நெல்சன் மண்டேலா - ஒரு சகாப்தத்தின் முடிவு
இன்று மெய்யான விடுதலைக்காக ஏங்கி நிற்கும் எத்தனையோ சமூகங்கள் இருக்கின்றன. இன ரீதியான மற்றும் மத ரீதியான குழுக்கள் இருக்கின்றன. இத்தகைய சமூகங்களையோ, குழுக்களையோ பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் வரிசையில் மண்டேலாவின் வாழ்க்கை அனுபவங்கள், அவர் காட்டிய பாதை ஆகியவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பது நிதர்சனம்.
மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரது போதனைகள் அஹிம்சையை அடித்தளமாகக் கொண்டிருந்தன. அவர்கள் ஆரம்பம் தொட்டு ஒடுக்குமுறைக்கும், துஷ்பிரயோகத்திற்கும் எதிராக அஹிம்சை வழியில் போராடிய தலைவர்கள். ஆனால் மண்டேலாவோ, தாம் கறுப்பர் என்பதற்காக தம்மை ஒதுக்கிய ஆட்சியாளர்களிடம் இருந்து விடுதலை பெற வேண்டுமானால் அவர்களுக்கு எதிராக போர் தொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆரம்பத்தில் சிந்தித்தவர். இத்தகைய நிற ஒதுக்கல் ஆட்சிக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்தி உரிமைகளை வென்றெடுப்பதற்காக கெரில்லா குழுவொன்றை வழிநடத்திய போராளி, பின்நாட்களில் நல்லிணக்கப் பாதையை தேர்ந்தெடுத்து அதன் மூலம் வெற்றி பெற்றமை தான் சிறப்பம்சம்.
தென்னாபிரிக்காவில் நிற ஒதுக்கலை நிறுவனமயப்படுத்திய வெள்ளையர்களின் ஆட்சிக் கட்டமைப்பில் கறுப்பின மக்கள் எத்தகைய அவலங்களையும், கொடுமைகளையும், அவமானங்களையும் சந்தித்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பார்ப்பதும் கடினம்.
வெள்ளையர்கள் அனுபவிக்கக்கூடிய எந்தவொரு சலுகையும், உரிமையும் இந்த நிறுவனமயப்படுத்தல் ஊடாக கறுப்பர்களுக்கு மறுக்கப்பட்டது. இவற்றில் வாக்களிப்பு உரிமையும் உள்ளடங்கும். ஒரு நகரில் நடந்து செல்லும்போது வெள்ளையர்களின் பாதையில் ஒரு கறுப்பினத்தவர் குறுக்கிட்டால் அல்லது வெள்ளையர்களுக்கு மரியாதை செலுத்தத் தவறினால், அவருக்கு தண்டனை வழங்கக்கூடிய சட்டங்கள் ஊடாக நிற ஒதுக்கல் ஆட்சி நிறுவனமயப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்த ஆட்சி முறைக்கு எதிராக குரல் எழுப்பியமைக்காக தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 27 வருடங்கள் கடூழிய சிறைவாசம் அனுபவித்த மனிதரால், எவ்வாறு நல்லிணக்கம் பற்றி சிந்திக்க முடிந்தது என்பதும், எவ்வாறு புரிந்துணர்வு, மன்னிப்பு போன்ற நற்குணங்களை முன்னிறுத்திய நடைமுறையின் ஊடாக நிற ஒதுக்கல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிந்தது என்பதும் வியப்புக்குரிய விடயங்களே.
இன ரீதியான வன்முறைகள், பொலிஸாரின் அடக்குமுறைகள் போன்றவற்றால் இரத்தக்கறை படிந்திருந்த தென்னாபிரிக்காவின் அரசியல் வரலாற்றை மாற்றியெழுதி, மிகவும் சிறப்பானதொரு அரசியல் யாப்பிற்கு உரிமை கொண்டாடும் ஜனநாயக நாடாக பரிணமிக்க வைத்த நிலைமாற்றம் தனிமனிதரால் எவ்வாறு சாத்தியப்பட்டது என்பதும் தவிர்க்க முடியாத கேள்வி. மண்டேலாவின் சரியான கொள்கைகள், அந்தக் கொள்கைகள் மீதான திடசங்கற்பம், அதன் அடிப்படையில் அவர் தேர்ந்தெடுத்த பாதை, அந்தப் பாதையில் இருக்கும் தடைக்கற்கள் மற்றும் திருப்பங்கள் பற்றிய புரிந்துணர்வு போன்றவற்றின் மூலம் அது சாத்தியப்பட்டதாகக் கூற முடியும்.
இங்கு அஹிம்சை என்ற கொள்கையும், அதன் மீதான திடசங்கற்பமும் மண்டேலாவின் வெற்றிக்குரிய அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தன என்றால், அதில் மிகையில்லை. வன்முறைகளைக் கைவிட வேண்டுமென எந்தத் தருணத்தில் அவர் சிந்தித்தாரோ, அந்தத் தருணத்தை பொன்னான தருணமாகக் குறிப்பிட முடியும்.
காலனித்துவம், ஒதுக்கிவைத்தல், அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுத்தல் போன்றவற்றின் மூலம் வெள்ளையர்கள் கறுப்பர்களை ஒடுக்கி வைத்தமைக்கு காரணம் இன ரீதியான சிந்தனைகள் தானென்றால், அந்த சிந்தனைகளைக் கொண்டவர்களிடமும் மனிதம் உண்டென்பதை மண்டேலா கண்டுபிடித்தார். அந்தக் கண்டுபிடிப்பு தான் மண்டேலாவை மாமனிதனாக மாற்றியது எனலாம்.
பல மகோன்னதத் தலைவர்களைப் போன்று அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருந்திருக்கலாம். ஆனால், கறுப்பினத்தவர்கள். இந்தியர்கள், வெள்ளைக்காரர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் தாம் சந்தித்த மனிதர்களை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு அன்பாகப் பழகிய அவரது நற்குணம் தான், அத்தனை சாதனைகளுக்கும் அடித்தளமாக அமைந்தது.
எவரேனும் ஒருவரை மண்டேலா சந்திப்பாரானால், தாம் உயர்ந்தவன் என்று அந்த மனிதனை எண்ண வைக்கும் ஆற்றல் மண்டேலாவிற்கு இருந்திருக்கிறது. வெள்ளையின நிற ஒதுக்கல் ஆட்சிக் காலத்தில் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த பிரெட்ரிக் வில்லியம் டி கிளார்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தி பல இனத்தவர்களும் பங்கேற்கக்கூடிய தேர்தலை நடத்துவதற்கு வழிவகுக்க அவரால் முடிந்ததது என்றால், மனிதம் என்ற மாபெரும் சக்தியின் மீது அவர் வைத்த நம்பிக்கை தான் காரணமாகும்.
பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட சமயத்திலும் தமது கொள்கைகள் மீதான நம்பிக்கையை அவர் இழக்கவில்லை. கடந்த காலத்தில் தமது மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளை மண்டேலா மறக்கவில்லை. ஆனால், அந்தக் கொடுமைகள் பற்றிய கோபாவேசம் எதிர்கால சட்டதிட்டங்களுக்கு தூண்டுதலாக அமையக்கூடாது என்பதில் அவர் பிடிவாதமாக இருந்தார்.
சகல நிறங்களும் அணிசேர்ந்து அழகு தரும் வானவில் போல ஒன்றுக்கொன்று ஒத்திசைந்து செல்லும் இனக்குழுமங்களின் அடித்தளத்தில் உருவான வானவில் தேசமாக தென்னாபிரிக்கா அமைய வேண்டும் என்பது அவரது சிந்தனையாக இருந்தது. இதற்காக கடந்த கால தவறுகளை மறந்து தவறுகளால் பாதிக்கப்பட்டவர்களை ஓரங்கட்டி விட வேண்டுமென மண்டேலா சிந்திக்கவில்லை. மாறாக, தவறுகள் மூலம் பாடம் படித்து எதிர்காலப் பயணத்தை சரியான பாதையில் செலுத்துவதற்காக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்தார்.
மனிதனின் ஆழ்மன வேட்கைகள் பற்றிய அவரது பட்டறிவும் நல்லிணக்க நடைமுறைக்கு உறுதுணையாக அமைந்தது. தமது சிறைக்கூடத்தில் ஓய்வைக் கழிக்கும் கைதிகள் காற்பந்தாட்டத்தின் மீது காட்டிய ஆர்வத்தை அவர் அவதானித்தார். விளையாட்டின் மூலமாக ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது. நிற ஒதுக்கல் ஆட்சிகாலத்தில் வெள்ளையின அணிகளில் கறுப்பர்களுக்கு இடமில்லை. இந்த நிலையில் 1995ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா உலக ரக்பி சுற்றுத்தொடரை நடத்தியபோது, வெள்ளையர்களுடன் கறுப்பினத்தவர்களையும் சேர்த்து விளையாடச் செய்தார். ரக்பி என்பது வெள்ளையர்களுக்கு பிரியமான விளையாட்டு. அதில் கறுப்பின வீரர்களை விளையாடுமாறு நிர்ப்பந்தித்த அவருக்கு உலகக் கிண்ணம் மாத்திரம் கிடைக்கவில்லை. வேறெதனையும் விட விளையாட்டின் ஊடாக நல்லிணக்கம் சிறப்பாக சாத்தியப்படும் என்ற நம்பிக்கையுடனான வெற்றியும் கிடைத்தது. உலக வெற்றிக்கிண்ணத்தை ரக்பி அணியின் வெள்ளையினத் தலைவரிடம் கையளித்து அவரது தோளில் மண்டேலா கைபோட்டு அளவளாவுவதை சித்தரிக்கும் புகைப்படத்தில் வெளிப்படும் மனிதநேயம் பற்றி பேசாத மனிதநேய சிந்தனையாளர்களைக் காண்பது கடினம்.
நெல்சன் மண்டேலா அதிகாரபீடத்தில் அமர்ந்திருந்த காலம் குறுகியது. அவர் அதிகாரத்தால் சாதித்ததை விட அன்பால் சாதித்தது அதிகம் என்பதால் தான் அமெரிக்காவும், ரஷ்யாவும் அவரை ஒருங்கே பாராட்ட முடிந்தது. அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசும் கிடைத்தது எனலாம். மண்டேலாவின் வாழ்க்கைச் சரிதத்தைப் புரட்டிப் பார்ப்பவர்களுக்கு இவையெல்லாம் சிறுதூசு என்பதை உணர முடியும்.
இன ரீதியான, மத ரீதியான, சமூக ரீதியான வெறுப்புணர்வுக்குக் காரணம் சுயநலம் மாத்திரமல்ல. அடுத்தவர்கள் மீதான அச்சம், நம்பிக்கையீனம், புரிந்துணர்வு இன்மை போன்றவையும் தான் என்பதை இந்த மாமனிதர் புரிந்து வைத்திருந்தார். மற்ற மனிதர்கள் மீது அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதை சிந்தனையிலும், கொள்கையிலும், செயலிலும் நிரூபித்துக் காட்டினார். வெறுமனே அதிகாரத்தை நிலைநாட்டுவதை விட நேர்மையும், புரிந்துணர்வும் சிறந்தது என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார். பழிவாங்கலுக்கு பதிலாக சகிப்புத்தன்மை வெற்றிகளைத் தரும் என்பதை நடைமுறையில் வெளிப்படுத்தி நின்றார்.
தனிநபர்கள் மத்தியில் மாத்திரமன்றி இன, மத குழுக்கள், சமூகங்கள், நாடுகள், பிராந்தியங்கள் மத்தியில், நம்பிக்கையீனம், வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, குரோதம் போன்றவை மலிந்து கிடக்கும் சமகால உலகில் நெல்சன் மண்டேலாவின் கொள்கைகளும், கோட்பாடுகளும், செல்நெறியும் முன்னெப்போதையும் விட முக்கியத்துவம் பெறுகின்றன என்றால் அது மிகையில்லை. அந்த மாமனிதர் காட்டிய உதாரணங்கள் எந்தவொரு தேசத்திற்கும், சமூகக் கட்டமைப்பிற்கும் பொருந்தி வரக் கூடியவை என்பதை மறைவிற்குப் பின்னர் அவருக்கு சூட்டப்படும் புகழ் மாலைகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக