வியாழன், 13 ஜனவரி, 2011

மிருகங்களிடமிருந்து பயில வேண்டிய பாடம்

மிருகங்களிடம் குணம் உண்டு. ஒன்று எதிர்த்துத் தாக்கும் அல்லது ஓடி விடும். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருந்து கொண்டு அஞ்சி விழிக்காது. தாக்குதலில் இறங்குவது என்று முடிவு செய்துவிட்டால் தன் உயிர் போகும் வரையில் தன் துணிவைக் கைவிடாது.

உதாரணமாகப் பூனையை எடுத்துக் கொள்வோம்.

பூனை, திறந்த வெளியில் நம்மைக் கண்டால் ஓடிவிடும். சாதாரணச் சைகையாலேயே அதை ஓட்டிவிடலாம். இதை வைத்துப் பலர் பூனையைப் பற்றித் தவறான எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அதாவது பூனை ஒரு சாதுவான பிராணி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது உண்மையல்ல.

தோற்றத்தால் அது எளிமை வாய்ந்த பிராணியாக இருக்கலாம்.

ஆனால், அதன் மனம் மிக உறுதி வாய்ந்தது.

‘பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி’ என்ற பழமொழியைப் பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

போலித்தனமான குணங்களைத் தன்னகத்தே அடக்கிக் கொண்டு லஞ்சம் தீர்க்கும் மனிதர்களை இந்தப் பழமொழியால் குறிப்பிடுவதுண்டு.

ஆனால் இந்தப் பழமொழி முக்கியமாகப் பூனையின் இயல்பையும் குறிக்கின்றது என்று அறியமாட்டார்கள்.

பூனை, பார்ப்பதற்குத்தான் பூனை. ஆனால், அது பாயத் தொடங்கிவிட்டால் செயலில் புலியைப்போல் இயங்கும்.

அதாவது ஒரு பூனையைத் தனி அறையில் அடைத்துவிட்டு, ஒரு மனிதன் அந்த அறையில் தடி ஒன்றுடன் நுழைந்துவிட்டான் என்றால் அப்போதுதான் அவனால் பூனையின் இயல்பை உணர முடியும்.

பூனை அந்த அறையினுள் கொடிய விலங்காகிவிடும். அடிபட்டுச் செத்துப்போவது உறுதி என்றாலும் நமக்கிருக்கும் ஒரே வழி துணிந்து இந்த மனிதனுடன் போராடுவதுதான் என்ற முடிவுக்கு அது வந்துவிடும்.

மனிதன் வெல்வானா பூனை வெல்லுமா என்பதல்ல பிரச்சினை. ஆனால், இந்தப் பூனையின் இயல்பிலே மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய ஓர் உண்மை இருக்கிறது. எந்தச் செயலிலும் வேறு வழியே இல்லையென்றால் துணிந்துவிட வேண்டியதுதான். துணிவு ஒன்றுதான் நம்மைக் காப்பாற்றும். ஆனால் அந்தத் துணிவு முன்னர் குறிப்பிடப் பட்டதுபோல் அறிவு பூர்வமாகவும் நாணயமானதாகவும் இருக்க வேண்டும்.

வெற்றி நமக்குத்தான்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல