வெள்ளி, 23 மார்ச், 2012

பாடம் !

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களின் வாழ்வை பறித்து சாகடித்த இலங்கைக்கு ஐ.நா.,வில் பாடம் புகட்டப்பட்டது.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், இந்தியா உட்பட 24 நாடுகளின் ஆதரவுடன் நேற்று நிறைவேறியது. இத்தீர்மானத்தை ஆதரித்த இந்தியா, இலங்கையில் தமிழர்கள் கவுரமாக வாழும் வகையில், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் தன் கருத்தை வலியுறுத்தியது. இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இறுதிக்கட்ட போரில் தமிழர்கள் வசித்த பகுதியிலும், மருத்துவமனைகள் மீதும் இலங்கை ராணுவம் குண்டு வீசியதால், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ராணுவத்திடம் சரணடைந்த பலர் நிர்வாணமாக்கி கொல்லப்பட்டனர். ஒரு பாவமும் செய்யாத, பச்சிளம் குழந்தைகளும், இலங்கை ராணுவத்தின் கொடூர தாக்குதலுக்கு தப்பவில்லை. மனித உரிமைகளை மீறியதாக, விடுதலைப் புலிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இறுதிக் கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக, ஐ.நா., சபை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. ஐ.நா., பொதுச் செயலர் பான் கீ மூன் சார்பில் அமைக்கப்பட்ட குழுவுக்கு, இலங்கை அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இதற்கிடையே, இலங்கை அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த குழு சார்பில் சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. போர் நடந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும், இந்த பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை என, அமெரிக்கா, நார்வே உள்ளிட்ட நாடுகள், இலங்கைக்கு எதிராக புகார் தெரிவித்தன. தீர்மானம் என்ன: இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்த ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின், 19வது கூட்டத் தொடரில், இலங்கை மீதான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்தது. அதில், "இலங்கை தன் நல்லிணக்க ஆணை குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்; அதை மனித உரிமைகள் கவுன்சில் கண்காணிக்க வேண்டும்; ஓராண்டிற்குள் அதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்' என, மூன்று முக்கிய குறிப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

24 நாடுகள் ஆதரவு: அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் நேற்று விவாதம் நடந்தது. 47 நாடுகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்று பேசினர். ஒவ்வொரு நாட்டுக்கும், தலா மூன்று நிமிட அவகாசம் அளிக்கப்பட்டது. கியூபா சார்பில் பேசிய பிரதிநிதி, "இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க முடியாது. இந்த தீர்மானம் மீதான ஓட்டெடுப்பை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும்' என வலியுறுத்தினார். அமெரிக்கா, இதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டது.

இந்தியா வலியுறுத்தல்: ரஷ்யா, சீனா, உகாண்டா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், தீர்மானத்துக்கு எதிராக பேசினர். "இந்த தீர்மானம் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயல். மனித உரிமைகளை மீறியதாக கூறி இத்தீர்மானத்தின் மூலம் இலங்கையை நிர்பந்தப்படுத்தக் கூடாது' என சீனா தெரிவித்தது.

நார்வே, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள், தீர்மானத்துக்கு ஆதரவாக பேசின. இந்தியா சார்பில் பங்கேற்ற பிரதிநிதி, "தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் 13வது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தினார். இலங்கையின் பாதை இனி மாறி தமிழர்களுக்கு கவுரவம் தர வேண்டும் என கூறப்பட்டது.

தீர்மானம் வெற்றி: இதன்பின், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. மொத்தம் 47 நாடுகள் உள்ள இந்த மனித உரிமைகள் கவுன்சிலில், நேற்று நடந்த ஓட்டெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 24 நாடுகளும், எதிர்த்து 15 நாடுகளும் ஓட்டளித்தன. எட்டு நாடுகள் இந்த தீர்மானத்தை புறக்கணித்து விட்டன. இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் ஆதரித்ததை தொடர்ந்து இந்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளித்தன. ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்த இலங்கை அரசு, தவறை உணர்ந்து, அதை திருத்திக் கொள்ளுமா என்பது தான், தற்போது எழுந்துள்ள கேள்வி. ஏனெனில், அங்கு நடந்த செயல்களை தற்போது ஐ.நா., தீர்மானம் வெளிச்சமாக்கியிருக்கிறது.

இலங்கை எதிர்ப்பு: ஐ.நா., சபையில் அமெரிக்கா கொண்டு வந்த மனித உரிமை மீறல் தீர்மானம் மீது இலங்கை அரசின் சார்பில் பேசிய அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிடுகையில்,

"இறையாண்மை கொண்ட நாடு சுயமாக நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும். இலங்கை அரசின் சார்பில் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைப்படி தான் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக வன்முறையும், ஸ்திரமற்ற தன்மையும் காணப்பட்ட இலங்கையில், கடந்த 3 ஆண்டுகளில் அமைதியும், ஸ்திரதன்மையும் நிலை நாட்டப்பட்டுள்ளது. நிலைமை இன்னும் மேம்பட கால அவகாசம் தேவை. எங்களுக்கு எதிரான தீர்மானம், விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்கு உதவுவதாக அமைந்து விடும்'' என்றார்.

ஆதரித்த நாடுகள்: ஐ. நா.,வில் அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்த நாடுகள்: அமெரிக்கா, ருமேனியா, ஸ்பெயின், உருகுவே, சுவிட்சர்லாந்து, பெனின், மெக்சிகோ, நார்வே, போலந்து, பெரு, மால்டோவா, கோஸ்டாரிகா, கவுதமாலா, ஹங்கேரி, ஆஸ்திரியா, பெல்ஜியம், இந்தியா, இத்தாலி, லிபியா, மொரிஷியஸ், கேமரூன், சிலி, செக் குடியரசு உள்ளிட்ட நாடுகள்.

எதிர்த்த நாடுகள்: பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, ரஷ்யா, மாலத்தீவு, சவுதி, கிர்கிஸ்தான், காங்கோ, தாய்லாந்து, ஈக்வடார், கியூபா, இந்தோனேசியா, குவைத் உள்ளிட்ட நாடுகள் எதிர்த்து ஓட்டளித்துள்ளன.


தினமலர்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல