வியாழன், 15 நவம்பர், 2012

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள்: பகுதி-1

தமிழ் ஊடகங்கள் சில செய்திகளை தற்போதும் ஊதிப் பெருப்பித்து வருகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கம் கெரில்லாத் தாக்குதல் முறைகளில் இருந்து மரபுவழி ரீதியான தாக்குதல் வழிமுறைகளுக்கு மாறிய சமயங்களில் விடுதலைப்புலிகளினுடைய இராணுவ பலத்தை எவருமே மதிப்பிட முடியாத ஒரு சூழல் காணப்பட்ட போதிலும், தமிழ் ஊடகங்கள் கூடுதலான மிகைப்படுத்தல்களுடன் கூடிய விதத்தில் விடுதலைப் புலிகளினுடைய ஆயுத பலத்தையும் ஆட்பலத்தையும் மெருகூட்டி வந்தன. இதன் விளைவாக விடுதலைப்புலிகள் தாங்கள் பெரியளவில் வளர்ச்சி கண்டுவிட்டதாக எண்ணிக்கொண்டு இலங்கை இராணுவத்தினுடைய இராணுவ பலத்தை மதிப்பிடத் தவறிவிட்டனர். இதன் விளைவுகளை முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் சந்திக்க முடிந்தது.

இருந்தபோதிலும், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் என்று கூறப்படுகின்ற அன்ரன் பாலசிங்கம் அரசாங்கத்தினுடைய படைபலம் தொடர்பில் அச்சம் கொண்டிருந்ததுடன் தமிழ் ஊடகங்களினுடைய பொய்யான பரப்புரைகள் தொடர்பிலும் விடுதலைப் புலிகளின் தலைமை தொடர்பிலும் சில விமர்சனக் கருத்துகளை ஆரம்ப காலத்தில் தெரியப்படுத்தியிருந்த போதிலும், தலைமை இதனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. இதன் விளைவாக விடுதலைப் புலிகளின் தலைவரிற்கும் அன்ரன் பாலசிங்கத்திற்குமிடையே ஒரு முறுகல் நிலை நிலவி வந்ததை அன்றைய நாட்களில் விடுதலைப் புலிகளின் தளபதிகள் முணுமுணுக்கத் தவறவில்லை.குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற ஒரு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அடிக்கடி வன்னிப் பகுதிக்கு வந்து விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை சந்திப்பதுடன் மட்டும் நிற்காமல் அன்ரன் பாலசிங்கத்துடனும் தொலைபேசியில் அடிக்கடி தொடர்புகளைப் பேணிவந்தார். அத்துடன் அன்ரன் பாலசிங்கத்தை லண்டனிற்குச் சென்று சந்தித்து இலங்கையில் சமாதான காலத்தில் தலைவர் பிரபாகரனை ஒரு பத்திரிகையாளர் மாநாட்டின் ஊடாக அனைத்து பத்திரிகையாளர் முன்னிலையிலும் தோற்றிவிக்க வேண்டுமென்றும் இதன் ஊடாக உலகில் தலைவரின் மதிப்பு மேலோங்குமென்றும் பாலசிங்கத்திற்கு எடுத்தியம்பியதுடன், இதன் ஊடாக தமிழர்களினுடைய பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்படுமெனவும் பாலசிங்கத்திற்கு எடுத்துக் கூறப்பட்டது.

குறித்த பத்திரிகையாளரிற்கும் பாலசிங்கத்திற்கும் இருந்த நெருக்கம் காரணமாக குறித்த பத்திரிகையாளரான வித்தியாதரன் கூறியதை பாலசிங்கமும் யோசிக்காமல் ஏற்றுக்கொண்டதுடன் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தவேண்டியதன் தேவை தொடர்பில் தலைவரிற்கு மிகவும் பவ்வியமாக எடுத்துக் கூறினார். இதனை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்த பிரபாகரன் குறித்த பத்திரிகையாளர் இதில் முன்னிற்பதால் தனக்கு சந்தேகம் உள்ளதாக பொட்டம்மானிடமும், தமிழ்ச்செல்வனிடமும் கூறியபோது தமிழ்ச் செல்வனும் குறித்த பத்திரிகையாளரிற்கு நற்சான்றிதழ் வழங்கினார். இதனை அடுத்து பாலசிங்கத்தின் ஆலோசனைப்படி பத்திரிகையாளர் மாநாட்டிற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தயாரானது. இந்த பத்திரிகையாளர் மாநாடே தங்களது இயக்கத்தை அழிக்கப்போகின்றது என்பதை ஆரம்பத்தில் உணர்ந்து கொள்ளாத விடுதலைப்புலிகள் தடல்புடலான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்பிரகாரம் வெளிநாட்டு, உள்நாட்டு பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் வன்னியில் களை கட்டியதுடன் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே பல பத்திரிகையாளர்கள் வன்னிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு அழைக்கப்பட்டவர்கள் வட்டக்கச்சியிலுள்ள விடுதலைப்புலிகளின் சொகுசு பங்களா ஒன்றில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டதுடன் பத்திரிகையாளர் மாநாடு இடம்பெறும் நாளன்று கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்டு மீண்டும் கிளிநொச்சியிலுள்ள தூயவன் அரச அறிவியல் கல்லூரியில் புலிகளால் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மண்டபமொன்றில் தங்கவைக்கப்பட்டு அங்கு பத்திரிகையாளர் மாநாடும் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் இந்திய பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் துருவித்துருவி கேள்விக்கணைகளை தொடுத்தபோது ஒரு கட்டத்தில் பிரபாகரன் இக்கொலையை தாங்களே செய்ததாக ஒப்புக்கொண்டு அது ஒரு துன்பியல் நிகழ்வு என வெளிப்படுத்திய செய்தியானது உலகெங்கும் உடனடியாக பரவியதுடன், இதுவரைநாளும் சந்தேகக் கண்ணுடன் இருந்த இந்திய புலனாய்வுத் துறையான றோ’ அமைப்பானது மீண்டும் உசார் அடையத் தொடங்கியது. ஏற்கனவே றோ அமைப்பிற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ராஜீவ் கொலை தொடர்பில் சந்தேகம் இருந்தபோதிலும், அதனை 100 வீதம் உறுதிப்படுத்த முடியாமல் திண்டாடி வந்தது. 99 வீதம் உறுதி செய்யப்பட்டிருந்தாலும் 100 வீத உறுதிப்படுத்தலுக்காக காத்திருந்த றோ அமைப்பிற்கு புலிகளின் தலைவர் கூறிய கூற்று நெஞ்சில் பால் வார்த்தது போல் இருந்தது.

இதனையடுத்து ஏற்கனவே ஒழுங்கு படுத்தியிருந்த குறித்த யாழ்ப்பாண ஊடகவியலாளரைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட அயலக புலனாய்வு அமைப்பினர், அவரிற்கு தமது நன்றிகளை தெரிவித்ததுடன் தொடர்ந்தும் தங்களுடன் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர். அத்துடன் அவர் செய்த மிகப்பெரும் பணிக்கான வெகுமதியாக ஒரு பெரியளவிலான பணமுடிச்சும் குறித்த ஊடகவியலாளரிற்கு பரிமாறப்பட்ட விடயம் புலிகளுக்குப் பின்னர் தெரியவந்தது.

தற்போது இந்த ஊடகவியலாளரே தாங்கள் தான் தமிழினத்தின் காவலர்கள் எனவும் தமிழினத்தை தங்களது பத்திரிகைதான் காத்துவருகிறது என்று கூறுவதுடன் மட்டும் நிற்காமல் வரப்போகும் வடமாகாணசபைத் தேர்தலில் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவேண்டுமென கூட்டமைப்பிடம் வலியுறுத்தியுள்ளதுடன் தனது உறவினரான நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாகவும் வலியுறுத்தி வருகிறார். இவரின் அத்துமீறல் தொடர்பில் சம்பந்தன் அச்சமடைந்துள்ள போதிலும், நிதானமான காய்நகர்த்தலுடன் இவரை அவுட்பண்ணலாமென சம்பந்தன் கணக்குப் போட்டுள்ளார். புலிகளை அழித்தவரிற்கு எங்களை அழிப்பது பெரிய வேலையில்லையென சம்பந்தன் தனது கட்சி உறுப்பினரிடையே நையாண்டிச் சிரிப்புடன் கூறி வருகிறார்.

உண்மையில் விடுதலைப் புலிகளின் உடைவு என்பது கருணா விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்ததுடன் ஆரம்பமாகியது என்பதை விட, பிரபாகரனிற்கும் அன்ரன் பாலசிங்கத்திற்கும் இடையில் உருவான முறுகலை அடுத்தே ஆரம்பமாகியது எனலாம். இந்த முறுகலானது விடுதலைப் புலிகளால் கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டை அடுத்தே ஆரம்பமாகியது. ராஜதந்திர ரீதியான கேள்விகளின் ஊடாக தன்னை ஊடகவிய லாளர்கள் மடக்கி விடுவார்கள். இதனால் ஆபத்து உருவாகுமென பிரபாகரன் அச்ச மடைந்த போதிலும், பாலசிங்கம் தெம்பூட்டி பிரபாகரனை ஊடகர்கள் முன்னிலையில் தோன்றவைத்து சிக்கலில் மாட்ட வைத்து விட்டதாக இந்த ஊடகச் சந்திப்பின் பின்னர் பிரபாகரன் பாலசிங்கத்தை கடிந்து கொண்டார்.

இதன் பின்னணியில் இருந்து யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட றோவின் கையாளாகச் செயற்பட்டவர் குறித்த ஊடகவியலாளர்தான் என புலிகள் இனங்கண்டனர். இந்த ஊடகவியலாளர் மீது ஒரு கண் வைக்குமாறு பொட்டம்மானை பணித்த பிரபாகரன், பாலசிங்கம் தனது தொடர்பிற்கு வந்தால் தொடர்பை கொடுக்க வேண்டாமெனவும் தமிழ்ச் செல்வனிடம் கட்டளை பிறப்பித்ததுடன் பாலசிங்கத்தினுடனான தொடர்புகளை முற்றாகத் துண்டித்தார்.

அப்படியானால் பாலசிங்கம் ஏன் நோய் வாய்ப்பட்டு இறந்தார்? அவரிற்கு விடுதலைப் புலிகள் ஏன் தேசத்தின் குரல்’ என்ற பட்டத்தை இறப்பின் பின் வழங்கினார்கள் என்ற கேள்விகள் உங்கள் மனங்களில் எழலாம். அதன் பின்னணியில் பல முடிச்சுக்கள் உள்ளன. அவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

வே.அர்ச்சுணன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல