காற்றில் கலந்து மிதக்கும் மகரந்தம் பெண் பூவை அடைந்து அதைக் கருத்தரிக்க வைக்கும். இந்த முறையில் மகரந்தங்களின் சேதாரம் அதிகமாக இருக்கும். சில பூக்கள் பூச்சிகளை தபால்காரர்களைப் போல பயன்படுத்துகின்றன. பூச்சிகளுக்குப் பிடித்தமான தேனை வழங்கிக் கவருகின்றன. தேன் பருகும் வண்டுகள் கூடவே மகரந்தங்களையும் சுமந்து கொண்டு பெண் பூவை தேன் குடிக்கச் செல்லும் போது அதனிடம் வழங்கி விடுகின்றன.
ஓர்கிட் வகையைச் சேர்ந்த செடிகளின் பூக்கள் விநோதமான உத்தியைக் கையாளுகின்றன. ஒரு பூ குறிப்பிட்ட பூச்சி இனத்தின் பெண் பூச்சியைப் போல வாசனையை வெளியிடுகிறது. மோப்பம் பிடித்துக் கொண்டு வரும் ஆண் பூச்சி, பூவைப் பூச்சி என நினைத்துச் செயற்படும் போது உடலெங்கும் மகரந்தத்தைப் பூசிக் கொண்டதுதான் மிச்சமாகிறது. அதே தவறை திரும்ப இன்னொரு பூவில் செய்யும் போது அந்தப் பூவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது.
இந்த தந்திரம் ஆபத்தானதாயிற்றே என்று தாவரவியல் அறிஞர்கள் கருதுவதுண்டு. காரணம், குறிப்பிட்ட பூச்சியின் உறவை நம்பி வாழ்வதைக் காட்டிலும் பலவகை பூச்சிகளின் நட்பு பல மடங்கு இலாபமாக இருக்குமே என்பது அவர்கள் நினைப்பு. ஆனால் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் பூக்கள் தமக்கென்று பிரத்தியேகமான தபால்காரப் பூச்சியை மகரந்தத்தை பொதி செய்து விநியோகம் செய்வதன் மூலம் மகரந்தச் சேதாரத்தைத் தவிர்க்கின்றன. அதேசமயம் நிச்சயமான பலனை அடைகின்றன என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக