‘ஒளிவிளக்கு’ படத்தில் ஸ்டைலான எம்.ஜி.ஆர்.
எம்ஜிஆர் 100 | 16 - அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புக்கு சொந்தக்காரர்!
M.G.R. முதல்வராக அரியணையில் அமரும் வரை அவர்தான் தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும்; அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும்; நம்பர் 1 ஹீரோவாகவும் இருந்தார். நாடகத்தில் நடித்து, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து, சாதாரண நடிகராக அறிமுகமாகி, துணை பாத்திரங்களில் நடித்து, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து நம்பர் 1 இடத்தை அவர் பிடித்தது ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் அல்ல. அதற்கு பின்னால் இருந்தது அவருடைய ஈடுபாடு மிகுந்த திட்டமிட்ட கடும் உழைப்பு.
எம்.ஜி.ஆரின் 100-வது படம் ஜெமினியின் ‘ஒளிவிளக்கு’. எஸ்.எஸ்.வாசன் தயாரித்தார். எம்.ஜி.ஆரின் முதல் படமான ‘சதிலீலாவதி' கதையை எழுதியவர் வாசன். ஜெமினி பேனரில் அவர் தயாரித்த படமே எம்.ஜி.ஆரின் 100வது படமாகவும் அமைந்தது சிறப்பு. இந்தியில் நடிகர் தர்மேந்திரா நடித்த ‘பூல் அவுர் பத்தர்’ என்ற படமே தமிழில் ‘ஒளிவிளக்கு’ ஆக மாறியது.
படத்தில் ஒரு காட்சியில் தீ பிடித்து எரியும் வீட்டில் சிக்கிக் கொண்டு தவிக்கும் குழந்தையை எம்.ஜி.ஆர். காப்பாற்றுவார். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடும் நிலை யில், அவரை காப்பாற்ற இறைவனிடம் மன்றாடி சவுகார் ஜானகி பாடும்
விழா ஒன்றில் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனுடன் எம்.ஜி.ஆர்.
‘ஆண்டவனே உன் பாதங் களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...’
பாடல் 1984-ல் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
‘ஒளிவிளக்கு' படத்தில் இன்னொரு விசேஷம். எம்.ஜி.ஆர். மது குடிப்பது போன்ற காட்சி அமைப்பு. படங்களில் கூட சிகரெட், மதுவை தொடாத எம்.ஜி.ஆர். குடியின் தீமையை உணர்த்துவதற் காக, தானே குடிப்பது போல நடித்த ஒரே படம். குடியின் தீமையை உணர்த்தும் வகையில்
‘தைரிய மாக சொல் நீ மனிதன்தானா? நீ தான் ஒரு மிருகம். இந்த மதுவில் விழும் நேரம்...’
பாடலில் எம்.ஜி.ஆரின் மனசாட்சி அவர் வடிவில் மேலும் 4 பேராக; மொத்தம் 5 எம்.ஜி.ஆர்கள் பல வண்ண உடைகளில் திரையில் தோன்றும் காட்சியில் தியேட்டர் இரண்டுபடும்.
இப்போது போல எல்லாம் அப்போது சினிமாவில் தொழில்நுட்பம் முன்னேறவில்லை. ‘மாஸ்க்' முறையில் ஒவ்வொரு எம்.ஜி.ஆராக இந்தக் காட்சியை எடுத்திருப்பார்கள். காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, காலையில் இருந்து இரவு முதல் பல நாட்கள் இந்தப் பாடல் காட்சிக்காக எம்.ஜி.ஆர். மெனக்கெட்டார்.
பாடல் காட்சி முழுவதும் படமாக்கப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவிலேயே ரஷ் போட்டு பார்க்க வேண்டும். படத்தின் தயாரிப்பு வேலை களை எஸ்.எஸ்.வாசனின் மகனும் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியராக இருந்தவரும் ஊழியர்களால் மரியாதையாக ‘எம்.டி’ என்று அழைக்கப்பட்டவரு மான எஸ்.பாலசுப்ரமணியன் கவனித்து வந்தார். பின்னர், எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்' படத்தையும் இவர்தான் இயக்கினார்.
எம்.ஜி.ஆருடன் எஸ்.எஸ்.வாசன், எஸ்.பாலசுப்ரமணியன்.
பாடல் காட்சிக்காக காலையில் இருந்து இரவு வெகு நேரமாகியும் நடித்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். களைப்பு காரணமாக, பாடல் காட்சியின் ரஷ் பார்க்காமலேயே நள்ளிரவில் வீட்டுக்குப் புறப்பட்டார். ‘‘ரஷ் பார்த்துவிட்டு எப்படி வந்திருக்கிறது என்று எனக்கு போன் பண்ணி சொல்லுங்கள்’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.
சிறிய அரங்கில் ரஷ் பார்த்தபோது ‘தைரியமாக சொல் நீ... ’
பாடல் காட்சி சிறப்பாக வந்திருந்தது. உடனே, ‘‘எம்.ஜி.ஆருக்கு போன் செய்து நல்லா வந்திருக்குன்னு சொல்லிடுப்பா..’’ என்று உதவியாளரிடம் கூறினார் பாலசுப்ரமணியன். அப்போது, பின்னாலிருந்து அவரது தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தபோது புன்னகையுடன் நின்றிருந்தார் எம்.ஜி.ஆர்.
‘ஒளிவிளக்கு’ படத்தில் எம்.ஜி.ஆருடன் சவுகார் ஜானகி.
விஷயம் என்னவென்றால், களைப்பால் வீட்டுக்குக் கிளம்பிய எம்.ஜி.ஆருக்கும் பாடல் காட்சி எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க ஆசை. அதனால், களைப்பை உதறிவிட்டு ரஷ் திரையிடும் அரங்குக்குள் வந்து, படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக பின்னால் அமர்ந்திருக்கிறார். தொழிலில் அவ்வளவு ஆர்வம். அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு!
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’ சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.’ விஜயா கம்பைன்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’ ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம். ஜெமினி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’. சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக் ஷாக்காரன்’. தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’. இந்த எல்லா படங்களிலும் கதாநாயகன் வண்ணமிகு நாயகன் எம்.ஜி.ஆர்.
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
எம்ஜிஆர் 100 | 17 - நிழலில் எதிரிகள்; நிஜத்தில் நண்பர்கள்
M.G.R. பற்றி பேசினால் நம்பியார் பற்றி பேசாமல் இருக்க முடியாது. எம்.ஜி.ஆர். படங்களில் வில்லனாக நம்பியார் வந்த பிறகுதான் படத்தில் விறுவிறுப்பு கூடும். படத்தில்தான் எம்.ஜி.ஆருக்கு அவர் வில்லனே தவிர, உண்மையில் நெருங்கிய நண்பர். எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி அழைக்கும் உரிமை பெற்ற ஒரு சிலரில் நம்பியாரும் ஒருவர். ரொம்ப ஜாலியான பேர்வழியும் கூட. அவரது நகைச்சுவையை எம்.ஜி.ஆரும் விரும்பி ரசிப்பார். இருவரும் நிழலில் எதிரிகள். நிஜத்தில் நண்பர்கள்.
எம்.ஜி.ஆர். கத்தி சண்டைக் காட்சிகளில் நடிப்பதை பார்த்து அவரை ‘அட்டை கத்தி வீரர்’ என்றெல்லாம் அக்காலத்தில் விமர் சனங்கள் எழுந்தது உண்டு. ஆனால், உண்மை யான கத்தியைக் கொண்டே எம்.ஜி.ஆர். படங்களில் சண்டை போட்டிருக்கிறார். அவர் பயன்படுத்திய கத்திகள் சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
‘சர்வாதிகாரி’ படத்தில் எம்.ஜி.ஆரின் அட்டகாச வாள் வீச்சு.
‘சர்வாதிகாரி’ படத்தில் நம்பியாருடனான வாள் சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆரின் கத்தி நம்பியாரின் கட்டை விரலை ஊடுருவிவிட்டது. அதே போல, ‘அரசிளங்குமரி’ படம் எம்.ஜி.ஆரின் வாள் வீச்சுக்காகவே புகழ் பெற்றது.
அந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கும் நம்பி யாருக்கும் ஆக்ரோஷமான சண்டை. ஒரு நாள் படப்பிடிப்பில் நம்பியாரின் கத்தி எம்.ஜி.ஆரின் கண்ணுக்கு மேலே புருவத்தில் பட்டு கிழித்து விட்டது. படத்துக்கான மேக் அப் இல்லாமல் எம்.ஜி.ஆர். தனது வழக்கமான தோற்றத்தில் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இடது புருவத்தில் அந்தத் தழும்பு தெரியும்.
படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரின் புருவத் தில் நம்பியாரின் கத்தி பட்டு ரத்தம் கொட்டுகிறது. இன்னும் இரண்டு அங்குலங்கள் கீழே பட்டிருந் தால் எம்.ஜி.ஆரின் கண் பார்வை பறிபோயிருக் கும். அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். ஓடி வந்த உதவியாளர் ஒருவர், எம்.ஜி.ஆரின் புருவத்தில் ரத்தம் கொட்டிய இடத்தில் துணியை அமுக்கிப் பிடித்தபடி, நம்பியாரைப் பார்த்து, ‘‘என்னண்ணே, பார்த்து செய்யக் கூடாதா? நீங்க கூடவா இப்படி?’’ என்று இரைந்தார். நம்பியாருக்கும் வருத்தம்.
எம்.ஜி.ஆர். உடனே, ‘‘அவருக்கு என் மீது கோபம் இல்ல; அந்தக் கத்திக்குத்தான் என் மீது கோபம்’’ என்று சொல்லி அந்த இடத்தில் சகஜ நிலையை ஏற்படுத்தினார்.
‘நாடோடி மன்னன்’ படத்துக்காக நம்பியாரை இயக்குகிறார் எம்.ஜி.ஆர்.
பின்னர், நம்பியாரைப் பார்த்து, ‘‘ஏன்யா இப்படி செஞ்சீரு?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
‘‘நியாயமாக பார்த்தால் எனக்கு நீங்கள் நன்றி சொல்லணும்’’ - நம்பியார் பதில்.
தெரியாமல்தான் என்றாலும் கத்தியாலும் குத்தி விட்டு, அதற்கு நன்றி வேறா? என்று நினைத்த படி ‘‘ஏன்?’’ என்று கேட்ட எம்.ஜி.ஆருக்கு, ‘‘டைரக்டர் சொன்ன இடத்தில் குத்தாமல் இருந்ததற்காக’’ என்று மேலும் புதிர் போட்டார் நம்பியார்.
‘‘டைரக்டர் என்ன சொன்னார்?’’ - வியப்புடன் கேட்டார் எம்.ஜி.ஆர்.
‘‘நெஞ்சில் குத்தச் சொன்னார்’’ என்ற நம்பியாரின் பதிலைக் கேட்ட எம்.ஜி.ஆர். சிரித்த சிரிப்பால் படப்பிடிப்பு அரங்கமே அதிர்ந்தது.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அவரைப் பார்க்க அவரது வீட்டுக்கு நம்பியார் சென்றுள்ளார். அமைச்சர்கள் உட்பட வி.ஐ.பி-க்கள் எம்.ஜி.ஆரை பார்க்க காத்திருந்தனர். நம்பியார் வந்துள்ள விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர் உடனே தனது அறையின் கதவைத் திறந்து நம்பியாரைப் பார்த்து உள்ளே வரும்படி சைகை காட்டிவிட்டு சென்றார்.
தங்களைத்தான் எம்.ஜி.ஆர். கூப்பிடுகிறார் என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்த அமைச்சர்கள் சிலர் எம்.ஜி.ஆர். அறைக்குச் சென்றனர். நம்பியார் வராததைப் பார்த்த எம்.ஜி.ஆர். மீண்டும் தனது அறையின் கதவைத் திறந்து, நம்பியாரைப் பார்த்து ‘‘உன்னைத்தான். உள்ளே வாய்யா’’ என்றார். நம்பியார் உள்ளே வந்த பின் உதவியாளரிடம் எல்லோருக்கும் காபி கொண்டு வருமாறு எம்.ஜி.ஆர். கூறினார். அந்த உதவியாளரை நம்பியார் தடுத்து, ‘‘எனக்கு மட்டும் ஒரு காபி கொண்டு வாருங்கள்’’ என்றார்.
அங்கிருந்த அமைச்சர் ஒருவர் நம்பியாரைப் பார்த்து, ‘‘ஏன், நாங்க என்ன பாவம் செஞ்சோம்?’’ என்று நம்பியாரிடம் கேட்டார். அதற்கு, ‘‘இங்கே நான் மட்டும்தான் விஐபி’’ என்ற நம்பியாரின் பதிலால் எம்.ஜி.ஆர் மட்டுமின்றி கேள்வி கேட்ட அமைச்சர் உட்பட எல்லோரும் சிரித்தனர்.
எம்.ஜி.ஆரின் இடது புருவத்தில் தழும்பு இருப்பதை காணலாம்.
நகைச்சுவை உணர்வு உள்ளவர்களால்தான் நல்ல நகைச்சுவையை ரசிக்க முடியும். எம்.ஜி.ஆருக்கு நகைச்சுவை உணர்வு அபாரம்.
பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வெளி நாடுகளில் எம்.ஜி.ஆர். எடுத்து வெளியிட்டு மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில்தான் நடிகை லதா அறிமுகம். முதல் படத்திலேயே கதாநாயகி. அதிலும் உச்ச நட்சத்திரமான எம்.ஜி.ஆருக்கு ஜோடி. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர். என்ற ஆளுமை முன் நடிப்பதில் லதாவுக்கு உள்ளூர நடுக்கம். படத்தின் இயக்குநரும் எம்.ஜி.ஆர்தான். லதா நடித்த காட்சிகளில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு நடிக்கவில்லை. காரணம் கேட்டார் எம்.ஜி.ஆர்.
‘‘சார், உங்கள் முன் நடிக்க எனக்கு தயக்க மாக இருக்கிறது’’ என்றார் லதா. இவ்வளவு ஏற்பாடுகளுக்குப் பிறகு, நடிக்கத் தயக்கம் என்றால் யாருக்குத்தான் கோபம் வராது? ஆனாலும், லதாவின் நிலையை எம்.ஜி.ஆர். புரிந்துகொண்டார்.
அவருக்கு தைரியம் ஏற்படுத்த எம்.ஜி.ஆர். சொன்னதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த லதா, இயல்பான நிலைக்கு வந்து நன்றாக நடிக்கத் தொடங்கிவிட்டார். லதாவின் தயக் கத்தை போக்குவதற்காக எம்.ஜி.ஆர். கேட்ட கேள்வி...
‘‘பேசாமல் படத்தின் கதாநாயகனை மாத்திட லாமா?’’
‘நாடோடி மன்னன்’ படத்தை எம்.ஜி.ஆர். தானே தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்தார். பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தின் வெற்றி விழா 16.10.1958-ல் மதுரையில் நடந்தது. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து விழா நடந்த தமுக்கம் மைதானம் வரை 4 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் மக்களின் ஆரவார வரவேற்புக்கு இடையே எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
எம்.ஜி.ஆர். சென்ற சாரட் வண்டிக்கு முன் உலக உருண்டையின் மீது 110 பவுனில் தங்க வாள் எடுத்துச் செல்லப்பட்டது. விழாவில் எம்.ஜி.ஆருக்கு தங்க வாளை நெடுஞ்செழியன் பரிசளித்தார். முதன்முதலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த திரைப்பட வெற்றி விழா இதுதான்!
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆர்.
எம்ஜிஆர் 100 | 18 - ஆங்கிள் பார்த்த எம்ஜிஆர்!
M.G.R. மீது அன்பு கொண்டு அவரோடு கடைசி வரை நெருக்கமாக இருந்தவர்கள் பலர். அவர்களில் சிலர், முதல் சந்திப்பின்போது அவரை சரியாக புரிந்து கொள்ளாமல் கருத்து மாறுபாடும் கசப்பும் கொண்டவர்கள். பின்னர், எம்.ஜி.ஆருடன் பழகி அவரது நல்லெண்ணத்தையும் திறமையையும் புரிந்துகொண்ட பின், ‘அவர் எம்.ஜி.ஆரின் ஆள்’ என்று பிறர் குறிப்பிடும் அளவுக்கு அவருக்கு நெருக்கமாயினர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் முக்கியமானவர்.
முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர். வளர்ந்து வந்த நிலையில், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியை சந்திப்பதற்காக ஒரு ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கே ஒரு படப்பிடிப்பில் கே.ஆர்.ராமசாமி நடித்துக் கொண்டிருந்தார். அவர் நடிக்க வேண்டிய காட்சியில் நடித்துவிட்டு வரும் வரை ஸ்டுடியோ வில் ஓர் அறையில் எம்.ஜி.ஆர். காத்திருந்தார்.
அப்போது, அந்த அறையில் தூய கதராடை யில் நெற்றியில் திருநீறுடன் அமர்ந்திருந்தவரைப் பார்த்து ‘ஸ்டுடியோவில் நடிகர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர் போலிருக்கிறது’ என்று எம்.ஜி.ஆர். நினைத்தார் . ஆனால், அவர் ஓர் இயக்குநர் என்று நண்பர் மூலம் அறிந்ததும் வியப்பில் ஆழ்ந்தார். புதுமுகங்களை டெஸ்ட் செய்யும் பணி அந்த இயக்குநருக்கு.
‘அரச கட்டளை’ படப்பிடிப்பில் கேமரா கோணம் பார்க்கிறார் எம்.ஜி.ஆர்.
அந்த சமயத்தில், அங்கு நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வந்த இளைஞர் ஒருவரை நடித்துக் காட்டச் சொன்னார் இயக்குநர். பின்பு, கேலியும் கிண்டலுமாக பேசி, ‘‘தகவல் சொல்லி அனுப்புவாங்க’’ என்று இளைஞரை அனுப்பி விட்டார். கே.ஆர்.ராமசாமிக்காக காத்திருந்த எம்.ஜி.ஆர். நடப்பவற்றை கவனித்தபடி அறையில் அமர்ந்திருந்தார்.
அந்த இளைஞர் சென்ற பிறகு, ‘‘கண்ணாடி யிலே மூஞ்சியை பார்க்காமலேயே நடிக்க வந்து விடுகிறார்கள். இவங்களை எல்லாம் டெஸ்ட் செய்ய வேண்டும் என்பது என் தலையெழுத்து’’ என்று அந்த இயக்குநர் தனக்குத் தானே கூறியதைக் கேட்டு எம்.ஜி.ஆருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர் பலமாக சிரிப்பதை பார்த்து ‘கொஞ்சம் கூட அடக்கமே இல்லையே’ என்று கோபப்பட்டார் அந்த இயக்குநர். எம்.ஜி.ஆர். பதிலளிக்க யோசித்தபோது, அவரை சந்திக்க கே.ஆர்.ராமசாமி வந்து விட்டார். அவருடன் பேசப் போய்விட்டார் எம்.ஜி.ஆர்.
முதல் சந்திப்பிலேயே அந்த இயக்குநருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நல்ல அபிப்ராயம் ஏற்பட வில்லை. என்றாலும் காலம் அவர்களை ஒருங்கிணைத்தது. எம்.ஜி.ஆர். நடித்த படத்தை இயக்க அந்த இயக்குநரே அமர்த்தப்பட்டார். அந்தப் படம் ‘சக்கவர்த்தி திருமகள்.’ அந்த இயக்குநர் ப.நீலகண்டன்.
எம்.ஜி.ஆர். எப் போதுமே தான் நடிக் கும் படங்களின் காட்சி அமைப்புகள், கேமரா கோணங்கள், பாடல்கள், இசை உட்பட எல்லா அம்சங்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைப்பவர். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்
‘ராமன் தேடிய சீதை’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருடன் ப.நீலகண்டன்.
‘ஆடவாங்க அண்ணாத்தே... அஞ்சா தீங்க அண்ணாத்தே... அங்கே இங்கே பாக்குறது என்னாத்தே...’
என்று ஒரு பாடல் உண்டு. அந்தப் பாடலில் எம்.ஜி.ஆர். ஆட்டத்தில் தூள் கிளப்பியிருப்பார்.
அந்த பாடல் காட்சி படப்பிடிப்புக்கான செட்டில் நுழைந்து எம்.ஜி.ஆர். பார்வையிட்டார். கேமரா வைக்கப்பட்டிருந்த ஆங்கிளையும் பார்த்தார். ‘‘செட் ரொம்ப அருமையா இருக்கு. இந்த அழகு திரையில் தெரியணும்னா கேமராவை உயரமான இடத்தில் வைக்கணும். கேமரா ஆங் கிளை மாத்திட்டு என்னைக் கூப்பிடுங்க’’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென மேக் அப் அறைக் குள் சென்றுவிட்டார்.
விஷயம் அறிந்த இயக்குநர் ப.நீலகண்டன் கொதித்தார். ‘‘படத்தின் டைரக்டர் நானா? எம்.ஜி.ஆரா? கேமரா ஆங்கிளை மாற்றி அதற்கு ஏற்றபடி லைட்டிங் செய்ய நேரமாகும். இப்போது இருக்கும்படியே படமாக்கலாம். எம்.ஜி.ஆரை அழைத்து வா’’ என்று உதவியாளரை விரட்டினார்.
‘காவல்காரன்’ படப்பிடிப்புக்கு வந்த எம்.ஜி.ஆரை இயக்குநர் ப.நீலகண்டன் வரவேற்கிறார்.
அவர் போய் எம்.ஜி.ஆரிடம் தயங்கிபடி விஷ யத்தை சொன்னதும், ‘‘காட்சி நல்லா வரணுமே என்ற நல்லெண்ணத்தில் சொன்னேன். எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. விடிய, விடிய இருந்து நடிச்சு கொடுத்துட்டுப் போறேன். அதோட, காட்சி நல்லா வந்தா டைரக்டருக்குத்தான நல்ல பேரு. டைட்டில்ல கேமரா ஆங்கிள் எம்.ஜி.ஆருன்னா போடப் போறாங்க? போய் சொல்லுங்க’’ என்று உதவியாளரை எம்.ஜி.ஆர். திருப்பி அனுப்பினார்.
எம்.ஜி.ஆரின் கருத்து இயக்குநர் நீலகண் டனை யோசிக்க வைத்தது. எம்.ஜி.ஆரின் விருப்பப் படியே கேமரா ஆங்கிள் மாற்றப்பட்டு காட்சி பட மாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும் தான் கூறியபடியே நேரமானபோதும் காத்திருந்து நடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார். படத்தில் அந்தக் காட்சி சிறப்பாக வந்தது. பாராட்டும் கிடைத்தது.
அதன் பிறகுதான், எம்.ஜி.ஆரின் நுண்ணறி வையும் நல்லெண்ணத்தையும் புரிந்துகொண் டார் இயக்குநர் ப.நீலகண்டன். பிறகென்ன? இரு வருக்கும் நட்பு பலப்பட்டது. எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநர் என்று சொல்லும் வகையில், அவர் நடித்த அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெற் றார் ப.நீலகண்டன்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற்று ‘காவல்காரன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்தார். படத்தின் இயக்குநரான நீலகண்டன் அவருக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். எம்.ஜி.ஆர். வரும்போது சமயோசிதமாக அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒலிக்க நீலகண்டன் ஏற்பாடு செய்திருந் தார். தான் வந்தபோது ஒலித்த பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். முகம் மலர அதை ரசித்தார். மறுபிறப்பு எடுத்து வந்த எம்.ஜி.ஆரை வாழ்த்தும் வகையில் இருந்த அந்த சூப்பர் ஹிட் பாடல்....
‘‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது...”
எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். 18.1.1957-ம் ஆண்டு வெளியான ‘சக்கரவர்த்தி திருமகள்’ தொடங்கி, 18.3.1976-ம் ஆண்டு வெளியான ‘நீதிக்குத் தலைவணங்கு’ வரை எம்.ஜி.ஆர். நடித்த 17 படங்களை ப.நீலகண்டன் இயக்கியுள்ளார். எம்.ஜி.ஆர். - நீலகண்டன் கூட்டணியில் முதல் படம் வெளியான தேதியும் கடைசி படம் வெளியான தேதியும் 18தான்.
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
எம்ஜிஆர் 100 | 19 - ஸ்ரீதருக்குச் செய்த உதவி!
M.G.R. நடிப்பில் நீங்கள் ஏன் படம் எடுக்கக் கூடாது?.. இயக்குநர் ஸ்ரீதரிடம் அவரது நெருங்கிய நண்பரும் இந்தி நடிகருமான ராஜேந்திர குமார் கேட்ட கேள்வி இது. தமிழ் திரையுலகில் தனது வித்தியாசமான படங்களால் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஸ்ரீதர். தனது சொந்த நிறுவனமான சித்ராலயா பேனரில் திரைப்படங்களை தயாரித்தும் வந்தார். அவர் எடுத்த சில படங்கள் எதிர்பார்த்த அளவு போகாததால் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு ஆளானார். அந்த நேரத்தில் இந்தி நடிகர் ராஜேந்திர குமார், ஸ்ரீதருக்கு கொடுத்த ஆலோசனைதான் ஆரம்பத்தில் உள்ள கேள்வி.
ஆனால் ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆரிடம் செல்ல தயக்கம். காரணம், ஏற்கெனவே எம்.ஜி.ஆர் நடிக்க ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற பெயரில் படப்பிடிப்பை தொடங்கினார். கருப்பு வெள்ளை படமான அதில், சில காட்சிகள் படமாக்கப்பட்டு ஸ்டில்களும் வெளியாயின. அந்த நேரத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை யும் வண்ணப்படமாக தயாரிப்பதாக இருந்தார். விளம்பரமும் வெளிவந்தது. ‘புதுமுக நடிகர்களை போட்டு கலரில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை எடுக்கும் ஸ்ரீதர், உங்களை வைத்து கருப்பு வெள்ளையில் படம் எடுக்கிறாரே?’என்று எம்.ஜி.ஆரிடம் சிலர் திரித்துக் கூறினர். படமும் வளராமல் நின்று போனது. (பின்னர் இதே பெயரில் ஜெய்சங்கர் நடித்த படம் ஒன்று வெளியானது) அதுபற்றி எம்.ஜி.ஆரிடம் விளக்கம் தராதது தனது தவறுதான் என்று பின்னர் ஸ்ரீதர் வருந்தினார்.
‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் தொகையாக ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு ரூ.25,000 அளித்தார் ஸ்ரீதர். படம் நின்று விட்ட நிலையில், சில காட்சிகள் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட தொகையாக நினைத்து அந்த பணத்தை ஸ்ரீதரும் கேட்கவில்லை.
ஏற்கெனவே, எம்.ஜி.ஆருடன் இணைந்து செய்வதாக இருந்த படம் நின்று போன நிலையில், மீண்டும் அவரை அணுகுவதா? என்று யோசித் தார். இருந்தாலும் நண்பர் ராஜேந்திரகுமாரின் ஆலோசனையை ஏற்றார். இயக்குநர் பி.வாசுவின் தந்தையும், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஒப்பனையாளருமான பீதாம்பரம் மூலம் எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆரும் மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் ஸ்ரீதர் படத்தில் நடிக்க சம்மதித்தார். எம்.ஜி.ஆரின் உயர்ந்த பண்புக்கும் எப்படி எல்லாம் சிந்தித்து மற்றவர்களை கவுரவப்படுத்துகிறார் என்பதற்கும் ஒரு உதாரணம்... அப்போது ஸ்ரீதருக்கு ஏற்பட்ட நெருக்கடியை எம்.ஜி.ஆர். அறிந்தே இருந்தார். ஸ்ரீதராகத்தான் விரும்பி தனது படத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்துள்ளார். எம்.ஜி.ஆர். நினைத்தால் ‘ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கலாம்.
ஆனால், ஒப்பனையாளர் பீதாம்பரத்திடம் எம்.ஜி.ஆர். கூறியதுதான் அவரது உயர்ந்த உள்ளத்தை வெளிப்படுத்தும். ‘‘ஸ்ரீதர் பெரிய இயக்குநர். திடீரென்று என்னை வந்து சந்தித்து பேசினால், நெருக்கடியில் இருந்து மீள எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் போய் பார்த்தார் என்று செய்திகள் வெளியாகும். நான் போய் ஸ்ரீதரை பார்ப்பதும் சரியாக இருக்காது. அதனால், இருவருக்கும் பொதுவாக நம்பியார் வீட்டில் மதிய உணவுக்கு ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள். அங்கு சந்தித்து பேசி புதிய படம் பற்றி முடிவு செய்யலாம்’’ என்று பீதாம்பரம் மூலம் சொல்லி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.
இதைக் கேட்டு சிலிர்த்துப் போனார் ஸ்ரீதர். இருந்தாலும் எம்.ஜி.ஆர். வீட்டில் நான் அவரை சந்திப்பதுதான் முறை என்று கூறி, மறுநாளே ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் சந்தித்துப் பேசினார்.
எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்து சில காட்சிகள் எடுக்கப்பட்டு நின்றுபோன மற்றும் ஒரு படமான ‘நானும் ஒரு தொழிலாளி’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருடன் இயக்குநர் ஶ்ரீதர்.
வழக்கம் போல எம்.ஜி.ஆரின் உணவு உபசரிப்புக்கு பிறகு தன் நிலைமையை சொல்லி நீங்கள் எனக்கு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அதற்கு சம்மதம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.
ஏற்கனவே கிடைத்த அனுபவத்தால் எம்.ஜி.ஆரிடம் மனம் திறந்து பேசினார் ஸ்ரீதர். ‘‘என் மீது பொறாமை கொண்டவர்கள் நமக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக என்னைப் பற்றி உங்களிடம் என்ன சொன்னாலும் நீங்கள் நம்ப வேண்டாம். என்னிடமே நேரடியாக விளக்கம் கேளுங்கள்’’ என்று எம்.ஜி.ஆரிடம் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அவரது நிலைமையை உணர்ந்து மற்ற படங்களை விட ஸ்ரீதர் படத்துக்கு முன்னுரிமை அளித்து 3 மாதங்களில் நடித்துக் கொடுப்பதாக உறுதியளித்த எம்.ஜி.ஆர்., ஸ்ரீதரே எதிர்பார்க்காத ஒன்றை செய்தார்.
அவ்வாறு, தான் உறுதி அளித்ததை கடிதமாக எழுதிக் கொடுத்து கையெழுத்து போட்டு ஸ்ரீதரிடம் கொடுத்தார். ‘‘இது நீங்கள் பைனான்ஸ் பெறுவதற்கு உதவும்’’ என்றார். எந்தக் கோணங்களில் எல்லாம் சிந்தித்து செயல்படுகிறார் என்று ஸ்ரீதர் வியந்துபோனார். ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆர். கடிதம் கொடுத்திருப்பதை அறிந்து, கிரஸென்ட் மூவிஸ் நிறுவனத்தார் அவரை சந்தித்து படத்துக்கு பைனான்ஸ் செய்ததுடன், பல ஏரியாக்களின் விநியோக உரிமையையும் வாங்கிக் கொண்டு அட்வான்ஸ் தொகையை அளித்தனர். இப்படி உருவான படம்தான் எம்.ஜி.ஆர்.-ஸ்ரீதர் கூட்டணியில் உருவாகி வெள்ளி விழா கொண்டாடிய ‘உரிமைக்குரல்’ திரைப்படம்.
அந்தப் படத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆருக்கு சம்பளமாக குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன்வந்தார் ஸ்ரீதர். அப்போது ஸ்ரீதருக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி. ஏற்கனவே ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக தனக்கு அட்வான்ஸாக கொடுத்த ரூ.25,000-த்தை எம்.ஜி.ஆர். கழித்துக் கொள்ளச் சொன்னார். ஸ்ரீதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
அதுதான் எம்.ஜி.ஆர்.
தெலுங்கில் நாகேஸ்வர ராவ் நடித்த ‘தசரா புல்லோடு’ படம்தான் சிறிய மாற்றங்களுடன் எம்.ஜி.ஆர். நடிக்க ‘உரிமைக்குரல்’ ஆனது. படத்தில் ஆந்திர பாணியில் பஞ்சகச்சம் போல எம்.ஜி.ஆர். அணிந்திருந்த வித்தியாசமான வேட்டி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
‘நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு...’ பாடலுக்கு எம்.ஜி.ஆர். அட்டகாசமாக ஸ்டெப் போட்டு ஆடியபோது, தியேட்டரில் ரசிகர்களும் உற்சாகமாக ஆடினர். 12 திரையரங்குகளில் படம் 100 நாட்கள் ஓடியது. மதுரை, நெல்லை ஆகிய ஊர்களில் வெள்ளிவிழா கொண்டாடிய ‘உரிமைக்குரல்’, 1974-ம் ஆண்டின் அதிக வசூல் பெற்ற மகத்தான வெற்றிப்படம்.


















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக