அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பிலடெல்பியா நகரை சேர்ந்தவர்கள் ஹெர்பர்ட் (42) மற்றும் காத்ரீன் (41). ஹெர்பர்ட் ஒரு சர்ச்சில் மத போதகராக பணியாற்றி வருகிறார். அதே சர்ச்சில் காத்ரீனும் முன்பு மதபோதகராக பணியாற்றி வந்தார். இதுவரை இவர்கள் நோய்க்காக டாக்டரை அணுகியதே இல்லை.
காத்ரீனுக்கு பிரசவம் அனைத்தும் வீட்டிலேயே நடந்தது. இவர்களுக்கு ஆறு குழந்தைகள், ஆறு பேருமே சர்ச்சில் வளர்ந்தவர்கள் தான். கடைசிக் குழந்தை கென்ட் (2), கென்ட்டுக்கு திடீரென இருமல், ரத்தம் கட்டுதல் அறிகுறிகள் தோன்றின. ஆனால், அவன் சரியாகி விடுவான் எனக் கருதிய தம்பதியர், அவனுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அவன் இறக்கும் வரை டாக்டரிடம் அழைத்துச் செல்லவில்லை.
இதுகுறித்து அங்குள்ள கோர்ட்டில் வழக்கு பதிவானது கென்ட்டின் உடலைப் பிரேத பரிசோதனை செய்த டாக்டர் அவன் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார். இவ்வழக்கில் தம்பதியரை குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்தது.
இது குறித்துப் பேசிய நீதிபதிகள் குழுவின் தலைமை நீதிபதி, “இங்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவது அவர்களின் மதம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், நடந்த சம்பவத்திற்கு அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். மகனைப் பேணாமல் புறக்கணித்ததற்காகவாவது அவர்கள் குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக