ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

எம்ஜிஆர் 100 | 12 - 15


‘மதுரை வீரன்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் மோதுகிறார் சின்னப்பா தேவர்.

எம்ஜிஆர் 100 | 12 - நட்புக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த மரியாதை!

M.G.R. நடித்த படங்களில் ஒன்று ‘சாலிவாஹனன்’. இந்தப் படத்தில் அவருக்கு சிறிய வேடம்தான். படத்தின் கதாநாயக நடிகருடன் எம்.ஜி.ஆருக்கு கத்தி சண்டை காட்சி. எம்.ஜி.ஆர். முறையாக வாள் சண்டை, சிலம்பம், குதிரையேற்றம் போன்றவற்றை கற்றவர். வாள் வீச்சில் ஆக்ரோஷமாக சண்டையிடுவதிலாகட்டும், சில நேரங்களில் எதிராளியை நீ எனக்கு சமமல்ல என்பதுபோல, அலட்சியமாக எதிர்கொள்வதை காட்டும் வகையில் சிரித்துக் கொண்டே ஸ்டைலாக வாள் வீசுவதிலாகட்டும், எம்.ஜி.ஆருக்கு நிகர் அவர்தான். ‘சாலிவாஹனன்’ படத்தின் படப்பிடிப்பில் கதாநாயக நடிகரைவிட எம்.ஜி.ஆர். சிறப்பாக கத்தி சண்டை காட்சியில் நடித்தார்.



அவரது வேகத்துக்கு கதாநாயகனாக நடித்த வரால் ஈடு கொடுக்க முடியவில்லை. இது குறித்து இயக்குநரிடம் அவர் தரப்பில் புகார் செய்யப்பட்டது. படத்தின் இயக்குநர் கதாநாயகனுக்கு ஆதரவாகவே இருந்தார். எம்.ஜி.ஆரின் வாள் வீச்சு வேகத்தை குறைத்துக் கொள்ளும்படி கூறியதுடன், ஏற்கெனவே, அவர் நடித்த சில காட்சிகளும் ‘கட்’ செய்யப்பட்டன. இதுபற்றி, உடன் நடிக்கும் ஸ்டன்ட் நடிகரிடம் எம்.ஜி.ஆர். தனது நிலையைச் சொல்லி வருத்தப் பட்டார். அந்த ஸ்டன்ட் நடிகரும் ‘‘உங்களிடம் திறமை இருக்கிறது, கண்டிப்பாக முன்னுக்கு வருவீர்கள், வருந்தாதீர்கள்’’ என்று அன்பாக பேசி எம்.ஜி.ஆருக்கு ஆறுதல் கூறினார்.

அந்த ஸ்டன்ட் நடிகர் கூறியபடி அடுத்த சில ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்தார். படத்தின் பெயர் ‘ராஜகுமாரி’. பல போராட்டங்களுக்குப் பிறகுதான் கதாநாயகன் வாய்ப்பு அவருக்கு வந்தது. அந்த நிலையிலும் தனக்கு வாய்ப்பு கிடைத்ததே போதும் என்று இல்லாமல், சிறிய வேடங்களில் தலைகாட்டி வந்த, தனக்கு ஆறுதல் சொன்ன ஸ்டன்ட் மாஸ் டருக்கும் ‘ராஜகுமாரி’ படத்தில் வாதாடி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். தொடர்ந்து தன் படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கச் செய்தார். அந்த ஸ்டண்ட் நடிகர்... ‘சாண்டோ’ சின்னப்பா தேவர். எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுக்க அவர் தயாரித்த முதல் படம் ‘தாய்க்குப் பின் தாரம்’. முதல் படமே அபார வெற்றி. ஸ்டன்ட் நடிகராக இருந்த சின்னப்பா தேவரை பட முதலாளியாக உயர்த்தினார் எம்.ஜி.ஆர்.
சின்னப்பா தேவர் இறுதி ஊர்வலத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர். நடந்து செல்கிறார்.

‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கில் தனக்காக வேறு ஒருவரின் குரலை ‘டப்’ செய்து தேவர் வெளியிட்டது தொடர்பாக, இடையில் சில காலம் எம்.ஜி.ஆருக்கும் சின்னப்பா தேவருக்கும் ஊடல் ஏற்பட்டாலும் அதனால் அவர்களது நட்பு பழுதுபட்டதில்லை. சொல்லப்போனால், ஆழ்ந்த நட்பு இருக்கும் இடத்தில்தான் உரிமையுடன் கூடிய ஊடலும் எழும். புரிதல் ஏற்பட்டு அதன்பின் ஏற்படும் கூடல் மேலும் நெருக்கத்தை அதிகரிக்கும். அப்படி, தேவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட நெருக்கம் கடைசிவரை பிரிக்க முடியாததாக இருந்தது. அதற்கு பின் எம்.ஜி.ஆரை வைத்து ‘தாய் சொல்லை தட்டாதே’, ‘தாயைக் காத்த தனயன்’, ‘தர்மம் தலைகாக்கும்’ என்று பல வெற்றிப் படங்களை தேவர் எடுத்தார்.

1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் நடிகர் எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். துப்பாக்கித் தோட்டா தொண்டையை துளைத்துச் சென்றது. மறுபிறப்பெடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரது திரையுலக வாழ்வே முடிந்தது என்று கூறினர். எம்.ஜி.ஆருக்கு மீண்டும் பேச்சுத் திறன் வருமா? என்று நிச்சய மில்லாத நிலை. எம்.ஜி.ஆரை மருத்துவமனை யில் சந்தித்து தான் அடுத்து எடுக்கப் போகும் ‘விவசாயி’ படத்துக்கு அட்வான்ஸ் தொகையை எம்.ஜி.ஆரின் கையில் தேவர் கொடுக்கும் அளவுக்கு இருவரின் நட்பு பரஸ்பர நம்பிக்கையுடனும் வலிமையாகவும் இருந்தது.

‘‘எம்.ஜி.ஆர். மீண்டும் நடிப்பது நிச்சயம் இல் லாத நிலையில், அவருக்கு பணம் கொடுக்க வேண் டுமா?’’என்று சிலர் கேட்டபோது, உறுதியான குரலில் தேவர் கூறினார்... ‘அவர் (எம்.ஜி.ஆர்) ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் நடித்த பிறகுதான் நாம் முழுசா சாப்பிட்டோம். அவரால் நடிக்க முடியாவிட்டால் செலவு கணக்கில் வைத்துக்கொள்கிறேன் போ..’
‘தாய்க்கு தலைமகன்’ படப்பிடிப்பில் சின்னப்பா தேவரை அன்போடு முத்தமிடுகிறார் எம்.ஜி.ஆர்.

மருதமலை முருகன் கோயிலில் தனது சொந்த செலவில் மின்விளக்கு வசதி செய்த தேவர், அதை தான் மிகவும் மதிக்கும் அன்பு நண்பரான எம்.ஜி.ஆரின் கையாலேயே தொடங்கி வைக்கச் செய்தார். அப்போது எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்தார். இது எம்.ஜி.ஆரின் கட்சி கொள்கைக்கு முரணாயிற்றே என்று சலசலப்பு எழுந்தது. எம்.ஜி.ஆர். விளக்கம் அளித்தார். ‘‘நானோ நான் சார்ந்துள்ள தி.மு.கழகமோ கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. நம்மை மீறிய சக்தி இருப்பதை நம்புகிறேன். தேவர் என் மீது கொண்டுள்ள அன்புக்காகவும் நட்புக்காகவும் விழாவில் கலந்து கொண்டேன்’’ என்று கூறினார். சர்ச்சைகள் ஓய்ந்தன.

தேவர் மறைந்த போது எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முதல் அமைச்சர். கோவை சென்று தனது நண்பரின் இறுதி ஊர்வலத் தில் கலந்து கொண்டு நடந்தே சென்றார். இருவருக் கும் இடையிலான நட்பு, நங்கூரம் பாய்ச்சிய கப்பலாய் உறுதியாக இருந்ததற்கு மட்டுமல்ல; நட்புக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த மரியாதைக்கும் சாட்சி அது.

எம்.ஜி.ஆரை வைத்து அதிக படங்களை தயாரித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் சின்னப்பா தேவர். இருவர் கூட்டணியில் ‘தாய்க்குப் பின் தாரம்’ முதல் ‘நல்ல நேரம்’ வரை மொத்தம் 16 படங்கள் வெளியாயின. தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா நடித்த படம் ‘முகராசி’. பல படங்களின் படப் பிடிப்பு, அரசியல் என்று பரபரப்பாக இருந்த எம்.ஜி.ஆரை வைத்து 12 நாட்களில் எடுக்கப்பட்டு 100 நாள் ஓடிய வெற்றி படம் என்ற சாதனை படைத்தது ‘முகராசி’.


vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
எம்.ஜி.ஆரை மாலை அணிவித்து வரவேற்கிறார் கவியரசு கண்ணதாசன்.

எம்ஜிஆர் 100 | 13 - கண்ணதாசன் வர்ணித்த ஆணழகன்

M.G.R. -க்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.

எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு பாடல். அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல்.அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.

அப்போது ஒரு கவிஞர் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனாலும், அந்தக் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம்.ஜி.ஆர். கூறிய தில்லை. எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று அந்த கவிஞரும் சொன்ன தில்லை. மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர் களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங் கினர். அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறவில்லை.

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மேலே குறிப் பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் அந்தக் கவிஞரை விட்டே அந்த பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது. படக்குழுவினர் கவிஞரி டம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிக வும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.

அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத

‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…’

அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ண தாசன். அவர் கடுமையாக தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.

எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமான ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில்,

‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’

என்ற இனிமை யான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகி யைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்

‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’

என்று வரும்.

கவிஞர் கண்ணதாசனால் வர்ணிக்கப்பட்ட கட்டான கட்டழகு கண்ணன் இங்கே தோன்றுவது ‘பல்லாண்டு வாழ்க’ படத்துக்காக.

பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’

என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன். நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார்.

கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,

‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.

நட்பு ஒருபுறம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.

ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார். இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.

எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார். ‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார். எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.

‘அரசவைக் கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன், ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
விழா ஒன்றில் எம்.ஜி.ஆருடன் கண்ணதாசன், பி.சுசீலா, எம்.எஸ். விஸ்வநாதன்.

அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக் காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது. கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார். கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.

எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர். என்றாலும் கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும்.

சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.

‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’

என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.

எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…

‘தேக்கு மரம் உடலைத் தந்தது

சின்ன யானை நடையைத் தந்தது

பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது

பொன்னல்லவோ நிறத்தை தந்தது’

இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.

எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்.

- தொடரும்...

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

 என்.டி.ஆர் - எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆர் 100 | 14 - எம்.ஜி.ஆரும் என்.டி.ஆரும்!

M.G.R. மீது மிகவும் மதிப்பு கொண்டவர் என்.டி.ராமராவ். இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டு பேரும் தங்கள் மொழி படவுலகில் சூப்பர் ஸ்டார்களாக விளங்கியவர்கள். இருவரும் அரசியலில் ஈடுபட்டு தனிக் கட்சி தொடங்கி முதல் அமைச்சரானவர்கள். எம்.ஜி.ஆர் - என்.டி.ஆர் என்று அழைக்கும்போது ஒலி கூட ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கும்.

எம்.ஜி.ஆர் மீது என்.டி.ராமராவ் வைத்திருந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் உதாரணமாக ஒரு சம்பவம். எம்.ஜி.ஆரை வைத்து ‘குமரிக் கோட்டம்’, ‘உழைக்கும் கரங்கள்’ படங்களை எடுத்தவர் கோவை செழியன். அதிமுகவில் இருந்தவர். அவரை முதலாளி என்று செல்லமாக அழைப்பார் எம்.ஜி.ஆர்.

கோவை செழியன் தெலுங்கிலும் படங்கள் தயாரித்துள்ளார். தெலுங்கில் என்.டி.ராமராவை வைத்து படம் தயாரிக்க விரும்பினார். ராமராவ் அப்போது மிகவும் பிஸியாக இருந்த நேரம். அவருடன் கோவை செழியனுக்கு நெருக்கமும் கிடையாது. தான் தயாரிக்க இருக்கும் படத்துக்கு திடீரென்று கேட்டால் ராமராவ் ‘கால்ஷீட்’ கொடுப்பாரா என்று கோவை செழியனுக்கு சந்தேகம்.
திறந்த வேனில் எம்.ஜி.ஆர் பிரசாரம் செய்கிறார். அருகே அவரது மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன்.
எம்.ஜி.ஆரை சந்தித்தார். என்.டி.ராமராவை வைத்து படம் தயாரிக்க விரும்பும் தனது எண் ணத்தையும் அதற்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உடனே, ராமராவுடன் தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆர். பேசினார். படத் தயாரிப்பு சம்பந்தமாக ராமராவைச் சென்று சந்திக்கும்படி செழியனிடம் கூறினார்.

அதன்படி, ஐதராபாத் சென்று ராம ராவை சந்தித்தார் செழியன். ‘எம்.ஜி.ஆர். சொல்லி வந்திருக்கிறேன். உங்களை வைத்து படமெடுக்க...’ என்று செழியன் சொல்லி முடிக்கும் முன்பே, சிரித்துக் கொண்டே அவரை கையமர்த்திவிட்டு என்.டி.ராமராவ் கேட்ட கேள்வி, ‘‘ஷூட்டிங்கை எப்ப வெச்சுக்கலாம்?’’

எம்.ஜி.ஆருக்கு என்.டி.ராமராவ் கொடுத்த மதிப்புக்கும் மரியாதைக்கும் இது சான்று.

என்.டி.ராமராவ் தனிக் கட்சி தொடங்கி முதல்வராகும் முன்பே தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்து முதல்வ ராகிவிட்டார். அவரது பாணியில் தானும் தனிக் கட்சி தொடங்க முடிவு செய்தார் ராமராவ். தனக்கு முன்னோடியாக விளங்கும் எம்.ஜி.ஆரிடம் ஆலோசனையும் ஆசியும் கேட்பதற் காக சென்னை வந்து எம்.ஜி.ஆரை சந்தித்தார்.

அவருக்கு வாழ்த்து தெரிவித்த எம்.ஜி.ஆர். கேட்ட கேள்வி ‘‘கட்சிக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க?’’

‘‘தெலுங்கு ராஜ்யம்’’... ராமராவின் பதில்.

எம்.ஜி.ஆர். சொன்னார். ‘‘தெலுங்கு தேசம் என்று பெயர் சூட்டுங்கள். பொருத்தமாக இருக்கும்.’’

அதை ராமராவ் ஏற்றுக்கொண்டார்.

‘‘எம்.ஜி.ஆர் எனக்கு வழிகாட்டி. அண்ணனைப் போன்றவர் அவரைப் பின்பற்றியே அரசியலுக்கு வந்தேன்’’ என்று அறிவித்த ராமராவ், தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கினார். தமிழகத்தில் தேர் தல் பிரசாரங்களில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்யும் பாணியை முதலில் ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரைப் போலவே ஆந்திரா விலும் திறந்த வேனில் சென்று சூறாவளி பிரசாரம் செய்த ராமராவ், மகத்தான வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தார்.

தெலுங்கு கங்கை திட்டத் தொடக்க விழாவில் என்.டி.ராமராவ், எம்.ஜி.ஆர்., இந்திரா காந்தி.

எம்.ஜி.ஆரிடம் ஆசி பெறுவதற்காக மீண்டும் சென்னை வந்து அவரை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து பெற்றார். எம்.ஜி.ஆரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, ராமராவுக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் தனது வீட்டில் தடபுடல் விருந்தளித்தார்.

எம்.ஜி.ஆர். எதையுமே நுணுக்கமாகவும் தீர்க்க தரிசனத்தோடும் சிந்திக்கக் கூடியவர். விருந்தின்போதே சென்னை நகரின் தண்ணீர் பிரச்சினையையும் ஆந்திராவில் கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட் டால் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்றும் ராம ராவிடம் கூறினார். எம்.ஜி.ஆர். சொன்னால் ராமராவிடம் மறுப்பேது? அதன் தொடர்ச்சி யாக உருவானதுதான் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் தெலுங்கு கங்கைத் திட்டம். 1983-ம் ஆண்டு ஜனவரியில் ஆந்திர முதல்வராக ராமராவ் பதவியேற்றார். அடுத்த 4 மாதங் களில் தெலுங்கு கங்கை திட்டம் தொடக்க விழா நடந்தது.

1983-ம் ஆண்டு மே 25-ம் தேதி சென்னையில் நடந்த பிரம்மாண்டமான தெலுங்கு கங்கை திட்ட தொடக்க விழாவில் பிரதமர் இந்திரா காந்தி கலந்து கொண்டார். திட்டத்தை செயல் படுத்த தமிழக அரசின் பங்கில் முதல் தவணைக்கான காசோலையை இந்திரா காந்தி மூலம் ராமராவிடம் கொடுக்கச் செய்தார் எம்.ஜி.ஆர்.

1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தபோது என்.டி.ராமராவ் சென்னை வந்து கலங்கிய கண்களுடன் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள்...

‘எம்.ஜி.ஆர். மறைவின் மூலம் எனது குருநாதரை இழந்துவிட்டேன்’.

எம்.ஜி.ஆர். எதையுமே நுணுக்கமாகவும் தீர்க்க தரிசனத்தோடும் சிந்திக்கக் கூடியவர்.

தமிழில் எம்.ஜி.ஆர். நடித்த பல ரீமேக் படங்கள் தெலுங்கில் என்.டி.ராமராவ் நடித்தவை. ராமராவ் நடித்த ‘ராமுடு பீமுடு’ படம்தான் தமிழில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனது. 7 சென்டர்களில் வெள்ளி விழா கொண்டாடி புதிய சாதனை படைத்தது. எம்.ஜி.ஆர். திரையுலகை விட்டு விலகும் வரை ‘எங்க வீட்டுப் பிள்ளை’யின் சாதனை முறியடிக்கப்படவில்லை.


vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
1984-ம் ஆண்டு சென்னை வந்த கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேயை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். வரவேற்கிறார்.
எம்ஜிஆர் 100 | 15 - நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்!


M.G.R. பற்றி பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. அவர் நல்லவர். மனிதாபிமானம் மிக்கவர். என்றாலும் அரசு நிர்வாகத்தில் அவர் அத்தனை சிறப்பாக செயல்படவில்லை என்று கூறப்படுவது உண்டு. ஆனால், முதல்வராக இருந்தபோது நிர்வாகத்தில் எவ்வளவோ சிக்கலான விவகாரங்களுக்கும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கும் தனக்கே உரிய மதிநுட்பத்தோடு காதும் காதும் வைத்தது போல கச்சிதமாக தீர்வு கண்டவர் எம்.ஜி.ஆர்.

காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி டெல்லியில் விவசாயிகள் இரண்டு நாட்கள் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தியுள்ளனர். கர்நாடகாவுக்கும் தமிழகத்துக் கும் காவிரிப் பிரச்சினை இன்று நேற்றல்ல; காலம் காலமாக இருந்து வரும் ஒன்று.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் குறுவை பயிரிடும்போதுதான் வழக்கமாக காவிரி தண்ணீர் பிரச்சினை தலைதூக்கும். ‘குறுவை’ பெயருக்கேற்றபடி குறுகிய காலப் பயிர். எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போதும் தண்ணீர் இல்லாமல் குறுவை கருகும் அபாயம் ஏற்பட்டது. அப்போது, கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அவருடன் எம்.ஜி.ஆர். உடனடியாக பேச முடியாத நிலை.

அந்த நேரத்தில் கர்நாடகாவில் கல்வி அமைச் சராக இருந்தவர் ரகுபதி. எம்.ஜி.ஆருக்கு நெருங் கிய நண்பர். ரகுபதியின் தாயார் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஒரு நாள் காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூ ருக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். புறப்பட்டார். அவரு டன் இரண்டு அதிகாரிகள் மட்டுமே சென்றனர். பெங்களூர் சென்ற எம்.ஜி.ஆர்., கர்நாடகா அமைச்சர் ரகுபதியை தொடர்பு கொண்டு விமான நிலையத்துக்கு வரச் சொன்னார்.
‘இதயக்கனி’ படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பில் கூடியிருக்கும் மக்களை பார்த்து கையசைக்கிறார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் திடீர் வருகையும் தன்னை வரச் சொல்வதன் காரணமும் புரியாமல் பரபரப்புடன் பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ரகுபதி, எம்.ஜி.ஆரை வரவேற்றார். தன்னுடன் வந்த தமிழக அதிகாரிகளை அரசு காரில் செல்லச் சொல்லிவிட்டு, எம்.ஜி.ஆர். மட்டும் ரகுபதியின் காரில் ஏறிக் கொண்டார். நேராக ரகுபதியின் வீட்டுக்கே காரை விடச் சொன்னார்.

ரகுபதியுடன் சாதாரணமாக பேசிக் கொண்டு வந்தாரே தவிர, விவரம் எதுவும் சொல்லவில்லை. அது காலை நேரம். தங்கள் வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆரைக் கண்ட ரகுபதியின் தாய் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்து சிற்றுண்டி பரிமாறினார். எம்.ஜி.ஆர். சாப்பிட்டு முடித்தார். சாப்பாட்டின்போதும் சரி, சாப்பிட்டு முடித்த பிறகும் சரி, அருகே வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எம்.ஜி.ஆர். குடிக்கவே இல்லை. ‘ஏன் தண்ணீரை குடிக்கவே இல்லை? வேண்டாமா?’ என்று ரகுபதியின் தாய் கேட்டார்.

அதை எம்.ஜி.ஆர். பிடித்துக் கொண்டார். ரகுபதியை பார்த்து சிரித்துக் கொண்டே, ‘‘தண்ணீர் வேண்டும்தான். ஆனால், உங்கள் மகன் கொடுக்க மாட்டேன் என்கிறாரே? அப்புறம் நான் எப்படி தண்ணீர் குடிப்பது?’’ என்று கேட்டார். ரகுபதிக்கு பொறி தட்டியது. எம்.ஜி.ஆர். தனியாக வந்த நோக்கத்தை புரிந்து கொண்டார். தன் கையாலேயே எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுத்து உபசரித்ததுடன் காரியத்தில் இறங்கினார்.

முன்னாள் கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவுடன் எம்.ஜி.ஆர்.  

பிரதமர் தேவகவுடாதான் அப்போது, கர்நாடகாவின் பொதுப்பணித்துறை அமைச்சர். அவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்த ரகுபதி உடனடியாக வரச் சொன்னார். அங்கிருந்து மூவரும் மருத்துவமனையில் இருந்த ராம கிருஷ்ண ஹெக்டேவை பார்க்கச் சென்றனர்.

அங்கே, பிரச்சினையை எப்படி சமாளிப்பது, கர்நாடகாவில் தண்ணீர் இருப்பு, இருக்கும் நீரை இரு மாநிலங்களும் பாதிக்காத வகையில் பகிர்ந்து கொள்வது ஆகியவை குறித்து சிறிது நேரத்தில் விவாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு விளம்பரம் இல்லாமல் தண்ணீர் விட முடிவு செய்யப்பட்டது.

உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் ராம கிருஷ்ண ஹெக்டேவை எம்.ஜி.ஆர். பார்த்து நலம் விசாரித்தார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், இந்த சந்திப்பின் நோக்கமே வேறு. சத்தமே இல்லாமல், தமிழகத்தின் கடைமடைப் பகுதிக்கு காவிரி தண்ணீரை எம்.ஜி.ஆர். கொண்டு வந்து விட்டார்.

படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், வியாபாரி, ஊழியர், அதிகாரிகள், விஐபிக்கள் என்று பல தளங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் உண்டு. இந்த பிரிவினரில் சதவீதம் மாறலாமே தவிர, எல்லாத் தரப்பிலும் ரசிகர்களை எம்.ஜி.ஆர். பெற்றிருந்தார். அந்த விஐபிக்களில் ஒருவர் கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவ். தன்னை எம்.ஜி.ஆர். ரசிகர் என்று பகிரங்கமாக அறிவித்தவர் அவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தில் இடம் பெற்ற

‘ஒன்றும் அறியாத பெண்ணோ...’

பாடல் காட்சி கர்நாடக மாநிலம் ‘கூர்க்’கில் உள்ள குண்டுராவுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில்தான் படமாக்கப்பட்டது. குண்டுராவிடமும் ஒருமுறை எம்.ஜி.ஆரே பேசி விளம்பரமே இல்லாமல் காவிரியில் தண்ணீர் விடச் செய்தார் .

எம்.ஜி.ஆர். நடித்த ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் பல காட்சிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூர், மைசூர் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டன. படத்தில்

‘இதுதான் முதல் ராத்திரி... அன்புக் காதலி என்னை ஆதரி...’

என்ற இனிமையான டூயட் இடம்பெறும். எம்.ஜி.ஆரை பார்த்து நாயகி பாடுவார்...

‘அடிமை இந்த சுந்தரி.... என்னை வென்றவன் ராஜதந்திரி...’

படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், விஐபி என்று பல தளங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் உண்டு.

1975-ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’. சென்னையில் நடந்த இதன் வெற்றி விழாவில் என்.டி.ராமராவ், சவுந்தரா கைலாசம், பாலச்சந்தர், முக்தா சீனிவாசன், சவுகார் ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர். ‘மற்ற நடிகர்களின் பல படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். படங்கள் மூலம் அரசுக்கு அதிக வரி கிடைக்கிறது. இதன் மூலம் அரசாங்கத்தின் நண்பராக எம்.ஜி.ஆர் விளங்குகிறார்’’ என்று விழாவில் முக்தா சீனிவாசன் பாராட்டிப் பேசினார்.

- தொடரும்...

படம் உதவி: ஞானம்
தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல