படையல் படையலாய்
படைத்துத் தள்ளுகிறாய்
பட்டினி கிடக்கும்
பரம ஏழைக்கு
ஓர் பிடியேனும்
உணவிட மறுக்கிறாய்
பணக்கார நண்பர்களுக்கு
தொகை தொகையாய்
தூக்கி எறிகிறாய்
கரம் நீட்டி காசு கேட்கும்
கஸ்டப்பட்ட ஏழைக்கு
கால் பைசாவை
போட்டு விட தவிக்கிறாய்
ஆடையே கேட்காத
ஆண்டவனுக்கு
அற்புதமான ஆடை
அன்பளிப்பு செய்கிறாய்
உடுத்திய ஆடை தவிர
மறு ஆடை இன்றி
மனம் கலங்கும் மனிதர்க்கு
கந்தலாடையேனும்
கட்டிக் கொள்ள கொடுத்தாயா?
உன்னால்
உற்பத்தி செய்ய முடியும்
சிலையை மட்டுமே
இறைவனை அல்ல
உலகையே
ஓர் கணத்தில்
உலா வருபவன்
உலா வரத்தானே
உருவாக்கினாய் தேர்
ஊனற்ற ஒருவனை
உன் வண்டியேற்றிட
உள்ளம் மறப்பதேன்
காசு கையில் இருப்பதால்
கடவுள் கோபுரத்தை
கட்டிக் கொடுப்பாய்
கடவுள் உனக்குள்
கோபுரம் கட்டிட
எதை கொடுப்பாய்
மரங்களும் நதிகளும்
கடல்களும் நிலங்களும்
இறைவன் இறைமைக்குள்
தங்கம் விளைவதும்
தங்கமகன் அவன்
தந்திட்ட பூமியில்தான்
அவனில் சொத்தெடுத்து
அவனுக்கே கொடுத்து
என் சொத்தென்று
இடுகிறாய் பெயரை
பாவம் நீயென
பகவான் சிரிப்பான்
மாலைகளை
மகானுக்கே சூடு
உனக்கு சூடிட
ஓடித் திரிகையில்தான்
தடக்கி விழுகிறாய்
பணமெனும் நெருப்பினால் உன்
பாவங்களை கொழுத்தி விடு
உன் சடலத்தின் மீது
போடப்படும் பூக்களெல்லாம்
மாறிடும் மாலையாய்
இன்னும் நீ
இதே வழி நடந்தால்
இறந்த பின் உனக்கு
இடப்படும் பூக்களும்
மாறிவிடும் கற்களாய்
யோ. புரட்சி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக