வியாழன், 21 மார்ச், 2013

இலங்கையில் இருந்து சென்னைக்கு, நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த, பெண் உட்பட இருவர் கைது!

இலங்கையில் இருந்து சென்னைக்கு, நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த, பெண் உட்பட இருவரை, சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 12.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், பறிமுதல் செய்யப்பட்டது.

கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு சென்னை வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலையத்தில், சுங்கத் துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது இலங்கை, கண்டி பகுதியைச் சேர்ந்த பாத்திமா ரியானா, 37, என்ற பயணி மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறினார். இதையடுத்து, உடமைகள் பரிசோதிக்கப்பட்டன.


பார்த்திமா ரியானாவின் டிராவல் பையில் இருந்த, "ஜிப்' மீது சந்தேகம் ஏற்படவே, அதை பிரித்து, அதிகாரிகள் சோதித்தனர். இதில், சுத்த தங்கத்தை, "ஜிப்' போன்று செய்து, அதில் கருப்பு நிற பெயின்ட் பூசியிருப்பது தெரிய வந்தது. அதே விமானத்தில், கொழும்புவைச் சேர்ந்த, முகம்மது சவுகத் அலி, 35, என்ற பயணி வந்தார். அவரை சோதனை செய்ததில், அவர் அணிந்திருந்த பெல்ட் ஊக்கு மீது, சந்தேகம் ஏற்பட்டது. கழற்றி பார்த்த போது, சுத்த தங்கத்தில் செய்யப்பட்ட ஊக்குக்கு, கருப்பு நிற பெயின்ட் அடித்திருப்பது தெரிய வந்தது. இரண்டு பேரிடமும் இருந்து கைப்பற்றப்பட்ட, 420 கிராம் எடை கொண்ட தங்கத்தின் மதிப்பு, 12.5 லட்சம் ரூபாய். சமீப காலமாக இலங்கையில் இருந்து தங்கம் கடத்தல் குறைந்திருந்தது. தற்போது, மீண்டும் துவங்கியுள்ளது.


கடத்தலில் தற்போது பிடிபட்டுள்ளவர்கள் கையாண்ட முறை, புதியது என, சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரும், சுற்றுலா விசாவில், சென்னை வந்தவர்கள். "குருவி'களாக தான் செயல்பட்டுள்ளனர். கடத்தல் கும்பலின் பின்னணி குறித்து, விசாரணை நடந்து வருகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல