திங்கள், 15 நவம்பர், 2010

ரிஸானாவின் மன்னிப்புக்கு வீட்டு எஜமானருடன் கலந்து பேசுங்கள்: சவூதி மன்னர்

சவூதி அரேபியாவில் ரிஸானா நபீக் என்ற பணிப்பெண் பணிபுரிந்த வீட்டு எஜமானருடன் கலந்துபேசி ரிஸானாவுக்கு பொது மன்னிப்பைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ், அந்நாட்டின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

மரண தண்டனையிலிருந்து ரிஸானாவை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அனுப்பிய கருணை மனுக் கோரிக்கைகளையடுத்தே சவூதி மன்னர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

மூதூரைச் சேர்ந்த பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கிற்கு ரியாத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இருந்தபோதும் பல்வேறு காரணங்களால் அவருக்கு மன்னிப்பளிக்குமாறு ஹொங்கொங்கை தளமாக கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, நியூயோர்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஜெனிவாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை என்பனவும் பல்வேறு புத்திஜீவிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்விடயத்தை ராஜதந்திர ரீதியில் அணுகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்தது. இதனடிப்படையில், ரிஸானாவுக்கு கருணைகாட்டுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸிற்கு கடிதமொன்றை அனுப்பினார். ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரரக அதிகாரிகளினால் மன்னர் மாளிகையிடம் ஒப்படைக்கப்பட்ட இக்கடிதம் தொடர்பாக சவூதி மன்னர் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சவூதி சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு மன்னிப்பை பெற்றுக் கொடுப்பதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும் வேறுசில காரணங்களினாலும், ரிஸானா விடயத்தில்சவூதியின் நிலைப்பாடு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எவ்வாறிருந்தபோதிலும் அங்கிருந்து கிடைக்கும் பிரதிபலிப்புகள் சாதகமானவையாக தோன்றுவதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கவும் விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்குமாக, அவர் பணிபுரிந்த வீடு எஜமானரும் மரணித்த குழந்தையின் பெற்றோருமாகிய அல் ஒடாபி தம்பதிகளுடன் இது விடயமாக கலந்துரையாடுமாறு சவூதி அதிகாரிகளுக்கு மன்னர் பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் பாதிக்கப்பட்ட பெற்றோர் சம்மதிக்கும் பட்சத்தில் இரத்த உறவுக்கான நஷ்ஈட்டுத் தொகையை வழங்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வீரகேசரி
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல