கோவை, வடகோவை மேம்பாலம் அருகில், பைப் கடை வைத்திருப்பவர் அமிர்தசாமி லூர்துராஜ். இவருக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் கணக்கு உள்ளது.
அதே வங்கியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன், கிரெடிட் கார்ட் வாங்கியுள்ளார். மொத்தம் 25 ஆயிரம் ரூபாய் வரை, அதில் பொருள் வாங்கிக் கொள்ளலாம். கார்ட் வாங்கிய நாளிலிருந்து இதுவரை, எந்த பாக்கியும் இல்லாமல் சரியாக தொகையை செலுத்தி வந்துள்ளார் லூர்துராஜ். கடந்த ஜனவரி மாதத்தில், 'கார்ட்' பயன்படுத்தியதற்கு 548 ரூபாய் பாக்கி இருந்துள்ளது. அதை செலுத்த வேண்டிய கடைசி நாள், பிப்ரவரி 15.
அந்த தொகைக்கான “செக்'கை, வங்கியின் பிரதிநிதி நேரில் பெற்றுச் சென்றார். அந்த “செக்'கை வாங்கிச் சென்றதற்காக “செக் பிக்அப்' கட்டணம் என்று 100 ரூபாய் விதித்து, அதற்கு சேவை வரி 10 ரூபாய் 30 பைசா சேர்த்து, மீண்டும் 110 ரூபாய் பாக்கி என்று ஸ்டேட்மென்ட் அனுப்பியது வங்கி நிர்வாகம். அதற்கும் மார்ச் 24இல் “செக்' கொடுத்தார் லூர்து ராஜ். அதிலும், “ஐந்து பைசா பாக்கி இருக்கிறது ஏப். 15க்குள் செலுத்த வேண்டும்' என, மீண்டும் ஸ்டேட் மென்ட் வந்தது.
இந்த தொகையை உரிய திகதிக்குள் செலுத்தாமல் இருந்தால், 'நான் பேமென்ட்' என்று கூறி, 500 ரூபாய் வட்டி சேர்க்கப்படும் என்பதால், அதை உடனடியாகச் செலுத்த முடிவு செய்தார் லூர்துராஜ். ஐந்து பைசாவை நேரடியாகச் செலுத்துவதில் சிக்கல் இருப்பதால், அந்த ஐந்து பைசாவுக்கு “செக்' கொடுத்தார் அவர். அந்த “செக்' கடந்த 8ஆம் திகதி “கிளியர்' ஆனதால், வட்டி மிரட்டலில் இருந்து தப்பித்தார் லூர்துராஜ். ஒரு வேளை, “ஐந்து பைசாதானே...' என்று அதைச் செலுத்தாமல் இருந்திருந்தால், அதற்கு 500 மடங்கு அதிகமாக “தண்டம்' அழுதிருக்க வேண்டும். ஐந்து பைசாவுக்கு அவர் கொடுத்த, “செக் லீப்'க்கு வங்கி நிர்வாகம் வசூலிக்கும் தொகை மூன்று ரூபாய்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக