வெள்ளி, 5 அக்டோபர், 2012

மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன

2008-2009 குளிர்காலப் பகுதியில் முழு உலகத்தின் கவனமும் காசா மீதான இஸ்ரேலிய படையெடுப்பு மீது குவிந்திருந்தது. ஆனால் இந்தக் காலப்பகுதியில் சிறிலங்காவில் தீவிரம் பெற்றிருந்த உள்நாட்டுப் போரை உலகம் கவனிக்கத் தவறிவிட்டது.

தமிழ்ப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் இடையில் தொடரப்பட்ட நீண்ட கால யுத்தத்தின் இறுதிக் கட்டத்திற்குள் அகப்பட்டுக் கொண்ட தமிழரான, வர்த்தக நிலைய உரிமையாளர் கருவும் அவரது துணைவியாரான கௌரியும் தாம் சந்தித்த கசப்பான, திடுக்கிடும் தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மையத்தில் வாழ்ந்த இவர்கள் மீது குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

பட்டினிச் சாவை எதிர்நோக்கினர். குறிப்பிட்ட பிரதேசம் ஒன்றிற்குள் இவர்கள் சிறைப்படுத்தப்பட்டதுடன், சாவின் விளிம்பில் இருந்தனர்.

சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டுப் போர் இறுதிக் கட்டத்தை அடைந்த போது, இரத்தம் தோய்ந்த அந்த யுத்தத்தில் அகப்பட்டு தப்பிப் பிழைத்த 10 தமிழர்களின் நேரடி அனுபவங்களை சிறிலங்காவில் கடமையில் ஈடுபட்ட பி.பி.சி சேவையின் முன்னாள் செய்தியாளரான பிரான்செஸ் ஹரிசன் [Frances Harrison] நேர்காணல் மேற்கொண்டிருந்தார்.

இவ்வாறு தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பத்து பேரில் கரு மற்றும் கௌரி ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

பிரான்செஸ் ஹரிசன் தான் அண்மையில் எழுதி வெளியிட்ட புத்தகத்தில் [மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன] இவர்களது அனுபவங்களைப் பதிவுசெய்துள்ளார்.

போரிலிருந்து மீண்டவர்கள் கூறும் சம்பவங்கள் வாசிப்பவர்களின் மனங்களை ஆழமாக குழப்புகின்ற, ஆழமாக சிந்திக்க வைக்கின்றவையாக உள்ளன.

சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் தமிழ்ப் புலிகளுக்கும் இடையில் தொடரப்பட்ட யுத்தமானது இரண்டரை பத்தாண்டுகளாக நீடித்திருந்த வேளையில், 2008ல் இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முழு முயற்சியுடன் சிறிலங்கா அரசாங்கம் வடக்கு நோக்கி தனது படைகளை பெருமெடுப்பில் முன்னகர்த்தியது.

இந்த யுத்தத்தில் தமிழ்ப் பொதுமக்கள் அகப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் எந்தவொரு மனிதாபிமானத்தையும் காண்பிக்காது இரு தரப்பும் யுத்தத்தில் ஈடுபட்டன.

பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதுடன், யுத்த வலயத்திலிருந்து பொது மக்கள் வெளியேறுவதற்கு புலிகள் அனுமதி வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது. பொது மக்களைக் குறிவைத்து குண்டுத் தாக்குதல்கள் மற்றும் எறிகணைகளை வீசியமை, தமிழ் மக்களை பெருமளவில் கொன்று குவித்தமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கப் படைகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கௌரி பெண் மகவொன்றை பதுங்குகுழியில் பெற்றெடுத்தார். இவர் போசாக்கற்றவராக இருந்ததால் இவரது குழந்தைக்கு கூட தாய்ப்பாலை ஊட்டமுடியாதிருந்தார்.

தனது தாயார் சிறிலங்காப் படைகளின் எறிகணை வீச்சொன்றில் கொல்லப்பட்டதற்கு கரு சாட்சியமாக உள்ளார். அத்துடன் இதில் கரு மிக மோசமாக காயமடைந்திருந்தார்.

எங்கும் சாவு நடந்தது. சாவு என்பது மிகச் சாதரணமானதாக இருந்தது.

இவ்வாறானதொரு மிகக் கொடிய யுத்தத்திலிருந்து தப்பிப் பிழைத்த கரு மற்றும் கௌரி ஆகிய இருவரும் தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றில் வாழ்கின்றனர்.

பிரித்தானியாவின் சனல் 04 தொலைக்காட்சி சேவையால் வெளியிடப்பட்ட ‘சிறிலங்காவின் கொலைக் களங்கள்’ என்ற ஆவணத்தில் காண்பிக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் என்பன உண்மையானவை என்பதை ஐ.நா வல்லுனர் குழுவால் கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கை உறுதிப்படுத்துகின்றது.

தற்போது பிரான்செஸ் ஹரிசன் எழுதியுள்ள ‘Still Counting the Dead’ [மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன] எனும் புத்தகம் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தில் அகப்பட்டு தப்பிப் பிழைத்தவர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்கின்ற புதிய ஆவணமாக காணப்படுகிறது.

இதன் ஊடாக நேர்காணல் மேற்கொள்ளப்பட்ட 10 தமிழர்களின் அனுபவங்கள், யுத்தத்தில் அகப்பட்டுக் கொண்ட ஒட்டு மொத்த தமிழினமும் எவ்வாறானதொரு கொடூரத்தை அனுபவித்திருக்கும் என்பதை கோடிட்டுக் காட்டுகின்றன.

சிறிலங்கா அரசாங்கம் தான் மேற்கொண்ட யுத்தத்தின் விளைவு வெளியுலகிற்கு தெரியாமல் மறைப்பதற்காக வன்னியில் பணியாற்றிய ஐ.நா நிறுவனங்களை செப்ரெம்பர் 2008ல் அங்கிருந்து வெளியேற்றியது. தான் சிறிலங்காவை விட்டு வெளியேறிய பின்னர் தான் தனது வேலையிலிருந்து விலகி, வன்னியில் பாதுகாப்பு வழங்காது தவிக்க விட்டு வந்த மக்களின் நிலை தொடர்பாகவும் இதற்கு ஐ.நா பொறுப்பேற்க வேண்டும் எனவும் தனது ஆதங்கத்தை வெளியிட்டதாகவும் வன்னியில் பணியாற்றிய ஐ.நா பணியாளரான டிக்சி என்பவர் தெரிவித்தார்.

சிறிலங்காவின் வடக்கில் என்ன நடக்கின்றது என்பதை உலகம் அறிந்திருக்கவில்லை.

பலம் பொருந்திய பயங்கரவாத அமைப்பொன்றை அழிப்பதற்கான யுத்தம் மேற்கொள்ளப்படுகின்றது என்பது தொடர்பில் பெரும்பாலான ஐ.நா பணியாளர்கள் மகிழ்ச்சி கொண்டிருக்கலாம் என பிராக்சிஸ் ஹரிசன் கருதுகிறார்.

அங்கே நடந்த எறிகணை வீச்சுக்கள் தொடர்பான ஒளிப்படங்களை செய்மதிகள் மூலம் ஐ.நா பெற்றுக் கொண்ட போதிலும், குருதி தோய்ந்த அந்த யுத்தத்தின் முழுமையான விளைவை எவராலும் அறியமுடியவில்லை.

யுத்த வலயத்தில் பணியாற்றிய உதவி வழங்கும் அமைப்புக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டன. ஊடகவியலாளர்கள் அங்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டனர்.

மனிதாபிமான பேரழிவுகள் தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமானது பீதியை பரப்புவதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சாட்டியது. பொது மக்களுக்கு இழப்பு ஏற்படாதவாறு ‘மனிதாபிமான மீட்பு நடவடிக்கை’ மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா இராணுவம் தெரிவித்தது.

தமிழ்ப் பொது மக்களின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட்ட போதிலும், தொடர்ச்சியாக அவை இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

பொதுமக்களை இலக்கு வைத்து அனைத்துலகச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் வீசப்பட்டன. அத்துடன் யுத்த வலயங்களில் செயற்பட்ட வைத்தியசாலைகள் மீதும் சிறிலங்கா இராணுவத்தால் திட்டமிட்ட தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

2009ன் முன் ஐந்து மாதங்களிலும் 40,000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனை விட அதிகமாக இருக்கலாம் எனவும் ஐ.நா புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வே தொடக்கம் அவுஸ்திரேலியா வரைந்து பரந்து வாழும், யுத்தத்திலிருந்து தப்பிப் பிழைத்த தமிழர்களுடன் பிரான்செஸ் ஹரிசன் நேர்காணல்களை மேற்கொண்டுள்ளார்.

சிறிலங்காவிலுள்ள தனது ஊடக நண்பர்களின் உதவியுடன் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான செய்திகளை ஹரிசன் வெளியிட்டிருந்தார்.

2009ல் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிய போது, சிறிலங்கா அரசாங்கம் தான் புரிந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கான அனுமதியை மறுத்த போது, யுத்தத்திலிருந்து மீண்டெழுந்தவர்களின் கதைகளை வெளிக் கொண்டு வரவேண்டிய தேவையுள்ளதை பிரான்செஸ் ஹரிசன் உணர்ந்து கொண்டார்.

“அனைத்துலக சமூகம் சில நிலைப்பாட்டை எடுக்கும் என நான் நினைத்தேன். புலிகளை அழித்ததற்காக சிறிலங்கா அரசாங்கத்தைப் பாராட்டுவதற்குப் பதிலாக யுத்தக் குற்றங்களை உறுதிப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

யுத்தத்தின் போது துன்பங்களைச் சந்தித்த மக்கள் நீதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணை மூலமோ அல்லது உண்மையான மீளிணக்கப்பாட்டு நடவடிக்கைகள் மூலமோ பாதிக்கப்பட்ட மக்கள் நீதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஒரு தரப்பை மட்டும் பழிசுமத்த முடியாது.

தமிழ்ப் புலிகளும் இதற்குப் பொறுப்பாளிகளாவர். இதனை அங்கீகரிக்க வேண்டிய தேவையுள்ளது. இதன் மூலமே மக்கள் முன்னோக்கி நகரமுடியும்” என பிரான்செஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

சுயாதீன, அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான்கிமூனால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழு கோரியிருந்தது.

ஆனால் செயலாளர் நாயகம் போர்க் குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கான அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல