பேசாப் பெருமானாய் இருக்கும் விக்கினேஸ்வரனால் இதெல்லாம் எப்படிச் செய்யமுடியும் என்று நீங்கள் கேட்பதும் எமக்குப் புரியாமல் இல்லை.இறைவன் ஒருபோதும் நேரில் வந்து அடியார் குறை தீர்ப்பவன் அல்ல.தாயை இழந்த பன்றிக் குட்டிகளுக்கு தாயாகி பால் நினைந்தூட்டிப் பசி போக்கியவன் அவன்.
எனவே அவன் நேரில் வரான். இயற்கையாக- செயற்கையாக- இணையத்தளத்தினூடாக- பதவி மோகத்தினூடாக- அகந்தை ஊடாக இப்படி எத்த னையோ வடிவங்களை அவன் எடுத்து அவரவர் கெடுதிக்கேற்ப தண்டனை கொடுத்து தன் அடியார் குறை தீர்ப்பான். ஓ! அப்படியா? அப்படியானால், ஈழத் தமிழர்கள் தாம் பட்ட துன்பங்களின் போதெல்லாம் விக்கினேஸ்வரா!...
விக்கினேஸ்வரா!... இந்தக் கொடூரத்தை தீராயோ- உலகறியச் செய்யாயோ என்று வேண்டினரே அதற்கு விக்கினேஸ்வரன் என்ன செய்தான் என்று உங்கள் நா முணுமுணுப்பதும் கேளாமலில்லை. உங்கள் கேள்விக்கான பதிலைத்தான் இங்கு கூறவந்தோம். ஆம். விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளம் இப்போது வன்னி யுத்தம் தொடர்பில் முக்கியமான விபரங்களை வெளிப்படுத்தி வருகிறது. விக்கிலீக்ஸ் வெளியிடும் தகவல்களால் இலங்கை பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
எவரும் எதிர்பார்க்காத வகையில், வன்னியுத்தம் தொடர்பில் விக்கிலீக்ஸ் பல்வகைச் செய்திகளை உலகம் முழுவதும் பரப்புவது எம்மைப் பொறுத்தவ ரை அவன் செயலே.எதுவாயினும் விக்கிலீக்ஸின் அதிரடித் தகவல் வெளியிடுகையில் இந்தியாவின் புட்டுக்கட்டுக்களும் வெளிவருவதுதான் அதன் மகிமை. அதுமட்டுமா என்ன? இலங்கை தொடர்பில் அமெ ரிக்கத் தூதரகம் அனுப்பிய விபரங்கள் வெளியாகி யிருப்பதும் அந்த விக்கினேஸ்வரன் விக்கிலீக்ஸ் ஊடாக ‘லீக்’ ஆக்கிவிட்டான் என்பதே பொருள்.
ஓ! தெய்வம் நின்றறுக்கும். பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் ஒன்று. வன்னி யுத்தத்தில் இந்திய தேசம் மிகப்பெரும் போர்க்குற்றவாளியாகவும் உலக நாடுகள் அதனைக் கண்டிப்பதாகவும் நிலைமை மாறும். இந்த மாற்றத்தால் இந்தியாவின் பஞ்சசீலக் கொள்கையும், ஜனநாயகப் புகழும் கருகிப்போவது தவிர்க்கமுடியாததே. காலம் பிழைத்தால் கறுத்தார் மட்டுமல்ல எவரும் எதுவும் செய்யமுடியாது.
ஓ! விக்கினேஸ்வரா! உன் விளையாட்டை நீ காட்டு. நாங்கள் விக்கிலீக்ஸைப் பார்ப்பம்.அட! இதற்கெல்லாம் ‘ஹோட் சிவா’ கவலை கொள்ளற்க. உன் நெற்றிக்கண்தானே சனல் 4 என்று ஏற்கெனவே கூறிவிட்டோம். இருவரும் சேர்ந்தால் எங்கள் விக்கினங்கள் தீரும்.
வலம்புரி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக