இதோ, மாமியார்களுக்குச் சில ஆலோசனைகள்:
நீங்களும் ஒரு காலத்தில் மருமகளாக இருந்தே மாமியாராகியவர் என்பதை மறந்துவிடாதீர்கள்.
மனைவியில் தாயைக் காணலாம். ஆனால் தாயில் மனைவியைத் தேட முடியாது என்ற வாக்கியமே
மனைவியின் பெருமையைப் பேசுகிறது. உங்கள் மகனை உங்களைப் போன்றதொரு தாயிடமே தந்தி ருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டாலே போதும் மருமகளை நேசிக்க!
மருமகளையும், மகனையும் கோபித்துக்கொள்ளும் நீங்கள், காலமாற்றத்தைக் கணிக்கத் தவறிவிடுகிறீர்கள். உங்கள் காலத்தில் இருந்த, அதே சூழலைக் கொண்டுதான், இன்றைய தலை முறைக்கு நீங்கள் வழி சொல்கிறீர்கள்.
ஆனால் அவை இப்போது பலன் தருமா! என்பது பற்றிச் சிந்தியுங்கள். ஒரு நாளுக்கு இருபத்து நான்கு மணிநேரம் போதாது என்று எண்ணும் அளவுக்கு பலவித சுமைகளைத் தாங்கிக்கொண்டுதான் இன்றைய மனைவியர் இயங்குகின்றனர்.
தங்கள் வசதிக்கேற்ப தங்கள் நாளாந்த வாழ்க்கை நடைறைகளைத் திட்டமிட அவர்களாலேயே முடியும். ஆனால், இந்தத் திட்டமிடல்களில் குறைகள் இருப்பதாக உங்களுக்குத் தோன்றலாம்.
விளைவு...? மருமகளைக் கூப்பிட்டு அறிவுரை சொல்லத் தொடங்கிவிடுகிறீர்கள் அல்லது அண்டை
அயலில் குறைகூறத் தொடங்கிவிடுகிறீர்கள்.
இவை இரண்டுமே தவிர்க்கப்படவேண்டியவை.
நீங்கள், ஓய்வேயில்லாமல் வேலை செய்து பழக்கப்பட்டவர்களாக இருப்பீர்கள்.
உங்களால் ஒரு கணமேனும் சும்மா இருக்க முடிவதில்லை. இதனால், யாரும் கேட்காமலேயே, சமையலிலும் வேறு விடயங்களிலும் பங்கெடுத்துக் கொள்கின்றீர்கள். இது, மனதுக்குள்ளேயே ஒரு அட்டவணையைத் தயார்செய்தபடி இயங்கும் இன்றைய தலை முறைக்கு உபத்திரவமாக இருக்குமே தவிர, உதவியாக இருக்காது. மாறாக, உங்களால் அவர்களுக்கு ஏதும் உதவி செய்ய முடியுமா என்று கேட்டு, அவர்கள் தரும் வேலையைச் செய்து முடிப்பதை வழக்கப்படுத்திக்கொண்டால் பரஸ்பரம் இருவரும் திருப்தியடையலாம்.
நீங்கள் செய்வதற்கென்றே வீட்டில் சின்னச் சின்ன வேலைகள் இருக்கும். அவற்றைச் சந்தோஷத்துடன் ஏற்றுச் செய்து முடித்தாலே உங்களுடைய பொழுது ஓடிப்போய் விடும். இன்றைய
அவசர யுகப் பெண்களுக்கு, தம் குழந்தையின் மழலை பேச்சை கேட்கவோ, அவர்களுடன் தமது பொழுதைக் கழிக்க நேரமோ, பொறுமையோ இருப்பதில்லை. அத்தகைய குடும்பச் சூழலில் வாழும் நீங்கள், உங்கள் பேரப்பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வது உங்களுக்கும், உங்கள் மருமகளுக்கும், உங்கள் பேரப்பிள்ளைக்கும் மனமகிழ்ச்சி தரும்.
குடும்பத்தில் ஏதேனும் முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டிய சந்தர்ப்பங்களில், பிள்ளைகள் கேட்டுக்கொண்டால் ஒழிய உங்கள் கருத்துக்களை வலியத் திணிப்பதைத் தவிர்க்கவேண்டும். அப்படி அவர்கள் கேட்டுக்கொண்டாலும் உங்கள் கருத்துக்களை ஆலோசனையாகச் சொல்லவேண்டு மேயன்றி, கட்டளையாகப் பிறப்பிப்பது, அடுத்த தடவை உங்களைக் கலந்தாலோசனை செய்யும் வாய்ப்பை பறித்துவிடலாம்.
உங்கள் மகள், புகுந்த வீட்டில் எப்படி நடத்தப்படவேண்டும் என்று கனவு காண்கிறீர்களோ, அப்படியே உங்கள் மருமகளை நடத்த வேண்டும் என்று நினைப்பீர்களேயானால், பிரச்சினைகள் தலைதூக்காது.
இனி, மருமகளுக்கு...
உங்களுக்குக் கிடைத்த சந்தோஷமான உங்கள் கணவரையும், அவர் மூலம் உங்களுக்குக் கிடைத்த சந்தோஷங்களான குழந்தைகளையும், உங்களுக்குப் பெற்றுத் தர மூல காரணமாக இருந்தவர் உங்கள் மாமியார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தன் மகனும் அவனது குடும்பமும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதுதான் ஒரு மாமியாரின் அவாவாக இருக்கும். அந்த அவாவின் பேரில் அவர்கள் சொல்லும் ஆலோசனைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, அவை சரியாக இருக்கும் பட்சத்தில் அவற்றைச் செயற்படுத்துங்கள். நடைறைச் சாத்தியமில்லாததாக இருப்பின், அவற்றைப் பொறுமையுடன் அவருக்கு விளக்குங்கள்.
உணவு விடயத்தில் பிரச்சினைகள் எழலாம். தங்கள் உடலுக்குப் பொருத்தமான உணவு வகைகளையே அவர்கள் தேர்ந்தெடுப்பர். அப்படியல்லாத பட்சத்தில் சிரமப்படுபவர்கள் அவர்கள்தான். ஆகையால், அவர்களுக்குப் பொருத்தமான உணவைச் செய்து கொடுப்பதோ, நேரப் பற்றாக்குறை யிருப்பின், அதை அவர்களே செய்து கொள்ள வழி செய்துகொடுப்பது சிறந்தது.
நீங்கள் குழந்தைகளைக் கண்டிக்கையில் உங்கள் மாமியார் நிச்சயமாகக் குழந்தையை அரவணைப்பார். அதைப் பிரச்சினையாகப் பார்க்காதீர்கள். அந்தக் குழந்தைக்கு அந்த நேரத்தில் ஒரு அரவணைப்பு கட்டாயம் தேவை என்கின்றன உளவியல் ஆய்வுகள்.
வாழ்க்கைச் சக்கரத்தில் சுழன்று, வாழ்க்கையை ஆரம்பித்த அதே புள்ளியில் வந்து நிற்பவர்கள் வயதானவர்கள். அவர்களை ஒரு வயது திர்ந்த குழந்தையாகவே பார்க் கவேண்டும். அவர்கள் உங்களிடம் எதிர் பார்ப்பது சில ஆறுதல் வார்த்தைகளையே. அதை வழங்குவதற்குத் தயங்காதீர்கள்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக, இன்றைய மருமகளான நீங்கள், நாளைய மாமியார்கள். உங்களை உங்கள் மருமகள் எப்படி நடத்தவேண்டும் என்று விரும்புவீர்களோ, அதுபோலவே உங்கள் மாமியாரையும் நடத்துவதாக உறுதி பூணுங்கள்.
ஏ.எஸ்.தேவராஜன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக