அரசு விழா ஒன்றில் பெண்களுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். உதவிகள் வழங்குகிறார்.
எம்ஜிஆர் 100 | 27 - மனிதரை மனிதராக மதிப்பவர்!
எம்.ஜி.ஆரின் கார் டிரைவராக இருந்தவர் கோவிந்தன். மிகத் திறமையான டிரைவர். எந்த கூட்டத்திலும் சாமர்த்தியமாக காரை ஓட்டிச் செல்லும் திறன் கொண்டவர். எம்.ஜி.ஆருக்கு கோவிந்தனின் டிரை விங் பிடிக்கும். 1976-ம் ஆண்டு எம்.ஜி.ஆரிடம் டிரைவராக பணிக்கு சேர்ந்தார் கோவிந்தன். சென்னை லாயிட்ஸ் சாலையில் எம்.ஜி.ஆர். வசித்து வந்தபோது அங்கு காவலாளியாக பணி யாற்றி, எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக விளங்கிய தாமோத ரனின் மருமகன்தான் கோவிந்தன். பல ஆண்டுகளாக டூரிஸ்ட் கார் ஓட்டி வந்தவர். தாமோதரனின் சிபாரிசின் பேரில் கோவிந்தனை டிரைவராக பணிக்கு சேர்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
கார் டிரைவர் கோவிந்தன் இறுதி ஊர்வலத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர். நடந்து செல்கிறார்.
1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வ ராகிவிட்டார். அவர் தினமும் ராமாவரம் தோட்ட வீட்டில் இருந்து கோட்டைக்கு செல்லும்போது டிரைவர் கோவிந்தன் தான் காரை ஓட்டிக் கொண்டு செல்வார். முதல்வரின் டிரைவர் என்பதால் பணிக்கு தினமும் கோவிந்தனை அவரது வீட்டுக்கு வந்து போலீஸ் ஜீப்பில் அழைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர். வீட்டுக்கு செல்வார் கள். மாலையில் பணி முடிந்ததும் மீண்டும் வீட்டில் கொண்டுவிட்டு செல்வார்கள்.
ஒருநாள் பணிக்காக வீட்டில் இருந்து போலீஸ் ஜீப்பில் வரும்போது, சென்னை கத்திபாரா சந்திப்பு அருகே ஜீப் மீது எதிரே வந்த பெரிய லாரி மோதியது. போலீஸ் ஜீப் டிரைவர் பலத்த காயங்களோடு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். டிரைவர் கோவிந்தன் சம்பவ இடத்தி லேயே பலியானார். அவர் இறந்த செய்தி வயர்லெஸ் மூலம் எம்.ஜி.ஆருக்கு உடனே தெரிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். அதிர்ச்சி அடைந்தார். கோவிந்தனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரது குடும்பத்தில் யாருக்கும் விருப் பம் இல்லை. பிரேத பரிசோதனை வேண் டாம் என்று அவரது உறவினர்கள் கேட்டுக் கொண்டபோதும், சட்டப்படி கோவிந்த னின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். பிடிவாதமாக இருந்தார். அதன்படி, பிரேத பரிசோதனை நடந்தது.
பின்னர், கோவிந்தனின் உடல் அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு சில மணி நேரம் வைக்கப்பட்டு, அங்கிருந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு ஒரு வேனில் கோவிந்தனின் உடல் ஏற்றப்பட்டு கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
‘சிரித்து வாழ வேண்டும்’ படப்பிடிப்பில் குழந்தையுடன் எம்.ஜி.ஆர்.
இங்கே ஒரு முக் கியமான விஷயம். அந்த இறுதி ஊர்வலத் தில் முதல்வர் எம்.ஜி.ஆர். நடந்தே சென்றார். முக்கிய பிரமுகர்கள் பலரின் இறுதி ஊர்வலத்தில் எம்.ஜி.ஆர். நடந்து சென்றிருக்கிறார். இருந்தாலும், தன்னிடம் பணியாற்றிய டிரைவரின் இறுதி ஊர்வலத்தில் நடந்து செல்லாமல், அஞ்சலி மட்டும் செலுத்தி விட்டு சென்றிருந்தால் அவரை யார் கேட்க முடியும்? ஆனால், இறந்து போன தனது ஊழியருக்காக அவரது இறுதி ஊர்வலத்தில் ஒரு மாநிலத்தின் முதல்வர் நடந்து சென்றார் என்றால் அது எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.
கோவிந்தனின் குடும்பத்தினரை அழைத்து பண உதவி செய்ததுடன், கோவிந்தன் பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணம் விரைவில் கிடைக்க ஏற்பாடுகளும் செய்தார். தாங்கள் வேண்டாம் என்று மறுத்தும் கோவிந்தனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். ஏன் பிடிவாதமாக இருந்தார் என்பது அப்போதுதான் கோவிந்தன் குடும்பத்தாருக்கே தெரிந்தது. விபத்தில் மரணம் ஏற்பட்டால் பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்தால்தான் இன்சூரன்ஸ் தொகையைக் கோர முடியும். கோவிந்தனின் மனைவிக்கு கருணை அடிப்படையில் வீட்டு வசதி வாரியத்தில் பணி வழங்கியும் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்.
கோவிந்தன் இறந்த துயரத்தையும் மீறி, தங்கள் மீது எம்.ஜி.ஆர். காட்டும் அன்பையும் ஆதரவையும் கண்டு ஆனந் தக் கண்ணீருடன் அவருக்கு நன்றி தெரிவித்தது கோவிந்தனின் குடும்பம்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே புதிய சுரங்கப் பாதை திறக்கப்பட்டது. விழாவில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்டு சுரங்கப் பாதையை திறப்பார் என அறிவிக்கப் பட்டிருந்தது. குறிப்பிட்டபடி விழாவுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். திறப்பு விழா நேரத்தில் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு உதவியாளர்களிடம் காதில் கிசுகிசுத்தார்.
1983-ம் ஆண்டு சென்னையில் ஒரு ரேஷன் கடையில் முதல்வர் எம்.ஜி.ஆர். திடீர் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.
அவர்கள் சென்று ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தவரை அழைத்து வந்து எம்.ஜி.ஆரிடம் நிறுத்தினர். அவர் பெயர் ஏழுமலை. எம்.ஜி.ஆரை வணங்கிவிட்டு ஏதும் புரியாமல் படபடப்புடன் நின்று கொண்டிருந்தவரின் கையில் கத்தரிக் கோலைக் கொடுத்து, சுரங்க நடைபாதை திறப்புவிழாவுக்கு அடையாளமாக ரிப்பனை வெட்டச் சொன்னார் எம்.ஜி.ஆர்.!
கண்களில் நீர் மல்க ரிப்பனை வெட்டி திறந்து வைத்த ஏழுமலைதான், அந்த சுரங்கப் பாதையை கட்டிய மேஸ்திரி!
எம்.ஜி.ஆரைப் பற்றி கவிஞர் வாலி ஒருமுறை இப்படி வாழ்த்திப் பாடினார். ‘‘மனிதர்களில் எத்தனையோ நடிகர்கள் உண்டு. நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதன் நீதான்!’’
முன்பெல்லாம் சைக்கிளில் பின் னால் அமர்ந்து கொண்டு ‘டபுள்ஸ்’ செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சைக்கிளில் ‘டபுள்ஸ்’ சென்றால் போலீஸார் அபராதம் விதிப்பார்கள். எம்.ஜி.ஆர். முதல்வரானவுடன் ஏழை களின் வாகனமான சைக்கிளில் ‘டபுள்ஸ்’ செல்ல தடையில்லை என்று உத்தரவு பிறப்பித்தார்.
--------------------------------------------------------------------------------------------
‘சிரித்துவாழ
வேண்டும்’ பட பூஜையில் எம்.ஜி.ஆரை வரவேற்கிறார் ஜெமினி அதிபர்
எஸ்.எஸ்.வாசனின் மகனும் படத்தின் இயக்குநருமான எஸ்.பாலசுப்ரமணியன்.
எம்ஜிஆர் 100 | 28 - ‘இந்தியாவின் ஹிதேகி தகஹாஷி’!
ஆனந்த விகடன் பத்திரிகையில் பணியாற்றி வந்த மணியன், 1968-ம் ஆண்டு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி ஒரு கட்டுரை வேண்டி எம்.ஜி.ஆரை அணுகினார். அந்த நட்பு தொடர்ந்தது. வெளிநாடுகளுக்கு சென்று வந்து பயணக் கட்டுரைகளை ஆனந்த விகடனில் எழுதிக் கொண்டிருந்தார் மணியன். அந்த அனுபவத்தால் வெளிநாடுகளில் அவருக்கு தொடர்புகள் உண்டு. அந்த சமயத்தில்தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்.
வெளிநாடுகளில் படம் எடுப்பதற்காக எம்.ஜி.ஆர். செல்வாரா? மாட்டாரா? ஏறத் தாழ ஒன்றரை மாதம் எப்படி எம்.ஜி.ஆர். வெளிநாட்டில் இருக்க முடியும்? இங்கு எவ்வளவு படங்கள் நடிக்க வேண்டியுள் ளது? அரசியல் வேறு இருக்கிறது; எம்.ஜி.ஆர். போகமாட்டார் என்று சந்தேகங்கள், வதந்திகள் றெக்கை கட்டி பறந்த நிலையில், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக வெளிநாட்டுக்கு பறக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்து விட்டார்.
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர். ஜப்பான் சென்றபோது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட படம். வலது ஓரம் ஸ்டன்ட் மாஸ்டர் ஷியாம் சுந்தர்.
1970-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி, ரசிகர்கள், பொதுமக்கள், திரையுலகினர் வாழ்த்துக்களுடன் எம்.ஜி.ஆர். ஜப்பா னுக்குப் புறப்பட்டுவிட்டார். இங்கே பல்வேறு பணிகள் இருந்தாலும் இனி யும் தாமதிக்காமல் உடனே புறப்பட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். முடிவு செய்ததற்கு முக்கிய காரணம் எக்ஸ்போ 70 கண்காட்சி. செப்டம்பர் 15-ம் தேதி யுடன் அந்த மகத்தான கண்காட்சி முடியப் போகிறது என்று செய்தி வந்தது. அதற் குள் அங்கு சென்று காட்சிகளை படமாக்கி தமிழக மக்களின் கண்களுக்கு விருந் தாக்க வேண்டும் என்ற துடிப்புதான் எம்.ஜி.ஆரை புறப்பட வைத்தது.
எக்ஸ்போ -70 கண்காட்சி உட்பட, கீழ்திசை நாடுகளில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்புகள் நடப்பதற்கு உதவியவர் மணியன். தனது குழுவின ரோடு செப்டம்பர் 5-ம் தேதி டோக்கியோ நகரின் ஹனீதா விமான நிலையம் சென்று இறங்கினார் எம்.ஜி.ஆர்.! அவரை வரவேற்க ஏராளமான தமிழர்கள் திரண்டிருந்தனர். அவர்களோடு ஜப்பா னின் தேசிய உடையான ‘கிமோனோ’ அணிந்த பெண்கள் கையில் மாலையுடன் எம்.ஜி.ஆரை வரவேற்க காத்திருந்தனர்.. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் ‘பன்சாயி...’ பாடலின் ஆரம்பத்தில் நடிகை சந்திரகலா வித்தியாசமான உடை அணிந்திருப்பாரே? அதுதான் ‘கிமோனோ'.
டோக்கியோவில் எம்.ஜி.ஆரை பார்த் தவர்களுக்கு வியப்பு. தனது வழக்கமான தொப்பி, கண்ணாடி, வேட்டி, சட்டையுட னேயே டோக்கியோவில் எம்.ஜி.ஆர். கால் பதித்தார். வரவேற்பை ஏற்றுக் கொண்டு டோக்கியோவின் பிரபல இம்பீரியல் ஓட்டலில் இரவு ஒரு மணிக்கு தான் சென்று தங்கினார் எம்.ஜி.ஆர்.
அசதி, சோம்பல், நீண்ட ஓய்வு இதெல் லாம் எம்.ஜி.ஆர். அறியாத ஒன்று. இரவு ஒரு மணிக்கு ஓட்டலுக்கு சென்று படுத் தாலும் மறுநாள் அதிகாலையிலேயே எம்.ஜி.ஆர். தயாராகிவிட்டார். செப்டம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. எக்ஸ்போ கண்காட்சியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. எட்டு லட்சம் பேர் உள்ளே போய் விட்டார்கள். இனிமேல் உள்ளே வர இடம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது. கண்காட்சிக்கு உள்ளே செல்லும் நுழைவாயில்கள் மூடப்பட்டன.
முக்கியமான அதி காரிகளை சந்தித்து கண்காட்சிக்கு உள்ளே செல்ல அனுமதி பெற்றுத் தந்தார் மணியன். அதிகாரிகளி டம் ‘இந்தோகா ஹிதேகி தகஹாஷி’ என்று ஜப்பானிய மொழி யில் ஒரு அஸ்திரத்தை வீசினார் மணியன். உடனே அனுமதி கிடைத்தது. ஜப்பானில் மக்களால் விரும்பப்படும் புகழ் பெற்ற நடிகரின் பெயர் ஹிதேகி தகஹாஷி. ‘இந்தியாவின் ஹிதேகி தகஹாஷி’ என்று எம்.ஜி.ஆர். பற்றி மணியன் கூறியது தான் அனுமதிக்கு காரணம்.
மணியனால் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு இன்னொரு பெரும் புதையலும் கிடைத் தது. ஆனந்த விகடன் இதழில் ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர். தனது வாழ்க்கை வரலாற்றை எழுதக் காரணமாக இருந்த வர் மணியன். வெளிநாடு களில் படப்பிடிப்பு நடத்த தனக்கு உதவி செய்த மணிய னுக்கு, பதிலுக்கு உதவ முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆருடன் மணியன் மற்றும் இந்தி நடிகர் திலீப் குமாரின் மனைவியும் நடிகையுமான சாய்ரா பானு.
ஒருநாள் மாலை. சென்னை தியாக ராய நகரில் மணியன் வீட்டு வாசலில் எம்.ஜி.ஆரின் கார் சென்று நிற்கிறது. திடீரென தனது வீட்டுக்கே வந்துவிட்ட எம்.ஜி.ஆரை பார்த்து மணியனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அந்த பிரமிப்பில் இருந்து விடுபடுவதற்கு முன்பே, அவருக்கு அடுத்த இன்ப அதிர்ச் சியை எம்.ஜி.ஆர். அளித்தார். ‘‘வித்வான் லட்சுமணனுடன் சேர்ந்து படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்குங்கள், நான் நடிக்கிறேன்’’ என்றார் எம்.ஜி.ஆர்.
பேப்பரும் பேனாவும் கேட்டு வாங்கி, தனது கையாலேயே படக் கம்பெனியின் பெயரை யும் எழுதினார். அப்போது எம்.ஜி.ஆரால் உதய மானதுதான் ‘உதயம் புரொடக் ஷன்ஸ்’ பட நிறு வனம். அந்நிறுவனம் தயாரித்த முதல் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயவீணை’. பின்னர், படத் தயாரிப்பாளராக மட்டுமின்றி, பத்திரிகை அதிபராகவும் உயர்ந்தார் மணியன்.
‘இதயவீணை’ படத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. திமுகவின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர், கட்சி நிர்வாகிகளின் சொத்து விவரம் கேட்டதையடுத்து, 1972-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி திமுகவில் இருந்து நீக்கப் பட்டார். அதுவரை புரட்சி நடிகராக இருந்தவர் புரட்சித் தலைவரானார். அப்போது, ‘இதயவீணை’ படப்பிடிப்பில் இருந்தார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட விஷ யத்தைக் கேள்விப்பட்டு, பாயசம் கொண்டு வரச் சொல்லி எல்லாருக்கும் கொடுத்து, தானும் குடித்துவிட்டு, ‘‘இப் போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்றார். படத்தில் கார் விபத்து காட்சி ஒன்று வரும். அன்று அந்தக் காட்சியை எம்.ஜி.ஆர். சிறப்பாக எடுத்து முடித்தார்.
‘இதயவீணை’ படம் முதலில் 1972 அக்டோபர் 6-ம் தேதி வெளிவருவதாக விளம்பரம் வந்தது. இடையில் அரசியல் பரபரப்புகள் காரணமாக படம் ‘ரிலீஸ்’ தள்ளிப் போய் அக்டோபர் 20-ம் தேதி படம் வெளியானது. இடைப்பட்ட நாட் களில் அப்போதைய சூழலுக்கேற்ப அரசியல் பொடிவைத்து எழுதப் பட்ட பாடல் காட்சியைப் படமாக்கி, பொருத்தமான இடத்தில் படத் தில் சேர்த்தார் எம்.ஜி.ஆர்.
திரையில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் போது, ரசிகர்களின் அலப்பறையால் தியேட்டரே ஆடிய அந்தப் பாடல்:
‘ஒரு வாலும் இல்லே, நாலு காலும் இல்லே; சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே....’
‘இதயவீணை’ படத்தை தொடர்ந்து ‘உதயம் புரொடக் ஷன்ஸ்' நிறுவனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘பல்லாண்டு வாழ்க’ ஆகிய படங் களையும் மணியன் தயாரித்தார். இந்த மூன்று படங்களுமே 100 நாட் கள் ஓடி அமோக வெற்றி பெற்றன.
- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்
தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக