முன்னாள் பெண் போராளிகளுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்
விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் சில நடவடிக்கைகள் இலங்கையில் வடபகுதியில் இடம் பெற்றுள்ளன. புனர்வாழ்வு பெற்றுள்ளவர்ககு இப்படியான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ள பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள யுவதிகள் வேலை வாய்ப்பு பெறுவதற்காக அந்த நிலையத்தில் ஆடைத்தொழிற்சாலை நிறுவனங்கள் கலந்து கொண்ட நடமாடும் சேவையொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் சுமார் 12 நிறுவனங்கள் கலந்து கொண்டு, தம்மிடமுள்ள தொழில் வாய்ப்புக்கள் குறித்து இந்த பெண்களுக்கு விளக்கியுள்ளனர்.
இதேவேளை, அரச அதிகாரிகளும் இந்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டு தொழிற் சட்டங்கள், நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு சட்ட ரீதியாக வழங்கவேண்டிய வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இங்குள்ள இளம் பெண்களுக்கு எடுத்துக் கூறியுள்ளனர்.
வேலை வாய்ப்புகளை எதிர் நோக்கும் முன்னாள் பெண் போராளிகள்
புனர்வாழ்வுப் பயிற்சி பெறுகின்ற இளம்பெண்கள் அங்கிருந்து விடுதலையாகிச் சென்றதும் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள் என்றாலும் தமது தகுதிக்கேற்ற தொழில்கள் தேவை என்றும், தமது சொந்த மாவட்டங்களிலேயே இந்தத் தொழில் கிடைப்பதையே அதிகம் தாங்கள் விரும்புவதாகவும் தமிழோசை செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இவர்கள் முன்னர் இணைந்திருந்த போதிலும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அரசாங்கம் அவர்களுக்குத் தொழிற் பயிற்சி வழங்கி, புனர்வாழ்வளித்திருப்பதனால் அவர்களை தமது நிறுவனங்களில் வேலைக்குச் சேர்த்துக்கொள்வதில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லையென ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.
BBC




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக