சனி, 22 ஜனவரி, 2011

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக வழக்கறிஞர் அங்கயற்கன்னி விடுவிப்பு

இலங்கையில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை நிலை பற்றி ஆராய்ந்து, பின்னர் அவர்களுக்கு இந்தியாவிலிருந்து உதவிகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துக்காகதான் இலங்கை விஜயம் மேற்கொண்டதாக பிபிசியிடம் பேசிய இந்திய சட்டத்தரணி அங்கயற்கன்னி கூறினார்.

சுற்றுலாப் பயணி என்று கூறி இலங்கைக்குச் செல்ல தாம் நுழைவு அனுமதி பெற்றதாகவும், தமிழர்கள் வாழும் வட கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல பாதுகாப்புத்துறையின் அனுமதியைக் கொழும்பில் தாம் பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற கிழக்குப் பகுதிகளையும், கிளிநொச்சி, முல்லைத் தீவு, ஆகிய வன்னிப் பிரதேசங்களையும் பார்வையிட்டுவிட்டு, கடைசியாக வடக்கே யாழ்ப்பாணமும் சென்றதாக அவர் தெரிவித்தார். அப்பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்கள் நிலையை அவதானித்ததாகவும், மக்களிடம் விபரங்களைக் கேட்டறிந்ததாகவும் அவர் கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயாரை யாழ்ப்பாணத்தில் தாம் சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இலங்கை பாதுகாப்புப் படையினர் தம்மைக் கைது செய்து முதலில் மாங்குளத்திலும், பின்னர் கொழும்பில் இராணுவ விசாரணை மையத்திலும் சந்தேகத்தின் பேரில் தம்மைத் தடுத்து வைத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

தாம் எடுத்திருந்த புகைப்படங்கள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் அங்கயற்கன்னி கூறினார்.

தாங்கள் அரசியல் நோக்கத்திற்காக இலங்கை செல்லவில்லை என்று அவர் வலியுறுத்தினார். என பிபிசி செய்தி சேவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



உணவு, மருத்துவ வசதி எதுவும் இல்லை: ``ஈழத் தமிழர்கள் இங்குள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள்''

- விடுதலையாகி திரும்பிய சென்னை பெண் வக்கீல் பேட்டி

"உணவு, மருத்துவ வசதி எதுவும் இல்லாமல், இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் தவிக்கிறார்கள் என்றும், அவர்கள் இங்குள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள்'' என்றும் நேரில் சந்தித்து திரும்பிய சென்னை பெண் வக்கீல் கூறினார்.

இலங்கையில் நடைபெற்ற போருக்கு பிறகு, அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் நிலை குறித்து அறிந்து வருவதற்காக சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல் அங்கயற்கண்ணி, நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த திருமலை ஆகியோர் கடந்த வாரம் சென்றனர். அங்கு, ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். கடும் போராட்டத்திற்கு பிறகு நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை திரும்பிய அவர்கள் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். பெண் வக்கீல் அங்கயற்கண்ணி நிருபர்களிடம் கூறியதாவது:-கடந்த 12-ந் தேதி நள்ளிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கை புறப்பட்டோம். மறுநாள் காலை கொழும்பு விமான நிலையத்தில் இறங்கினோம். இலங்கையில் போர் தாக்குதலுக்கு பிறகு அங்குள்ள தமிழ் மக்களின் மனநிலையை அறிந்து வரும் எண்ணத்தில்தான் சென்றோம்.

அங்கு, இலங்கை அரசின் பாதுகாப்பு துறையில் முழுமையான அனுமதி பெற்று, 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வவுனியா, மட்டக்களப்பு, சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்கள், கிளிநொச்சி, முல்லைத்தீவு, நவாலி, வல்வெட்டுத்துறை, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் உள்ள தமிழர்களை சந்தித்து பேசினோம்.

அங்குள்ள தமிழர்களுக்கு அடிப்படை வசதி எதுவும் கிடைக்கவில்லை. முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர், மருத்துவ வசதி எதுவும் கிடைக்கவில்லை. தமிழ் குழந்தைகளுக்கு அங்கு பள்ளிகளே இல்லை.

அங்குள்ள தமிழர்கள் இந்திய அரசின் உதவியை எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அங்கு கை, கால்கள் இழந்த குழந்தைகளுக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க முடியுமா? என கேட்கிறார்கள்.

கிளிநொச்சியில் தமிழ் மக்கள் அகதிகளாக இன்னும் உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் ஆண்களே இல்லை. பெண்களும், குழந்தைகளும் கை, கால்கள் இல்லாத நிலையில், கண்கள் குருடான நிலையில்தான் இருக்கிறார்கள். ஊனமில்லாத குடும்பத்தையே அங்கு பார்க்க முடியவில்லை.

மொத்தத்தில் அங்கு தமிழ் இனத்தை அழித்திருக்கிறார்கள். அழித்துக்கொண்டும் இருக்கிறார்கள். முல்லைத்தீவு பகுதிக்கு சென்றோம். அங்கு பஸ் வசதி, மின்சார வசதி எதுவும் இல்லை. இரவு நேரத்தில் இருட்டில் நடந்து சென்றோம். அங்கு ஒவ்வொரு இடத்திலும் சிங்கள ராணுவத்தினர் குழுவாக நின்று கொண்டு விசாரிக்கிறார்கள்.

தமிழர்கள் வீடுகள் எல்லாம் வானம் பார்த்த வீடுகளாக உள்ளன. ராணுவச் சிறையில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வல்வெட்டுத்துறையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வீடு இடிந்து கிடந்ததை பார்த்தோம். அவரது தாயார் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து நாங்கள் வருவதாக கூறியதும், அவரது கண்ணில் இருந்து கண்ணீர் மட்டும் வடிந்தது. அவரால் பேச முடியவில்லை.

வவுனியா அருகே உள்ள ஓமந்தை என்ற இடத்திற்கு 18-ந் தேதி வந்தபோது, அங்குள்ள சோதனை சாவடியில் எங்களிடம் விசாரித்தனர். பின்னர், உளவுப் பிரிவு போலீசார் எங்களை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, பயங்கரவாத விசாரணை துறையில் எங்களை அழைத்து சென்று காவலில் வைத்தனர். அதன் பின்னர், நீதிபதியிடம் எங்கள் நிலையை விளக்கியபின் விடுவிக்கப்பட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல