திங்கள், 3 ஜனவரி, 2011

கதிர்காமத்திற்கு பயணம் செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த இ.போ.ச.ஊழியர்கள் மீது புத்தள பகுதியில் வைத்து சிலர் தாக்குதல்!

கதிர்காமத்திற்கு பயணம் செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த இ.போ.ச.ஊழியர்கள் மீது புத்தள பகுதியில் வைத்து சிலர் தாக்குதல் நடத்தியதுடன் அந்த பஸ்ஸின் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தியுமுள்ளனர்.

இதுபற்றி தெரியவருவதாவது:

வவுனியா டிப்போவில் புதிதாக திருத்தப்பட்ட இ.போ.ச.பஸ்ஸை கதிர்காமத்தில் ஆசீர்வதிப்பதற்காக அந்த டிப்போவின் 29 ஊழியர்கள் அங்கு சென்றிருந்தனர்.

டிசம்பர் 31 ஆம் திகதி இவர்கள் வவுனியாவுக்கு வரும்போது புத்தள பகுதியில் தேநீர் அருந்துவதற்காக பஸ்ஸை நிறுத்தி உணவுக் கடையில் தேநீர் அருந்தச் சென்றனர்.

இவர்கள் தமிழில் பேசியதைக் கண்ட பெரும்பான்மை இன தம்பதியினர் இவர்களை அச்சுறுத்தியும் கெட்ட வார்த்தைகளால் பேசியதுடன் புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் கூறி தாக்கியுள்ளனர்.

சிலர் வவுனியா டிப்போ பஸ்ஸின் கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளதுடன் பஸ்ஸை தீ மூட்டி எரிக்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.

பின்னர் வேறு இ.போ.ச. டிப்போ ஊழியர்கள் அங்கு வந்து பஸ்ஸை உடைத்தவர்களை அங்குள்ள பொலிஸாரிடம் பிடித்து ஒப்படைத்தனர்.

அதன் பின்னர் இவர்கள் இ.போ.ச. பஸ்ஸில் வவுனியா நோக்கிப் புறப்பட்டு வரும்போது ஆட்டோ ஒன்றும் வான் ஒன்றும் வீதியின் குறுக்கே நிறுத்தப்பட்டன.

அவற்றில் பயணம் செய்து வந்தவர்கள் அவற்றிலிருந்து கீழே இறங்கி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது நண்பர்களை விடுவிக்குமாறு கோரி மிரட்டியுள்ளனர்.

தமது நண்பர்களை விடுவிக்காவிட்டால் வவுனியா டிப்போ ஊழியர்களை கொல்லப் போவதாகவும் பஸ்ஸை தீ வைத்து எரிக்கப் போவதாகவும் மிரட்டினார்கள்.

வவுனியா டிப்போ சிங்கள ஊழியர்கள் சிலரும் கதிர்காமம் சென்று வந்தவர்களுடன் காணப்பட்டதால் அவர்கள் அந்த வன்முறைக் கும்பலுடன் சமரசம் பேசி அங்கிருந்து தப்பி வந்தனர்.

கடந்த மாதம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பருத்தித்துறை இ.போ.ச. டிப்போ பஸ் கட்டான பகுதியில் மறிக்கப்பட்டு பயணிகள் சிலரை தாக்க முயன்றதும் குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல