புதன், 8 டிசம்பர், 2010

பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண்

இளம்பெண்கள் பெரும்பாலும், அழகான ஆண்களை திருமணம் செய்து கொள்ளவே விரும்புவர். ஆனால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுமலதா என்ற இளம்பெண், பாம்பை திருமணம் செய்துள்ளார்.

ஆந்திர மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள அரபள்ளி என்ற குக்கிராமத்தை சேர்ந்த பஞ்சு விவசாயி கிருஷ்ணன் ரெட்டி- சுபத்ரா தம்பதியின் மூத்த மகள் சுமலதா. இவர் உள்ளூர் பள்ளியில் 10ம் வகுப்பை முடித்து விட்டு, மேல் படிப்புக்காக, வெமுலவாடாவில் ஒரு குருகுலத்தில் சேர்ந்தார். விடுமுறையில், தனது கிராமத்திற்கு வந்த சுமலதா, தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அப்பாவும், அம்மாவும் வேலைக்காக, வெளியே சென்றிருந்தனர். ஒரு தம்பியும் பள்ளிக்கூடம் சென்றிருந்தான். அப்போது, சுமலதா படுத்திருந்த கட்டிலில், ஒரு மஞ்சள் நிறப் பாம்பு படுத்திருந்தது.

இதை பார்த்து சுமலதா அலறினார். உடனே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, அந்தப் பாம்பை அடித்து விரட்டினர். ஆனால், சில தடவைகள் அந்த பாம்பு சுமலதாவுக்கு மட்டும் தென்பட்டது. இதை சுமலதா, தனது தந்தை கிருஷ்ணா ரெட்டியிடம் சொல்ல, அவர் அந்த பாம்பை அடித்துக் கொன்றார்.

அந்த சம்பவத்திற்கு பின், அந்த குடும்பம் பெரும் சோதனைகளை சந்தித்தது. வீடு, நிலபுலன்கள் என அனைத்தையும் இழந்தனர். குடும்பம் வறுமைக்கு சென்றது. நெருக்கமான உறவினர்கள் சிலரும் உயிரிழந்தனர். அதன் பின், சுமலதாவின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.

இது குறித்து அவர் கூறியதாவது: பத்ராசலத்திற்கு கல்வி சுற்றுலா சென்றேன். அங்கு வந்த ஒரு அதிசய மனிதன், “நீ ஒரு அதிசயப்பிறவி, மக்களின் குறைகளை தீர்ப்பாய்” என்று கூறிச் சென்றான். வீடு திரும்பிய நான், பாம்பு கடவுளை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறினேன்.

அதேபோன்று திருமணம் செய்து கொண்டு, ஒரு கோவிலையும் உருவாக்கி, பூஜை செய்து வருகிறேன். நான் பாம்பு கடவுளை திருமணம் செய்து கொண்டு, நாகதேவதையாக மாறிய பின், எனது குடும்பத்தின் அனைத்து கஷ்டங்களும் நீங்கி விட்டன. கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான கிராம மக்கள், இந்த கோவிலுக்கு நம்பிக்கையோடு வந்து, தங்கள் குறைகள் நீங்கி செல்கின்றனர்.

அவர்கள் அளிக்கும் காணிக்கையில் தான், இந்தக் கோவிலை நிர்வகித்து வருகிறேன். என்னிடம், அபூர்வ சக்தி இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். என்னிடம் வரும் போது, அவர்களின் பிரச்சினை தீருவதாக நினைக்கின்றனர். தெலுங்கானா பகுதி மக்களின் தனிமாநில கனவு வரும் 2012ம் ஆண்டில் நிறைவேறி விடும் என்று சுமலதா கூறுகிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல