சனி, 24 மே, 2014

ரத்தவெறி ஒரு பொல்லாத சாமான்

பிறகும் போர்க்குற்ற ஆதாரங்கள் எண்டு கொஞ்சப்படங்கள் இணையத்தளங்களில வெளியாகியிருக்கு.

இந்தப் படங்களைப் பாக்கிற ஆருக்கும் துக்கம் தொண்டையைஅடைக்கும்.



வழமையைப்போல இந்தப் படங்களை இன்னும் அரசாங்கம் மறுக்கேல்ல. இவற்றைப்பற்றி தாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறம் எண்டு இராணுவத்தளபதி சொல்லியிருக்கிறார்.

சிலசமயம் இந்தப்படங்களை அவை மறுத்தாலும் அதை ஆரும் நம்பப்போவதில்லை.

போரில நம்மட கையை மீறின காரியங்கள் சில வேளை நடக்கிறதுண்டு. ஆனால், எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கெல்லோ...

அதை மீறினால்...?

அதுவே பிழையாகிப்போயிடும்.

இதில வேடிக்கை என்னெண்டால், இந்தப் படங்களையெல்லாம் இப்பிடி வைச்சிருந்து வைச்சிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுகிறது, அவையின்ரை ஆக்கள்தான்.

அதாவது, சண்டைக்களத்தில் நிண்டவை. இந்தச் சம்பவங்கள் நடந்த இடங்களில நிண்டவை.. அவையள்தான் இதையெல்லாம் விட்டுக்கொண்டிருக்கினம்.

அப்பிடியெண்டால் இந்தப் படங்கள் ஒரு சாட்சியம் எண்டால், இந்தப் படங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறவை இன்னொரு சாட்சியமாக்கும்....

அப்ப உள்ளுக்குள்ளேயே ஏதோ விளையாட்டு நடந்து கொண்டிருக்கு எண்டு சொல்லுங்கோ...

இப்பிடியெல்லாம் நடந்து கொண்டிருந்தால் இது எங்க போய் முடியுமோ? எல்லாரையும் எங்க கொண்டுபோய் விடுமோ...!

அதை விட இந்தப் படங்களை வெளியிடுற சங்கதி இப்போதைக்கு முடியாது போல இருக்கு.

இன்னும் இன்னும் புதிசு புதிசாப் படங்கள் வரவரத் தலையிடியும் வேதனையும் கூடிக்கொண்டு போகுது...

இது தனிய படங்களோட மட்டும் நிற்கும் எண்டும் சொல்லேலாது...

அதுக்கு மேல இப்பிடி நடந்தது, அப்பிடி நடந்தது எண்டெல்லாம் அவனவன் கதைக்க வெளிக்கிட்டால்... எழுத வெளிக்கிட்டால்....?

பிறகு, சிலபேற்றை கதை கோவிந்தாதான்.

அது சரி, இதையெல்லாம் இப்பிடி ஒழுங்கு படுத்தி பொருத்தமான காலம் பார்த்து வெளியில கொண்டு வாறது ஆர்?

இதைத்தான் அரசியல் எண்டு சொல்லிறது. இதுக்குப் பின்னால எல்லாம் பெரிய பிளான் இருக்குது.

அந்தப் பிளானின் படிதான் எல்லாமே நடந்து கொண்டிருக்கு.

அவன் - அமெரிக்காக்காரன் - ஆட்டுவித்தால் ஆடாதார் யாரோ...

இதொண்டும் பகிடி விடுகிற விசயமில்லை.

உயிரோட சம்மந்தப்பட்ட விசயம். போன உயிர்கள், இருக்கிற உயிர்கள், போகப்போகிற உயிர்கள் எண்டு உயிர்களோட விளையாடுகிற சங்கதி...

என்ன செய்யிறது...? கடந்த காலம் எண்டிறது எல்லாருக்கும் ஒரு கஸ்ரகாலம்தான்.

ஆனால், இந்தக் கஸ்ரகாலத்தை அனுபவிச்ச ஒருத்தனுக்கும்தான் ஒழுங்கான புத்தி வரேல்ல.

அப்பிடி நல்ல புத்தி வந்திருந்தால், இன்னும் இதை மாதிரிக் கஸ்ரகாலத்தை – சனியனை - காசு குடுத்து வாங்கிற காரியத்தை ஆரும் செய்வினமா?

மடப்பயல்கள். திரும்பத்திரும்ப விசர் பிடிச்சு அலையிறாங்கள்.

பழிக்குப் பழி. ரத்தத்துக்கு ரத்தம் எண்டு வெளிக்கிட்டால், முடிவு....? திரும்பவும் சுடுகாடுதானா?

சிலவேளை சினிமாவில இந்த மாதிரிப் பழி தீர்க்கிற விளையாட்டுச் சரிவரலாம். எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் அல்லது விக்கிரமுக்கும் பிரகாஷ் ராஜ்ஜூக்கும் இந்த விளையாட்டுப் பொருந்தலாம்.

ஆனால், நிஜவாழ்க்கையில் தன்னைச் சுட்ட எம்.ஆர். ராதாவையே எம்.ஜி.ஆர் கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினவரே தவிர, பழிக்குப்பழி தீர்க்க யோசிக்கேல்ல.

இதையெல்லாம் எப்பிடித்தான் நான் சொன்னாலும் வெங்காயத் தலைகளுக்கு இதொண்டும் ஏறவே ஏறாது.

அவைக்கு ரத்தவெறி கண்ணை மறைச்சுப்போட்டுது.

ரத்தவெறி ஒரு பொல்லாத சமான் எண்டது நூறு வீதம் உண்மை.

அந்த ரத்தவெறிதான் எல்லா அழிவுக்கும் காரணம். இந்தப் படங்கள் இதோட நிக்கட்டும்...



-வடபுலத்தான்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல