் தான் நீரைக் குடிக்க வேண்டும் என்று சிறு வயது முதல் நம்மை அதட்டி, உருட்டி பழக்கப்படுத்தியிருப்பார்கள்.
அவை அனைத்தும் உண்மையல்ல; பெரும்பாலும் கட்டுக் கதைகளே! பரம்பரை பரம்பரையாக இதுப்போன்ற நம்பிக்கைகளைர் பழக்கிவிட்டதால், நாமும் அவற்றை அவ்வளவு எளிதில் விட்டுவிட முடியாது.



ஆனால், அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாகப் பார்க்கும் போது 'இதெல்லாம் சும்மா' என்று தான் தெரிகிறது. உணவுகளின் உண்மை நிலை தெரிந்தால் நீங்களும் அந்த மூடப் பழக்கவழக்கங்களை விட்டொழிக்கலாம். அத்தகைய சில கட்டுக்கதைகளையும், அவற்றின் உண்மை நிலைகளையும் தெரிந்து கொள்வோமா?

கேரட் கண் பார்வையை அதிகரிக்கும்

இது இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் உளவுத் துறை அவிழ்த்துவிட்ட கட்டுக்கதை. பிரிட்டிஷ் பைலட்டுகள் நிறைய கேரட் சாப்பிட்டதால் தான், இருட்டில் கூடப் பறந்து ஜெர்மன் படைகளைத் தாக்க முடிந்ததாம். இப்படிப் பரவிய வதந்தியால் தான் இப்போதும் சில தாய்மார்கள் பார்வையில் பிரச்சனை உள்ள தங்கள் குழந்தைகளுக்கு கேரட் ஜூஸ் கொடுக்கிறார்கள். இது தவறு. உண்மையில் பிரிட்டிஷ் பைலட்டுகளுக்கு உதவியவை ராடார்கள் தான்; கேரட்டுகள் அல்ல!

பசலைக் கீரை உடம்பை வலுவாக்கும்

ஒரு சிறு எழுத்துப் பிழையால் இந்தப் பசலைக் கீரையின் இரும்புச்சத்து 'அதிகரித்து', புகழ்பெற்ற பாப்பாயி என்ற கார்ட்டூன் கேரக்டர் இதைச் சாப்பிட்டு தான் பலசாலியானது என்ற அளவுக்கு ஆகிவிட்டது. அரை டின் பசலைக் கீரையில் 3.4 கிராம் இரும்புச்சத்து உள்ளது என்பதற்குப் பதில் 34 கிராம் என்று யாரோ எழுதியதால் வந்த வினை இது. உண்மையில் இதைவிட மற்ற கீரைகளில் இரும்புச்சத்து அதிகம்.

காபி உடல் நலத்துக்குக் கெடுதல்

காபி குடித்தால் நரம்பு மண்டலம் பாதிக்கும் என்றும், அது நம் தோலுக்குக் கெடுதல் என்றும் சொல்லப்படுவதுண்டு. ஆனால் ஒரு ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வின் படி, காபி குடிக்கும் பெண்களுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் குறைவு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், புற்றுநோயிலிருந்தும் காபி நம்மைக் காக்கிறது. ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கப் காபி தாராளமாகக் குடிக்கலாம்.

ஃப்ரெஷ்ஷான உணவே சிறந்தது

குளிரூட்டப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை விட ஃப்ரெஷ்ஷாகக் கிடைப்பவையே சிறந்தது என்று மக்கள் நம்பி வருகின்றனர். உண்மையில் அவற்றை சிறு துண்டுகளாக வெட்டி, பதப்படுத்தும் போது தான் அவற்றின் சத்துக்கள் அப்படியே இருக்கும். மாறாக, பழங்களும் காய்கறிகளும் வெட்ட வெளியில் வைக்கப்படுவதால் காற்று, ஈரப்பதம் மற்றும் அழுக்கு ஆகியவற்றால் அவற்றின் சத்து குறைகிறது.

முட்டை உடல் கொழுப்பை அதிகரிக்கும்

முட்டையில் கொழுப்பு அதிகமாக உள்ளதால் இதய நோய்கள் வரும் என்று 50 ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானிகள் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்புகளின் படி, முட்டையில் கொழுப்பு குறைவு தான் என்றும், அதில் வைட்டமின் ஏ மற்றும் டி அதிகம் இருப்பதால், உடல் எடை அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

வாழைப்பழம் நம்மை குண்டாக்கும்

வாழைப்பழம் நிறைய சாப்பிட்டால் குண்டாகிவிடுவோம் என்று பலரும் நம்பி வந்தனர். இதுவும் ஒரு கட்டுக்கதையே! வாழைப்பழத்தில் அரை கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளதால், அதை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

சாக்லெட் முகப்பருவை ஏற்படுத்தும்

சாக்லெட் சாப்பிட்டால் முகப்பருக்கள் வரும் என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால் இதற்கான எந்தவிதமான மருத்துவ ஆதாரமும் கிடையாது. பிறகென்ன? எவ்வளவு சாக்லெட்னாலும் சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க!

இயற்கை உணவே நல்லது

இது எல்லாவற்றுக்கும் பொருந்தாது. சில உணவுகளுடன் செயற்கைப் பொருட்களைச் சேர்ப்பது தான் நல்லது. மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டால் ஒழிய, செயற்கை உணவுகளை உட்கொள்வதில் தவறில்லை.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல