திங்கள், 12 ஏப்ரல், 2010

மலரத்டதுடிக்கும் மொட்டுக்கள்

வானத்தில் இருந்து வையகம் எழுந்து புனித ஆவியே வருக!ஞானத்தின் ஒளிளை மனதினில் ஏற்று மாசற்ற அன்பே வருக!

உயிருக்கு உயிரே வாழ்வுக்கு வாழ்வே உணமையின் வடிவே வருக!

பயிருக்கு மழையே பார்வையின் ஒளியே பரமனின் அருளே வருக!...


அந்தப் பாடசாலையின் காலைக் கூட்டத்தில் மாணவ மணிகள் கிறிஸ்தவ கீதத்தை இனிமையாக இசைத்துக் கொண்டிருந்தார்கள். நான் அந்த மாணவர்களையும், அதிபர், ஆசிரியர்களையும், ஒரு முறை நோட்டம் விடுகின்றேன். எல்லாமே புதிய முகங்கள், நான் இது வரை சந்தித்திராத ஒரு புதிய சூழலில் இப்போது நின்று கொண்டிருக்கின்றேன்.

இது கிறிஸ்தவ மாணவர்கள் அதிகளவில் பயில்கின்ற பாடசாலை. நான் இந்து சமயத்தைச் சார்ந்தவனாக இருந்து கொண்டிருக்கின்றேன். இன, மத, பேதமின்றி அறிவுப் பசியைத் தீர்க்க வருகின்ற அனைத்து மாணவர்களையும் சமமாக மதித்து அவர்களுக்கு கல்வி அறிவைப் புகட்டுவதே என் போன்ற ஆசிரியர்களின் கடமையாகும்.



மாணவர்கள் பாடசாலைக் கீதம், தேசிய கீதம் ஆகியவற்றை பாடி முடித்த பின் அதிபர் காலைக் கூடத்திலே மாணவர்களுக்கான அறிவுரைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றார்.

அதிபரின் உரையில் என்னைப் பற்றியும் சில வார்த்தைகளைக் கூறினார். ‘இந்தப் புதிய ஆசிரியர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

இப்போது எமது கிராமத்திற்கு ஆசிரியராக சேவை செய்ய வந்திருக்கின்றார். இவரின் சேவையின் மூலம் எமது கிராமத்தின் ஏழை மாணவர்களாகிய நீங்கள் நன்மை அடைய வேண்டும் என்பதே எனது ஆவலாகும்’ என்றார் அதிபர்.

காலைக் கூட்டம் முடிந்ததும் மாணவர்கள் வரிசையாக தங்கள் வகுப்பறைக்குச் செல்லத் தொடங்கினார்கள்.

‘தம்பி இந்தக் கதிரையில் உட்காருங்கள்’ என்று அதிபர் கூறியதும் நானும் கதிரையில் அமர்ந்து கொள்கின்றேன். நான் எனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டதும், அதிபர் என்னைப் பார்த்துச் சொன்னார்.

‘தம்பி இந்தக் கிராமத்துப் பிள்ளைகள் மிகவும் வறியவர்கள். ஆனால் ஆசிரியர்களை நன்கு மதிப்பார்கள். இவர்களுக்குச் சேவை செய்வது எமக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். நீங்களும் இந்தப் பிள்ளைகளுக்கு உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.

‘சேர் என்னால முடிஞ்ச வரைக்கும் நான் சேவை செய்வேன்’ என்று கூறியதும் அதிபர் எனது நேர சூசியை கையளிக்கின்றார். அதைப் பெற்றுக் கொண்ட நான் ஐந்தாம் தர மாணவர்கள் இருக்கும் வகுப்பறையை நோக்கிச் செல்லுகின்றேன்.

‘குட் மோர்னிங் சேர்’ எல்லா மாணவர்களும் எழுந்து நின்று எனக்கு காலை வணக்கம் சொன்னதும் பதிலுக்கு நானும் ‘குட் மோர்னிங் சில்ரன் சிற்டவுன்’ எனச் சொன்னதும் அவர்கள் அமர்ந்து கொள்கின்றார்கள்.

என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்த பின் அவர்களின் பெயர் விபரங்களைக் கேட்டு அறிந்து கொள்ளுகின்றேன். முதலில் தமிழ் பாடம் தொடங்கியதும் மாணவர்களை ஒவ்வொருவராக வாசிக்கும்படி வேண்டினேன். எல்லா மாணவர்களும் வாசித்து முடித்த பின் அவர்களை ஓரளவுக்கு இனங்கண்டு கொண்டேன். இது ஆரம்பம் தானே! போகப்போக எல்லாம் சரியாகிவிடும் என எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

நான் இந்தப் பாடசாலைக்கு வந்து இரு வாரங்கள் கடந்து விட்டன. மாணவர்கள் பற்றி, அவர்களின் சூழல் நிலைமை, அறிவு மட்டம் என்பவை பற்றி ஓரளவு அறிந்து கொண்டேன்.

ஐந்தாம் தர மாணவர்கள் இம்முறை ‘ஸ்கொலசிப் சோதனை’ எழுதப் போகின்றார்கள். இந்த வகுப்பில் உள்ளவர்களில் யேசுதாஸ், விக்டர், அன்ரன், சாந்தனி, மரியாள் ஆகியோர் நன்றாகப் படிக்கக் கூடியவர்கள். ஆனால் அதற்கான பயிற்சிப் புத்தகம் வாங்குவதற்கு அவர்களிடம் வசதி இல்லை. அவர்களின் பெற்றோர்கள் இங்கு கூலி வேலை செய்து பிழைப்பவர்கள். அவர்களுக்கு எனது செலவிலேயே பயிற்சிப் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதற்கு தீர்மானித்து விட்டேன். எனது ஆரம்ப முயற்சியாக மாலை வேளைகளில் அவர்களுக்கு இலவசமாகப் பாடம் சொல்லிக் கொடுப்பதும் தொடங்கிவிட்டேன்.

ஆசிரியர் ஓய்வு அறையில் இருந்து பாட ஆயத்தம் செய்து கொண்டிருந்தேன். ‘குட் மோர்னிங் சேர்’ என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கின்றேன். அங்கே மஞ்சுளா ரீச்சர் நிற்பதைக் காண்கின்றேன். ‘குட் மோர்னிங் ரீச்சர்’ என்று பதிலுக்குக் கூறியதும் மஞ்சுளா ரீச்சர் கதிரையில் உட்கார்ந்து விட்டார்.

என்ன? சேர்! ரியூசன் கிளாஸ் எல்லாம் தொடங்கி விட்டீங்களாம் நேற்றுதான் கேள்விப்பட் டேன்’ என்று ரீச்சர் கூறியதும் ‘இல்ல ரீச்சர்... சும்மா பொழுது போக்காகத்தான் செய்யிறன். பின் நேரத்தில நான் சும்மா தானே இருக்கிறேன். அது தான் இப்படிச் செய்யிறன்’ எனப் பதிலளித்ததும்,

‘சேர் பொழுதுபோக்காகச் செய்யிற தெண்டால் சரி, இதுகளுக்கு ரியூசன் செய்தால் காசு தராதுகள். மற்ற ப்படி இதுகள் படிச்சும் என்ன செய்யப் போகுதுகள்? இதுகளும் அவங்கட அம்மா அப்பா போல கூலி வேலைக்குத் தானே போவாங்கள்’ என்றாள் மஞ்சுளா.

மாணவர்களின் வறுமை நிலையைத் தொட்டுக்காட்டியதுடன் அவர்களின் எதிர்காலம் இப்படி அமையும் என்று ரீச்சர் கூறுயதில் எனக்கு உடன்பாடில்லை.

முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் இளமையில் தனது படிப்புச் செலவுக்காக ரெயில்வே ஸ்டேசனில் பத்திரிகை விற்றவர்தான். பின்னாளில் அவர் இந்திய அணு விஞ்ஞானியாக வரவில்லையா? என் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

‘பிள்ளைகள் பாவம் ரீச்சர். அவர்களுக்கு படிப்பதற்கு வசதி வாய்ப்புகள் கிடைத்தால் அவர்களும் படிச்சு முன்னேறலாம்.

ஏதோ என்னால முடிஞ்சத் செய்றன். கடவுள் தான் அவர்களுக்கு வழிகாட்ட வேணும்’ என நான் கூறி முடித்ததும் நிதானமாக எழுந்த மஞ்சுளா ரீச்சர் பதில் கூடக் கூறாமல் அடுத்த வகுப்பறையை நோக்கி வேகமாக நடந்தாள்.

மஞ்சுளா ரீச்சர் என்னுடன் பிள்ளைகளைப் பற்றி கதைத்ததை அதிபரிடம் கூறினேன்.

‘தம்பி இங்கு மஞ்சுளா ரீச்சருடைய ஆட்கள் தான் வசதி படைத்தவர்கள். அவர்களுக்கு தென்னந் தோட்டங்களும், தும்பு ஆலை ஒன்றும் உள்ளது. இந்தப் பிள்ளைகளின் பெற்றோரில் அநேகம் பேர் ரீச்சரின் தும்பு ஆலையில் தான் வேலை செய்கின்றார்கள்.

அத்துடன் மஞ்சுளா ரீச்சர் அரசியல் செல்வாக்கும் உள்ளவர். எங்கட கல்விக் காரியாலயத்திலும் ரீச்சருக்கு வேண்டிய ஆட்கள் இருக்கின்றார்கள். தேவையில்லாமல் அந்த ரீச்சருடன் பகையைத் தேடிக் கொள்ளாதையுங்கோ! பிறகு உங்களுக்குத் தான் அது பெரிய பிரச்சினையாய் அமையும்’ என அதிபர் மூச்சு விடாமல் கூறினார்.

‘இல்ல சேர் தேவையில்லாமல் நானும் பிரச்சினைக்குப் போக மாட்டேன். ஆனால் இந்தப் பிள்ளைகளுக்கு நான் செய்யிற உதவிகளைத் தடுக்க யாரும் முயற்சி செய்தால் என்னால பார்த்துக் கொண்டு சும்மா இருக்கேலாது’. எனது பக்க நியாயத்தையும் நான் எடுத்துக் கூறினேன்.

‘எனக்கு மனசில பட்டதைச் சொல்லிப் போட்டன் தம்பி, இனி யோசிச்சு நடக்க வேண்டியது நீங்கள் தான்’ என நிதானமாகவும் ஒரு தந்தையைப் போலவும் அறிவுரை சொன்ன அதிபரிடம் இருந்து விடைபெற்று ஐந்தாந்தர வகுப்பறைக்குள் செல்லுகின்றேன்.

ஐந்தாந்தர புலமைப் பரிசில் பரீட்சைக்கான பயிற்சிப் புத்தகங்களை அந்த ஐந்து மாணவர்களுக்கும் எனது செலவில் வாங்கிக் கொடுத்து விட்டேன். இப்போது தினமும் அதில் பயிற்சிகளைச் செய்வதற்கு மாணவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றேன்.

ஆரம்பத்தில் அவர்கள் அதில் உள்ள பயிற்சிகளைச் செய்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டார்கள். ஆனால் இப்போது அவர்களிடம் சற்று முன்னேற்றம் காணப்படுகின்றது.

நாளடைவில் அப்பயிற்சிகளை வேகமாகவும், பிழையின்றியும் செய்வதற்கு பழகிவிடுவார்கள். எப்படியும் இந்த ஐந்து மாணவர்களையும் புலமைப் பரிசிற் பரீட்சையில் சித்தியடையச் செய்து விடலாம் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்று என் உள்ளத்தில் தோன்றுகிறது.

ஆசிரியர் கூட்டம் ஆரம்பமாகி அதிபர் பேசி முடிந்ததும்... மஞ்சுளா ரீச்சர் எழுந்து நின்றதும் எல்லோரும் அந்த ரீச்சரை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

சேர் இங்க சில பேர் மாணவர்களுக்கு பாகுபாடு காட்டுகிறார்கள்’ என்றார். ரீச்சர் ‘இப்படிச் சொன்னால் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லையே! கொஞ்சம் புரியும்படிச் சொல்லுங்கோ’ என்று அதிபர் கூறியதும் ‘சில சேர்மார் ஒரு சில மாணவர்களுக்கு மட்டும் புத்தகம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

கொடுத்தால் எல்லாம் மாணவர்களுக்கும் கொடுக்க வேண்டும். இல்லா விட்டால் புத்தகம் கிடைக்காத மாணவர்கள் மனவருத்தம் அடைவார்கள் தானே’ மஞ்சுளா ரீச்சர் கூறி முடித்ததும் நான் எழுகின்றேன்.

‘சேர் என்னால் எல்லாப் பிள்ளைகளுக்கும் புத்தகம் வாங்கிக் கொடுக்க முடியாது, நல்லாப் படிக்கிற மாணவர்களுக்கு மட்டும் வாங்கிக் கொடுத்திருக்கின்றேன்.

மஞ்சுளா ரீச்சர் நினைத்தால் எல்லாப் பிள்ளைகளுக்கும் வாங்கிக் கொடுக்கட்டும்’. நானும் ஆத்திரத்துடன் எனது பக்க நியாயத்தை எடுத்துச் சொல்லுகின்றேன். எங்கள் இருவருக்குமிடையில் வாக்குவாதம் உச்ச கட்டத்தை அடைகிறது. ஆரம்பத்தில் நீங்கள் என்ற வார்த்தை பின் நீர் என மாறி கடைசியில் நீ என மாறிவிட்டது.

மஞ்சுளா ரீச்சர் கோபத்துடன் சில வார்த்தைகளைக் கூறி முடித்துவிட்டு கூட்டத்திலிருந்து எழுந்து வெளியேறி வேகமாகச் செல்லுகின்றார். கூட்டம் தீர்மானம் ஏதும் மேற்கொள்ளப்படாமல் குழப்பத்துடன் முடிவடைகின்றது.

ஐந்தாந்தர மாணவர்களுக்குப் படிப்பித்துக் கொண்டிருக்கின்றேன். மாணவன் ஒருவன் என்னருகில் வந்து ‘சேர் அதிபர் உங்களை அலுவலகத்திற்கு வரச் சொன்னார்’ எனக் கூறிவிட்டுச் செல்லுகின்றான். அதிபரிடம் சென்றதும்... அவர் ஓர் கடிதத்தை என்னிடம் நீட்டுகின்றார்.

பதற்றத்துடன் அதனைப் பிரித்துப் படிக்கின்றேன். ஒரு கணம் திகைத்துப் போய் நிலைதடுமாறி நிற்கின்றேன். எனக்கு... எனக்கு...

திடீர் இடமாற்றம் கிடைத்துள்ளதை அறிவித்திருந்தது அந்தக் கடிதம். நான் இப்போது கடமையாற்றும் பாடசாலையிலிருந்து தொலைவிலுள்ள ஒரு தீவுப் பாடசாலைக்கு உடனடியாக இடமாற்றம் பெற்றுள்ளேன்.

இதுவெல்லாம் மஞ்சுளா ரீச்சரின் வேலைதான் என்பது எனக்கு இப்போது புரிகிறது. எனக்கு இடமாற்றம் கிடைத்தது பற்றிக் கவலை இல்லை.

ஆனால்... ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் எழுத வேண்டிய மாணவர்களின் நிலைமையை நினைக்கும் போது எனது கண்கள் நீரினால் நிரம்பி வழிகின்றது.

‘இறைவா அவர்கள் மலரத் துடிக்கும் மொட்டுக்கள். அவர்கள் கல்வி கற்று இந்த சமூகத்தின் நல்ல பிரஜைகளாகவும், நல்ல அந்தஸ்த்துடனும், கெளரவமாகவும் வாழ்ந்து காட்ட வேண்டும். இந்த சமூகத்தில் இந்த மொட்டுக்களும் மலர்ந்து நறுமணம் பரப்ப வேண்டும் அவர்கள் மலராத மொட்டுக்களாக ஆகிவிடக் கூடாது.

உன் அருள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். நீ அருள் புரிவாயாக! என மனம் அவர்களுக்காக இறைவனிடம் இரந்து கேட்கின்றது.

அதிபர் மெளனமாக இருந்த வண்ணம் என்னையே உற்று நோக்குகின்றார். ‘நான் முன்னரே மஞ்சுளா ரீச்சரைப் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்லி இருந்தேனே! நீங்கள் தான் அவசரப்பட்டு விட்டீர்கள்; அத்துடன் ஆத்திரப்பட்டும்’ என்பது போல இருக்கின்றது அவரது மெளன மொழி.

இரு கரம் கூப்பி அவரை வணங்கி அவரிடமிருந்து விடை பெறுகின்றேன்.

இறுதியாக ஐந்தாம்தர மாணவர்களிடமும் எனது சக ஆசிரியர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு கணத்த இதயத்துடன் எனது புதிய பாடசாலையான அந்நத் தீவுப் பாடசாலைக்கு நாளை செல்லுவதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக நான் இருக்கும் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றேன்.

வை. இராமச்சந்திரன்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல